சாகப்போகும் காயலாக்காரனுக்குக் கோமாரி ஜன்னி கண்டால் பத்துப்பேர்கள் போட்டு அமிழ்த் தினாலும் திமிரிக்கொண்டு எழுந்திருக்கும் படியான பலம் ஏற்படுவதுண்டு. அதுபோல காங்கிரசு கூப்பாட் டுக்கும், காலித்தனங்களுக்கும், பொய் பித்தலாட்டங் களுக்கும், போலி ஆணவங்களுக்கும் சாவுகாலம் நெருங்கிவிட்டது. இன்னும் சில நாளில் பிணமாகிச் சுட்டுக் கொளுத்தப்பட்டுச் சாம்பலாக்கி கரைத்துவிடப் படக்கூடிய நிலை காங்கிரசுக்கு எய்திவிட்டது. காங் கிரசுக்காரர்கள் தங்களால் ஆன சகல காரியங்களை யும் செய்து பார்த்துவிட்டார்கள். காங்கிரசு தேர்தல் கொந்தளிப்பு அடங்கி முடிவு தெரிவதற்கு முன்னா லேயே, காங்கிரசு கொள்கையும் சவடால் வீரமும் செத்து அரசாங்கத்தின் காலுக்குள் நுழைந்து, “வார்த்த அளவுக்குக் கஞ்சி வாருங்கள்” என்று இருகை நீட்டிக்கெஞ்சும் நிலையைக் கொண்டுவந்துவிட்டது என்பதில் யாரும் இனிச்சிறிதும் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை.

இது ஆரம்ப காலத்திலிருந்தே நாம் எதிர்பார்த் ததே ஒழிய, இந்த நிலை நாம் திடீரென்று மகிழ்ச்சி அடையத்தக்க சேதியல்ல. பட்டம் விடுதல், சட்டசபை விடுதல், சீர்திருத்தத்தைத் தகர்த்தல், அரசியலை உடைத்தல், ஏகாதிபத்தியத்தை ஒழித்தல் என்கின்ற தான பகட்டுப் போர்வைகள் பறந்துவிட்டன. காங்கிர சின் உண்மையான யோக்கியதை நிர்வாணமாய் விளங்கிவிட்டது.

“மந்திரி வேலை ஏற்றால் அரசாங்கத்திற்கு அடிமை முறிச்சீட்டு எழுதிக்கொடுத்தது போல ஆகும்; தேசத்தைக் காட்டிக்கொடுத்த தேசத் துரோகத்துக்கு ஒப்பாகும்” என்றும். “காங்கிரசுக்காரர் மந்திரிப் பதவிக் காக எக்கட்சியுடனாவது சமாதானம் செய்துகொள்வது என்பது காங்கிரசின் வீழ்ச்சிக்கு அறிகுறி” என்றும், 2, 3 மாதத்திற்குமுன் தமிழ்நாட்டில் - ஏன்? இந்தியாவெங் கணும் சுற்றிச் சுற்றிக் “கர்ஜித்து”ப் போன காங்கிரசு தலைவர் “ஒப்பற்ற வீரர்”, “சமதர்ம சாஸ்திரி”, “பொதுவுடைமை கனபாடி” பண்டிட் ஜவஹர் பார்ப்பனர், தன் மாகாணத்திலேயே இன்று மந்திரி வேலைக்குத் தன் தங்கையை நிறுத்தி, காங்கிரசு விரோதிகளான முசுலீம்களிடம் அவர்களுக்கும் 2 மந்திரி வேலை கொடுப்பதாகக் கூறி உறவுகொள்ளச் சரண்புகுந்து, சர்க்கார்முன் மண்டியிட்டுப் பிரார்த்திப் பதைப் பார்ப்பனப் பத்திரிகைகளிலேயே பரக்கக் காண்கின்றோம்.

ஆகவே, “ஐயோ மானங்கெட்ட காங்கிரசே! பார்ப் பனரை நம்பி பரதேசியான காங்கிரசே! உன்நிலை இப்படியா ஆகவேண்டும்! உன் ஆரவாரம் எங்கே? ஆட்டம் பாட்டம் எங்கே? ஆணவமெங்கே? ஆங்கிலே யரின் அரை இடுக்கில் புகுந்து போட்டிப் போடுகிறாயே, வெட்கமில்லையா” என்று உலகோர் பரிகசிக்கும் நிலைக்கு வந்துவிட்டது.

எனவே, காங்கிரசின் வீரம் ஏமாற்று வீரம் என்ப தையும், அதன் பகிஷ்காரக் கொள்கைகள் என்பவைகள் பதவிகள் கிடைக்காத காரணத்தால் போடும் போலிக் கூச்சல் என்பதையும், காங்கிரசில் சேர்ந்தால் ஒரு மனிதனாவது யோக்கியதையாகவோ, நாணயமுடைய வனாகவோ இருக்க முடியாது என்பதையும், நமது 1937ஆம் வருட சீர்திருத்தமும். அதன் தேர்தலும் கல்லின்மேல் எழுத்துப்போல் எழுதிக் காட்டிவிட்டன.

என்றாலும் இதுவரை நடந்த 8, 9 மாகாணத் தேர்தல்களில் காங்கிரசுக்கு 5, 6 மாகாணங்களில் படுதோல்வி ஏற்பட்டுவிட்டது என்பதை யாரும் மறுப் பதற்கில்லை.

ஐக்கிய மாகாணத்திற்குத் தேர்தல் நடந்து முடிவு வெளியாகத் தொடங்கிய முதல் தினத்திலேயே, “காங்கிரசு நிறுத்திய 120 ஸ்தானங்களில் இதுவரை 8 ஸ்தானங்களில் தோல்வி அடைந்துவிட்டது” என்று வெளியாக்கிய பார்ப்பனப் பத்திரிகைகள், 17ஆம் தேதியில் 113 ஸ்தானம் காங்கிரசுக்குக் கிடைத்தது என்று “மெயில்”, “ஜஸ்டிஸ்” முதலிய பத்திரிகை களில் சேதி வந்திருக்கும் போது, “அசோசியேட் பிரஸ்” 116 ஸ்தானங்கள் காங்கிசுக்கு வெற்றி என்று எழுதி னால், காங்கிரசின் நாணயத்துக்கும் அக்கட்சியின் பத்திரிகைகளின் யோக்கியதைக்கும் வேறு உதாரணம் என்ன வேண்டும் என்பதை வாசகர்களே ஒருவாறு உணரலாம்.

அன்றியும், ஐக்கிய மாகாணத்தில் மொத்தம் 228 ஸ்தானத்துக்கு மேல் குறிப்பிட்டபடி, காங்கிரசு கட்சி நிறுத்தியதே 120 ஸ்தானம் என்று “இந்து” முதல் எல்லாப் பத்திரிகைகளும் 26.1.1937ஆம் தேதியில் புள்ளிவிபரங்கள் காட்டியிருக்க, இன்று அதற்கு மாறாக 131 ஸ்தானம் - அதாவது காங்கிரசால் நிறுத்தப்பட்ட 120 ஆள்களுக்குமேல் 11 ஸ்தானங்கள் எப்படிக் கிடைத்தன என்று யோசித்தால், மந்திரி வேலை ஒப்புக் கொள்ளப் போவதாகவும் வேறு கட்சியின் பேரால் நின்றவர்களுக்கும் மந்திரி வேலை கொடுக்கப் போவ தாகவும், அதுவும் காங்கிரசுக்கு எதிரிகளாய் நின்ற முஸ்லீம்களுக்கு 2 மந்திரி ஸ்தானம் கொடுப்பதாகவும், அப்படிப்பட்ட மந்திரிகளைத் தாங்கள் ஆதரித்துக் கடைசி வரை காப்பாற்றிக் கொடுத்து வருவதாகவும் பேரம் பேசிச் சேர்த்துக் கொண்டிருக்கிறது என்பதல் லாமல், வேறு என்ன காரணம் இருக்க முடியும் என்று கேட்கின்றோம்.

நாளைக்குத் தோழர் இராஜகோபாலாச்சாரியார் என்கின்ற அய்யங்கார் பார்ப்பனரும் காங்கிரசு எண் ணிக்கை மெஜாரிட்டியாய் இல்லாமல் தோற்கடிக்கப் பட்டுப் போனால், மத்திய மாகாண வீரர் தோழர் ஜவஹர்லால் என்ற பார்ப்பனரைப் போலவே மற்ற கட்சியாரை - அதாவது காங்கிரசை எதிர்த்து நின்ற கட்சியாரைக் கெஞ்சிக் கூத்தாடி, அவர்களுக்கும் மந்திரி வேலை கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்து ஆள் சேர்த்து “காங்கிரசுக்கு ஜெயம்” என்று கணக்குக்காட்ட முயற்சிக்கலாம்.

ஆனால், சென்னை கவர்னர் பிரபு அவ்வளவு சுலபத்தில் ஏமாறக்கூடிய பேர்வழியல்ல.

காங்கிரசுக்காரர் அடியோடு நிபந்தனை இல்லாத அடிமைமுறிச் சீட்டு - அதாவது காந்தியார், இர்வின் பிரபுவுக்கு, “இனிமேல் சட்டம் மீறுவதில்லை; சத்தியாக் கிரகம் செய்வதில்லை; சர்க்கார் உத்தரவுகளை மீறு வதில்லை; மறியல் செய்வதில்லை; வட்டமேசை மகா நாட்டுக்கு மரியாதையாய்ப் போய் வருகிறேன்” என்று சரணாகதி (காந்தி-இர்வின் ஒப்பந்த)ப் பத்திரம் எழுதிக் கொடுத்ததுபோல், தோழர் இராஜாகோபாலாச்சாரி யாரும் தன் கைப்பட எழுதிக்கொடுத்துத் தலைவணங்கிக் கெஞ்சி, பிரிட்டிஷ் அரசருக்கும், அவர் சந்ததிக்கும் அடிபணிந்து பக்தி விசுவாசம் செலுத்தி அவரது சட்டத் துக்கும் கட்டுப்பட்டு அடிமையாய் இருந்து, “பிரிட்டிஷ் அரசாங்கத்தை, சீர்திருத்தச் சட்டத்துக்கு அடக்கி நடத்திக் கொடுக்கிறேன்” என்று பூணூலையும், கீதை உபநிடதத் தையும் தொட்டுச் சத்தியம் செய்து கொடுத்தாலொழிய, போர்ட் சென்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் விடப்படமாட்டார் என்பதை ஒவ்வொரு ஓட்டரும், சமதர்ம சூரர்களும், வயிற்றுப் பிழைப்பு வீரர்களும் உணர்ந்திருக்க வேண்டும் என்று நாம் இப்போதே முரசடிப்போம். கொள்கையும், நாணயமும், உண்மையும் இல்லாவிட்டாலும், காங்கிர சுக்குப் பிரச்சார பலமும், பார்ப்பனர்கள் ஒற்றுமை முயற்சியும் இருந்தால் காங்கிரசு எண்ணிக்கையில் வெற்றி பெற்றால் அதில் ஆச்சரியப்பட இடமில்லை.

ஜஸ்டிஸ் கட்சியோ சரியான பிரச்சாரமில்லாமல் - பத்திரிகை இல்லாமல்-தங்களில் ஒற்றுமை இல்லாமல் ஒருவரையொருவர் தாழ்த்தச் செய்துகொண்ட முயற்சி யால், அது எண்ணிக்கையில் தோல்வி அடைந்தால் அதிலும் ஆச்சரியப்பட இடமில்லை. எப்படியானாலும் சரி, ஒரு விதத்தில் “குந்தினாயே குரங்கே உன் கொட்டம் அடங்க” என்பதுபோல், காங்கிரசு காலித் தனமும் தொல்லையும் ஒழிய நல்ல வசதி ஏற்பட்டது என்பதோடு, நாம் மகிழ்ச்சி அடைய வேண்டிய நிலை சந்தேகமற ஏற்பட்டு இருக்கிறது.

நிற்க, இனி நம் காரியமென்ன என்பதை நாம் யோசிக்க வேண்டியதற்கு நாம் எதிர்பார்த்தபடியே தக்க தருணம் வந்துவிட்டது. இனி அரை விநாடியும் வீண் செலவழிப்பதற்கு இல்லாத அவ்வளவு சிக்கனத் தில் நேரத்தைக் கையாள வேண்டிய நிலைமையில் இருக்கிறோம்.

இனி, நாம் நமது சுயமரியாதைப் போர் முழக் கத்தை முன்னிலும் பன்மடங்கு அதிக வேகத்துடனும் ஊக்கத்துடனும் தொடங்க வேண்டியதுதான் நாம் இனிச் செய்ய வேண்டிய வேலையாகும்.

இனி, காங்கிரசுக்கு - பார்ப்பனருக்கு மேடையில் லாமல் எங்கும் சுயமரியாதைச்சுடர், எங்கும் மனித சமூக சமத்துவச் சுதந்தரம் என்கின்ற ஒளிகொண்டு, பட்டணம் தோறும், கிராமம்தோறும், தெருக்கள்தோறும் சுயமரியாதை மேடையையும் மண்டபத்தையும் ஏற் படுத்த வேண்டியதே முக்கியக் காரியமாகும். கூடிய சீக்கிரம் தமிழ்நாட்டில் சவுகரியமுள்ள இடத்தில் ஓர் ஆரம்ப முஸ்தீபுக் கூட்டமும், சமீப காலத்தில் ஒரு தமிழ், ஆந்திரா, மலையாளம் ஆகிய பிரதிநிதிகள் கொண்ட சென்னை மாகாண 4ஆவது சுயமரியாதை மகாநாடும் கூட்டப்பட்டு, இந்தியா முழுமைக்கும் நம் இயக்கம் பரவி ஸ்தாபனங்கள் ஏற்படும்படியான காரியங்களையும் செய்ய வேண்டியது கடமையாகும்.

தயாராகுங்கள் வாலிபர்களே! போருக்குத் தயாராகுங்கள்!!

(“குடிஅரசு” தலையங்கம், 21.2.1937)

Pin It