“அவன் அடிமை என்பதை அவனுக்கு உணர்த்துங்கள்; அவன் கிளர்ந்தெழுவான்” என்றார் அம்பேத்கர். “நீங்கள் சூத்திரர்கள், சட்டப்படி சாஸ்திரப்படி தேவடியாள் மக்கள்” என்றார் பெரியார். பார்ப்பனர்களால் - அந்தணர்களால் - ஆரியர்களால் அடிமைப்படுத்தப்பட்ட மக்களிடம் அவர்களின் அடிமைத்தனத்தை உணர்த்தி, மூளைக்கு இடப்பட்ட விலங்கை உணரவைத்து அவ்விலங்குகளை உடைத்தெறிந்த தலைவர்கள் வடநாட்டில் அம்பேத்கர்; தென்னாட்டில் பெரியார்.

மிகப்பெரும் பண்பாட்டுப் புரட்சியை, சமுதாயப் புரட்சியை அண்மைக்காலத்தில் தம் கண்முன்னே  நம் பெற்றோர்கள் கண்டிருக்கிறார்கள்; நமக்கு முந்தைய தலைமுறை கண்டிருக்கிறது. அந்தப் பண்பாட்டுப் புரட்சியால் வாழ்வுபெற்ற இக்காலத் தலைமுறை தன் இனத்தின் விடுதலை வரலாற்றை முற்றிலும் அறியாமலிருக்கிறது. அதேசமயம்  அடிபட்ட ஆரிய இனம் - அந்தணர் குலம் - பார்ப்பனக் கூட்டம் நம் வரலாற்றின் அடிப்படைகளையே அரிச்சுவடியே இல்லாமல் அழிக்கத் தொடங்கியிருக்கிறது. அதன் அடையாளம்தான் சிந்துசமவெளி அல்ல இந்து சமவெளி; சரஸ்வதி பள்ளத்தாக்கு என்ற கதைகளெல்லாம். சங்க பரிவாரங்களின் - சங்கராச்சாரிகளின் இந்த வரலாற்று கரசேவக் பணிகளை தம் தோள்மேல் போட்டு ஏவல்செய்ய தமிழ்நாட்டில் கடும்போட்டியே நடக்கின்றது. அந்த மகாபாரத, மகாவம்சக் கனவுக்காரர்களை நாம் அவ்வப்போது அடையாளம் காட்டித்தான் வருகிறோம்.

தமிழ்த்தேசியத்தின் மாபெருந் தலைவனாக ம.பொ.சியைக் கொண்டு வந்தார்கள். சக தமிழ்த் தேசியரான சுப.வீரபாண்டியன் அவர்களாலேயே ம.பொ.சியின் பார்ப்பன மூளை தோலுரிக்கப்பட்டது. பார்ப்பானுக்கு மட்டுமல்ல, பார்ப்பனக் கொள்ளைக்கு ஆதாரமான இந்திய தேசியக் கொள்ளைக்கும், மார்வாடிக் கூட்டுக்கொள்ளைக்கும் வால்பிடித்தவர்  என அம்பலப்பட்டுப்போனார் ம.பொ.சிவஞானம். ம.பொசியின் அரசியல் அண்மைக்காலத்தில் நடந்தவைதான். எனவே அவற்றிற்கான ஆதாரங்களை யார் வேண்டுமானாலும் உடனே பார்த்துவிடலாம். பார்த்து அம்பலப்படுத்திவிடுவோம். எனவே கொஞ்சம் பின்னோக்கிப் போகிறார்கள். சங்க இலக்கியங்கள், இலக்கணங்கள், வரலாறுகள்  என நமக்குப் புரியாத தளங்களில் களங்களை அமைக்கிறார்கள்.

பார்ப்பான் - பார்ப்பனியம் ஒழியும் வரை இந்த மக்களுக்குத் தலைவன் பெரியார்தான். மக்கள்விடுதலைத் தத்துவம், விடுதலைக் கருவி பெரியாரியல்தான். இது அறிவியல்பூர்வமாக செய்துகாட்டப்பட்ட முடிவு. எனவே பெரியாரை, பெரியாரியலை, திராவிடர் கருத்தியலை அழித்தொழிப்பதே பார்ப்பனருக்கு அவசியமான பணி.  ஆகவே பெரியாரியலுக்கு எதிராக  பார்ப்பன தொல்காப்பியத்தையும், ஆரியக் கைக்கூலி இராஜராஜனையும் சங்க இலக்கியங்கள், வரலாறுகள் போன்ற முட்டுக்களால் தூக்கி நிறுத்திக்கொண்டுள்ள ஒரு கூட்டம் அம்பலப்படுவதை இனி பார்ப்போம்.

“அந்தணர் என்னும் பிரிவினர் தமிழ்ச்சமூகத்தின் அறிவாளர்கள் ஆவர். அரசு உருவாக்கத்தின்போது அரசர்களுக்கான அறிவுரைகள் வழங்கியும்,  மெய்யியல் துறைகளில் ஈடுபட்டும் வந்தவர்கள் அந்தணர்கள் ஆவர். இவர்கள் தமிழர்களே.”

இப்படி ஒரு கண்டுபிடிப்பு ஆர்.எஸ்.எஸ்.ஸின் விஜயபாரதத்தில் வரவில்லை. அவர்களின் ‘ரகஸ்ய கார்யவாஹ்’ செந்தமிழன் தமிழர் கண்ணோட்டம் இதழில் எழுதியுள்ளார். இக்கண்டுபிடிப்புக்கு அவர் ஆதாரம் என்ன தெரியுமா? எதாவது ஒரு கல்வெட்டா?  வரலாற்று ஆய்வறிஞர்களின் கருத்தா? அகழ்வாராய்ச்சி முடிவுகளா? ஆதாரப்பூர்வமான எதுவும் இல்லை. ‘பொய் இருக்குது மலைபோல, புளுகத்தான் நேரமில்ல’ என்னும் பண்பாட்டாளர்களுக்குப் புகலிடம் சங்க இலக்கியங்கள்தானே! பதிற்றுப்பத்து என்னும் சங்க இலக்கிய நூல் ஒன்றில் வரும் பாடல். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் புகழ்ந்து குமட்டூர் கண்ணனார் என்ற பார்ப்பனப் புலவர் பாடிய பாடல் தான் அவர் காட்டும் ஆதாரம். பதிற்றுப்பத்தில் முதல் பத்து இதுவரை யாருக்கும் கிடைக்கவில்லை. இரண்டாம் பத்தில் முதல் பாடல் அதாவது 21 ஆம் பாடல் என்று வைத்துக் கொள்வோம்.  முழுமையான முதல் பாடல் இதுதான்.

வரை மருள் புணரி வான் பிசிர் உடைய,
வளி பாய்ந்து அட்ட துளங்கு இருங் கமஞ் சூல்
நளி இரும் பரப்பின் மாக் கடல் முன்னி,
அணங்குடை அவுணர் ஏமம் புணர்க்கும்
சூருடை முழு முதல் தடிந்த பேர் இசை,
கடுஞ் சின விறல் வேள் களிறு ஊர்ந்தாங்கு-
செவ் வாய் எஃகம் விலங்குநர் அறுப்ப,
அரு நிறம் திறந்த புண் உமிழ் குருதியின்,
மணி நிற இருங் கழி நீர் நிறம் பெயர்ந்து,
மனாலக் கலவை போல, அரண் கொன்று,
முரண் மிகு சிறப்பின் உயர்ந்த ஊக்கலை;
பலர் மொசிந்து ஓம்பிய திரள் பூங் கடம்பின்
கடியுடை முழு முதல் துமிய ஏஎய்,
வென்று எறி முழங்கு பணை செய்த வெல் போர்,
நார் அரி நறவின், ஆர மார்பின்,
போர் அடு தானைச் சேரலாத!-
மார்பு மலி பைந் தார் ஓடையொடு விளங்கும்
வலன் உயர் மருப்பின் பழி தீர் யானைப்
பொலன் அணி எருத்தமேல் கொண்டு பொலிந்த நின்
பலர் புகழ் செல்வம் இனிது கண்டிகுமே
கவிர் ததை சிலம்பில் துஞ்சும் கவரி
பரந்து இலங்கு அருவியொடு நரந்தம் கனவும்,
ஆரியர் துவன்றிய, பேர் இசை இமயம்
தென்அம் குமரியொடு ஆயிடை
மன் மீக் கூறுநர் மறம் தபக் கடந்தே.

இப்பாட்டின் பொருள்,

“காற்று கடலுள் புகுந்து நீரை அள்ளிக்கொண்டு மேகமாக உலவும். முருகப் பெருமான் கடலுக்குள் சூரனை அழித்தபோது கடலே செந்நிறம் பெற்றது. இந்த நெடுஞ்சேரலாதன் மேகம்போல் படையுடன் சென்றான். முருகனைப் போலப் பகைவரைக் கொன்று உப்பங்கழிகளையெல்லாம் குங்குமம் கரைத்தது போலச் செந்நிறமாக்கினான். கடற் கொள்ளையர் கடம்பர் பகையை முடித்தபோது இந்த நிலை. பகைவரை வென்ற சேரன் பகைவரின் காவல் மரமான கடம்பமரத்தை கொண்டுவந்து கடம்ப மரத்தால் தனக்கு முரசு செய்துகொண்டான். இந்த வெற்றிப் பெருமிதத்தோடு யானைமீது வந்த சேரனைக் கண்டு புலவர் வாழ்த்துகிறார்.

முருக்கமரம் பூத்திருக்கும் மலைக்காட்டில் தூங்கும் கவரிமான் வயல் வெளியில் வளர்ந்திருக்கும் நரந்தம்புல்லை மேயக் கனவு காண்பது போல், இமயத்தில் இருந்துகொண்டு குமரியைக் கைப்பற்றக் கனவு கண்டுகொண்டிருந்த ஆரியமன்னர்களையெல்லாம் வென்று அந்த நிலப்பரப்புகளிலெல்லாம் தன் புகழ் பரவும்படி செய்தான்.”

அந்தணர் என்பவர்கள் ஆரியர்கள் இல்லை. அவர்கள் தமிழர்கள் என்பதற்கு தமிழர் கண்ணோட்டம் சொல்லும் ஆதாரம் என்ன தெரியுமா? வடக்கே உள்ள ஆரியர்களை எதிர்த்து நெடுஞ்சேரலாதன் போரிட்டான். அதை குமட்டூர் கண்ணன் என்ற அந்தணர் புகழ்ந்து பாடுகிறார். அதுதான் பதிற்றுப்பத்தின் இரண்டாம் பத்து என பாடலைக் காட்டுகிறார் செந்தமிழன்.  ஒரு ஆரியனை எதிர்த்து வென்றதை மற்றொரு ஆரியன் புகழ்வானா? புகழமாட்டான். எனவே குமட்டூர் கண்ணன் என்ற அந்தணர் தமிழ்நாட்டு அந்தணர்; ஆரியர்  அல்ல. இதுதான் செந்தமிழனின் கண்டுபிடிப்பு.

மேற்கண்ட பதிற்றுப்பத்துப் பாட்டில் தமக்குத் தேவையான நான்கு வரிகளை மட்டும் வெட்டி எடுத்து அந்த வரிகளுக்கு மட்டும் பொருள் தந்திருக்கிறது தமிழர் கண்ணோட்டம். ஆனால் அந்தப் பாட்டின் தொடக்க வரிகளில் அக்காலத்திலேயே தமிழினம் ஆரியமயப்பட்டுவிட்டது என்பதை நன்றாகவே விளக்கியுள்ளது. முருகக்கடவுள் சூரனை அழித்தபோது என்ற பொருள்படும் வரிகள்தான் முதலில் வருகின்றன.

திணைவழிப்பட்ட நாகரிகக் காலங்களில் கொற்றவையின் மகனாக புரிந்துகொள்ளப்பட்ட முருகன் கடைச்சங்க காலத்திலேயே ஆரிய மயமாகிவிட்டான். பரிபாடல் என்னும் சங்க இலக்கியத்தில் வரும் செவ்வேள் பாடல்களில் அதற்கான ஆதாரங்கள் விரிவாக உள்ளன.

ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ,
வேத மா பூண் வையத் தேர் ஊர்ந்து,
நாகம் நாணா, மலை வில்லாக,
மூவகை ஆர் எயில் ஓர் அழல்-அம்பின் முளிய,
மாதிரம் அழல, எய்து அமரர் வேள்விப்
பாகம் உண்ட பைங் கட் பார்ப்பான்
உமையொடு புணர்ந்து, காம வதுவையுள்,
அமையாப் புணர்ச்சி அமைய, நெற்றி
இமையா நாட்டத்து ஓரு வரம் கொண்டு,
.....................................................
.....................................................
நிவந்து ஓங்கு இமயத்து நீலப் பைஞ் சுனைப்
பயந்தோர் என்ப, பதுமத்துப் பாயல்;

பெரும் பெயர் முருக! நிற் பயந்த ஞான்றே,
அரிது அமர் சிறப்பின் அமரர்செல்வன்,
எரி உமிழ் வச்சிரம் கொண்டு, இகந்து வந்து, எறிந்தென,
அறு வேறு துணியும் அறுவர் ஆகி,
ஒருவனை; வாழி, ஓங்கு விறல் சேஎய்!

- பரிபாடல்

கொற்றவையின் மகனாக இருந்த முருகன் இப்பாடல்வழியே சிவபெருமானின் மகனாக உருவெடுக்கிறான். சிவபெருமானின் விந்தணுக்களின் சூட்டைத்தாங்க முடியாத வாயு அதை அப்படியே சரவணப் பொய்கையில் விடுகிறான். அதைக்குடித்த  கார்த்திகைப் பெண்கள் ஆறுபேருக்கு முருகன் பிறக்கிறான். இந்த ஸ்கந்த புராணம் பரிபாடலாக வருகிறது.  ஆரியர்களின் தலைவன் இந்திரன் அசுரர்களுடன் போரிட்டு வெல்லமுடியாமல் போனதால் தேவர்கள் முருகனிடம் முறையிட்டனர். இந்திரனுக்காக அசுரர்களை அழிக்கும் போரில் அசுரர்களை வெல்கிறான் முருகன். அதற்குப் பரிசுதான் ஆரியத்தலைவன் இந்திரனின் மகள் தெய்வானை முருகனுக்கு இரண்டாம் தாரமாக கொடுக்கப்படுகிறாள். காலப்போக்கில் குறிஞ்சி மகளாக அறியப்பட்ட வள்ளி இரண்டாம் இடத்துக்குப் போகிறாள்.

நாம் முதலில் பார்த்த பதிற்றுப்பத்துப் பாடலில் இதுதான் வருகிறது. அசுரர்களை அழித்த முருகனைப் போல... என்று பாடல் தொடங்குகிறது. தேவ அசுரப் போராட்டம் தமிழ்நாட்டு எல்லைக்குள்ளேயே வந்து விட்ட பின்பு -  ஆரியர்களின் தலைவன் இந்திரனின் படைத்தலைவனாக முருகன் மாறிவிட்ட பின்பு வேறு எந்த ஆரியர்களை எதிர்த்து இமயத்துக்குப் போனான் நெடுஞ்சேரலாதன்? அதே பதிற்றுப்பத்து பாடலில் மகாபாரதக் கதையும் வருகிறது. இரண்டாம் பத்தில் நான்காம் பாடலில்

போர் தலைமிகுத்த ஈர் ஐம்பதின்மரொடு
துப்புத் துறைபோகிய, துணிவுடை ஆண்மை,
அக்குரன் அனைய கைவண்மையையே;
அமர் கடந்து மலைந்த தும்பைப் பகைவர்
போர், பீடு, அழித்த செருப் புகல் முன்ப!
கூற்று வெகுண்டு வரினும், மாற்றும் ஆற்றலையே;

என்ற வரிகளில் மகாபாரதக்கதையில் வரும் கௌரவர்கள் கர்ணன் பற்றிய குறிப்புகள் உள்ளன.  மேலும் இரண்டாம் பத்தின் பாடப்பெற்ற தலைவனான நெடுஞ்சேரலாதனின் தந்தை உதியஞ்சேரல் என்ற சேர மன்னனைப் பற்றி ஒரு முக்கியச் செய்தி புறநானூற்றுப் பாடலில் வருகிறது. புறநானூற்றில் இரண்டாம் பாடலில்

அலங்குளைப் புரவி ஐவரோடு சினைஇ,
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருது, களத்து ஒழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்!

மகாபாரதப் போருக்கு பெருஞ்சோறு கொடுத்தானாம் உதியஞ்சேரல், எனவே அவனுக்கு அதாவது இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் தந்தைக்கு பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் என்று பெயரே வந்தது. பதிற்றுப்பத்தும், புறநானூறும் எழுதப்பட்ட கடைச்சங்க காலம் சுமார் கி.பி 2 ஆம்  நூற்றாண்டு. ஆனால் மகாபாரதம் நடந்த கதை என்று ஒரு வாதத்திற்கு ஒப்புக்கொள்வதாக இருந்தாலும், அந்தக் கதை கி.மு 14 ஆம் நூற்றாண்டில் நடந்ததாகவும் - தொகுக்கக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அப்படியிருக்க கி.பி 2 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உதியஞ்சேரல் எப்படி மகாபாரதப் போரின்போது உதவியிருக்க முடியும்? மேலும்

.....அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும்,
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை......

என்னும் புறநானூற்றின் 378 ஆவது பாடலில் இராமன், சீதை பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன.

ஆக, ஸ்கந்த புராணம், ஆரியஇந்திரன் வழிபாடு, மகாபாரதம், இராமாயணம் எல்லாம் தமிழர்களிடம் செல்வாக்குப் பெற்ற பின்பு வேறு எங்கு போய் ஆரியர்களை எதிர்க்கிறான் நெடுஞ்சேரலாதன்?

கி.மு 1000 -ஆம் ஆண்டு வாக்கிலேயே ஆரியர்கள் தமிழ்நாட்டுக்குள் ஊடுருவத் தொடங்கி விட்டார்கள். வடநாட்டுப் பார்ப்பனர்கள் கி.முவிலேயே தென்னாட்டு அந்தணர்களோடு திருமண உறவு கொண்டுள்ளனர். ஆயிர கணக்காக நடந்த இக்கலப்புகள் வட - தென் நாடுகளில் வாழ்ந்த பார்ப்பனர்களுக்கிடையே மட்டுமே நடந்தன  என்று ஈழத்து அறிஞர் ந.சி.கந்தையா அவர்கள் தமது ‘தமிழர் சரித்திரம்’ என்னும் நூலில் விரிவாகப் பதிவு செய்துள்ளார். இறுக்கமான  வர்ணாஸ்ரமக் கோட்பாடுகளையும் சாதிப்பிரிவினைகளையும் வாழ்வில் வழுவாது கடைபிடிக்கும் வடபகுதி பார்ப்பனர்கள் தென்னாட்டில் அந்தணர்களுடன் மட்டுமே மணஉறவு, கொள்வினை, கொடுப்பினைகள் வைத்திருந்தனர். தமிழன் வேலாயுதன் முருகனையே தமது தோலாயுதத்தால் வென்ற கதை போல, ஒருசில திணைத்தலைவர்களை, குறுநில மன்னர்களை ஆரியர்களாக, ஆரிய அடிமைகளாக ஆக்குவதற்காக சில வெள்ளைத்தோல் வேள்விகளும் நடந்திருக்கலாம். ஆனால் வரலாற்றில் குறிப்பிடும் அளவுக்கு நடக்கவில்லை. ஆரியர்களின் அகண்டபாரதத்தின் - ஆரியவர்ஷத்தின் இரத்த உறவாக அந்தணர்கள் மட்டுமே இருந்தனர்.

பதிற்றுப்பத்து எழுதிய காலத்திலிருந்து கணக்கு பார்த்தால். அதாவது பதிற்றுப்பத்து காலத்துக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஆரியர்கள் தமிழ்நாட்டுக்குள் வந்து  கலந்துவிட்டார்கள்.  பதிற்றுப்பத்து காலத்தில் ஆதிக்கத்திற்கே சென்றுவிட்டார்கள். அக்கால இலக்கியங்கள் அவர்கள் வசமாகிவிட்டது. அக்காலத்தில் தமிழர்களின் தெய்வமாக அறியப்படும் முருகன் கதையையே மாற்றிவிடும் அளவுக்கு, முருக வழிபாட்டையே திருத்தி அமைக்கும் அளவுக்கு ஆரியர்கள் சமூக ஆதிக்கத்தில்  உயர்ந்திருந்திருக்கிறார்கள்.

ஆகவே ஆரியர்களுடன் போராடுவது என்றால் அது ஒரு வில்லும் வாளும் ஏந்திய போராட்டமாக இருந்திருக்க முடியாது. தோழர் பெரியார் நடத்தியது போன்ற ஒரு பண்பாட்டுப் புரட்சிதான் நடந்திருக்க வேண்டும். ஸ்கந்த புராணம் கொளுத்தப்பட்டிருக்க வேண்டும். மகாபாரதமும் இராமாணயணமும் எரிக்கப்பட்டிருக்க வேண்டும். பார்ப்பனர்களால் ஏமாற்றிப் பிடுங்கப்பட்ட பிரம்மதேயங்கள் நெடுஞ்சேரலாதனால் கையகப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அந்தணனோ, பார்ப்பானோ, பிராமணனனோ எவனாக இருந்தாலும் உழைப்பில் ஈடுபடுத்தப்பட்டிருக்க வேண்டும். உற்பத்தியில் ஈடுபடுத்தியிருக்க வேண்டும். அதுவே ஆரியர்களுக்கு எதிரான போராட்டம். அப்படி ஒரு திசைநோக்கி நெடுஞ்சேரலாதன் செல்லவில்லை. குமட்டூர் கண்ணன் என்ற பார்ப்பான் அப்படி ஒரு இலக்குநோக்கி நெடுஞ்சேரலாதனை அனுப்பவில்லை.

வடநாட்டில் ஆண்ட ஒரு மன்னரை எதிர்த்து வென்றானாம். அதற்கான எந்த ஆதாரங்களும் எந்த வரலாற்று ஆய்வாளருக்கும் இதுவரை கிடைக்கவில்லை. அப்படி ஒரு போர் நடந்ததற்கான எந்தக் கல்வெட்டையும் எந்த ஒரு பிராமி கல்வெட்டையும் ஆதாரமாக யாரும் காட்டவில்லை.  தமிழ்நாட்டிலோ அல்லது வடநாட்டிலோ பாரதம் கூறும் 56 தேசங்களின் கல்வெட்டுக்களிலோ எங்கும் நெடுஞ்சேரலாதனின் போர் பற்றி ஆதாரம் இல்லை. இப்படி நடக்காத ஒரு போரைக்காட்டி அதில் ஆரியர்களை வென்றான் என கட்டுக்கதையைச் சொல்லியிருக்கிறான் குமட்டூர் பார்ப்பான். அதற்கு கிடைத்த பரிசு என்ன தெரியுமா? நெடுஞ்சேரலாதன் குமட்டூர் கண்ணன் என்ற தமிழ்(?)அந்தணனுக்கு தனது ஆட்சியிலிருந்த 500 ஊர்களை பிரம்மதேயமாக வழங்கியுள்ளான். அதே பதிற்றுப்பத்தில் பதிகத்துக்கு அடுத்து இந்தக் குறிப்பு உள்ளது.

பிரம்மதேயம் என்பது பார்ப்பனர்களுக்கு - பிராமணர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதாகும். மற்றவர்களுக்கு வெவ்வேறு பெயர்களில் வழங்கப்பட்டு வந்திருக்கிறது.  500 ஊர்களை பிரம்மதேயமாகப் பெற்றவன் பார்ப்பான் தானே? எப்படி தமிழன் ஆனான்?

ஒரு ஆரியனை எதிர்த்ததை மற்றொரு ஆரியன் புகழ்வானா என்கிறார் செந்தமிழன். காஞ்சிபுரத்தில் சங்கரராமன் என்ற பார்ப்பானைக் கொலை செய்த சங்கராச்சாரி தமிழனா? அதே அந்தணன் தானே? அதே பிராமணண் தானே? அதே ஆரியர்களின் தலைவன்தானே? அந்தக் கொலைகாரன் சங்கராச்சாரிப் பார்ப்பானை உள்ளே தூக்கிப் போட்டு அசிங்கப்படுத்திய ஜெயலலிதா தமிழச்சியா? பாப்பாத்தி தானே?

நெடுஞ்சேரலாதன் நடத்திய போருக்கு எந்த ஆதாரமும் இல்லை. அப்படியே நடத்தியிருந்தாலும் அது ஆரியருக்கு எதிரான சரியான போர் இல்லை. எனவே அப்போரை ஆரியப்பார்ப்பான் குமட்டூர் கண்ணன் புகழ்ந்ததில் வியப்பேதும் இல்லை.

இதோடு நிறுத்தவில்லை செந்தமிழன் அவரது இரண்டாம் கண்டுபிடிப்பு இதைவிடக் கேவலம். குமட்டூர் கண்ணன் ஒரு தமிழ் அந்தணன் என்று முதலில் எழுதுகிறார்.  அடுத்த சில வரிகளில் அவர் அந்தணர் இல்லை. சங்க காலத்துப் பாணர் குலத்தைச் சேர்ந்த தமிழர் என எழுதியுள்ளார். ஒரு பார்ப்பானை தமிழனாக்குவதற்கு இலக்கியங்களை வைத்துக்கொண்டு படாதபாடுபட்டிருக்கிறார். பாவம் இலக்கியங்கள் கூட அவருக்கு கைகொடுக்கவில்லை என்பதைப் பார்ப்போம். கண்ணன் ஒரு பாணர் குலத்தான் என்பதற்கு
செந்தமிழன் தரும் சான்று இதோ,

வயவர் வீழ வாள் அரில் மயக்கி,
இடம் கவர் கடும்பின் அரசு தலை பனிப்ப
உண்மின் கள்ளே! அடுமின் சோறே!
எறிக திற்றி! ஏற்றுமின் புழுக்கே!

என்னும் இரு பாடல்களைக் காட்டுகிறார். இப்பாடலில் “எம் பாணர் மகளிர் அனைவருக்கும் ஒளிவீசும் அணிகலன்கள் வழங்கினாய்” என்ற பொருள்படும் வரிகள் வருகின்றன. இதில் எம் பாணர் என குமட்டூர் கண்ணன் சொல்வதால் அவர் ஒரு பாணர் குலத்தவர் என்கிறார் செந்தமிழன்.

பாணர், பாடினி, விறலியர், கூத்தர் எனப்பட்டோர் சங்ககாலத்தில் இசை மற்றும் ஆடல் பாடல்களில் வல்லவராக இருந்தனர். நல்ல இலக்கியத் தரமான பாடல்களை இயற்றுவதிலும் வல்வராக இருந்தனர். விழாக்காலங்களில் மக்களிடமும், போர் வெற்றி காலங்களில் அரசர்களிடமும் பாடி, ஆடி பரிசில் பெற்று வந்தனர். காலப்போக்கில் செய்யுள்களை இயற்றுவதில் திறன்வாய்ந்த சில புலவர்கள் பாணர்களையும் விறலியர்களையும் உடன் இணைத்துக்கொண்டு ஒரு கலைக்குழுவை உருவாக்கி, கலைக்குழுவோடு மன்னர்களைச் சந்திப்பது என்ற மரபு உருவானது. அதோடு பாணர்களின் பாத்திரங்களை புலவர்கள் தாமே ஏற்றுப் பாடும் மரபும் இருந்தது. இம்முறைகளைப்பற்றி டாக்டர் தமிழண்ணல் அவர்கள் 1969 ஆம் ஆண்டிலேயே தமது முனைவர் பட்ட ஆய்வில் தெரிவித்துள்ளார். அவரது ஆய்வு ‘சங்க மரபு’ என்ற பெயரில் நூலாக அச்சிடப்பட்டுள்ளது.

புறநானூற்றில் ஊன்பொதி பசுங்குடையார் என்ற புலவர் செருப்பாழி எறிந்த சோழன் இளஞ்சேட் சென்னியைப் புகழ்ந்துபாட தன்னோடு ஒரு கலைக்குழுவையும் அழைத்துச் சென்றதாகப் பாடுகிறார்.

விரல்செறி மரபின செவித்தொடக் குநரும்,
செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரும்,
அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும்,
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை......
.......அறாஅ அருநகை இனிதுபெற் றிகுமே,
இருங்குளைத் தலைமை எய்தி,
அரும்படர் எவ்வம் உழந்ததன் தலையே. - புறநானூறு . 378

மேலும் வல்வில் ஓரி என்னும் மன்னன் வேட்டைக்காக காட்டுக்குள் சென்றபோது அதைக் கேள்விப்பட்ட வன்பரணர் என்னும் புலவர் பாணர்கள் அடங்கிய தம் கலைக்குழுவை உடன் அழைத்துச்சென்று  வல்வில் ஓரியைப் புகழ்ந்து பாடி பரிசில் பெற்றுச் சென்றுள்ளார். அந்தப் பாடல்

வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி
பேழ்வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇப்,
புழல்தலை புகர்க்கலை உருட்டி, உரல்தலைக்
கேழற் பன்றி வீழ, அயலது
ஆழற் புற்றத்து உடும்பில் செற்றும், - புறநானூறு . 152

இதுபோல பாணர், விறலியர் அடங்கிய கலைக்குழு ஒன்றை உடன் அழைத்துச் சென்றுதான் நெடுஞ்சேரலாதனைப் புகழ்ந்து பாடியுள்ளான் குமட்டூர் பார்ப்பான். அதனால்தான் “எம் பாணர் மகளிர்” எனப் பாடியுள்ளான். ஆகவே பாணர்குலம் வேறு; குமட்டூர் கண்ணன் வேறு. 500 ஊர்களைப் பிரம்மதேயமாகப் பிடுங்கியவன் வரலாற்றின்படி  நிச்சயம் பார்ப்பானே. பாணர்களைத் தம்முடன் அழைத்துச் சென்று நெடுஞ் சேரலாதனை ஏமாற்றி 500 ஊர்களைப் பிடுங்கிக்கொண்டு, பாணர்களுக்கு வெறும் அரிசிச்சோற்றையும், ஆட்டுக்கறிக் குழம்பையும் சில நகைகளையும் கொடுத்துவிட்டு பாணர்களையும் விறலியர்களையும்  ஏமாற்றியிருக்கிறான் குமட்டூர் பார்ப்பான் என்ற உண்மையை திராவிடர்கள் அறியச் செய்த செந்தமிழன் அவர்களுக்கு நன்றி.

அந்தணர்கள் என்னும் பார்ப்பனர்களைத் தமிழர்கள் என உறுதிப்படுத்தத் துடிப்பது அவர்கள்  பல நூற்றாண்டு காலமாகத் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்திவரும் ஆரியச்சுரண்டலை நிலைநிறுத்தவே, நீடிக்கவே பயன்படும். பார்ப்பன ஆதிக்கம் ஒழியாமல் ஒருவேளை தனிநாடோ, தமிழ்த்தேச தன்னுரிமையோ கிடைத்தாலும் அந்த நிலையிலும் சாதி, தீண்டாமைகள் ஒழியப்போவதில்லை. பூஜை, புணஸ்காரங்கள் குறையப்போவதில்லை. பிறவிச்சுரண்டல்காரர்களான - பிறவிஆதிக்கவாதிகளான - ஒட்டுமொத்த இந்திய ஒருமைப்பாட்டின் சின்னங்களான, காவலர்களான இந்தப் பார்ப்பனக்கூட்டத்திற்கு, தமிழர்கள் - ஒரே இனத்தவர் என்ற அங்கீகாரமும் கிடைத்துவிட்டால் நமக்கு - அதாவது திராவிடத் தமிழர்களுக்கு கிடைக்கும் எந்த உரிமையும், எவ்வகை விடுதலையும் நீடிக்காது.

 உண்மையான இனவிடுதலைக்கு, ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கு எதிரான பார்ப்பனர்களை தமிழர்கள் என அங்கீகரிப்பதற்கு தமிழர் கண்ணோட்டம் ஆதாரமாகத் தந்த இலக்கியப்பாடல்கள் மிகவும் பித்தலாட்டமானது. அறிவியலுக்கும் வரலாற்றுக்கும் முரணானது. அந்தணர்கள் குறித்து சங்க இலக்கியங்கள் சொல்லியுள்ள மேலும் சில செய்திகளைப்பற்றி இனி பார்ப்போம்.                           

(தொடரும்)

- அதிஅசுரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

12 comments

12
venkatesh
பழங்கதைகள் பேசுவது வீண்,இப்போது பெரியார் வாழ்ந்த காலத்திலும் இல்லை, அம்பெத்கர் காலத்திலும் இல்லை,

அந்தனர் ஆரியர் என்றாலும் அவர்களும் திராவிடர்களுடன் கலந்து பல வருடங்களாகிவிட்டது,
இப்போது பல பிராமணர்கள் மற்ற சாதியினருடன் சகஜமாக பழகுகிறார்கள், பலர் மற்ற சாதியினரை திருமணமும் செய்து கொள்கிறார்கள், இப்போது சாதி வெறி பிராமணர்களிடம் இல்லை, மற்ற சாதியினரிடம் தான் உள்ளது,
நான் தேவன், நான் தலீத், நான் செட்டி என்று இப்ப்டி பேசி மற்ற சாதியினர் தான் தமக்குள் சண்டையிட்டு கொள்கிறார்கள்,
அந்தணரும் சேர்த்து நாம் அனைவரும் தமிழர் தான்,
நாம் தமிழராய் ஒன்றுபடுவோம், பிற்படுத்த சாதியினர் ஒரு காலத்தில் ஒதுக்கப்பட்டார்கள் என்பது மறுப்பதற்கில்லை, அது இன்னும் முழுமையாக மாறவும் இல்லை என்பது உண்மைதான், ஆனால் அதற்காக எந்த பிராமணர்கள் சாதி பற்றுடன் இருக்கிறார்கள் என்று கூறினோமோ அதே சாதி பற்று இன்று நான் பிற்படுத்தப்ப்டவன், நான் தலீத் என்று கூறிகொண்டு சாதி வெறியுடன் இருக்கிறார்கள்,
சிந்திக்க வேண்டும்,
நான் உயர்ந்தவன் என்ற உயர்வு எண்ணம் கொண்ட சாதி வெறியும் வேண்டாம், ஐயோ நான் தாழ்ந்தவன் நான் தலீத் என்று தாழ்வு பாண்மையில் வரும் சாதி வெறியும் வேண்டாம், இரண்டுமே சமூகத்தில் கலையப்பட வேண்டியவை, சும்மா அம்பெத்கர்,பெரியார் சொன்னார் என்று வேற்றுமை பேசிக்கொண்டு இருப்பதில் அர்த்தம் இல்லை, நாம் தமிழராய் ஒன்றுபடுவதற்கு வழி தேடுங்கள்,
மால்கம் X இராசகம்பீரத்தான்
இந்த கட்டுரை “பார்ப்பனிய சூதுவிற்கு சவுக்கடி மட்டும் அல்ல செருப்படியும் தான்”

நன்றி “அதிஅசுரன்” . மிகவும் அருமையான கட்டுரை..
எட்வின் பிரபாகரன்
@venkatesh: பூணூலை கழற்றி வைக்க கூட மனம் வராத பார்ப்பானுடைய பேச்சை நம்பி ஏமாற வேண்டாம்.
viduthalai R. Regina
அருமையான கட்டுரை.
@ venkatesh: உண்மைதான், இன்று நிரைய பார்ப்பனர்கள் சாதிபார்ப்பதில்லை; சாதி வெறி என்பது அனைத்து சாதியினரிடமும் உள்ளது. அதுவல்ல இங்கு விவாதம். இன்று புதிதாய் முலைத்திருக்கும் திராவிட எதிர்ப்பு சிந்தனை, தமிழுணர்வின் அடித்தளத்தையே அசைத்துப்பார்த்துக்கொண்டிருக்கிறது என்பது தான் ஆதங்கமான செய்தி. தங்களை தமிழர்களாக ஒப்புக்கொள்ளும் பார்ப்பனர்கள் தமிழர்களாகலாம், ஆனால் அதைக்கொண்டு பார்ப்பனீயத்தை காப்பாற்றப்போவது முட்டால்தனம்.
venkatesh
பிராமணியம் என்பது எதோ பிராமணர்களுக்கு எதிராக மட்டும் பயன்படுத்திய வார்த்தை அல்ல,பிராமணியம் பல சாதிகளிடம் உள்ளது என்று அன்றே பெரியார் கூறியுள்ளார்,யார் யார் எல்லாம் தன் சாதி தான் உயர்ந்தது என்று எண்ணுகிறார்களோ,அந்த சமூகத்தில் பிராமணியம் உள்ளது என்று பொருள்,ஆனால் இன்று பெரும்பாண்மையான பிராமணர்கள் ,பிராமணியத்தை விட்டு விட்டார்கள்.அவர்கள் அந்த பிராமணியத்தை வைத்துக் கொண்டு சமூகத்தில் வாழ முடியாது காரணம் தென்னிந்தியாவில் அவர்கள் சதவிகிதம் மிக குறைவு.
இன்று பிராமணர் அல்லாத சாதிகளிடம் இந்த பிராமணியம் உள்ளது.இன்றைய அரசியல் நிகழ்வுகளை பார்க்கும் போது புரியும்,
சாதி சண்டையில் எந்த பிராமணனும் ,வேற்று சாதியினரை கத்தியால் கொன்றதில்லை,
தேவனுக்கும்,வன்னிக்கும்,தலீத்க்கும் வன்னிக்கும் ,தாழ்த்தபட்டவனுக்கு மிகவும் பிற்படுத்த பட்டவனுக்கும் இடையே தான் சாதி சண்டை நடைபெறுகிறது,
கிராமங்களில் கோயிலில் நுழையக்கூடாது என்று சில இடங்களில் தலீத்களை தடுப்பது பிராமணர்கள் அல்ல அந்த கிராமங்களில் உள்ள மற்ற சாதியினர் தான் அதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்,
டீ கடையில் இரட்டை டம்பளர் வைத்திருப்பது வேறு சாதிக்காரன் தான்,பிராமணன் டீ கடை வைதது இவ்வாறு செய்வதில்லை,இன்று பல பிராமண்ர்கள் எல்லா ஓட்டல்களிலும் உண்வு அருந்துகிறார்கள்,
இங்கு பார்ப்பானர்களை குறை சொல்ல வில்லை என்றால் பொழுது போகாது,அப்போது அவர் முற்போக்கு சிந்தனையாளர் என்ற எண்ணம் அவருக்கு.
இன்று வர்ணாசிரம அடிப்படையில் இந்து மதம் இல்லை,
இன்று பிராமணியம் போல் சிலர் தலீத்தியம் பேசி திரிகிறார்கள்,இது சாதி உணர்வு இல்லையா?
இவர்கள் எப்போது மனித உணர்வோடு சிந்திக்கிறார்கள்,
பிராமணர்களை யாராவது கிண்டல் செயதால் பெரிய வன்முறை நிகழ்வதில்லை,ஆனால் ஒரு தலீத் தலைவர் மீது கல்விழுந்தால்,போது அங்கு கடைகள் உடைக்கப்படும்,பஸ் எரிக்கப்படும்,வாகனங்கள் சேதப்படுத்தபடும்.இது செய்வது யார்,சிந்தியுங்கள்,வர்ணாசிரமம் பிராமணன் சொல்லி விட்டான் ,அதனால் தான் இந்த சண்டை என்று சாக்கு சொல்லாதீர்கள்,நமக்கு எங்கே போய்விட்டது அறிவு,
சிலர் சாதி பாகுபாட்டை எதிர்த்து பேசுவது நமக்குள் இருக்கும் சண்டை,இதை சிலர் தவறாக பயன்படுத்தி மதம் மாற்றத்திற்கு தூண்டுகிறார்கள்,இதனால் தமிழன் ,அந்நிய கலாச்சாரத்திற்கு தள்ளப்படுவான்,
அதனால் தான் பெரியார்,மூடநம்பிக்கைகளை, சாதி பாகுபாட்டை எதிர்த்த போதும் மதம் மாறவில்லை,
இன்று புத்தமதத்தை சேர்ந்த சிங்களவர்கள் தான் தமிழர்களை இனபடுகொலை செய்து கொண்டிருக்கிறார்கள்,
வட இந்திய இந்து மதம் வேறு,தென்னிந்திய இந்து மதம் வேறு.
வ்ட இந்திய இந்து மதம் இந்துத்துவாவை அடிப்படையாக கொண்டது,ஏற்ற தாழ்வை ஆதரிப்பது,
ஆனால் தென்னிந்திய இந்து மதம் திராவிடனுடையது, அது அன்பை போதிப்பது,அது நம் மொழி, இன ,கலாச்சாரத்துடன் கலந்தது, அதை தமிழனிடம் இருந்து பிரித்தால் தமிழ் விரைவில் அழிந்து போகும்,
இந்து மதத்தில் பல மூட நம்பிக்கைகள் இருக்கின்றன்,அதை நான் எதிர்க்கிறான், ஆனால் அதை கொண்டு வேற்று மதத்தினர் தமிழனின் வாழ்க்கையில் நுழைய முற்பட்டால் அதை நான் எதிர்ப்பேன்,
venkatesh
இங்கு ஆரிய பிராமணர்கள் திராவிட தமிழனுடன் கலந்து பல ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டது, இனி அவனை எங்கும் துரத்த முடியாது, அவனின் தவறான ஏண்னத்தை மாற்றி திருத்தி ,நம்மோடு தமிழர்களாக இணைத்துக் கொள்வதே சாத்தியம், தமிழனாக ஒன்றுபடுவோம்.
பிராமணியம்,தலீத்தியம் இப்படி எந்த இயமும் இல்லாத மனிதனாக ஒன்றுபடுவோம். வாழ்க தமிழ்,
durai ilamurugu
பிராமணியம்,தலீத்தியம் இப்படி எந்த இயமும் இல்லாத மனிதனாக ஒன்றுபடுவோம். வாழ்க தமிழ்,
அது எப்படி? எதுவும் இல்லாத தமிழனாக வாழ முடியும் தமிழ் என்று மட்டும் சொன்னால் பார்ப்பனன் நானும் தமிழன் தான்என்று உள்ளே புகுந்துவிடுவன் எறு பெரியார் சொன்னது இப்பொது தெளிவாகி வருகிறது, செம்மொழி மட்டி பர்பானர்க் கூட்டம் மூற்றாக ஆதிக்கம் செலுத்தியதுஆனால் கருணா நிதியை தாக்குவதில் அவர்கள் வீட்டுக் கொடுப்பதில்லைகருணா நிதி என்ன பர்ப்பன வேடம் போட்டலும் வட நாட்டான் அவ ரை அய்யத்துடன் தான் பார்ப்பான் .ஈழவிடுதலைப்,போர் நடந்தபோது ஆதிரிக்காத கூட்டம் கூட்டம் இன்று ஈழ விடுதலைக்கு வாய்ய்ப்புகள் குறைவு என்றபோது தமிழ் தமிழ் என்று கூவுகிறது தமிழனுக்கு தலித்தியம் வேன்டாம் பெரியரியல் வேன்டாம் என்று ஆரம்பித்து பிறகு மனு நீதியிள் கொண்டுப்,போய் நிறுத்தி தமிழனை அடிமைப்படுத்துவர் , மன்னர்களைப் புகழுவதில் பர்பனர்களூக்குப்,போட்டியாக தமிழ்த்தேசியர்கள் உள்ள்னர் இந்த புதுப்பார்பனர்களுக்கும் , பழைய பர்ப்பனர்க்ளுக்கும் பொது எதிரி பெரியர்
jeyanthi aiyengar
this article is idiotic and ridiculous.brahmins lead their life without disturbing any body.each and every police station says that every body should live like a brahmin so that they have less work.problems are created only by non brahmins in the rural area.I request you people not to waste your time in writing such foolish articles which has no value in public as every body in the nation is proud to being friendly with brahmins and being neighbours.
Natarajan
அந்தணர்கள் என்போர் திராவிடர்கள், தமிழர்கள், பண்பாடு உடையவர்கள். எந்த தொழில் செய்யும் ஒருவனும் அந்தணர் ஆகலாம். அவர் தோட்டியாகவோ. விறகு வெட்டியாகவோ விவசாயம் செய்பவரோ, தச்சரோ யார் வேண்டுமானாலும் அந்தணர் ஆகலாம். தமிழர் கோவில்களில் இந்த அந்தணர்கள் தான் பூசை செய்து வந்தனர். ஜாதி என்ற ஒரு ஈனப் படைப்பு பண்டை தமிழர் வாழ்வில் இல்லை. பின்பு வந்த ஆரியர்கள் அதாவது பார்ப்பனர்கள் அரசர்களை கைக்குள் போட்டு வேண்டியவற்றவைகளைப் பெற்று உழைக்காமல் உண்டு வந்தனர். உழைக்காமல் வாழ தமிழர்கள் கையிலிருந்த கோவில்களை வியாபாரக் கூடங்களாக ஆக்கினர், பல கட்டுக் கதைகளாலும் புராணங்களாலும் மக்களை மடையர்களாக்கி அன்று முதல் இன்று வரை பிழைப்பு நடத்தி வருகின்றனர். பழனி கோவிலில் அந்தணர் ( பண்டாரகர்) பூசை செய்து வந்தனர். பின்பு மதுரை அரசரை அணுகி பார்ப்பனர்கள் கோவிலுக்குள் நுழைந்து பண்டாரகர்கள் அகற்றப் பட்டனர். வருமானம் தரும் கோவில்களை எல்லாம் கைப் பற்றினர், கொள்ளையடிக்க. பார்ப்பனர்களை அந்தணர் என்று அழைப்பது இழுக்கு. அந்தணர் என்போர் அறவோர்.
raja
athi asuran - athi bayangarama eluthierukinga.Keep it up.
In previous generation Kuthusiar,Anna,T.K.Srinivasan,Bharathidasan,Thiruvarur Thngarasu,Kalivanar,M.R.Radha,Kalingar(Ponal Pokatum).....ponra pattalangal Periyar Pasarigalil erunthathu.

Ippothu patrakuraiyaka ullathu.Try to develope next genertion towards Erode.
முருகன் யார்
தமிழன் முருகன் எப்படி ஆரியரை மனந்தான்...? இது திராவிடப் பௌரட்டு.

முருகன் யார் ?
http://thavaaivunaduvam.blogspot.in/2012/09/blog-post_27.html
vimal
ஆரியன் என்பது ஒரு மரபினம் அல்ல என்று மர்௯முல்லர் கூறி இருக்கிரார் என்பதும் திராவிடர் என்பது ஒரு மரபினம் அல்ல என்று கால்டுவெல் கூறி இருக்கிரார் என்பதும் அவர்கள் நூலை படித்தால் யாருக்கும் தெரியவரும். நாம்தான் மேடை பேச்சையே வரலாராக நம்பி மோசம் பொய் கொன்டிருக்கிரோம். ஆரிய பெருமையும் திராவிட விடுதலையும் அரசியல் கருத்து தானே தவிர வரலாறு அல்ல.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.