கடந்த 24.11.2015 அன்று துருக்கியானது ரஷ்யாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளது. அந்த நிகழ்வு ஏற்கனவே இருந்த அமெரிக்கா-ரஷ்ய உறவை மிகவும் மோசமாக்கி உள்ளது.

ஒரு பக்கம் புதின் ரஷ்யாவின் கீழ் பல அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு நாடுகளும், ஒபாமா அமெரிக்கா தலைமையில் பொதுவுடமை எதிர்ப்பு நாடுகளும் அணி திரள ஆரம்பித்துவிட்டன.

obama putin

ஏற்கனவே அமெரிக்கா வளர்த்தெடுத்த ஐ.எஸ் தீவிரவாதம் மத்திய கிழக்கை அழித்துக் கொண்டிருக்க, அதை தடுக்கிறேன் என கூறிக்கொண்டு பல வருடங்களுக்கு முன் உள்ளே நுழைந்த அமெரிக்கப் படைகளால் ஒரு பயனும் இல்லை என்பது உலகமறிந்த உண்மை.

இதில் ஐ.எஸ் தீவிரவாதத்தை ஒடுக்கவும் தனது உரிமையான டார்டஸ் கப்பற்படை தளத்தை பாதுகாக்கவும் உள்ளே நுழைந்த ரஷ்யப் படையின் வெற்றியை சகித்துக் கொள்ள இயலாமல் தனது அடிமையான துருக்கி மூலம் ஒரு ரஷ்ய போர் விமானத்தை சுட்டுவீழ்த்தி தன் ஏகாதிபத்திய வெறியை தீர்த்துக் கொண்டுள்ளது அமெரிக்கா.

ஏற்கனவே உக்ரைனில் யுத்தம் வேறு. உக்ரைனின் தன்னாட்சிப் பிரதேசமான கிரிமியாவில் ரஷ்ய இனத்தவர்கள் அதிகம். எனவே அங்குள்ள மக்கள் ரஷ்யாவுடன் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என காலம்காலமாக வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருக்க தன் மக்களின் நலனுக்காக ஒரு சிறு படையை அனுப்பி ஒரு துளி ரத்தம் சிந்தாமல் ஒரு தீபகற்பத்தை வென்று எடுத்தது ரஷ்யா.

தன் மகனுக்கு ஒரு பிரச்சினை என்றால் தாய் கேட்காமல் உதவுவது இல்லையா? அதைத் தான் ரஷ்யா செய்தது. உடனே ஏகாதிபத்திய அமெரிக்கா ரஷ்யாவின் மீது பொருளாதாரத் தடை மேலும் எண்ணற்ற தடைகளை விதிக்க, மற்ற ஐரோப்பிய நாடுகளை கட்டாயப்படுத்தியது உலகறியும். இதில் ரஷ்யா தனது எண்ணெய் வளத்தை குழாய் மூலம் உக்ரைன் வழியாகத் தான் ஐரோப்பிய நாடுகளுக்கு கொண்டுசெல்கிறது. எனவே உக்ரைனில் தன் ஆதரவில் இயங்கும் ஒரு பொம்மை அரசை நிறுவ எவ்வளவோ முயற்சிகள் அமெரிக்காவால்.

அமெரிக்கா என்றென்றும் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டைத்தான் எடுத்துள்ளது. ரஷ்யா தனது பழைய ராணுவ ஒப்பந்தங்களான வார்சா உடன்படிக்கையை கைவிட்டாலும் அமெரிக்கா இன்னும் அந்த நேட்டோ உடன்படிக்கையை கைவிட்டதாக இல்லை. உண்மையில் குற்றவாளி யார் எனில் அமெரிக்காவே. ஒரு புறம் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு ரஷ்யாவை சுற்றி வளைக்கும்படி ஆயுதங்களையும், படைகளையும் குவித்து கொண்டால் யாருக்குத் தான் கோபம் வராது? அதிலும் ரஷ்யர்கள் தேசபக்தி மிக்கவர்கள். எனவே ரஷ்யா தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது.

நேட்டோவை சமாளிக்க, பழைய சோவியத் நாடுகளை ஒன்றிணைத்து CSTO என்ற ஒரு ராணுவ ஒப்பந்தம் போடப்பட்டது. ரஷ்யா உலகில் மிகப்பெரிய பரப்பளவு உடைய நாடு. மேலும் எண்ணெய் வளம் மிகுந்த தேசம். எண்ணெய் விவகாரத்தில் பல ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவை நம்பியே உள்ளன. அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளை ரஷ்யாவிற்கு எதிராகத் தூண்டும் போது அதை முறியடிக்க தன் எண்ணெய்க் குழாய்களை அடைக்கப் போவதாக ஐரோப்பிய நாடுகளை மிரட்டும் நிலைக்கு ரஷ்யாவை தள்ளியது அமெரிக்கா.

மேலும் ரஷ்யா தனது சோவியத் கால உளவு வேலைகளை குறைத்து விட்டாலும் அமெரிக்கா விடுவதாக இல்லை. ரஷ்யாவில் தனது உளவு அமைப்பான சி.ஐ.ஏ மூலம் அடிக்கடி கலவரங்களை ஏற்படுத்தும்போது வலுக்கட்டாயமாக ரஷ்யா தனது தகவல் தொடர்பு சேவைகளை உளவு பார்க்கவேண்டும் என்று ஆக்கப்பட்டது.

இன்றும் ரஷ்யாவுக்கு கியுபா, வெனிசுலா, இரான், சிரியா போன்ற நம்பகமான நட்பு நாடுகள் உண்டு. ஆனாலும் ரஷ்யா தனது ஒட்டு கேட்கும் (SIGINT) தளமான கியுபாவில் உள்ள லார்டஸ் தளத்தை மூடியது. இருப்பினும் அமெரிக்கா ரஷ்யாவை வம்புக்குகிழுப்பதை நிறுத்த வில்லை. இதன் காரணமாக ரஷ்யா இன்று உலக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது எனலாம்.

மீண்டும் உலகம் ஒரு பயங்கரமான பனிப்போரை சந்திக்கப் போகிறது. மீண்டும் ஐரோப்பா சண்டை களமாக்கப்பட்டு வருகிறது. ஒரு பக்கம் நேட்டோ (NATO), அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய ஆதரவு நாடுகள், மறுபக்கம் சி.எஸ்.டி.ஒ (CSTO), எஸ்.ஸி.ஒ (SCO), ரஷ்யா, சீனா போன்ற ஏகாதிபத்ய எதிர்ப்பு நாடுகள் அணி சேர்ந்தாயிற்று. உலகமெங்கும் இன்று இரண்டாம் உலகப்போர் தொடக்கத்தில் நிலவிய ஆயுதப் போட்டி. அணு ஆயுதங்களும், நுட்பமான ரேடாரில் சிக்காத போர் விமானங்கள், நீர்முழ்கிக் கப்பல்கள், விமானந்தாங்கிக் கப்பல்கள் என பேரழிவு படைக்கலன்கள்.

ஐ.நாவில் அமெரிக்க அணியினர் சிரியாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர அதை ரஷ்ய அணியினர் வீட்டோவால் முறியடிப்பது என பழைய பனிப்போர் வழிமுறைகள் பல விவகாரங்களில் வெளிப்பட்டன.

இஸ்ரேல் அமெரிக்க ஆதரவு நாடு எனும் ஒரே காரணத்துக்காக காஸாவில் அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கும், போது உலக நாடுகள் அனைத்தும் அந்தப் படுகொலை யுத்தத்தை கண்டுகொள்ளாமல் துணை நின்றன. ஆனால் ரஷ்யா தனது மக்களுக்கு ஒரு ஆபத்து எனும்போது தன் படையை அனுப்பி பாதுகாத்தால் ஏதோ பெரிய குற்றம் போல பொருளாதாரத் தடைகளை விதிப்பதும், உலக நாடுகள் குரல் கொடுப்பதும் ஏன்? அப்படியெனில் ஏன் இஸ்ரேல் மீது பொருளாதாரத் தடை விதிக்கவில்லை?

உலகில் ஏற்பட்ட பல உள்நாட்டுப் போர்களுக்கும், யுத்தங்களுக்கும் முக்கிய காரணம் அமெரிக்கா என்பதை யாரும் மறுக்க முடியாது. சீனா அணு ஆயுதம் வைத்திருந்தால் ஏன் அமெரிக்காவிற்கு வலிக்கிறது? இரான், சிரியா அணு ஆயுதங்களை வைத்திருந்தாலோ, அல்லது ரஷ்யாவிடம் ஆயுதம் வாங்கினால் அமெரிக்காவிற்கு என்ன பிரச்சினை? இந்தியா-பாக்கிஸ்தான் மோதிக் கொண்டால் அமெரிக்காவிற்கு என்ன கவலை? இந்த கேள்விகளுக்கு அமெரிக்காவால் பதில் சொல்ல இயலாது.

நீங்கள் ரஷ்ய அதிபர் புதினை குறைத்து மதிப்பிட வேண்டாம். பயங்கர தேசியவாதியான அவர் சோவியத் உளவு அமைப்பான கேஜிபியில் பெரிய அதிகாரி. ரஷ்யாவிலே மிக அரிதான அரசியல் சதுரங்கம் என்ற விளையாட்டை விளையாடத் தெரிந்த ஒரு சிலரில் ஒருவர். மக்களோடு மக்களாக ஒன்றி வாழ்பவர். செங்கன்யா, ஜியார்ஜியா யுத்தங்களின் ராஜதந்திரி. ஆனால் ஒபாமாவை எடுத்துக் கொண்டால் ஒரு திறமையும் கிடையாது. எல்லா அமெரிக்க அதிபர்களுக்கும் உள்ள அதே ஆதிக்க வெறி, உலகை ஆளும் கனவு, தொழிலாளர் அடக்குமுறைவாதம் என்ற குணங்கள் தான்.

ஏற்கனவே தெற்கு சீனக்கடல் பிரச்சினை, உக்ரைன் போர், மத்திய கிழக்கில் புரட்சி, வட கொரிய அணு ஆயுதக் குவியல், இரான் பிரச்சினை, கியுபா பிரச்சினை என ஆயிரம் பிரச்சினைகள் இருக்க, தேவையில்லாமல் ரஷ்யாவை யுத்தம் என்ற நிலைக்கு இழுப்பது உலக அமைதிக்கு பெரிய ஆபத்து. ஒன்று நேட்டோவை தடை செய்யுங்கள் இல்லை ஏகாதிபத்திய வெறியைக் கைவிடுங்கள். உலகம் மற்றும் ஒரு உலகப்போருக்குத் தயாராக இல்லை. அமெரிக்கா தன் நாட்டின் நன்மைக்காக பிற நாட்டின் இறையாண்மையை அழிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இல்லையெனில் மீண்டும் ஒரு உலக மகா யுத்தம் நிச்சயம் வெடிக்கும். ஏற்கனவே இரண்டு உலகப் போர்களை சந்தித்தாயிற்று. ஹிரோசிமா, நாகசாகி சான்றாக நம் கண்முன்னே இருக்கிறது.

- நேதாஜிதாசன்

Pin It