கோவையில் கொல்லப்பட்ட இந்து முன்னணி  செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலையைக் கண்டித்துப் பாஜக சென்னை எழும்பூரில் ஆர்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளது. கொலையாளிகளை உடனே கைது செய்யவேண்டும் என்றும் கோவையில் கைதான இந்து இயக்க நிர்வாகிகளை (செல்போன் திருடர்கள், பிரியாணி திருடர்கள்) விடுதலை செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது பற்றி அக்கட்சியின் சூத்திர தலைவி தமிழிசை கூறும்போது “தமிழகத்தில் இந்து இயக்கத் தலைவர்கள் கொல்லப்படுவது தொடர்கதையாகி வருகின்றது. இந்த வழக்குகளில் உரிய விசாரணை நடத்தப்பட்டுக் குற்றவாளிகள் கைதுசெய்யப்படுவதில்லை”. என்று தெரிவித்துள்ளார்.

 இதனைத் தொடர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைதுசெய்த போலீஸ் அவர்களை ஈவிகே சம்பத் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்கவைத்தனர். அப்போது அங்கு நுழைந்து 4 பேர் பெட்ரோல் குண்டுகளை வீசி அவர்களை கொல்ல முயற்சித்தாக சொல்லி திடீரென பாஜகவினர் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் காவல்துறை தரப்பில் அப்படி யாரும் உள்ளே நுழையவில்லை என்றும், பெட்ரோல் குண்டுகள் எதுவும் வீசப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவை சேர்ந்தவர்கள் பப்ளிசிட்டிக்காக தங்கள் வீட்டில் தாங்களே பெட்ரோல் குண்டுகளைப் போட்டுக்கொள்பவர்கள் என்பது கடந்த காலங்களில் நாம் பார்த்ததுதான். அதனால் இதுவும் அதே போன்ற பப்ளிசிட்டிக்காக நடத்தப்பட்ட நாடகமாக இருக்கலாம்.

  இந்து இயக்கத் தலைவர்கள் தமிழ்நாட்டில் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்படுகின்றார்கள் என்று குய்யோ முய்யோ என்று கூச்சல் போட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். பொன்.ராதாகிருஷ்ணன் “இந்து அமைப்பின் தலைவர்கள் மீதான தாக்குதல் உலகளாவிய பயங்கரவாதம் என்பதால் வேரோடு அழிக்க வேண்டும்” என்கின்றார். இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத்தோ டெல்லிவரை சென்று தமிழகத்தில் ஹிந்து அமைப்பின் பிரதிநிதிகளுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை, அவர்கள் ஜிகாதிகளால் படுகொலை செய்யப்படுகின்றார்கள் என்று மனுகொடுக்கின்றார். ஒசூர் சூரி கொலைக்கு அஞ்சலி செலுத்த வந்த கர்நாடக ஸ்ரீராம் சேனா தலைவன் பிரமோத் முத்தாலிக் சூரி கொலை அரசியல் சார்ந்த கொலை, ஜிகாத் அமைப்பினர் தான் இந்தக்கொலைக்கு காரணம் என்று கொழுத்திப் போட்டிருக்கின்றான்.

 உண்மையிலேயே இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் மட்டும் குறி வைத்து தாக்கப்படுகின்றார்களா? தமிழ் நாட்டில் தினம் தினம் பல கொலைகள் நடக்கின்றன. 2014 ஆண்டு மட்டும் 1678 கொலைகள் நடந்துள்ளன. இப்படி கொலை செய்யப்பட்டவர்கள் எல்லாம் நிச்சயம் ஏதோ ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் தான். பெரும்பாலும் தி.மு.க அல்லது அதிமுகவை சேர்ந்தவர்கள் தான். அதற்காக அவர்கள் யாரும் திமுகவை சேர்ந்தவர்கள் குறிவைத்து கொலை செய்யப்படுகின்றார்கள் என்றோ அல்லது அதிமுகவை சேர்ந்தவர்கள் குறிவைத்து கொலை செய்யப்படுகின்றார்கள் என்றோ கலவரத்தில் ஈடுபடுவது கிடையாது. ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சேந்தவன் என்ற காரணத்திற்காக கொலை செய்யப்பட்டார்கள் என்பதைவிட தனிப்பட்ட விரோதங்கள், உள்ளூர் சார்ந்த பிரச்சினையின் காரணமாகவே பெரும்பாலும் கொலைகள் நடக்கின்றன.

 இந்து இயக்க நிர்வாகிகள் ஜிகாதிகளால் திட்டமிட்டு கொலை செய்யப்படுகின்றார்கள் என்று காவிக்கூட்டம் சொல்வது எவ்வளவு அப்பட்டமான பொய் என்பதை பார்ப்போம். நாகப்பட்டணத்தில் பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினராக இருந்த புகழேந்தி 5/07/2012 அன்று வெட்டிக்கொல்லப்பட்டார்.  உடனே பொன்.ராதகிருஷ்ணன் “கடந்த 30 ஆண்டுகளாக இந்து மக்களுக்காக போராடிவந்தவர் புகழேந்தி. நாகை மாவட்டத்தில் பிரபலமான கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்ததை  எதிர்த்துப் போராடினார். இதனால் புகழேந்தி கொலை செய்யப்பட்டிருக்கின்றார்” என்று சொன்னார். ஆனால் புகழேந்தியை தான் தான்கொன்றதாக முனீஸ்வரன் என்பவர் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். கொலைக்கான காரணம் புகழேந்தி நாகப்பட்டிணத்தில் கட்டப்பஞ்சாயத்து மற்றும் நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுவந்துள்ளார். அந்தப் பகுதியில் பல அடாவடி செயல்களிலும் ஈடுபட்டுவந்துள்ளார். இதில் ஏற்பட்ட முன்விரோதமே இந்தப் பொறுக்கி கொலை செய்யப்படுவதற்குக் காரணமாக இருந்துள்ளது.

 23/10/2012 அன்று வேலூரில் பாஜக மாநில மருத்துவ அணி செயலாளாராக இருந்த அரவிந்த் ரெட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். விசாரணையில் டாக்டர் அரவிந்து ரெட்டி பெண்கள் விவகாரத்தில் படு மோசமானவர். அதனால்தான் கொலைசெய்யப்பட்டார் என தெரியவந்தது. மேலும் இந்தக்கொலையை வேலூர் மத்திய சிறையில் உள்ள ரவுடி ராஜா திட்டமிட்டு செய்ததும் தெரியவந்தது. இந்தக்கொலையில் கைது செய்யப்பட்ட அனைவரும் இந்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 7/07/2013 அன்று ராமேஸ்வரத்தை சேந்த இந்து முன்னணி ஒன்றிய துணைத்தலைவர் குட்ட நம்பு அடித்துக்கொலை செய்யப்பட்டார். விசாரணையில் ரெயில்வே ரோடு பகுதியில் குடிபோதையில் குட்டநம்பு தகராறு செய்ததால் ஊர்மக்களே ஒன்றாக சேர்ந்து கல்லால் அடித்துக்கொன்றது தெரியவந்தது. ஊர்மக்களே ஒன்றாக சேர்ந்து அடித்துக்கொல்லும் அளவுக்கு குட்டநம்பு இந்துமக்களுக்கு சேவையாற்றி இருக்கின்றார்!. இது மட்டும் அல்ல, பரமக்குடியில் கொல்லப்பட்ட பாஜக கட்சியின் முன்னாள் தலைவர் முருகனின் கொலைக்கு நிலத்தகராறு காரணமாக இருந்துள்ளது. அதே போல  சென்னை விருகம்பாக்கம் சாய்நகரை சேர்ந்த  127 வது வட்ட பாஜக தலைவரான விட்டல் கொலைக்கு பணத்தகராறே காரணமாக இருந்துள்ளது. கொடுத்த பணத்தை திருப்பிகொடுக்காததால் சுந்தரபாண்டியன் என்பவரின் வீட்டுக்குச் சென்று  அங்கிருந்த பெண்களை ஆபாசமாக பேசியதால் இந்தக்கொலை நடந்துள்ளது. இது எல்லாம் ஏற்கெனவே நமக்கு தெரிந்த செய்திகள் தான். நிலைமை இப்படி இருக்கும் போது கொஞ்சம் கூட வெட்கமானமே இல்லாமல்  இந்த மானங்கெட்ட காவிக்கும்பல் தொடர்ந்து ஜிகாதிகள் தான் கொலைசெய்கின்றார்கள் என்று சொல்லித்திரிகின்றார்கள்.

 இப்போதுகூட ஒசூர் விஸ்வ இந்து பரிஷத் நகர தலைவர் சூரி கொலையில்  முன் விரோதம் காரணமாக கொலை செய்ததாக மூன்று பேர் போலீஸில் சரணடைந்து உள்ளனர். இந்த சூரி மீது கொலை, கொள்ளை போன்ற பல்வேறு வழக்குகள் காவல்நிலையத்தில் உள்ளன. ஆனால் ஒவ்வொரு கொலை நடக்கும் போதும் இது ஜிகாதிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக காவி பொய்யர்கள் கதை கட்டிவிட்டு கலவரம் செய்வதும் பின்பு விசாரணையில் கொலைக்கான உண்மையான காரணம் தெரியவருவதும் வாடிக்கையாகிவிட்டது. ஆனால் இதுவரை முஸ்லீம்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டும் வகையில் அவதூறு பேசியதாக யாரும் கைது செய்யப்படவில்லை. காவல்துறையும், மாநில அரசும் இந்து பயங்கரவாதிகளுக்கு எப்போதும் ஆதரவாகவே உள்ளது.

 கோவையில் கொல்லப்பட்ட சசிகுமார் கொலைகூட சாதி ஆணவ கொலையாக இருப்பதற்கான வாய்ப்புள்ளது. சசிகுமார் காதல் திருமணம் செய்துகொண்டவர். இதில் சசிகுமார் தலித்வகுப்பை சேர்ந்தவர் என்றும் அவரது மனைவி கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர் என்றும் சொல்லப்படுகின்றது. ஆனால் கொலைக்கான காரணத்தை காவல்துறை கண்டுபிடிக்கும் முன்பே திட்டமிட்டு காவி பயங்கரவாதிகள் வன்முறையில் ஈடுபடுவதை பார்த்தால் இது சாதி ஆணவ கொலை என்பதை மறைக்கத்தான் சதி செய்கின்றார்களோ என்று சந்தேகப்பட வைக்கின்றது.

 கொலை செய்யப்பட்ட இந்து இயக்க நிர்வாகிகள் பெரும்பாலானவர்கள் பொறுக்கிகளாக, கேடிகளாக , கட்டப்பஞ்சாயத்து செய்யும் ரவுடிகளாக, பெண்களிடம் தவறாக நடந்துகொள்ளும் வக்கிரம் பிடித்தவர்களாக, ரியல் எஸ்டேட் மாஃபியாக்களாக கந்துவட்டிக்கு பணம் கொடுக்கும் வசூல் ராஜாக்களாக இருந்துள்ளனர்.  ஒருவேளை இப்படி இருப்பவர்கள்தான் இந்து இயக்கத்தின் நிர்வாகிகளாக இருக்கின்றனர். அதனால் தான் கொல்லப்பட்ட அனைவரும் அவர்களது கட்சிக்காரர்களாகவே இருக்கின்றனர்.  இந்த உண்மையை மூடி மறைத்து திரும்ப திரும்ப முஸ்லீம்கள் மீது பழியைப்போட்டு அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். ஆனால் காவிபயங்கரவாதிகளின் இந்தச் சதி ஒருபோதும் தமிழ்நாட்டில் நிறைவேறாது. தமிழ்நாட்டில் அநாதையாக, ஒரு அருவருக்கத்தக்க அரசியல் சக்தியாக சுற்றிக்கொண்டிருக்கும் பாஜகவிற்கு ஒரு அடையாளத்தை தேடித்தரும் முயற்சியாகத்தான் காவி பயங்கரவாதிகளின் இந்த அழிச்சாட்டியங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

 எனவே தமிழக மக்கள் இந்த கேடுகெட்ட அயோக்கியர்களையும் அவர்களுடன் தமிழ்நாட்டில் கூட்டணி வைத்திருக்கும் சூடு சுரணையற்ற சாதிவெறியர்களையும் முற்றும் முழுதாக அரசியல் களத்தில் இருந்தே துடைத்தெறிவதற்கு முற்போக்கு சக்திகளுடன் கை கோர்க்க வேண்டும். இங்கே இருக்கும் முஸ்லீம்கள் அனைவரும் நமது சகோதரர்கள் என்பதை காவி பயங்கரவாதிகளுக்கு முகத்தில் அறைந்தாற்போல நாம் காட்ட வேண்டும். தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்ட முயற்சிக்கும் ஆர்.எஸ்.எஸ், பிஜேபி, இந்து முன்னணி போன்ற கட்சிகளில் இருக்கும் விஷப்பூச்சிகளுக்கு பெரியார் பிறந்த மண்ணில் சரியான பாடத்தை நாம் கற்பிக்க வேண்டும்.

- செ.கார்கி

Comments

2 comments

2
Ms. Surya
Well said Mr.Karki. I am wondering, you collects more information for your every article. Keep go head your services.
silviya
this is really appreciable job.through this people may get a way to think differently keep going

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.