மோடி ஆட்சிக்கு வந்ததும் 2015 ஜனவரி, 1ஆம் தேதி புனேவில் பிரதமர், நிதி அமைச்சர், பொதுத்துறை வங்கிகளின்நிர்வாக இயக்குனர்கள், மேல் அதிகாரிகள் கலந்து கொண்ட கியான் சங்கம் என்ற நிகழ்வு நடந்தது. அதில் பொதுத்துறை வங்கிகளின் நிர்வாக இயக்குனர்களை வைத்தே வங்கிகளை இணைக்கவும், தனியார் மயமாக்கவும் திட்டம் உருவாக்கப்பட்டது. தனியார் வங்கிகளில் நிர்வாக இயக்குனர்களாக இருந்தகே. வி. கமத், பி.ஜே. நாயக், பரேஷ் சுதாங்கர், சந்திர சேகர்கோஷ் போன்றவர்கள் வகுப்பெடுத்தார்கள்.

பொதுத்துறை சீர்திருத்தத்திற்கு மெக்கன்ஸி எனும் வெளிநாட்டு கம்பெனி பொதுத்துறை நிர்வாக இயக்குனர்களுக்கு, என்ன செய்ய வேண்டும் என PPT தயார் செய்து கொடுத்து கற்பித்தது. அப்போதைய நிதித்துறை செயலர் கஷ்முக் அடியா, முன்னுரிமைக் கடன்கள் நீண்ட காலமாக தொடர்கின்றன. பரிசீலிக்கப்பட வேண்டும் என்றார். வங்கிகள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து மாறி அரசு தொடர்புடையவைகளாக மாறும்; 4 - 5 உலகில் பெரிய வங்கிகள் உருவாக்கப்படும்; வங்கிகளின் கடன் யாருக்கு செல்ல வேண்டும் என்பது பரிசீலிக்கப்பட வேண்டும்; அரசுவங்கிகளில் தலையிடாது; வங்கி துறை சீர்திருத்தம் வேகப்படுத்தப்படும், என தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து ஆண்டு தோறும் இதுபோன்ற கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. விளைவு? 28 பொதுத்துறை வங்கிகள் 12 ஆக குறைக்கப்பட்டு விட்டன. தனியார் வங்கிகள் 24 உள்ளன. உலகத் தரம் வாய்ந்த வங்கி ஒன்று கூட இல்லை. உலகில் முதல்வரிசையில் இருக்கும் 50 வங்கிகளில் நமது வங்கிகள் ஒன்றுகூட இல்லை. கிராமப்புற வங்கி கிளைகள் 58 லிருந்து 29 ஆக குறைந்துள்ளன. கிராமப்புறங்களில் 7.7 கடனும், சிறுநகரங்களில் 1. 3 கடனும், நகர்புறங்களில் 16.7 கடன்களும், பெருநகரங்களில் 63 கடனும் கொடுக்கப்படுகிறது. முன்னுரிமை கடன் குறைந்து வருகிறது.

சிறு கடன்கள் மிகவும் குறைந்து விட்டன. “சிறு, குறு நிறுவனங்களுக்கு கடன் கொடுப்பது குறைந்து விட்டது. அவற்றிலும் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே கடன் கிடைக்கிறது. சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு கடன் குறைந்து விட்டது. சுய உதவிக் குழுக்களுக்கு 11-12% வட்டி. ஆனால் டாட்டாவுக்கு ஏர் இந்தியாவை வாங்க 4.5% வட்டி. கடந்த 10 ஆண்டுகளில் ரூ. 15.6 லட்சம் கோடி பெரு முதலாளிகளுக்குத் தள்ளுபடி செய்யப்படுகிறது.

வங்கிகள் அல்லா நிறுவனங்கள் செய்யப்படுகிறது NBFC மற்றும் நுண் கடன் நிறுவனங்கள் வங்கிகளில் இருந்து 11% வட்டிக்கு கடன் பெற்று பெண்களுக்கும், சிறு வியாபாரிகளுக்கும்,விவசாயிகளுக்கும், சிறு, குறு தொழில் செய்பவர்களுக்கும் 36% வட்டியில் கடன் கொடுக்கின்றன.

ஸ்டேட் வங்கி சாதாரண மக்களுக்கு கடன் கொடுக்க அதானி நிறுவனங்களுடன் இணைந்த கடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. பெரு முதலாளிகளுக்கு ஏராளம் கடன் தள்ளுபடி. மொத்த வராக்கடனில் 82 பெரும் முதலாளிகளுக்கு கொடுத்தது, என பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 5 ஆண்டுகளில் ரூ.35,587 கோடி ரூபாய் சாதாரண மக்களிடமிருந்து குறைந்த பட்ச இருப்பு கட்டணம். எஸ்.எம்.எஸ். சேவை கட்டணம், ஏ.டி.எம். கட்டணம் என்ற பெயரில் வசூலிக்கப்பட்டுள்ளது. இதல்லாம் கடன் பரிசீலனை கட்டணம், (காசு செலுத்த கட்டணம்) ஆய்வு கட்டணம், என பல கோடி வசூலிக்கப்படுகிறது. வங்கிகளில் நிரந்தர பணிகளில் ஆட்களை குறைத்து ஒப்பந்த பணியாளர்கள் நியமனம், அதிகரித்துள்ளது.

தனியார் வங்கிகள் உட்பட நிரந்தரப் பணியாளர்கள் 15 லட்சம். ஒப்பந்த பணியாளர்கள் / முகவர்கள் 33 லட்சம். இதன் மூலம் இடஒதுக்கீட்டுக்கு வேட்டு. வராக்கடனை மீட்க தனியமைப்பு என்ற பெயரில் தேசிய கடன் தீர்ப்பாயம் தொடங்கியது இந்த மோடி ஆட்சி. இதன்மூலம் வராக்கடனில் சராசரி 80% தள்ளுபடி.

ஸ்டெர்லைட்-வேதாந்தா குழுமத்திற்கு வீடியோகான் கம்பெனியை வாங்க 95 தள்ளுபடி. அதாவது ரூ.59132 கோடி கடனில் ரூ.56248 கோடி தள்ளுபடி. விவசாயிக்கு கடனை திருப்பி செலுத்த பலவித கொடுமைகள்- இதன் காரணம் தினமும் சராசரி 3 விவசாயிகள் தற்கொலை. அனில் அம்பானியின் கம்பெனியை வாங்க அண்ணன் முகேஷ் அம்பானிக்கு 99% தள்ளுபடி.

வங்கிகளில் தலையிட மாட்டோம் என சொன்னவர்கள் வங்கி நிர்வாகங்களை மிரட்டி கடன் கொடுக்க சொல்கிறார்கள். யாருடைய பயமுறுத்தலால் என அனைவரும் அறிவோம். 43 கோடி பேருக்கு முத்ரா கடன் கொடுத்ததாக சொல்கிறார்கள். இந்தியாவில் 30 கோடி குடும்பங்களே உள்ளன. உண்மையில் 43 கோடி பேருக்கு கடன் கொடுத்திருந்தால் வீட்டுக்கு 1 1/2 பேருக்கு கடன் கிடைத்திருக்கும். கிடைத்ததா என நீங்களே விசாரியுங்கள், உண்மை தெரியும். தேர்தல் பத்திர வழக்கில் ஸ்டேட் வங்கி நிர்வாகத்துக்கு கொடுத்த அழுத்தம் காரணமாக உச்ச நீதிமன்றத்தையே அவமதிக்க முயற்சித்தது ஸ்டேட் வங்கி நிர்வாகம்.

எல்லா பொதுத்துறை வங்கிகளும் ஏராளம் இலாபமீட்டியும் முதலில் 2 வங்கிகளை தனியார் மயமாக்குதல், பின்னர் மற்றவற்றை தனியார் மயமாக்குதல் என தவறான முடிவு ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. சட்டப்படி நியமிக்கப்பட வேண்டிய அதிகாரிகள் சங்க பிரதிநிதிகள், அதிகாரிகள் அல்லாத தொழிற்சங்க பிரதிநிதிகள் நிர்வாகக் குழுவில் 10 ஆண்டுகளாக நியமிக்கவில்லை. இது வங்கிகளில் மோசடி செய்ய வழி வகுக்கிறது. 1969-இல் வங்கிகளைத் தேசியமயமாக்கிய போது திருமதி. இந்திரா காந்தி அவர்கள், ஏழைகளுக்கு, விவசாயிகளுக்கு, சிறு குறு தொழில் செய்பவர்களுக்கு கடன் கிடைக்கவும், கிராமப்புறங்களில் வங்கி கிளைகளை தொடங்கவும், நாட்டின் வளர்ச்சிக்கு மக்களின் சேமிப்பை பயன்படுத்தவும், அரசியல் சாசனம் சொல்லும் ஏற்றத்தாழ்வில்லா சமுதாயத்திற்கு ஒருபடிக்கல்லாக இது இருக்கும் என சொன்னார்; நிரூபித்தார். நேர்மாறாக மோடி வங்கிகளை பெரு முதலாளிகளுக்குத் தாரை வார்த்து வருகிறார்.

பொதுத்துறை வங்கிகளைப் பாதுகாப்போம். தனியார் மயமாக்கலைத் தடுப்போம்; தேர்தல் நமக்கு அந்த வாய்ப்பைத் தந்துள்ளது. சுய உதவிக் குழு பெண்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைக்க, விவசாயிகளுக்குக் குறைந்த வட்டியில் கடன் கிடைக்க, சிறு குறு தொழில்களுக்கு மானியத்துடன் கடன் கிடைக்க, மாணவர்களுக்கு கல்விக் கடன் கிடைக்க, கிராமங்களும் சிறு நகரங்களும் வளர்ச்சி பெற மாற்றம் கொண்டு வருவோம்.

முடிவு உங்கள் கையில்.

- தாமஸ் பிராங்கோ, முன்னாள் பொதுச் செயலாளர் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு

வெளியீடுகள் : மக்கள் இயக்கங்கள் 2024

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.