ஒரு நிறுவனத்தின் உற்பத்திப் பொருட்களில் சேர்க்கப்பட்ட மதிப்புக் கூட்டல் என்பது உற்பத்திகாரணிகள் பெறும் வருவாயான கூலி, லாபம், வாடகை, வட்டி ஆகியவற்றின் கூட்டுத் தொகைக்கு சமமாக இருக்கும். ஒரு நாட்டின் ஓராண்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், சேவைகளிலிருந்து கிடைக்கும் வருவாய், நேரடியாக உற்பத்தியில் ஈடுபடும் உழைப்பாளர்களுக்கு கூலி/ஊதியமாகவும், நில உரிமையாளர்களுக்கு வாடகையாகவும், நிதி முதலாளிகளுக்கு வட்டியாகவும், தொழில் முதலாளிகளுக்கு லாபமாகவும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. ஒரு நாட்டின் எல்லா உற்பத்தி நிறுவனங்களின் வருவாயை ஒன்று சேர்த்துக் கூட்டுவதன் மூலம் தேசிய வருவாய் கணக்கிடப்படுகிறது. ஒரு நாட்டின் கூலி, லாபம், வாடகை, வட்டி ஆகியவற்றின் மொத்தத்தொகையுடன் வெளிநாட்டில் இருந்து கிடைக்கும் நிகர வருவாயையும், கூட்டுவதன் மூலம் ஒரு நாட்டின் தேசிய வருவாய் கணக்கிடப்படுகிறது.

வருவாய் முறையின் மூலம் தேசிய வருவாயை மதிப்பிடுவதில் உள்ள முக்கிய படிகள்:

1) உற்பத்தி நிறுவனங்கள் அடையாளம் காணப்படுகிறது. உற்பத்தி முறையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உற்பத்தி அலகுகளின் வகைப்பாட்டையே தேசிய வருவாயை மதிப்பிடுவதற்கான வருவாய் முறைக்கும் பயன்படுத்தலாம்.

2) வருவாய் பல வகையாக வகைப்படுத்தப்படுகிறது. அவையாவன:

அ) கூலி / ஊழியர் இழப்பீடு

ஆ) வாடகை

இ) வட்டி

ஈ) லாபம்

உ) சுயதொழில் செய்பவர்களின் கலப்பு வருமானம்

3) வருவாயின் கூறுகள் மதிப்பிடப்படுகின்றன.

4) ஒரு நாட்டின் மொத்த வருவாயுடன், வெளிநாட்டிலிருந்து பெறும் நிகர வருவாயையும் சேர்க்கும் போது தேசிய வருவாய் பெறப்படுகிறது.இதனுடன் சுற்றடி வரியை சேர்க்கும் பொது நிகர உள் நாட்டுப் பொருளாக்க மதிப்பை பெறலாம். அதனுடன் தேய்மான மதிப்பைக் கூட்டுவதன் மூலம் மொத்த உள்நாட்டுப் பொருளாக்க மதிப்பு பெறப்படுகிறது.

தேசிய வருவாய் = ஊதியம் + வாடகை + வட்டி + லாபம் +வெளி நாட்டிலிருந்து பெறப்படும் நிகர வருவாய்

Y = W + R + In + P + NFIA,

இதில் Y-தேசிய வருவாய் , W-ஊதியம், R-வாடகை, In-வட்டி, P-லாபம், NFIA-வெளி நாட்டிலிருந்து பெறப்படும் நிகர வருவாய்.

மொத்த உள்நாட்டுப் பொருளாக்க மதிப்பு = தேசிய வருவாய் + சுற்றடிவரி + தேய்மான மதிப்பு

GDP = Y+iT+D;

iT = மறைமுகவரி, D = தேய்மானம்

தொழிலாளர் சேவைகளை வழங்குவதற்காக அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது எனும் பொருளில் கூலியானது ஊழியர் இழப்பீடு (CE) எனவும் குறிப்பிடப்படுகிறது. லாபம் இயக்க உபரி (OS) எனவும் தொழில் நிறுவனர் பெரும் வருவாய் எனவும் குறிப்பிடப்படுகிறது.

சுயதொழில் செய்பவரின் வருவாயை கலந்த வருவாய் (MY) எனக் குறிப்பிடலாம். உதாரணமாக ஒருவர் தன் சொந்தப் பணத்தைப் போட்டு தன் வீட்டிலே ஒரு சிறு கடையை நடத்துகிறார் என வைத்துக் கொள்வோம். அந்தக் கடையில் அவரே பணியாளராகவும் இருக்கிறார் அவர் பெறும் வருவாயில் எவ்வளவு கூலியைச் சேரும், எவ்வளவு வாடகை, லாபத்தைச் சேரும் என பிரித்தறிய இயலாது ஆகவே அவரது வருவாய் மொத்தமாக சுயதொழில் செய்பவரின் கலந்த வருவாய் என குறிப்பிடப்படுகிறது.

ஊழியர் இழப்பீடு (CE), இயக்க உபரி (OS), சுயதொழில் செய்பவரின் வருவாய் கலந்த வருவாய் (MY) ஆகியவற்றை வெளி நாட்டிலிருந்து பெறும் நிகரவருவாயுடன் ஒன்றாகக் கூட்டுவதன் மூலம் தேசிய வருவாயை பெறலாம்.

 Y = CE + OS + MY + NFIA

வருவாய் முறையின் மூலம் பொருளாதாரத்தின் தேசிய வருவாயைக் கணக்கிடும் போது பின்வருவனவற்றை கருத்தில் கொள்ள வேண்டும்.

  • வருவாயாக அல்லாது பிறருக்கு செலுத்தப்படும் அல்லது பிறரிடமிருந்து பெறப்படும் பணம் தேசிய வருவாய் கணக்கீட்டில் சேர்க்கப்படாது.
  • உரிமையாளரால் ஆக்கிரமிக்கப்பட்ட குடியிருப்புகளுக்கும் வாடகை கணக்கிடப்பட்டு தேசிய வருவாய் கணக்கீட்டில் சேர்க்கப்படும்.
  • கடத்தல் அல்லது சூதாட்டத்தின் மூலம் ஈட்டப்படும் வருமானம், திடீர் ஆதாயங்கள், பரிசு சீட்டின் மூலம் பெறப்படும் பணம் தேசிய வருவாய் கணக்கீட்டில் சேர்க்கப்படுவதில்லை.
  •  ஒரு பொருளாதாரத்தின் தேசிய வருவாயில் வருமான வரி, பெரு நிறுவன வரி போன்ற நேரடி வரிகள் அடங்கும். இறப்பு வரி, பரிசு வரி, சொத்து வரி போன்றவை கடந்த கால சேமிப்பிலிருந்து செலுத்தப்பட வேண்டும் என்பதால் இந்த வரிகள் தேசிய வருவாய்க் கணக்கீட்டில் சேர்க்கப்படுவதில்லை.
  • இரண்டாவது முறையாக வர்த்தகம் செய்யப்படும் மறுபயன்பாட்டுப் பொருட்கள் தேசிய வருவாய் கணக்கீட்டில் சேர்க்கப்படுவதில்லை.

- சமந்தா

Pin It