இந்தியா ஒரு நாடன்று. பல்வேறு தேசிய இனங் களையும் மொழிகளையும் பல்வேறு நம்பிக்கை களையும் மதங்களையும் வாழ்க்கை பண்பாட்டு முறைகளையும் கொண்ட ஒரு துணைக் கண்டம் ஆகும்.

இந்தியாவின் மீது படையெடுத்த பல்வேறு  இனங்கள் இந்தியத் துணைக்கண்டத்தின் முழுப் பகுதியையும் தங்களின் ஆட்சிகளுக்குக்கீழ் கொண்டு வர முடிய வில்லை. போர்ச்சுக்கீசிய பிரெஞ்சு டச்சு ஆங்கிலேய குழுமங்கள் இப்பகுதியை வணிக நோக்கத்திற்காகப்  பயன்படுத்திப் பின்பு பல பகுதிகளைத் தங்கள் ஆதிக்கத் திற்குள் கொண்டு வந்ததை வரலாறு தெளிவாகச் சுட்டு கிறது. இந்தக் குழுமங்களுக்குள் நடைபெற்ற சண்டைகள் ஐரோப்பிய நாடுகளுக்குள் ஏற்பட்ட சில அமைதி ஒப்பந் தங்கள்  காரணமாக இங்கிலாந்து தனது பேராதிக்கத்தை இந்தியத் துணைக்கண்ட பகுதிகளில் நிறுவியது.

சான்றாக 18ஆம் நூற்றாண்டில் ஆங்கிலோ-பிரெஞ்சு போர் நடைபெற்ற போது இங்கிலாந்து நாட்டினால் அமெரிக்க சுதந்திரப் போரைச் சந்திக்க முடியவில்லை. நான்காண்டுகளில் 40 போர்கள் நடத்திய இந்த இரு நாடுகள் ஓர்அமைதி ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் சூழல் உருவாகியது. அப்போது கடலூரும் பாண்டிச்சேரியும் பிரான்சின் கட்டுப்பாட்டில் இருந்தன. கடைசி வரை கடலூரை பிரெஞ்சுப் படையிடம் இருந்து ஆங்கிலப் படை கைப்பற்ற முடியவில்லை. பிரான்சு நாட்டின் இராணுவ உயரதிகாரியான அன்ட்ரிடு சப்ரின் என்பவர் தமிழ்நாட்டின் கடலோர எல்லைப் பகுதிகளைக் கைப் பற்றப் போரிட்டார். இந்த அமைதி ஒப்பந்தம் ஏற்பட வில்லை என்றால் இன்றைய தமிழ்நாட்டின் பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்திற்கு உட்பட்டுஇன்றைய தமிழ்நாடு நேரடியாக விடுதலை பெற்றிருக்கலாம். ஆங்கிலோ-பிரெஞ்சு ஒப்பந்தத்தின்படி கடலூர் இங்கிலாந்து நாட்டிற் கும் பாண்டிச்சேரி பிரான்சுக்கும் அளிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் கடலூர் துறைமுகத்தை பாதிக்கும் அளவிற்கு பாண்டிச்சேரியில் ஒரு துறைமுகம் அமைக்கக் கூடாது என்று ஒரு விதியும் இணைக்கப்பட்டது. இதன்காரண மாகத்தான் இன்று கூட பாண்டிச்சேரியில் ஒரு துறை முகம் ஏற்படவில்லை.

இவ்வாறு ஐரோப்பிய நாடுகள் காலனி ஆதிக்கத்திற்கு எதிராகப் போர் தொடுத்த போது, இன்றைய இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அசாம், நாகாலாந்து, மிசோரம், மணிப்பூர், திரிபுரா, மேகாலயா, சிக்கிம் ஆகியன 1947இல் இந்தியாவைவிட்டு வெள்ளையர் வெளியேறிய போது சுயாட்சிப் பகுதிகளாக விளங்கின. குறிப்பாக தனிநாடு கோரிக்கையை இறுதி வரை வலியுறுத்திய நாகாலாந்தின் பழங்குடி இனத்தைச்சார்ந்த இங்கிலாந்தில் கல்வி கற்ற அங்காமி சபு பிசோ இங்கிலாந்து இந்தியாவைவிட்டு வெளி யேறும் சூழல் ஏற்பட்டவுடன் மேற்கூறிய இன்றைய மாநி லங்களில் உள்ள பல மலைவாழ் இனக்குழுக்களுடன் பேசி ஓர் ஒப்பந்தத்தின் வழியாகத் தனித்தனி நாடுகளாக இயங்கலாம் என்ற கோரிக்கையை முன்வைத்தார். இந்தக்கோரிக்கை வெற்றி பெறாமல் போகவேதான் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முதல் நாள் ஆகஸ்ட் 14 1947இல் நாகாலாந்தைத் தனிநாடாக அறிவித்தார்.

1951-52 ஆண்டுகளில் நேருவைச் சந்தித்து தனது தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தினார். இந்த நடவடிக்கைகள் தோல்வியுற்ற பிறகு இங்கிலாந்து நாட்டில் அடைக்கலம் புகுந்த பிசோ தனது 86ஆம் வயதில் 1990 இல் மறைந்தார். இறுதிவரை நாகாலாந்து தனிநாடு என்ற கோரிக்கையை அவர் கைவிடவே இல்லை. இதன் தொடர்ச்சியாகத்தான் இன்றைக்கு நாகலிம் (NSCN- The National Socialist Council of Nagaland)  கோரிக்கையைத் தொடர்ந்து ( Isak Chishi Swu and Thuingaleng Muivah) இணைந்து தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தினர். இன்றைக்கு நாகாலாந்து இனக்குழுக்களில் பலர் படித்துப் பெரும் பொறுப்புகளில் இந்திய அளவில் உள்ளனர். இருப்பினும் இவர்கள் தங்க ளுடைய தனித்த அடையாளத்தை உறுதி செய்வதற்கு தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். மக்கள் தலைவர் என்று போற்றப்பட்ட மாபெரும் விடுதலைப் போராட்ட வீரர் ஜெயப்பிரகாஷ் நாரயண் ஒருவர்தான் நாகாலாந்து பகுதிகளுக்கு முழு அளவில் பயணம் செய்து நாகாலாந் தில் சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சிகள்  என்ற நூலை எழுதினார். அந்நூலில் நம் நாட்டிற்கு  இந்தியா என்று பெயர் வருவதற்கு முன்பிருந்தே நாட்டின் கிழக்குப் பகுதியில் இந்தப் பழங்குடிகள் வசித்து வருகின்றனர் என்று குறித்துள்ளார். ஷில்லாங் நாளேட்டின் ஆசிரிய ரான பேட்ரீசியா முகிம் எழுதிய கட்டுரையை இந்து ஆங்கில நாளிதழ் மே 9 2018 அன்று வெளியிட்டுள்ளது. இக்கட்டு ரையில்தான் ஜெயப்பிரகாஷ் நாரயண் கருத்தும் இடம் பெற்றுள்ளது.

இக்கட்டுரையில் எல்லாப் பிரச்சினைகளையும் இந்திய அரசியல் சட்டப்படித்தான் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று முரட்டுப் பிடிவாதம் பிடிக்காமல் சாத்திய மான வழிகளைக் கையாளுங்கள் என்று தில்லியில் உள்ள எஜமானர்களை கேட்டுக்கொள்ள நாகர் மக்கள் குழுத் தலைவர்களும் அரசியல் தலைவர்களும் அடிக்கடி வந்து செல்கின்றனர் என்றும் இக்கட்டுரையாசிரியர் குறித்துள்ளார். மேலும் தங்களுடைய நாட்டை இந்தியா வுடன் இணைக்கும் ஒப்பந்தத்தில் நாங்கள் எப்போதும் கையெழுத்திட்டதில்லை என்பதை நாகர்கள் சுட்டிக்காட்டு கின்றனர். தங்களின் பங்களிப்பு இல்லாமலேயே உருவான அரசியல் சட்டத்திற்குத் தங்களால் கட்டுப்பட முடியாது என்றும் நாகர்கள் கூறுகின்றனர் என்று முகிம் குறிப்பிட்டுள்ளார்.

ஆங்கில இந்து நாளிதழில் (ஏப்ரல் 25 2018)விடாமல் தொடர்ந்த பத்திரிக்கையாளர்என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டது. 2016 ஜூலை 29 அன்று முய்வா தில்லி நாகாலாந்து இல்லத்தில் தங்கியிருந்தார். இவருடன்  கூட்டுத் தலைவராக இருந்த ஐசக் சி` சூ தில்லி மருத்துவமனையில் 86ஆம் வயதில் இறந்த போது அவருக்கு இறுதி மரியாதை செலுத்த தில்லிக்கு வந்திருந் தார். முன் அனுமதி இல்லாமல் முய்வாவிடம் பேட்டி எடுப்பது என்பது இயலாத காரியம். மேலும் காவல் துறை யின் பாதுகாப்புடனும் கடும் கட்டுப்பாட்டுடனும் உள்ள புதுதில்லி லோதி சாலையில் தங்கியிருந்தார். இதுவரை முய்வா இருமுறைதான் ஊடகங்களிடம் நாகாலாந்து மக்களின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசியுள்ளார்.

இந்தச் செய்தியாளர் அந்த இல்லத்தில் காத்திருந்தார். 84 வயது முய்வா காவல் துறையின் உதவியுடன்தான் மகிழுந்தை விட்டு இறங்க முடிந்தது. பிறகு அவர் ஒரு பெரும் வரவேற்பறையில் அமர்ந்தார். அமர்ந்த உடன்செல்பேசி யில் அவரது உரையாடலைப் பதிவு செய்தார் செய்தியாளர். உடனடியாக முய்வாநாகர்கள் எப்போதும் இந்திய அரசாட்சியின்கீழ் இயங்கியதில்லை. நாங்கள் தனியாகக் கொள்கை வைத்திருக்கிறோம். தனிநாட்டிற்கு உரிய உரிமையோடு கடவுச் சீட்டுகள் அளிக்கும் உரிமையை எங்களுக்குத் தரவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இந்த நேர்முக உரையாடல் சந்திப்பை ஏற்படுத்திய மூத்த அதிகாரி நீங்கள் ஒரு பத்திரிக்கையாளர் என்று கூற வேண்டாம் என்று குறிப்பிட்டார். இதற்கு காரணம் நாகாலாந்து சோசலிஸ்ட் கவுன்சில் அமைப்பிற்கும் ஒன்றிய அரசிற்கும் 2015இல்  ஓர் ஒப்பந்தம் ஏற்படுத் தப்பட்டது. இதுவரை அந்த ஒப்பந்தத்தின் முழு அறிக்கை  வெளியிடப்படவில்லை. ஆனால் சமூக வலைத்தளங் களிலும் சில ஏடுகளிலும் நாகாலிம் வைத்து ஒன்றிய அரசு ஏற்றுக்கொண்டு பின்வரும் கோரிக்கைகள் இடம் பெற்று வருகின்றன:

  1. பெரும் நாகாலாந்து மாநிலம் - Greater Nagaland அமைவதைத் தடுக்கும் செயலாக மணிப்புர் மாநில காங்கிரசு அரசு மணிப்பூர் மாநிலத்தில் 7 புதிய மாவட் டங்களை உருவாக்க நடவடிக்கைகளை மேற் கொண்டது. இது நாகா குழுவினரோடு ஒன்றிய அரசு செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கு எதிரானதாகும். இதைத் திரும்பப் பெற வேண்டும்.
  2. 4மாதங்களாக நடைபெற்ற முற்றுகைப் போராட் டத்தின் போது கைது செய்யப்பட்ட நாகா பழங்குடியினர் மாணவத் தலைவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற்று உடனடியாக அவர்களை விடுதலைச் செய்ய வேண்டும்.
  3. முத்தரப்புப் பேச்சினை ஒரு மாதத்தில் தொடங்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை இன்றைய பிரதமர் மோடி நடைமுறைப்படுத்த உறுதி அளித்து சில நடவடிக்கைகளையும் எடுத்துள்ளார்.

இருப்பினும் நாகாலாந்தின் 11 பகுதிகளில் நாகாலிம் அரசு இயங்கி வருகிறது. பாதுகாப்புத் துறை உள்துறை நிதித்துறை வெளிநாட்டுக் கொள்கையை வகுக்கும் துறை கல்வித்துறைகாடு வளர்ப்பு சுரங்கம் மதம் சட்டம் ஆகிய துறைகள் அடங்கிய ஓர் அரசு நடைபெற்று வருகிறது. இந்த 11 பகுதிகளிலும் நிர்வாகம் அதிகார பரவலாக்கம் செய்யப்பட்டுள்ளது. நாகாலிம் அரசு ஐக்கிய நாடுகளு டைய  மனித உரிமை ஆணையம் ஐக்கிய நாடுகளினு டைய பல அமைப்புகளுடனும் தொடர்பு வைத்துள்ளது. இவ்வாறாக இந்தியாவினுடைய எல்லையில் ஒரு தனித்து இயங்குகிற அரசிடம் மோடி அரசு ஒப்பந்தத்தை செய்துள்ளது. இந்தியா உண்மையான ஜனநாயக நாடாக இருந்தால் இந்த ஒப்பந்தத்தின் பிரிவு நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். பிரதமர்கள் நேரு மன்மோகன் சிங் மோடி ஆகியோர் எந்த  அடிப்படையில் நாகாலிம் குழுவிடம் பேசினார்கள் என்ற கருத்தையும் வெளியிட வேண்டும்.

நாடுகளின் ஏகாதிபத்தியப் பிடியில் இருந்து விடுதலை பெறும் உணர்வும்  தேசிய இனப் போராட்டத்திற்கான உணர்வும் ஒத்தத் தன்மை உடையன என்று அறிஞர் எமர்சன் குறிப்பிட்டுள்ளார். நாம் எல்லோரும் ஒரு நாட்டவர் என்று மக்கள் பெறும் உணர்வுதான் ஒரு நாடாகிறது என்று எளிமையாகக் குறிப்பிடலாம். தேசிய இனம் பற்றிய-நாடு பற்றிய எல்லாக் கருத்துக்களையும் தொகுத்து ஆய்வு செய்தால் மேற்கூறிய விளக்கம்தான்  சிறந்த இறுதியான முடிவு என்று கூறிவிடலாம் என்று கூட்டாட்சி இயல் அறிஞர் எரிக்சனிடம் அறிஞர் எமர்சன்  விளக்கம் அளித்ததாகத் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இனமும் மொழியும் சுயஉரிமைக்கான  அடையாளங் களாக ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒரு நாடு உறுதியாக அமைகிறது. எனவே இன மொழி அடையாளங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். ஒரு நாட்டின் ஒற்றுமை நீண்ட கால வரலாற்றுப் பின்னணியோடு இனத்தின் தனித்த சிறப்புகளையும் இதற்கான இலக்கிய ஆதாரங் களையும் மக்களின் தனித்த பன்முகத் தன்மைகளையும் இணைத்துச் செல்வதுதான் கூட்டாட்சி இயலைக் கடைப்பிடிக்கிற ஒரு நாட்டிற்கு அழகாகும் என்று பல கூட்டாட்சி இயல் அறிஞர்களும் வாதிட்டு வருகின்றனர். எனவே இந்தியாவில் எவ்வகை  கூட்டாட்சி  அமைய வேண்டும் என்பதை இறுதி முடிவெடுக்கும் காலம் விரைந்து கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. இத்தனை ஆண்டுகள் மாநில உரிமை பாதுகாக்கப்படா ததற்கு மாநிலக் கட்சிகளின் அரசியல் தலைமையே காரணம் என்று பல அரசியல் அறிஞர்கள் குறிப்பிடு கின்றனர். இதுவரை ஒன்றிய அரசின் பொறுப்பில் நீதிபதி சர்க்காரியா குழு (1983) அறிக்கையும் நீதிபதி புஞ்சி (2009) குழு அறிக்கையும் உறங்கிக் கொண்டிருக்கின்றன.

தமிழ்நாட்டில் 1969இல் நீதிபதி ராஜமன்னார் குழு அமைக்கப்பட்டு அதன் முழுப் பரிந்துரைகளையும் 1973ஆம் ஆண்டில் மாநில சுயாட்சி தீர்மானமாக நிறைவேற்றிய கலைஞர் அரசு, இந்திரா காந்தி அம்மையார் தலைமையில் இருந்த ஒன்றிய அரசிற்கு அனுப்பியது.

இச்சூழலில் 2014ஆம் ஆண்டிற்குப் பிறகு அமைந்த மோடி அரசின் இரட்டை வேடம் மக்களாட்சி முறையை அடியோடு சிதைத்து வருகிறது. உண்மைகளை  மறைப்பது பொய்களைப் பரப்புரை செய்வதே ஓர் ஒன்றிய அரசின்  அன்றாட செயலாக இருந்துவிட முடியாது. ஒரு பக்கம் நாகாலிம்முடன் ஒப்பந்தம் மறுபக்கம் தமிழ் நாட்டினுடைய உரிமைகளைச் சிதைக்கும் வகையில் ஒரு பொம்மை அரசை மாநிலத்தில் நிறுவி நீட் தேர்வு முதல் காவிரி பிரச்சினை வரை தமிழ்நாட்டிற்குத் தொடர்ந்து துரோகம் செய்வது எத்தனை நாட்களுக்குச் சாத்தியமாகும்? எத்தனை நாட்கள்தான் மக்கள் பொறுத்துக் கொள்வார்கள்?

ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சட்டம், ஒரே மதம் என்று  சர்வாதிகாரக் கூறுகளை அடக்கிய ஒரு கொள்கைத் திட்டத்தினை  சங்பரிவார அமைப்புகள் தொடர்ந்து வலி யுறுத்துகின்றன. சிறுபான்மை மக்களையும் தாழ்த்தப் பட்ட பழங்குடி மக்களையும் அடிப்பதை உதைப்பதை மக்கள் எத்தனை நாட்கள் பொறுத்துக் கொள்வார்கள்? வெளிப்படையாக இந்த சங்பரிவாரங் களின் கொட்டத்தை அடக்காமல் ஒன்றிய அரசே தூண்டிவிட்டு, கலவரங் களை வேடிக்கை பார்ப்பது இந்தியாவில் ஒற்றையாட்சி யின் கூறுகளை மீறிய சர்வாதிகார அடக்குமுறை ஆட்சிதான் நடைபெறுகிறது என்பதை இக்கூற்றுகள் உறுதி செய்கின்றன.

1990இல் சமூக நீதிக் காவலர் மறைந்த வி.பி.சிங் சென்னையில் ஒரு கூட்டத்தில் அருமையானக் கருத் தினைக் குறிப்பிட்டார். ஒரு நாயை  அன்புடன்  பல ஆண்டுகளாக வளர்த்ததாகவும் நான் வீட்டில் நுழையும் போது தெரு வரை வந்து வரவேற்கும் என்றும் குறிப் பிட்டார். தனது வீட்டிற்கும் சாலைக்கும் இடையே ஒரு மகிழுந்து நுழையும் அளவிற்கே நீண்ட சந்து இருந்தது என்றும் தனது காரோட்டி எப்போதும் சந்தின் இடது புறமாக மகிழுந்தை ஓட்டி வருவார் என்றும் சிறிய இடைவெளியில் வலதுபுறமாக  நாய் வரும் என்றும் ஒரு நாள் நாய் இடது பக்கமாக வந்துவிட்டது. காரோட்டி வழக்கம்போல் வந்தார். நாய் மகிழுந்தில் அடிபட்டு இறந்தது என்று கூறிய வி.பி.சிங் இது அரசியலுக்கு முழமையாகப் பொருந்தும் என்பதையும் நான் உணர்ந்து கொண்டேன். அரசியலில் பாதை மாறினால் இறுதி முடிவு இதுவாகத்தான் அமையும் என்பதை அழகாகக் குறிப்பிட்டார்.

ஆனால் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு இடது, வலது, வடக்கு, தெற்கு, மேற்கு, வடகிழக்கு எனப் பல வழிகளில் வலம் வருகிறது. பாஜக ஆட்சியின் இத்தனை பல முகங்களை மக்கள் உணர்ந்து விட்டனர். எல்லாப் பக்கங்களிலும் மக்களால் அடிவாங்கி இந்த ஒன்றிய ஆட்சி சிதையும் என்பதில் ஐயமில்லை.

எனவே ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு முகம் காட்டாமல் மக்களை ஏமாற்றாமல் இந்தியா ஒரு பெரும் கூட்டமைப்பாக மாறுவதற்கான முயற்சிகளை ஒன்றிய அரசு செய்யத் தவறினால் சோவியத் ஒன்றியம் உடைந்தது போல இந்தியா பல நாடுகளாக  உடைந்து விடும் என்பதுதான் நாகாலாந்து சுட்டும் உண்மைகள் நமக்கு உணர்த்துகின்றன.

Pin It