periyar with nakkeeran parentsசென்னை தென் இந்திய சீர்திருத்தக்காரர்கள் மகாநாடு

சகோதரர்களே! சகோதரிகளே!

நமது மகாநாட்டின் நடவடிக்கைகள் எல்லாம் அநேகமாய் முடிவு பெற்று விட்டன. மகாநாடுகளின் வழக்கப்படி பார்த்தால் மகாநாட்டுத் தலைவர் என்கின்ற முறையில் எனது முடிவுரை என்பதாக சில வார்த்தைகளையாவது நான் சொல்லியாக வேண்டும். நீங்களும் அதை குறிப்பாய் எதிர்பார்க்கின்றீர்கள் என்பதை உணருகிறேன். மகாநாட்டு நடவடிக்கைகளில் ஆதி முதல் இதுவரை ஊக்கத்தோடும் உணர்ச்சியோடும் இடையறாக் கவனத்தோடும் கலந்திருந்த உங்களுக்கு இனி நான் அதிகமாய் ஒன்றையும் சொல்ல வேண்டியதில்லையென்றே நினைக்கின்றேன். ஆயிரக்கணக்கான வருஷங்களாகவே சீர்திருத்தம் என்பதைப் பற்றி பேசப்பட்டு வருகிறதாய் அறியக் கிடக்கின்றது. எவ்வித சீர்திருத்தத்தைப் பற்றி பேசப்பட்டு வந்ததோ அது ஒரு சிறிதும் காரியத்தில் வெற்றி பெறவில்லை.

சீர்திருத்தக்காரர்களும் தங்கள் சீர்திருத்தங்களைப் பற்றி வாயளவில் பேசிக் கொண்டு வந்திருக்கிறார்களே யொழிய காரியத்தில் கொண்டு வருவதில் வெற்றியடையவே இல்லை. ஆனாலும் இப்போதும் அம்மாதிரியாகவேதான் வாய்ப் பேச்சிலும் வெறும் தீர்மானத்திலும் நடைபெறுகின்றதே யொழிய காரியத்தில் நடைபெறச் செய்யும் மார்க்கத்திற்கு கொண்டு போய் விடும்படியான சீர்திருத்தம் செய்வதற்கு ஆட்களைக் காணோம்.

இந்த மாதிரியான வாய்ப் பேச்சு சீர்திருத்தத்திற்கும் எதிர்ப்புச் சீர்திருத்தங்கள் வெளிப்படையாயும் மறைமுகமாயும் சூழ்ச்சியாயும் நடந்து கொண்டே வந்திருக்கின்றன. இன்றைய தினமும் பல இடங்களில் நடந்து கொண்டிருக்கிறது. அவைகளில் ஒன்றுதான் அரசியல் இயக்கம் என்பதும், திரு. காந்தியின் வருணாச்சிரமப் பிரசாரம் என்பதும், மற்றும் வருணாச்சிரம தர்ம பரிபாலன மகாநாடு, பிராமண மகாநாடு, இந்து மகாநாடு, ஆரிய தர்ம பரிபாலன மகாநாடு, சைவ சித்தாந்த மகாநாடு, வைணவ சித்தாந்த மகாநாடு, ஆஸ்திகர்கள் மகாநாடு என்று சொல்லப்படுபவைகள் போன்றவைகளும், ராமாயணம், பாரதம், பாகவதம், பெரிய புராணம், திருவிளையாடல் புராணம் முதலிய புராண இதிகாச காலnக்ஷபங்களும், வேத சாஸ்திரப் புராணப் பாடசாலைகள் முதலியவைகளும், இவைகளுக்கு அடிக்கடி பாஷியங்கள் கிளப்புவது முதலியவைகளுமாகும்.

ஆதலால் வெறும் சீர்திருத்தங்கள் எப்பேர்ப்பட்ட வீரர்களால் செய்யப்படினும் அவைகளை மேற்கண்ட கரையான்கள் அடியோடு அழித்துக் கொண்டே வந்து விடுமேயொழிய ஒரு சிறு பாகத்தையும் மீதியிருக்க விடாது என்பதை தயவு செய்து உணருங்கள். உண்மையான சீர்திருத்தத்தை நமது நாட்டிற்கு விரும்புபவர்கள் முதலில் மேற்கண்ட புல்லுருவிகளையும் கரையான்களையும் அழிக்க தைரியமாய் முற்பட வேண்டும். பழக்க வழக்கம் என்கிற பிசாசுகளை முதலில் ஓட்டி விட வேண்டும். பழக்க வழக்கங்களை விட வேண்டுமானால் மனிதன் பகுத்தறிவுக்கு மதிப்புக் கொடுக்கத் தயாராயிருக்க வேண்டும். அப்படி பகுத்தறிவுக்கு மதிப்பு கொடுப்பவர்கள் கேள்வி மாத்திரத்திலேயே ஒன்றை நம்பி விடக் கூடாது. எழுதி வைத்திருப்பதாலேயே ஒன்றை நம்பி விடக் கூடாது. வெகுகாலமாக நடந்து வருவதாக தெரிய வருவதினாலேயே ஒன்றை நம்பி விடக் கூடாது. அநேகர் பின்பற்றுவதாலேயே நம்பி விடக் கூடாது, கடவுளாலோ, மகாத்மாவாலோ சொல்லப்பட்டது என்பதினாலேயே நம்பி விடக் கூடாது. ஏதாவதொரு விஷயம் நம்முடைய புத்திக்கு ஆச்சரியமாய் தோன்றுவதாலேயே அதை தெய்வீகம் என்றோ மந்திர சக்தி என்றோ நம்பி விடக் கூடாது. எப்படிப்பட்ட விஷயமானாலும் நடுநிலைமையில் இருந்து பகுத்தறிவிற்கு தாராளமாய் விட்டு ஆலோசிக்கத் தயாராய் இருக்க வேண்டும் அப்படி இருந்தால் தான் கண்மூடித்தனமான பழக்க வழக்கம் முதலியவைகளை ஒழிக்க முடியும்.

அப்படிக்கில்லாமல் “எதையும் நம்பித் தானாக வேண்டும்” “பெரியவர்கள் நடந்தபடி தான் நடக்க வேண்டும்” என்று நினைப்போமானால் எதை நம்புவது? யார் சொன்னது சரி? யார் சொன்னது தப்பு? எந்த எந்த புஸ்தகம் கடவுள் சொன்னது? அதில் எதெது மத்தியில் மனிதனால் நுழைக்கப்பட்டது? அவைகளில் அறிவாளிகளுக்கு எழுதியது எது? புத்தியில்லாத பாமர மக்களுக்கு எழுதியது எது? பெரியவர்கள் யார்? என்கின்றவை போன்ற விஷயங்களுக்குச் சமாதானம் எங்கே இருக்கிறது? நமது சீர்திருத்த வேலையின் ஜீவநாடி இந்த இடத்தில்தான் இருக்கிறது. இங்குதான் மனிதன் தைரியமாயும் உறுதியாயுமாயிருக்க வேண்டும்.

தவிர சீர்திருத்தங்களைப் பற்றிப் பிரசாரம் செய்வதன் மூலம் மக்களுக்கு எடுத்துச் சொல்லி முழுவதையும் சரிப்படுத்தி விடலாம் என்று எண்ணுவதும் மிகுதியும் பைத்தியக்காரத்தனமாகும்.

ஏனெனில் நமது பிரசாரத்தை செய்வதற்கு நமக்குள்ள சந்தர்ப்பத்தைக் காட்டிலும் நமது சீர்திருத்தத்திற்கு எதிரிகளான வைதீகர்கள், பண்டிதர்கள், சுயநலப் பார்ப்பனர்கள். அவர்களது கூலிகள் ஆகியவர்களுக்கே மிகுதியும், சந்தர்ப்பங்களும் சௌகரியங்களும் அதிகமாய் இருக்கின்றன. எப்படியெனில் கோவில்கள், புராணங்கள், சித்திரப் படங்கள் ஆகியவைகளும், உற்சவம், காலnக்ஷபம், பஜனை ஆகியவைகளும் பழக்கம், வழக்கம், நடை, உடை, பாவனை, சம்பிரதாயம் ஆகியவைகளும், பள்ளிக்கூடம், படிப்பு, பாடபுஸ்தகம் முதலியவைகளும் யாருடைய பிரயத்தனமும் இல்லாமல் மக்களுக்குள் சீர்திருத்தத்திற்கு விரோதமான விஷத்தை புகுத்தி விடுகின்றன. இது தவிர கோடிக்கணக்கான ரூபாய்கள் வருவாய் கொண்ட மடங்களும் மடாதிபதிகளும், ஸ்தாபனங்களும் வெட்டி ஆட்களும் இருக்கின்றன.

அன்றியும் ஜனப்பிரதிநிதித்துவமான ஓட்டுகள் பெற்று, அதன் மூலம் பிரதிநிதிகள் தெரிந்தெடுத்து, அவர்களால் சட்டங்கள் செய்து முழு சீர்திருத்தங்களையும் செய்து விடலாம் என்று எண்ணுவதும் அறியாமையே ஆகும். ஏனெனில் ஜனப்பிரதிநிதித்துவமான ஓட்டுகள் என்பது பெரிதும் பாமர மக்களிடையே இருக்கின்றது. பிரதிநிதிகளாக வருபவர்களும் பெரிதும் சீர்திருத்த விரோதிகளுக்கு பயந்தவர்களும், சரியான சீர்திருத்த அறிவில்லாதவர்களாகவுமே இருக்கிறார்கள்.

சர்க்காரும் நம்முடைய கேவல நிலையினால் வாழ வேண்டியவர்களாகவே இருக்கின்றார்கள். ஆதலால் உண்மையானதும் முடிவானதுமான சீர்திருத்தம் ஒரு நாட்டிற்கு வர வேண்டுமானால் ஏக சக்ராதிபத்தியத் தன்மை கொண்ட ஒரு வீரனின் ஆட்சியால்தான் முடியும். அதாவது “இந்தப் பொதுக் கோவிலுக்குள் எல்லோருக்கும் செல்ல உரிமை உண்டு” என்று விளம்பரம் செய்ய வேண்டும். யாராவது ஆnக்ஷபித்தால் அவர்களை சிறையிலிட வேண்டும். இதை பொது ஜனங்கள் கூட்டம் போட்டு கண்டிக்க ஆரம்பித்தார்களானால் உடனே கோவிலை இடித்தெறிந்து விடவேண்டும்.

ஜாதி வித்தியாசமோ, உயர்வு தாழ்வோ கற்பிக்கின்ற புஸ்தகங்களை படிக்கக் கூடாது என்று சொல்லிவிட வேண்டும். மீறி படிக்க ஆரம்பித்தால் அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும். உயர்வு தாழ்வு வித்தியாசம் முதலியவை கொண்ட மடாதிபதிகளை எல்லாம் சிறையில் அடைத்துவிட வேண்டும். பொதுஜனங்கள் கிளர்ச்சி செய்தால் மடாதிபதிகளை தீவாந்திரத்திற்கு அனுப்பிவிட வேண்டும். சுவாமிகளுக்கு உள்ள நகைகள், வாகனங்கள், பூமிகள் எல்லாவற்றையும் பறிமுதல் செய்து அவைகளை விற்று படிப்பில்லாதவர்களுக்கு படிப்பும், தொழில் இல்லாதவர்களுக்கு தொழிலும் ஜீவனமும் ஏற்படுத்த உபயோகப்படுத்தி விடவேண்டும்.

இது போன்ற காரியங்கள் செய்யத்தக்க உரம் கொண்ட வீர ஆட்சிக்கு நாட்டைக் கொண்டு வர வேண்டும். அப்பேர்ப்பட்ட வீரர்களின் ஆட்சிக்குட்பட்ட நாடுகள்தான் இன்று சுயமரியாதையும் சீர்திருத்தமும் பொலிந்து விளங்குகின்றன.

இப்பேர்ப்பட்ட வீர ஆட்சிக்கு நாட்டைக் கொண்டுவர வேண்டுமானால் அநேக சீர்திருத்தக்காரர்கள் உயிர் துறக்கத் தயாராயிருந்து கொண்டு பாமர மக்களிடையில் உண்மையைப் பரப்ப முன்வர வேண்டும். நம்நாட்டுப் பார்ப்பனர்கள் நம் சீர்திருத்தங்களை எதிர்க்க வெளியில் வருவதில்லை. ஒரு விதத்தில் ஒளிந்து கொண்டார்கள். ஆனாலும் நம்மவர்களிலேயே சில கூலிகளையும் ஏமாந்த சோணகிரிகளையும் பிடித்து அவர்களை நம்மீது ஏவிவிட்டு தடை வேலை செய்யச் செய்துவிட்டு, தங்களுக்குள் ஒற்றுமையும் கட்டுப்பாடும் செய்து கொள்ள வர்ணாசிரம தர்ம மகாநாடு, ஆரிய தர்ம பரிபாலன மகாநாடு, பிராமணர்கள் மகாசபை, சனாதன தர்மிகள் மகாநாடு, வேத வித்துக்கள் மகாநாடு, புரோகிதர் நன் மகாநாடு, பண்டிதர்கள், சாஸ்திரிகள் கனபாடிகள் சம்மேளனம் ஆகிய பல மகாநாடுகள் திருட்டுத் தனமாகவும் சூழ்ச்சியாகவும் கூட்டி அதற்குள் பல இரகசிய தீர்மானங்கள் செய்து இரகசிய சமாச்சாரப் போக்குவரத்து மூலம் தெரிவித்துக் கொண்டு கட்டுப்பாடாய் வேலை செய்து வருகிறார்கள்.

இவ்வளவும் செய்துவிட்டு சீர்திருத்த இயக்கத்திற்கு நாஸ்திக இயக்கம் என்ற பெயரைக் கொடுத்து அதற்குப் பல தப்பர்த்தங்களையும் பழிப்புகளையும் கற்பித்தும் வருகிறார்கள். இதை சில பார்ப்பனரல்லாதார்களும் நம்பிக் கொண்டு அர்த்தமில்லாமல் குற்றம் சொல்லுகின்றார்கள். ஆனாலும் சீர்திருத்தக்காரர்கள் என்பவர்கள் நாஸ்திக மதம் என்கின்ற பூச்சாண்டிக்குப் பயப்படக் கூடாது. அது ஒரு அர்த்தமற்ற வார்த்தை. அதன் உண்மை அர்த்தமும் உண்மைப் பிரயோகமும் என்னவென்றால் “பார்ப்பனீயத்தில் அதாவது பார்ப்பனர்களுடைய வேதம், சாஸ்திரம், இதிகாசம், புராணம் ஆகியவைகளில் நம்பிக்கை இல்லாதவன், பார்ப்பனர்களின் புரட்டுக்களைக் கண்டுபிடித்து வெளிப்படுகின்றவன்” என்பதுதான். இந்நிலையில் நாம் எல்லோரும் நல்ல உறுதியான நாஸ்திகர்களே ஆவோம். ஆகையால் நாம் ஒவ்வொருவரும் தைரியமாய் நம்மை நாஸ்திகர் என்றே சொல்லிக் கொள்ள வேண்டும்.சீர்திருத்தக்காரர்கள் தங்களுடைய பெயரின் இறுதியில் நாஸ்திகன் என்ற பட்டத்தையே சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நாஸ்திகப் பூச்சாண்டியை கொல்ல முடியும்.

நமக்கும் வேதத்திற்கும் என்ன சம்மந்தம்? அதை யார் உண்டாக்கினவர்கள்? யாருக்காக உண்டாக்கப்பட்டது? என்ன பாஷையில் செய்யப்பட்டது? அதில் நமது நிலைமை என்ன? என்பவைகளாகிய விஷயங்களை யோசித்துப் பார்த்தால் அதை நம்பலாமா? நாம் ஒப்புக் கொள்ளலாமா? அது நமது மக்களிடை பரவுவதற்கோ, இருப்பதற்கோ இடம் கொடுக்கலாமா? என்பது விளங்கும்.

கடைசியாக சீர்திருத்தக்காரர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்ய விரும்புகின்றேன்.

மத வெறியும் சமய வெறியும் பிடித்தவர்களும் பொதுவாக பார்ப்பனர்களும் சமத்துவம், சுதந்திரம், சுயமரியாதை, பகுத்தறிவு ஆகியவைகள் கொண்ட சீர்திருத்தத்திற்கு எப்போதுமே விரோதிகள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஒருவர் “எங்கள் மதத்தில் மேல்கண்ட சீர்திருத்தமுண்டு” என்பார். “ஆனால் எங்களைப் போல் வேஷம் போட்டுக் கொள்ள வேண்டும், எங்கள் வேதத்தை நம்ப வேண்டும், எங்கள் சாமியையும், தூதனையும் வணங்க வேண்டும்” என்று சொல்லுவார்கள். மற்றொருவர் “எங்கள் சமயத்தில் சீர்திருத்தம் உண்டு, ஆனால் எங்களைப் போல் வேஷம் போட்டுக் கொண்டு எங்கள் சாமிகளையும் புராணங்களையும் நம்ப வேண்டும்” என்பார்கள். நம்பாவிட்டால் “நாஸ்திகர், அஞ்ஞானி, பாவிகள், சமயத் துவேஷி” என்று சொல்லி விடுவார்கள். இவர்கள் எல்லோரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும் இவர்கள் உண்மை சீர்திருத்தத்திற்கு விரோதிகள் என்பதையும் மறந்து விடாதீர்கள்.

முக்கிய எச்சரிக்கை என்னவென்றால், பார்ப்பனர்களில் சிலர் சீர்திருத்தக்காரர்கள் என்று சுலபத்தில் பட்டம் பெற்றுப் புறப்பட்டு விடுவார்கள். அதாவது கள்ளும் சாராயமும் குடித்தால் அதனாலேயே அவர் ஒரு சீர்திருத்தக்காரர் ஆய்விடுவார்; ஒருவர் ஆடு, மாடு, பன்றி சாப்பிட்டால் அதனாலேயே அவர் ஒரு சீர்திருத்தக்காரர் ஆகி விடுவார்; மற்றொருவர் வெட்டிச் சோறாக யார் வீட்டிலும் கிடைத்ததையெல்லாம் சாப்பிட்டு வயிற்றை நிரப்பிக் கொண்டு திரிந்தால், அதனாலேயே அவர் ஒரு பெரிய சீர்திருத்தக்காரர் ஆகிவிடுவார்; மற்றொருவர் ஒழுக்கமில்லாமல் யாரையும் எந்தப் பெண்ணையும் கல்யாணமாகவோ, வைப்பாட்டியாகவோ, வேசியாகவோ அனுபவித்துக் கொண்டு திரிந்தால் அதனாலேயே அவர் ஒரு பெரிய சீர்திருத்தக்காரர் ஆகிவிடுவார்; ஜனங்களும் முட்டாள்தனமாக அவர்களை வித்தியாசமற்றவர் என்றும் சீர்திருத்தக்காரர் என்றும் நம்பி விடுவார்கள். ஆனால் அவர்களால் சீர்திருத்தத்திற்கு மாத்திரமன்றியில் பார்ப்பனரல்லாத சமூகத்திற்கே பெரிய ஆபத்து என்பதை மறந்து விடாதீர்கள்.

மற்றும் எந்த விஷயத்திற்கும் சாமியையும் மதத்தையும் குறுக்கே கொண்டு வந்து போட்டு விடுகின்றார்கள். ஆகவே உங்களுடைய முன்னேற்றத்திற்குத் தடையாக எந்த மதமாவது கடவுளாவது குறுக்கிட்டால் அவற்றைத் தைரியமாக எதிர்க்க வேண்டுமென்றே கேட்டுக் கொள்ளுகின்றேன். இனி பார்ப்பனர்கள் வித்தியாசம் காட்டுவதுடன் பார்ப்பனரல்லாதார்களுக்குள்ளும் பற்பல ஜாதியார் ஒருவருக்கொருவர் வித்தியாசம் பாராட்டுகின்றனர். ‘மேல்ஜாதியார்கள்’ நீங்கள் உங்களுக்கு சமமாக இருக்க வேண்டுமென்று விரும்புவீர்களானால், உங்களுக்குக் “கீழேயுள்ள ஜாதியார்”களுக்கும் நீங்கள் சமத்துவம் அளிக்க வேண்டும். நம்மிடமிருக்கும் கொடுமை பார்ப்பனர்கள் காட்டும் கொடுமைகளை விட சற்று அதிகம் என்றே சொல்ல வேண்டும். ஆனால் நாம் பார்ப்பனர்களை ஏன் அதிகமாகச் சொல்லுகிறோமென்றால், அவர்கள் வைத்த தீ தான் நம்முடைய வீடுகளிலும் பிடித்துக் கொண்டது.

நாம் மேல் ஜாதி என்பாரோடு சண்டை செய்து வகுப்புவாரிப் பிரதிநிதித்துவப்படி உத்தியோகம் கொடுக்க வேண்டுமென்ற கொள்கையில் வெற்றி பெற்றால் கீழ் ஜாதியார்களென சொல்லப்படுகிறவர்களுக்கும் அவர்களுக்குரிய பங்கை நாம் கொடுக்க வேண்டும். சர்வ கட்சி மகாநாட்டுத் திட்டத்தில் எல்லா வகுப்பாருக்கும் சமத்துவம் கொடுக்க வேண்டும் என்ற விஷயமே காணப்படவில்லை. பார்ப்பனர்களுக்குப் பயந்தே எல்லோரும் அதில் கையெழுத்துப் போட்டு விடுகிறார்கள். முதலில் எல்லா வகுப்பாருக்கும் சமத்துவம் கொடுப்பதைவிட வேறு என்ன சீர்திருத்தம் வேண்டுமென்று நினைக்கின்றீர்கள். பிச்சை எடுப்பதற்கு உபயோகமாயிருக்கும் வேதப் படிப்பிற்காக கொள்ளை கொள்ளையாக லாபம் சம்பாதிக்கும் நாட்டுக் கோட்டை செட்டிமார்கள் சோறும் போட்டு படிக்கும்படி செய்கிறார்கள். இம்மாதிரியான உதவி ஆதிதிராவிட பிள்ளைகளுக்கு அளிக்கப்படுமானால், அவர்களில் வயிற்றுப் பிழைப்பிற்கு வழியின்றி சிறு வயதிலேயே கூலிக்குச் செல்லும் எத்தனையோ பிள்ளைகள் பள்ளிக்கூடம் சென்று படித்து மந்திரி வேலைக்குத் தயாராக விருப்பார்களென்பதை நினைத்துப் பாருங்கள்.

இனி சிலர், வேதங்களும், புராணங்களும் பழங்கதையென்று சொல்லிக் கொண்டு பண்டிகை, திதி, திவசம், கிரகணம் ஆகியவைகள் வரும்போது அவர்கள் அப்புத்தகங்களையே முதலில் திறந்து பார்ப்பார்கள். ஆனால் அவர்களைக் கேட்டால் வழக்கத்துக்கு விரோதமாக நடக்கலாமாவென்று கூறுகிறார்கள். இவர்களை எந்தக் கூட்டத்தில் சேர்ப்பது.

கடைசியாக சீர்திருத்தங்கள் மக்களுக்கு ஒழுக்கங்கள் கற்பிக்கவும், அறிவை விசாலப்படுத்தவும், ஜீவன்களிடத்தில் அன்பும் இரக்கமும் காட்டவும், சமத்துவத்தையும் சுயமரியாதை உணர்ச்சியையும் அதிகப் படுத்தவுமே வேண்டும். ஆகையால் நீங்களெல்லோரும் இம்மகாநாட்டில் நிறைவேறிய தீர்மானங்களைத் தைரியமாக நடத்தையில் கொண்டு வர வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகிறேன்.

(குறிப்பு : 26.11.1928 - சென்னை விக்டோரியா பொது மண்டபத்தில் நடைபெற்ற தென்னிந்திய சமுதாய சீர்திருத்தக்காரர்கள் மாநாடு - நிறைவுரை.

குடி அரசு - சொற்பொழிவு - 09.12.1928)

Pin It