சில தினங்களுக்கு முன் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் அவர்கள்  அரசியலுக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையில் கூட்டம் நடைபெற்றது. இதில் 4000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகின்றது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. தமிழக மக்கள் மத்தியில் நேர்மையான அதிகாரி என்று பெயர் எடுத்த சகாயம் அவர்கள் வரும் சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நிற்க வேண்டும் என மக்கள் விரும்புவது போன்ற ஒரு தோற்றத்தை இந்த நிகழ்ச்சி ஏற்படுத்தி இருக்கின்றது. இது பற்றி சகாயம் வாய் திறக்காமல் இருப்பதில் இருந்தே சகாயம் மக்களின் நாடியை தெரிந்துகொள்ள இப்படி ஒரு ஏற்பாட்டை செய்கின்றாரோ என எண்ணத் தோன்றுகின்றது.

 sagayam iasதனது 23 ஆண்டு கால அரசுப் பணியில் 24 முறை பணிமாற்றம் செய்யப்பட்டவர் என்பதில் இருந்தே அவரது நேர்மையைத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் இந்த நேர்மை மட்டுமே, ‘லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து’ என்ற அவரது கொள்கை மட்டுமே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வாக இருக்க முடியுமா? அவர் எந்த அரசு பதவி வகித்தாலும் அந்தத் துறையில் நடைபெற்ற ஊழலை வெளிக் கொணர்ந்தார், ஊழல்வாதிகளை தட்டிக் கேட்டார் என்பது மட்டுமே ஒரு அவர் ஒரு  சிறந்த அரசியல்வாதியாக வருவதற்கு அனைத்துத் தகுதியும் உடையவர் என்று நாம் அங்கீகரிக்கப் போதுமானதா? நிச்சயமாக இல்லை என்பதே உண்மை.

  அன்னா கசாரே  ஏன் எப்போதும் ஊழலைப் பற்றி மட்டுமே பேசுகின்றார், இந்திய சமூகத்தின் முக்கிய பிரச்சினையாக உள்ள சாதி, தீண்டாமை, உலகமயமாக்கல் போன்றவற்றை பற்றிய அவரது பார்வை என்ன என்று நாம் கேட்டபோது  அனைவரும் சண்டைக்கு வந்தார்கள். அவர் ஊழலைப் பற்றி பேசும்போது நீங்கள் ஏன் சாதியைப் பற்றியோ, தீண்டாமையைப் பற்றியோ, உலகமயமாக்கல் பற்றியோ அவர் பேசவில்லை என்று கேட்கின்றீர்கள். இட்லி கடையில் போய் ஏன் புரோட்டா இல்லை என்று கேட்டால் எப்படி, புரோட்டா வேண்டும் என்றால் நீங்கள் புரோட்டா கடையில்தானே போய் கேட்க வேண்டும் என்று கிண்டல் அடித்தார்கள். அதே போலத்தான் "சகாயம் பல்வேறு ஊழல் முறைகேடுகளை அம்பலப்படுத்தினார். அதனால் அவர் முதலமைச்சராக வந்தால் அரசுத்துறையில் நடைபெறும் அனைத்து வகையான ஊழல் முறைகேடுகளுக்கும் முடிவுகட்டி ஒரு நல்ல ஆட்சியைத் தருவார். எனவே நாங்கள் சகாயம் அரசியலுக்கு வரவேண்டும் என்று விரும்புகின்றோம்" என்று சொல்கின்றார்கள்.

  கேட்பதற்கு  ஏதோ நியாயமான கேள்விபோலத் தோன்றும். ஆனால் இந்தக் கேள்விக்குள் ஒழிந்திருக்கும் அரசியல் அறியாமையைப் புரிந்து கொண்டால் நாமும் அப்படி கேள்வி கேட்பவர்களின் உண்மையான நோக்கத்தைப் புரிந்துகொள்வோம். அன்னா கசாரே ஏன் சாதி, தீண்டாமை, உலகமயமாக்கல் போன்றவற்றைப் பற்றி வாய்திறக்க மறுக்கின்றார் என நாம் கேட்டபோது, நம்மைப் பார்த்துச் சிரித்தவர்கள் அன்னாவின் அணியில் இருந்த அன்னா உட்பட பல பேர் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள் என்பதும், உலகவங்கியில் இருந்து மகசாசே விருது வாங்கியவர்கள் என்பதும், ஆர்.எஸ்.எஸ் மற்றும் என்.ஜி.ஓ க்களின் பின்புலம் கொண்டவர்கள் என்பதும் அம்பலமாகி நாடே சிரித்தது.

 ஒரு தமிழ் ஆசிரியர் தமிழைப் பற்றி மட்டுமே வகுப்பில் பேசுவார், அவர் ஓவியத்தைப் பற்றியோ, ஒரு நல்ல இசையைப் பற்றியோ வகுப்பில் பேசமாட்டார். ஒரு மருத்துவர் நோய்களின் தன்மை பற்றி மட்டுமே பேசுவார், அவர் அரசியல் பேசமாட்டார் என  நினைத்தால், எதிர்பார்த்தால் குற்றம் நம்முடைய அரசியல் புரிதலின்மைதான். அறிவு என்பது அனைத்தும் சேர்ந்ததுதான். அதைப் பிரித்து, பிரித்துப் பார்ப்பது என்பது பின்நவீனத்துவவாதிகளின் பார்வை. இன்று நம்முடைய நடுத்தர அறிவுஜீவிகள் பல பேர் இந்தப் பார்வையைத்தான் கொண்டிருக்கின்றார்கள்.

 சகாயத்திடம் இருக்கும் ஊழல் எதிர்ப்பு என்ற ஒன்றே போதும், அவர் அரசியலுக்கு வருவதற்குத் தகுதியானவர் என்று சொல்வதுகூட ஒரு பின்நவீனத்துவ பார்வைதான். இருப்பதிலேயே மலிவான, மட்டமான அரசியல் பார்வை இது. தன்னுடைய 23 ஆண்டு கால அரசுப் பணியில் ஊழலைத் தவிர மற்ற சமூகப் பிரச்சினைகளில் அவரது பார்வை எப்படி  இருந்தது எனப்  பார்க்க வேண்டும். ஊழலை எதிர்க்கும் சகாயம் அந்த ஊழலுக்கு அடிப்படையாக இருக்கும் உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல் போன்றவற்றைப் பற்றியோ, அதை  இருகரம் கூப்பி வரவேற்கும் இந்த அரசைப் பற்றியோ  எப்போதாவது வாய் திறந்து இருக்கின்றாரா? அப்படி அவர் வாய் திறக்காத பட்சத்தில் அவர் அதை ஆதரிக்கின்றார் என நாம் ஏன் எடுத்துக் கொள்ளக்கூடாது? ஒரு வேளை அவர் அதை எதிர்த்திருந்தால் இந்நேரம் தன்னுடைய பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு அரசியல் களத்தில் குதித்திருப்பார்.

 சகாயத்தைப் பொருத்தவரைச் சட்டத்தின்படியே அரசுத் துறையில் நடக்கும் ஊழல்களுக்குத் தீர்வு காண முடியும் என நம்புபவர். அதன் மூலம் ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் ஊழலற்றதாக மாற்றியமைக்க நினைப்பவர். சுடுகாட்டில் படுத்துத் தூங்கும் நிலைக்கு இந்த அரசு அவரை தள்ளியபோதும் இந்த அரசு கட்டமைப்புக்கு எதிராக வாய் பேசாதவர். அவர் அரசு பதவியில் இருந்த இந்த 23 ஆண்டுகளில் தமிழகத்தில் பல சாதிக் கலவரங்களும், சாதி ஆணவக் கொலைகளும், மிகப்பெரிய அளவிற்கு அரசியல்வாதிகளின் ஊழல்களும் நடைபெற்று இருக்கின்றன. சகாயம் சமூக அவலங்களுக்கு எதிராக குரல் கொடுப்பவர் எனில் இது போன்ற பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர் இதுபோன்ற பிரச்சினைகள் நடைபெறும்போது அதற்கு மெளன சாட்சியாகவே இருந்தார்!.

  நமக்குச் சகாயத்தின் நேர்மைமீது ஒரு துளி சந்தேகமும் இல்லை. நிச்சயம் அழுகி நாறிக் கொண்டிருக்கும் இந்த அரசுக் கட்டமைப்பில் சகாயம் போன்றவர்கள் ‘லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து’ என்று பிரகடனப்படுத்துவது பாராட்டுக்குரியதுதான். ஆனால் பிரச்சினை வெறும் ஊழல் மட்டும் அல்ல; அதைத் தாண்டி பிரமாண்டமானது. அது உலகமயமாக்கலாக, தனியார்மயமாக்கலாக, தாராளமயமாக்கலாக வியாபித்து நீள்கின்றது. சமூகத்தின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்லும் அரசியல் அறிவு சகாயத்திற்குக் கிடையாது என்பதுதான் நாம் முன்வைக்கும் குற்றச்சாட்டு. அப்படி முன்வைத்தாலும் அது நீதிமன்றங்களுக்குள் நம்மை அடைத்து வைக்கும் தீர்வாகத்தான் இருக்கும்.

 இப்போது நமக்குத் தேவை அரசியலில் புனிதர்கள் அல்ல; அரசியலில் புரட்சியாளர்கள். இப்போது மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம் என்பது அழுகி நாறிப்போன இந்த அரசுக் கட்டமைப்பை  அப்படியே தக்க வைத்துக்கொண்டு அதற்குள் தீர்வை தேடச் சொல்லித் தரும் நேர்மை விரும்பிகள் அல்ல; இந்த அரசுக் கட்டமைப்பை மாற்றும் நெஞ்சுரம் படைத்த மனிதர்கள். கேஜ்ரிவாலைப்போல எந்தச் சித்தாந்தத்திற்கும் தாலி கட்டிக் கொள்ளாத, சில்லரை சீர்திருத்தங்கள் செய்து மக்களின் கோபத்தை தனிக்கும் என்.ஜி.ஒ வழிபட்ட கொள்கைகளை நடைமுறைப்படுத்த விரும்பும் முதலாளித்துவ அறிவுஜீவிகள் நமக்குத் தேவையில்லை.

 ஆனால் சகாயம் போன்றவர்கள் இன்று மக்களால் விரும்பப்படுவதற்குக் காரணம் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருப்பதுதான். பெரும்பாலான நடுத்தர வர்க்க மக்கள் இந்தக் கட்டமைப்பிற்குள்ளேயே மிக எளிமையான வழியில் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். அந்த மாற்றம் இப்போது அவர்கள் அனுபவித்து வரும் முதலாளித்துவ மகிழ்ச்சிகளுக்கு வேட்டு வைக்காததாக இருக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள். அதைச் செய்யவல்ல ஒருவராகவே  அவர்கள் சகாயத்தைப் பார்க்கின்றார்கள்.

 கடைசியாக, நமக்குத் தெரிந்த தோழர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது கேட்டேன் “தோழர், நாட்டில் இவ்வளவு சாதிக் கலவரங்கள் நடைபெறுகின்றதே, சாதி ஆணவக் கொலைகள் நடைபெறுகின்றதே , மதவெறியர்கள்  தமக்கு எதிரானவர்களை எல்லாம் கொல்கின்றார்களே, மக்கள் தினம் பட்டினியால் சாகின்றார்களே இதற்குத் தீர்வே கிடையாதா” என்று. அதற்கு அவர் சொன்னார் “எல்லாம் புரட்சி நடந்து முடிந்தால் சரியாகிவிடும்.  அதுவரை இது எல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கும் நம்மால் வேடிக்கை பார்ப்பதைத் தவிர ஒன்றும் செய்ய முடியாது என்று”. அப்போதுதான் நினைத்தேன் ஏன் மக்கள் புரட்சியாளர்களைப் பார்த்து பயந்து ஓடுகின்றார்கள் என்று. இது போன்றவர்களை நம்பித்தான் இன்று பல புரட்சிகர கட்சிகள் தமிழ்நாட்டில் உள்ளது. அதனால் மக்கள் சகாயத்தை நோக்கி மட்டும் அல்ல ரஜினி, விஜய் என யாரைத் தேடிப் போனாலும் நாம் ஆச்சரியப்பட முடியாது!

- செ.கார்கி

Comments

9 comments

9
Mahendran
Pls don't write like this essays.. friend... No one Govt officiers protest against any problems in our society... We just believe That's All... Those who are all protest against Social problems in initial stage Nowadays become a crorepathi and Frauds....Don't compare one gentle man with fellow actors... Thank you....
Surya
IPO irukura corruption niraitha katchi galudan compare pani pakurapa makkal avar varugai ah yethir nokuvathu thavarala yendru ninaikuran. Makkal munna Vida konjam sirapa sindika aramchutaganu ninaikuran. For example reservation venam nu Donna bjp Bihar LA thotru poivitathu. Ithu makkal bjp kudutha sariyAna pathiladiyaga ninaikiran
குமாரசாமி
ஒரு ஆட்சிக்கு இரண்டு வகையானவர்கள் தேவை. ஒன்று சகாயம் போல வகுக்கப்பட்ட கொள்கையை செயல்படுத்தும் நேர்மையான அதிகாரிகள். இன்னொன்று கொள்கையை வகுக்கும் பிரசாரம் செய்யும் வகையினர். இன்று இப்பிரச்சாரம் செய்யும் வகையின்ர் தலைவர்களாக அறிப்படுகிறார்கள். இவர்கள் துறைசார் அமைச்சர்களாக பொருப்பு ஏற்க்கும் போது அவர்களுக்கு அந்தத் துறைகுறித்து என்ன அறிவிருக்கிறது என்று அவர்களும் மக்களும் சிந்திப்பதில்லை. இந்த அடிப்படை யில்தான் தலைமையைப் பற்றி பேசுகிறோம். ஒரு புரட்சி வெற்றி பெற்ற உடன் எல்லாம் சரியாகி விட்டது இனி பாலாறும் தேனாறும் ஓடுமா என்றால் ஓடாது. இனிமேல்தான் மிகப்பெரிய வேலையே காத்திருக்கிறது. அது புரட்சியை விட கடினமானது என்று புரட்சியில் கலந்து கொண்ட ஒருவர்-நிறரகுவா- கூறியது. எத்தனை பேர்களால் உள்வாங்கப்பட்டது. மத்தியதர வர்க்கம் தனது இன்றைய நிலையை மாற்றாமல் நல்ல ஆட்சி வேண்டும் என்று நினைக்கிறது. அதற்கு என்ன வழி என்று அது கூறுமா?. அதற்கு தெரியுமா?. இன்று அமேரிக்கர்கள்-பிரச்சாரம செய்யும் தலைவர்கள் தாங்கள் ஆட்சிப்பொருப்புக்கு வந்த உடன் சகாயம் போன்ற ஒரு கூட்டத்தாரை- சுமார் 2500 பேர்கள் எனக் கேள்வி- தங்களுடன் அழைத்துக் கொள் கின்றனர்.திரை மறைவில் அவர்கள் அரசு எந்திரத்தை நடத்து கிறார்கள். அப்படிப்பட்ட நிலையில் சகாயம் தவிர்க்கவே முடியாதவர். நம் நாட்டில் பிரச்சாரம் செய்யும் தலைவர் களுக்கு பஞ்சமே இல்லை. பல நூறு ஐ.ஏ.எஸ்.களில் ஒரு சகாயத்தைத்தான் கேள்விப்படுகிறோம். 1960 களில் திருநெல்வேலி பகுதியில் பசுபதி என்ற ஐ.ஏ.எஸ். காரரைப்பற்றி அறியாதவர்களே இல்லை 90 களில் அவரைப் பற்றி விசாரித்த போது நிறைய பேர்களுகு அவர் என்ன ஆனார் என்று தெரிய வில்லை. ஆனால் சகாயம் ஈடு கொடுத்து நிற்கிறார். அதனால் நடுத்தர வர்க்கம் அவரை விரும்பினால் அதில் தவறு ஒன்றும் இல்லை. நமது நடுதர வர்க்கம் அரசியல் வறுமையில் இருக்கிறோம் அந்த வறுமைக்கு மாற்று என்ன?. அது சகாயத்தால் முடியாது என்று ஒற்றை வரியில் தீர்ப்பு எழுதுவதால் நிற்காது.
RAJARAM R
ஒரு அரசு ஊழியர் அரசின் தனியார்மய பொருளாதார கொள்கைகளை பற்றி விமர்சிக்க முடியாது . அது தனக்கு பிடிக்கவில்லை என்றபோதும் அரசின் திட்டங்களை செயல்படுத்த வேண்டிய இடத்தில் இருப்பவர்கள் அதனை மீறி ஒன்றும் செய்ய இயலாது. அப்படி பேசவேண்டுமாயின் அவர் அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு பின்புதான் களப்பணி ஆற்ற இயலும் . ஒருவர் அப்படி அரசின் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதாலேயே அவர் அரசை ஆதரிக்கிறார் என்று பொருள் கொள்ள கூடாது . டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளில் மாலையிடும் அனைத்து அரசு உயர் பதவியில் இருப்பவர்கள் எல்லோருமே அதை மனமுவந்துதான் செய்கிறார்களா ?

அரசின் நலத்திட்டங்களை மக்களுக்கு கொண்டுசேர்ப்பதில் எந்த அளவுக்கு முனைப்போடு செயல்படுகிறார் அதில் எவ்வளவு நேர்மையாய் இருக்கிறார் என்றுதான் பார்க்க வேண்டுமே தவிர அவர் ஒட்டுமொத்த பிரச்சனைகளில் அவர் நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்புவது நியாமற்றது . அவர் அரசு ஊழியர் தானே தவிர அரசியல்வாதி அல்ல .

ஆகவே ,சகாயம் ஐ எ எஸ் ,சமூக பிரச்சனைகளில் அல்லது அரசின் இதர நிலைபாடுகளில் கருத்து தெரிவிக்கவில்லை என்பது அபத்தம் . ஒருவேளை அவர் தன்னை முழுவதுமாக பொது வாழ்க்கையில் அர்பணித்து கொண்டபிறகு அவர் கருத்து தெரிவிக்கவில்லை அல்லது அதன்மீது உரிய சரியான பார்வை இல்லை என்றால் விமர்சிக்கலாம் . சகாயமும் அன்னா ஹசாரேவும் ஒரே அளவுகோலில் வைக்க பட வேண்டியவர்கள் அல்ல .
C.S.P.Ravikkumar
நண்பர் அவர்களே! விசாரனைக்கு முன்பே தீர்ப்பை தீர்மாணிக்கும் திறமையானவர்களின் நீதியை போல், உங்களுடைய கருத்தை பதிவிட்டு இருக்கிறீர்கள். காரணம் தலைப்பில் சகாயம் செய்வாரா? என்று கேள்வியை எழுப்பிவிட்டு, ஆங்காங்கே சில இடங்களில் புகழ்ந்தும், தாழ்த்தியும் முடிவில் சகாயம் தலைமைக்கு தகுதியற்றவர் என்பதைப் போல குறிப்பிட்டுள்ளீர்கள். தன்மனதில் உள்ள கருத்தை ஒட்டுமொத்த தமிழக மக்களின் கருத்துப்போல் கூறியுள்ளீர். தான் முழுமையாக அறியாத புதிய வகை ஒரு மரமோ அல்லது செடியோ முளைத்தால் அதை எப்போதுமே களை என்றுதான் கருதி அதனை முளையிலேயே அழித்துவிடவேண்டும் என்ற சித்தாந்தம் கொண்டவராக இருப்பவர் போல் தெரிகிறது. அனைத்து துறை சார்ந்த அறிவையும் பெற்றிருப்பவர்கள் தான் இன்று தலைவர்களாக இருக்கிறார்களா? இல்லை அதுபோன்ற அறிவு இவரிடம் இல்லை என்பதை எதை வைத்து முடிவுசெய்தீர்கள். அரசாங்கத்தின் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் ஒருவர், தன்னுடைய பதவிக்கும், தகுதிக்கும், உட்பட்டு வரம்பு மீறாமல் நடப்பது தான் சரியாக இருக்க முடியுமே தவிர, மாறாக, வரம்புக்கு மீறிய செயல்களில் ஈடுவதும், விமர்ச்சிப்பதும் வேண்டுமானால் குற்றமாக கருதலாம். அவருடைய கொள்கையும், பார்வையும் என்ன என்பதை தெரியப்படுத்த அவர் என்ன அரசியல்வாதியாகவா இருக்கிறார். தனியார்மயம், தாராளமயம், உலகமயம் போன்ற பிரச்சனைகளுக்கு கொள்கை ரீதியாக தீர்வு சொல்கிறர்வர்கள் தான் நாடாளுகிறர்களா? அல்லது புதிய கட்சியை தொடங்குகிறார்களா?
சகாயம் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கைகொண்டவராக இருப்பதால்தான் சட்டத்தின் மூலமாக அரசு எந்திரங்களை சரியாக செயல்படுத்தவும், நிர்வாகத்தை சீர்செய்யவும் முடியும் என்று செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். பொதுவாக, மக்களின் விருப்பம் அடுத்தவர் நேர்மையாக இருக்கவேண்டும் என்று ஆசைப்படுவார்கள் ஆனால், அந்த நேர்மை தனக்கு பாதகமாக இருக்குமானால், அவர்மீதே பொய்க்குற்றம் சாட்டுவதும், அவர் காலத்திற்கு ஏற்ற மனிதர் இல்லை, அவரிடம் திறமை இல்லை, அவரிடம் கொள்கையில்லை, கோட்பாடு இல்லை என்று எளிதாக குற்றம் சாட்டி அவரை தரம் தாழ்த்தி ஒதுக்கிவிடுவர். நல்லவர்கள் நாட்டுக்கு தேவையில்லை காலத்திற்கு ஏற்ப அரசியல் செய்ய தெரிந்தவர்கள் தான் நாடாளும் தலைமைக்கு தகுதியானவர்கள் என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது. கல்வி அறிவு, நேர்மை, துணிவு, எளிமை, ஊழலுக்கு எதிராக குறள் கொடுப்பவர் என்று மட்டும் அவரை அடையாளப்படுத்தி விடமுடியாது, சமூக அக்கறையும், பொறுப்பும் மிகுதியாகக் கொண்ட ஒரு சிறந்த மனிதர் என்பதை அவர் வகித்த அந்தந்தத் துறையின் பதவிக்காலங்களில் செய்து காட்டியிருக்கிறார். வறுமையே லஞ்சத்திற்கும், ஊழலுக்கும் அடிப்படை என்ற புரிதல் அவரிடம் உள்ளது. எத்தனை எத்தனையோ நல்லவர்கள் இன்றைய அரசியலுக்கு வரவே அஞ்சுகிறார்கள். இன்னும் சரியாக சொல்வதானால், ஜனநாயக நாட்டில் அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டவே அஞ்சி ஒதுங்குகிறார்கள். இந்த நிலையில் துணிவும், நேர்மையும் கொண்ட சகாயம் போன்ற ஒருவர் தலைமை ஏற்க வேண்டும் என்று இளைஞர்கள் விரும்புவது குற்றமா? இதுவரை நான் அரசியலுக்கு வருகிறேன் என்று அவர் எதுவும் கூறவில்லை என்ற போதிலும் விவாதங்கள் வீரியம் பெற்றுக்கொண்டிருக்கிறது. இதற்கு அவர் பதில் சொல்லாமல் இருப்பதால் அவர் மக்களின் நாடி பார்க்கிறார் என்கிறார்கள். மக்களின் மனநிலையை அறியாமல், அரசியலின் ஆழம் தெரியாமல் காலை வைப்பது என்பதுதான் அறியாமையாகும். ஒரு சிறந்த நிர்வாகி என்பவர் ஆழம் பார்க்காமல் ஆசையில் களம் இறங்கினால் தான் தவறே ஒழிய, அமைதியாக இருப்பதும், இளைஞர்களுக்கு எழுச்சியூட்டுவதும் தவறில்லை. ஒரு வேலை அவர் அரசியலுக்கு வந்தாலும் அதிகார பலமும், பண பலமும் கொண்ட அரசியல்வாதிகளிடம் கரை சேர்வது கடினம் என்றாலும் குளிருக்கு பயந்து குளிக்காமல் இருக்கமுடியுமா? சகாயம் IAS காலத்தின் அவசியம் என்றுதான் தோன்றுகிறது. முயற்சிப்பவர்களை முடக்கவேண்டாம், முடிந்தவரை உற்சாகப்படுத்துவோம்.
வே. பாண்டி
சிறந்த கட்டுரை. கார்கிக்கு பாராட்டுகள். சகாயம் என்ற கசாயம் சரிப்பட்டு வராது.
இ.பு.ஞானப்பிரகாசன்
என்ன கட்டுரை இது?......

சகாயம் நேர்மையானவர்தாம். ஆனால், நாட்டின் மற்ற பிரச்சினைகள் பற்றியோ, அவர் எந்தப் பிரச்சினைகளுக்காகப் போராடுகிறாரோ அதன் ஊற்றுக்கண் பற்றியோ இதுவரை அவர் வாய் திறந்திருக்கிறாரா? இல்லை. எனவே, அவரை நாம் முதலமைச்சராக்கக் கூடாது என்கிறார் கட்டுரையாளர்.

சரி, அனைத்தையும் ஒப்புக் கொள்கிறேன். அப்படி இந்தத் திறமையில்லாத, புரட்சிகரச் சிந்தனையில்லாத, வெறும் நேர்மை என்கிற ஒரு தகுதியை மட்டுமே கொண்ட இந்த சகாயம் அரசியலுக்கு வர வேண்டா என்றால், இவருக்குப் பதிலாக, மேற்படி அத்தனை தகுதிகளும் கொண்ட வேறு யார் இங்கே இருக்கிறார்கள்?

அரசியலில் நல்லவர்கள் இல்லை அல்லது அரசியலில் ஏற்கெனவே இருக்கிற நல்லவர்களை மக்களுக்குப் பிடிக்கவில்லை எனும்பொழுது மக்கள் தங்களுக்குப் பிடித்த ஒருவர் பின்னால் போனால் அதையும் ஏன் வேண்டா என்கிறீர்கள்? ஏதாவது ஒரு வகையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டுப் போகட்டுமே! தி.மு.க விட்டால் அ.தி.மு.க, அ.தி.மு.க விட்டால் .தி.மு.க எனும் இந்த நச்சுச் சுழற்சியிலிருந்து எப்படியாவது மக்கள் விடுபடட்டுமே! அதை ஏன் வேண்டா என்கிறீர்கள்?

எவ்வளவுதான் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் இப்பொழுது இருக்கிற மனிதர்களை வைத்துதான் நாம் மாற்றங்களைக் கொண்டு வந்தாக வேண்டும். ஏற்கெனவே இருக்கிறவர்களையும் குற்றம் சொல்லி, புதிதாக வருபவர்களிடமும் குறை கண்டுபிடித்துக் கொண்டு, ஆகவே இவர்கள் யாருமே வேண்டா, எல்லாத் தகுதிகளும் ஒருங்கே கொண்ட இறைத்தூதன் ஒருவன் வரட்டும் எனக் காத்திருந்தால் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அந்தக் காத்திருப்பு முடிவுக்கு வராது. மனிதர்கள் குறைபாடுகள் உள்ளவர்கள்தாம். இந்தக் குறைபாடுள்ள மனிதர்களிலிருந்தே ஒரு நல்லவரைத் தேர்ந்தெடுப்பது என்பதுதான் நடைமுறைக்கு ஒத்து வரும். மாறாக, எந்த விதக் குறையுமில்லாத, எல்லாத் தகுதிகளும் உடையவருக்காகக் காத்துக் கொண்டே இருந்தால் மீண்டும் மீண்டும் நாட்டை அதுவரை இதே கொள்ளைக்காரர்களிடமும் இன துரோகிகளிடமுமே ஒப்படைத்து விட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக அழிய வேண்டியதுதான். அப்படிப்பட்ட இறைத்தூதன் வரும் வரை நாம் உயிரோடிருக்க மாட்டோம்!
Surya
Mr.sahayam may have honesty, social responsibility,etc., but these are not enough for politics. He doesn't have management power like Ms. Jeyalaitha. (I mentioned her for only example. I never say she is good.) So I think, Mr. Karki is rightly said.
நாவரசன்
இன்றைய சமுதாய அமைப்பின் பல்வேறு பிரச்சனைகளையும் பலரும் அவரவர் பின்னணிக்கு ஒப்ப மையப்படுத்துகிறார்கள். இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டுமென்பதில் அவர்களுடைய முயற்சி இருக்கும் வரை அதை வரவேற்கப்பட வேண்டியதாகும். ஆனால் இந்தப் பிரச்சனைகள் குறித்து அவர்கள் முன்வைக்கும் தீர்வுகள் விவாத த்திற்கு உட்படுத்த வேண்டும். அதில் அனைவரும் பங்கேற்க வழி வகுக்க வேண்டும். அறிவியல் அடிப்படையின்றி, பிரச்சனைகளுக்கு நாம் தீர்வு காண முடியாது.
ஊழலுக்கு எதிரான முயற்சிகளை நாம் வரவேற்க வேண்டும். ஆனால் ஊழலின் ஆணி வேர் இந்த அரசியல் சமூக அமைப்பிலே இருக்கிறது, ஆகவே அதை நாம் மாற்ற வேண்டும் என்பவர்கள், பிரச்சனையின் அடிப்படையை சரியாக எழுப்புகிறார்கள். ஒவ்வொரு பிரச்சனையும், கருத்துக்களும் அங்கு நிலவும் அரசியல், பொருளாதார அமைப்பை அடித்தளமாகக் கொண்டு எழுகின்றன, ஒரு சிலருடைய அறிவுக் கூர்மையில் மட்டும் உதிப்பதில்லை. ஆனால் சிந்தனையாளர்கள் இந்தச் சூழலையும் கடந்து பிரச்சனைக்குத் தீர்வு காண் முற்படுகிறார்கள்.
இன்றைய பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டுமென்றால், இன்றைய அமைப்பு மாற்றப்பட வேண்டும் என்பது அறிவியல். ஆனால் பிரச்சனைகளோடு போராடுவதன் மூலம் மக்களை அந்த முடிவுக்கு நாம் கொண்டு செல்ல வேண்டும், ஓரத்தில் ஒதுங்கி நின்று தத்துவம் பேசுவதால் அல்ல. செயல்முறையும், அறிவியலும் (கருத்ததியலும்த்து) ஒன்றோடு ஒன்று இணைந்ததாகும். ஒன்றால் மற்றொன்று செழுமைப் படுகிறது. கருத்தியல் திட்டமிட்ட செயல்முறைக்கும், செயல்பாடுகள், கருத்தியலை மேலும் திருத்தவும், வளர்க்கவும் பயன்படுகின்றன.
இன்றைய அமைப்பை மாற்ற வேண்டும் என்பது நமது கடந்த கால அனுபவம் காட்டும் படிப்பினையாகும். சில கட்சிகளையே, தனி நபர்களையோ மாற்றிப் பயனில்லை, என்பது தெள்ளத் தெளிவான உண்மையாகும்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.