தொடர்புடைய படைப்புகள்

rohith vemula family

(அம்பேத்கர் இல்லத்தில் ரோகித் வெமுலாவின் குடும்பத்தினர்)

பல நூற்றாண்டுகளாக சுமந்துகொண்டிருந்த தாழ்த்தப்பட்டவன் என்ற பட்டத்தை ரோகித் வெமுலாவின் குடும்பம் தூக்கி எறிந்துள்ளது. அம்பேத்கரின் 125 வது பிறந்த தினத்தன்று மும்பை தாதரில் நடந்த நிகழ்ச்சியில் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் முன்னிலையில் ரோகித் வெமுலாவின் தாயார் ராதிகா மற்றும் சகோதரர் ராஜாவும் முறைப்படி தீட்சை பெற்று புத்த மதத்திற்கு மாறினார்கள். இது ஒரு வரலாற்று நிகழ்வு.

 இது பற்றி ரோகித் வெமுலாவின் சகோதரர் ராஜா கூறும் போது “என அண்ணன் உயிரோடு இருந்திருந்தால் பெருமையடைந்திருப்பார். ரோகித் கண்ட கனவு வாழ்க்கையை நானும் என் தாயும் தொடங்கவிருக்கின்றோம். இன்றிலிருந்து நானும் என தாயும் உண்மையிலேயே சுதந்திரமடைந்துள்ளோம். வெட்கக் கேட்டிலிருந்து விடுபட்டுள்ளோம். ரோகித்தின் மரணத்துக்குக் காரணமானவர்கள் தொடர்பாக பிரதமர் மோடி ஏன் ஒரு அறிக்கை கூட விடவில்லை. என் அண்ணனுக்காக கண்ணீர் விடும் அவர் துணைவேந்தர் அப்பாராவ் குறித்து எதுவும் சொல்லவில்லை” என்றார்.( நன்றி: தமிழ் இந்து நாளிதழ்)

 தாழ்த்தப்பட்ட மக்களை கிருஸ்தவர்களும், முஸ்லீம்களும் பணம்கொடுத்து மதம் மாற்றுகின்றார்கள் என்று தொடர்ந்து அவதூறு பிரச்சாரம் செய்துவரும் காவிபயங்கரவாதிகளின் முகத்திரையைக் கிழித்தெறிந்திருக்கின்றது ராஜாவின் இந்தப் பேட்டி. உண்மையில் ரோகித்தின் தாயும், அவரது சகோதரரும் புத்த மதத்திற்கு மாறியதற்குக் காரணம் பார்ப்பன இந்துமத கொடுங்கோன்மையே ஆகும். பார்ப்பன பயங்கரவாதத்தை எதிர்த்த தலித் மாணவர் என்ற ஒரே காரணத்திற்காக அவர்மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்ட மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி, மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் அப்பாராவ், இவர்களை பின் நின்று இயக்கும் பாசிச மோடி போன்றவர்களின் தலித் விரோத பார்ப்பன கொடுங்கோன்மையே அவர்கள் மதம்மாற அடிப்படைக் காரணமாய் அமைந்துள்ளது.

 இனி ரோகித்தின் குடும்பம் இந்தச் சமூகத்தில் தலைநிமிர்ந்து நடக்கலாம். எந்த நாயும் அவர்களை தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்ல இனி உரிமை கிடையாது. அவர்கள் தங்களை சுதந்திரமானவர்களாகவும், வெட்கக்கேட்டிலிருந்து விடுபட்டவர்களாகவும் இப்போது உணர்கின்றார்கள். இதன் மூலம் இத்தனை நாட்களாக இந்து மதத்தில் சுமந்து கொண்டிருந்த தாழ்த்தப்பட்டவன் என்ற இழிபட்டத்தை உதறித் தள்ளி இருக்கின்றார்கள்.

 ரோகித்தின் குடும்பம் புத்த மதத்தைத் தேர்ந்தெடுத்ததை நாம் பெரிதும் வரவேற்கின்றோம். அவர்கள் ஒருவேளை கிருஸ்துவத்தையோ, அல்லது இஸ்லாத்தையோ தேர்ந்தெடுத்து இருந்தால் அவர்களது தற்போதைய சமூக நிலையில் பெரிய மாற்றம் ஏதும் இருந்திருக்காது. அடிப்படையில் கிருஸ்தவத்திற்கும், இஸ்லாத்திற்கும் சாதி பற்றிய எந்த கண்ணோடமும் இல்லை என்பது ஒருபுறம், இந்திய சாதி சமூகத்தில் நீண்ட நாட்களாக உள்ள இந்த இரு மதங்களும் தங்களுடைய அடிப்படை கோட்பாடுகளுக்கு மாறாக இன்று சாதியை தீவிரமாக கடைபிடிக்கும் மதங்களாக மாறிவிட்டன என்பதும் தான் காரணம். கிருஸ்தவர்கள் இந்தியாவில் கத்தோலிக்கர்கள், சிரியன் கத்தோலிக்கர்கள், பிராடஸ்டன்டுகள், பெந்தெகொஸ்டுகள் என பல பிரிவுகளாகவும் உள்ளனர். மேலும் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் உள்ள தலித் கிருஸ்துவர்கள் திட்டமிட்டே சாதியை காரணம் காட்டி புறக்கணிக்கப்படுகின்றார்கள் என்பதும் ஒரு காரணமாகும்.

 இந்தியாவில் உள்ள இஸ்லாம் இன்று இந்து மதத்தைப் போன்றே பல சாதிகளாக பிரிந்துள்ளதை நாம் பார்க்கின்றோம். லெப்பை, ராவுத்தர், மரைக்காயர், ஷேக், மாப்பில்லா பிரிவினர் என பல சாதிகளாக அவர்கள் பிரிந்துள்ளனர். அவர்கள் தங்களுக்குள் எந்தவித கொடுக்கல் வாங்கலையும் வைத்துக் கொள்வது கிடையாது. இது அடிப்படையில் இஸ்லாத்திற்கு எதிரானது என தெரிந்தும் அவர்கள் இதை கடைபிடிக்கின்றார்கள். இந்து மதத்தில் இருந்து கிருஸ்தவத்திற்கும், இஸ்லாத்திற்கும் மாறும் தாழ்த்தப்பட்ட மக்களை இந்த மதங்கள் எந்தப் பிரிவில் எந்தச் சாதியில் வைப்பார்கள் என்பது குழப்பமான ஒன்று.

 ஆனால் புத்தமதம் அடிப்படையில் பார்ப்பனிய இந்துமத கொடுங்கோன்மைக்கு எதிரானது என்பதும் சமூகத்தின் விளிம்புநிலை மக்களை புத்தர் தன்னுடைய சங்கத்தில் சீடர்களாக சேர்த்துக்கொண்டு சனாதான இந்து மத தர்மத்தை ஒழிக்க முயற்சித்தார் என்பதும் புத்த மதத்தை மற்ற மதங்களில் இருந்து பிரித்துக் காட்டுகின்றது. இதை அம்பேத்கர் தன்னுடைய ‘புத்தரும் அவரது தம்மமும்’ என்ற நூலில் மிகச்சிறப்பாக கூறி இருக்கின்றார்.

 சமூகத்தில் விளிம்புநிலை மக்களாக இருந்த நாவிதர், துப்புரவுப் பணியாளர்கள், சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டோராக இருந்த பறையர் வகுப்பைச் சார்ந்தவர்கள், சுடுகாட்டுக் காவலராக பணிபுரிந்தோர், உழவர்கள், தொழுநோயாளிகள், பெண்கள், நாடோடிகள், கொள்ளைக்காரர்கள், குற்றவாளிகள் என அனைவரையும் புத்தர் தன்னுடைய சீடர்களாக சங்கத்தில் சேர்த்துக் கொண்டார்.(மேல் குறிப்பிட்ட நூல் பக்கம்: 247- 288) இதுதான் நம்மை புத்தரையும் அவரது கொள்கைகளையும் நேசிக்க வைக்கின்றது. (அனைத்துக் கொள்கைகளையும் அல்ல).

 அடிப்படையான பெளத்தமதக் கோட்பாடுகள் தீவிரமான பார்ப்பன எதிர்ப்புத்தன்மை வாய்ந்தவை. பார்ப்பனர்களின் புனித நூல்களை புத்தர் ஏற்றுக் கொள்ள மறுத்தார். யாகம், மந்திரம், வேதமதம் என அனைத்தையும் புத்தர் கடுமையாக எதிர்த்தார். பார்ப்பனியத்தின் உயிர் நாடியான பிரும்மம் என்ற கோட்பாட்டின் மீது புத்தர் காறித் துப்பினார். ஓமங்களில் லட்சக்கணக்கான விலங்குகள் பலியிடப்படுவதை கடுமையாக எதிர்த்தார். சமூகத்தை நான்கு வர்ணங்களாக பிரித்து தம்மை மட்டும் எப்போது சமூக மேல்நிலையில் வைத்துக்கொண்டு மற்ற வர்ணங்களை கீழ்ப்படுத்தி அதன்மூலம் வயிறு வளர்த்த பார்ப்பன கும்பலின் அயோக்கியத்தனங்களை அம்பலப்படுத்தினார். தன்னுடைய சங்கத்தில் அனைவரையும் சேர்த்துக் கொண்டு பார்ப்பனியத்திற்குச் சரியான பதிலடி கொடுத்தார். தன் வாழ்நாளின் கடைசி வரை மானங்கெட்ட பார்ப்பன மொழியான சமஸ்கிருதத்தைப் புறக்கணித்து மக்கள் மொழியான பாலிமொழியையே பயன்படுத்தினார். இது எல்லாம் வரலாற்று ஆய்வாளர்களால் நிரூபிக்கப்பட்ட உண்மை. மேற்குறிப்பட்ட அம்பேத்கரின் புத்தகத்தை படிப்பவர்கள் இதை தெரிந்துகொள்ளலாம். ஆனால் சில பார்ப்பன அடிவருடிகள் கொஞ்சம் கூட வெட்கமானமே இல்லாமல் புத்தரை இந்து மதத்தின் ஒரு பகுதியாக மாற்றுவதற்கு முயற்சிக்கின்றனர்.

  புத்தர் இருந்தவரை அவரையும் அவரது கொள்கைகளையும் ஒன்றும் செய்ய முடியாத பார்ப்பனக் கும்பல் அவர் இறந்தவுடன் அந்த வேலையில் தீவிரமாக இறங்கியது. புத்த மதத்தை ஹீணாயான பெளத்தம் என்றும், மகாயான பெளத்தம் என்றும் இரு பிரிவுகளாக பிரித்தது. இதை செய்தது நாகர்ஜூனன் என்ற பார்பனன் ஆவான். அன்று தொடங்கிய பார்ப்பன சதி இன்றுவரையிலும் தொடர்கின்றது.

 இந்துமத நூல்கள் புனிதமானவை என்றும் அவை சாதிகளுக்கு எதிராக பேசுகின்றன என்றும் பார்ப்பன இந்துமத அடிவருடிகள் தொடர்ந்து கூறிக்கொண்டு இருக்கின்றார்கள். அதில் எள் அளவாவது உண்மை இருக்கின்றதா?

  இந்துமக்களின் புனித நூல் என பார்ப்பனர்களாலும் பார்ப்பன அடிவருடிகளாலும் சொல்லப்படும் பகத்கீதையில் கண்ணன்…….

 “யதா யாதா ஹி தர்மஸ்ய க்லானிர்ப்- பவதி பாரத அப்ப்யுத்தான மதர் மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்- யஹம்( பகவத் கீதை உண்மையுருவில்: அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியார்: அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்: அத்தியாயம் 4 பதம் 7)

 இப்படிச் சொல்கின்றார். இதற்கு என்ன அர்த்தம். எப்போதெல்லாம் “உண்மையான தர்மம் மறைந்து அதர்மம் ஆதிக்கம் செலுத்தும் போது அவர் தனது சுயவிருப்பத்தால் தோன்றுகின்றார். தர்மத்தின் நியதிகள் வேதங்களில் விதிக்கப்பட்டிருக்கின்றன, வேத விதிகளை ஒருவன் முறையாகச் செயலாற்ற மறுக்கும் போது அஃது அதர்மமாகி விடுகின்றது…..”.

 கடவுள் எப்போதெல்லாம் விலைவாசி உயர்கின்றதோ, மக்கள் பட்டினியால் சாகின்றார்களோ அப்போதெல்லாம் தோன்ற மாட்டார். வேதங்களில் சொல்லப்பட்டிருக்கும் ஐந்து பைசாவுக்குக்கூட பெருமானமாகாத சாதிய சனாதான கடமைகளை ஒருவன் பின்பற்ற மறுத்தால் தான் கடவுள் அவதாரம் எடுப்பார். அவதாரம் எடுத்து சாதிய தர்மத்தை மீறியதற்காக அவனை வதம் செய்வார்.

மேலும்  “சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம குண- கர்ம விபாகச: தஸ்ய கர்தாரம் அபி மாம் வித்தய கர்த்தார- மவ்யயம்”(மேல் குறிப்பிட்ட நூல்: அத்தியாயம் 4 பாகம்13)

 நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன் என சாதிவெறி பிடித்த கண்ணன் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கின்றான். ஆனால் சில மானங்கெட்ட பார்ப்பன அடிவருடிகள் வர்ணங்களும், சாதிகளும் கடவுளால் படைக்கப்பட்டது அல்ல, அது மனிதனால் படைக்கப்பட்டது என வாய் கூசாமல் புளுகுகின்றனர். நான் மேலே குறிப்பிட்ட நூலின் ஆசிரியர் அதற்குக் கொடுத்திருக்கும் விளக்கம் “கடவுளே எல்லாவற்றையும் படைப்பார்,எல்லாம் அவரிடமிருந்தே பிறந்தன,எல்லாம் அவரிலேயே லயிக்கின்றன, அழிவிற்கும் பின் எல்லாம் அவரிலேயே தங்குகின்றன. எனவே சமூக நிலையின் நான்கு பிரிவுகளுக்கும் அவரே படைப்பாளி. இதில் முதற் பிரிவு ஸத்வ குணத்தில் நிலைபெற்றுள்ள பிராமணர் என்றழைக்கப்படுகின்றார் அறிஞர் குலத்தோர். அடுத்து சத்திரியர் என்றழைக்கப்படும் ரஜோ குணத்தில் நிலைபெற்றுள்ள ஆளும் குலத்தோர். வைசியர்கள் என்றழைக்கப்படும் வியாபாரிகள், ரஜோ குணமும் தமோ குணமும் கலந்த குணமுடையோர், தொழிலாளர்களான சூத்திரர்கள் தமோ குணத்தில் உள்ளனர்……”

ஊரை ஏமாற்றி உழைக்காமல் வயிறுவளர்க்கும் பார்ப்பன கூட்டத்தின் பெயர் அறிஞர் குலத்தோராம். காலைமுதல் மாலைவரை ஓய்வு இன்றி உழைக்கும் மக்களுக்குச் சூத்திர (வேசிமகன்) பட்டமாம்! எப்படி இருக்கின்றது கடவுளின் ஆணை என்று பார்த்தீர்களா? இதுதான் இந்துமத புனித நூலான பகவத் கீதையின் லட்சணம். இன்னும் நிறைய இருக்கின்றது. ஆனால் பார்ப்பன அடிவருடிகளுக்கு இதுவே போதும் என்று நினைக்கின்றேன்.

 அடுத்து இந்து மத்தின் புனித சட்ட நூலாக கருதப்படும் மனு என்ன சொல்லுகின்றான் என்று பார்ப்போம்.

 “தாழ்த்த ஜாதியான் பொருளாசையால் தனக்கு மேலான ஜாதியான் தொழிலைச் செய்தால் அவன் பொருள் முழுவதையும் பறித்துக் கொண்டு அரசன் அவனை நாட்டை விட்டுத் துரத்திவிட வேண்டும்”( மனு அத்:10- சுலோகம் 96)

 “சூத்திரன் சுவர்க்கத்திற்காவது, ஜீவநத்திற்காகவாவது அல்லது இரண்டிற்குமாவது பிராமணனையே தொழ வேண்டும். இவன் பிராமணைனையடுத்த சூத்திரனென்று ஒருவனுக்குப் பெயர்வந்தால் அதே யவனுக்குப் பாக்கியம்” (மனு அத்:10 சுலோகம் 122)

 “பிராமணன் கொடிய குற்றம் செய்தவனாயினும் அவனைக் கொலை செய்யாமலும், துன்பப்படுத்தாமலும் அவனுக்குப் பொருளைக் கொடுத்து அயலூருக்கு அனுப்ப வேண்டும்( மனு அத்:8- சுலோகம் 380)

“ மாதர்களின் சுபாவமே மனிதர்கட்குச் சிருங்கார சேஷ்டைகளினால் தோஷத்தையுண்டு பண்ணும்” (மனு அத்:2 சுலோகம் 213)

“ தாய், தங்கை, பெண் இவர்களுடன் தனியாக ஒன்றாக உட்காரக்கூடாது”( மனு அத்:2 சுலோகம் 215)

“ மாதர்கள் கற்பு நிலையின்மையும் நிலையா மனமும் நண்பின்மையும் இயற்கையாக உடையவர்கள்” (மனு அத்:9 சுலோகம் 15)

 இதுதான் இந்துமத புனித நூல்களின் யோக்கியதை. எவனாவது இந்து மத நூல்கள் புனிதமானது என்று சொன்னான் என்றால் அவன் ஒன்று அதை படிக்காதவனாக இருக்கவேண்டும்; இல்லை பார்ப்பனனை நக்கிப் பிழைக்கும் நாயாக இருக்க வேண்டும். இவ்வளவு கேவலமாக இருப்பதாலேயே அம்பேத்கார் மிகக் கடுமையாக பார்ப்பன இலக்கியங்களையும், அது போதித்த வர்ணாசரம, சாதிய தர்மங்களையும் எதிர்த்தார். ‘ நான் ஒரு இந்துவாக பிறந்துவிட்டேன்; ஆனால் இந்துவாக சாகமாட்டேன்’ என பிரகடனப்படுத்தினார். சொன்னதுபோல 10 லட்சம் மக்களுடன் புத்த மதத்தை தழுவினார்.

 ஆனால் இன்று ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன காலிகள் திட்டமிட்டே அம்பேத்கரை இந்து மத்தின் புனிதராக காட்டி தலித் மக்களை தம்பக்கம் இழுக்க முயற்சிக்கின்றனர். ஜாத்- பட்- தோடக் மண்டலுக்காக அம்பேத்கர் தயாரித்த ‘ஜாதியை அழித்தொழிக்கும் வழி’ என்ற புத்தகத்தை நம் ஒவ்வொருவரும் தவறாமல் கண்டிப்பாக படிக்க வேண்டும். குறிப்பாக அம்பேத்கரை தன்வசப்படுத்த நினைக்கும் ஆர்.எஸ்.எஸ் காலிகள் படிக்க வேண்டும். அதில் தெளிவாக அம்பேத்கர் சொல்கின்றார் “ இந்துக்கள் மிக ஆழமான மதப்பற்று உள்ளவர்களாக இருப்பதால் தான் சாதியைப் பின்பற்றுகின்றார்கள். சாதியைக் கடைப்பிடிப்பதில் மக்களின் தவறு எதுவுமில்லை. சாதி என்கிற கண்ணோட்டத்தை இந்துக்களின் மனதில் ஆழமாகப் பதிய வைத்து இருக்கிற இந்து மதத்தின் மீதே தவறிருப்பதாக நான் கருதுகின்றேன். என்னுடைய இந்தக் கருத்துச் சரியானதென்றால் நீங்கள் வீழ்த்த வேண்டிய எதிரி சாதியைக் கடைப்பிடிக்கும் மக்கள் அல்ல; சாதிகளின் மதமான இந்து மதத்தை மக்களுக்குக் கற்றுத் தந்திருக்கிற சாஸ்திரங்களே உங்கள் பயங்கர எதிரி”

 மேலும் “சாதிதான் இந்துக்களின் உயிர் மூச்சாக இருக்கின்றது என்பதில் எள்ளளவும் அய்யமில்லை. இந்துக்கள் இந்தத் தேசம் முழுவதையும் சாதி அமைப்பால் மாசு படுத்திவிட்டார்கள். சீக்கியர்கள், முகமதியர்கள், கிறித்துவர்கள் ஆகிய எல்லா மதத்தினரிடமும் இந்த சாதி நோய் தொற்றிக்கொண்டு விட்டது. எனவே, சீக்கியர்கள், முகமதியர்கள், கிறித்துவர்கள் உட்பட இந்தத் தொற்று நோயால் பீடிக்கப்பட்டுள்ள எல்லாத் தரப்பினரிடமிருந்தும் நீங்கள் ஆதரவு பெற முடியும். சுய ராஜ்யத்தை அடைவதற்கான போராட்டத்தைவிட, உங்கள் போராட்டம் கடுமையானது. சுயராஜ்யத்துக்கான போராட்டத்தில் தேசம் முழுவதும் உங்கள் அணியில் திரண்டு நிற்கின்றது. சாதி ஒழிப்புப் பிரச்சனையிலோ, நீங்கள் தேசம் முழுவதையும் எதிர்த்து நின்று அதுவும் உங்கள் சொந்த இந்திய தேசத்தையே எதிர்த்து நின்று போராட வேண்டி இருக்கின்றது. ஆனாலும் கூட, சாதி ஒழிப்பே சுயராஜ்யத்தை விட முக்கியமானது”.


 இதற்கு மேலும் இந்துமத காலிகள் அம்பேத்கரை கொண்டாடினார்கள் என்றால் அந்த மானங்கெட்ட கூமுட்டைகளுக்கு நாம் பதில்கொடுக்கவேண்டிய எந்த அவசியமும் இல்லை. அன்று தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த சாம்புகன் வேதம் ஓதினான் என்பதற்காக அவனது தலையை ராமன் வெட்டினான். இன்று தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ரோகித் வெமுலா இந்துமத புனிதங்களை எதிர்த்தான் என்பதற்காக பார்ப்பன சக்திகளால் திட்டமிட்டு கொல்லப்பட்டான். இதுதான் ஆண்டாண்டு காலமாக தொடரும் பார்ப்பன இந்துமதத்தின் கொடுங்கோன்மை.

 ஒரு மார்க்சியவாதியாக தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்கான தீர்வை நம்மால் முன்வைக்க முடியும். அது சாதிகளைக் கடந்த வர்க்க ஒற்றுமை. ஆனால் அம்பேத்கரின் நோக்கில் இருந்து பார்க்கும் போது தாழ்த்தப்பட்ட மக்கள் புத்த மதத்திற்கு மாறியதை நாம் வரவேற்கின்றோம். காரணம் அவர்கள் சுயமரியாதையை இழந்து இந்துமதத்தில் வர்க்க உணர்வு பெறுவதை விட சுயமரியாதையாக பெளத்த மதத்தில் இருந்து வர்க்க உணர்வைப் பெற வைப்பது என்பது எளிமையான வழியாகத் தோன்றுகின்றது. அதனால் ரோகித் வெமுலாவின் குடும்பம் பெளத்த மதத்திற்கு மாறியதை நான் மனப்பூர்வமாக வரவேற்கின்றேன்.

Comments

4 comments

4
satva sakya
சிறப்பான கட்டுரை. இந்திய சூழலுக்கு இப்போதைய தேவை பௌத்தம் தான். இந்து மதத்தை துறப்பது ஒன்றே தலித் மக்களுக்கு தீர்வு. இந்து மதத்தினுள் இருந்து கொண்டே அதனை சீர்படுத்த முயல்வது பயன்ற்றது.

ஜெய் பீம்.
நமோ புத்தாய
Ms.Surya
அருமையான கட்டுரை.திராவிட கழக தலைவர் திரு.கி. வீரமணி அவர்கள் கூறியது போல், BJP, RSS போன்றோர், அம்பேத்கர் இமயமலை ஆக இருப்பதால் ஏரி பார்க்க முயற்சி செய்கின்றனர். பெரியார் எறிமலை ஆக இருப்பதால் விட்டுவிட்டனர்.
Recently PM modi compares Ambedkar to Martin Luther King, but has earlier even even referred to him as the "modern Manu" - perhaps unaware that Ambedkar's public burning of Manusmriti is a milestone in the Dalit struggle.
JAGAPRIYAN
அம்பேத்கார் அவர்களது சொந்த மாநிலமான மகாராஷ்ட்டிராவில் 5 விழுக்காடுக்கும் அதிகமானோர் பௌத்தர்கள். அவர்களை இப்போது சமமாக ஏனைய இந்துக்கள் நடாத்துகின்றார்களா ? அவர்களது சமுக பொருளாதார நிலை ஏனைய தலித் இந்துக்களைவிட உயர்ந்துள்ளதா? இது பற்றி யாராவது தகவல் தர முடியுமா?
Abdullah
Buddhism is having Theravada, Mahayana, Vajrayana, and fourth-Zen Buddhism types of groups.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.