டி.வி.சாம்பசிவம் என்னும் பெயர் சித்த மருத்துவர்களிடையே நன்கு தெரிந்த அறிஞர் பெயர். இவர் மருத்துவம் பட்டம் பெறாதவர், மருத்துவப் பின்புலமும் அற்றவர். இருப்பினும் இவரது தன்நலம் கருதா உழைப்பினால் தமிழ் - ஆங்கில மருத்துவக் களஞ்சிய அகராதி வெளிவந்தது.

இந்தப் படைப்பில் சித்த மருத்துவத்தில் பன்படுத்தப்படும் தாவரம், உலோகம், அரிய உலோகம், விலங்கு ஆகியவைகளைப் பற்றிய ஆழமான குறிப்புகள் உள்ளன. சித்தர் இலக்கியத்தில் போகர் நிகண்டு, சட்டமுனி நிகண்டு, பிங்கல நிகண்டு போன்ற பல நிகண்டுகள் இருப்பினும் டி.வி.சாம்பசிவம் பிள்ளையின் தமிழ் ஆங்கில மருத்துவக் களஞ்சிய அகராதி சித்தமருத்துவத்தை ஆழமாக ஆய்வு செய்து வெளியிடப்பட்டுள்ளது.tv sambasivamஇந்த அகராதி 5 பாகங்களையும் 6537 பக்கங்களையும் 80,000 வார்த்தைகளையும் கொண்டுள்ளது. இவ்வகராதியில் தமிழ்ச் சொற்களுக்கு இணையாக ஆங்கில/லத்தீன் சொற்களும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் ஒரு சிறப்பு ஒவ்வொரு வார்த்தைக்கும் அதற்கு வேண்டிய விளக்கவுரை தேவையான இடங்களில் குறிப்புரையும் கொடுக்கப்பட்டுள்ளது.

பிறப்பு

டி.வி.சாம்பசிவம் பிள்ளை 1880ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி பெங்களூரில் வசதியற்ற குடும்பத்தில் பிறந்தார். இவருடைய பூர்விக ஊர் தஞ்சாவூருக்கு அருகிலுள்ள காமுகன் செந்தான்குடி என்றாலும் இங்கிருந்தே பிழைப்பிற்காக பெங்களூருவிற்கு இவருடைய பெற்றோர்கள் சென்றார்கள்.

குடும்ப வரலாறு

சாம்பசிவம் பிள்ளை குடும்பத்தில் தலைமகனாகப் பிறந்தார். இவருடைய தந்தை வில்லையா மன்னையார் தாயார் மனோன்மணி அம்மாள், இவருடைய பெயரில் முதலெழுத்து ‘T’ தஞ்சாவூரையும் ‘V’ அவருடைய தந்தை பெயரையும் குறிக்கிறது. பெங்களூரில் பிளேக் கொள்ளை நோயாகப் பரவியபோது இவருடைய குடும்பம் காமுகன் செந்தான்குடிக்குக் குடியேறினாலும், சாம்பசிவம் பிள்ளை கல்வியைத் தொடர பெங்களூருவிலேயே தங்கி விட்டார்.

பள்ளிப் படிப்பை பெங்களூரில் முடித்தவுடன் சென்னையில் காவல்துறை மாநகராட்சி ஆணையரிடம் எழுத்தராகப் பணியில் சேர்ந்தார். 1903இல் துரைக்கண்ணு அம்மாவை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகுப் பிறந்த 5 குழந்தைகளும் இறந்து விட்டன. இதைத் தொடர்ந்து இவரது மனைவியும் காலராவினால் பாதிக்கப்பட்டு 1914இல் இறந்து போனார். இவருடைய பெற்றோரின் வற்புறுத்தலால் அம்மணி அம்மாவை 1916இல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவருக்குக் குழந்தை பிறக்கும் போது இறந்து போனார். இவ்விதமாக சோகம் இவரைத் துரத்தித் துரத்தி துன்புறுத்தியதால் உளச் சோர்வுக்கு உள்ளானார். கவலையிலிருந்து விடுபட தன்னை முழுவதுமாக சித்த மருத்துவத்திற்காக அர்ப்பணித்தார். ஆங்கிலத்தில் சித்த மருத்துவத்தின் தட்டுப்பாட்டை உணர்ந்தவர், மருத்துவத்திற்கான தமிழ், ஆங்கில களஞ்சிய அகராதியை உருவாக்கினார். இது இன்றளவும் சித்த மருத்துவத்தின் இன்றியமையாத படைப்பாகத் திகழ்கிறது.

சாம்பசிவம் பிள்ளை 1916ஆம் ஆண்டிலிருந்து இரவு பகலாகப் படித்து, எழுதிய சேகரிப்புகளை எல்லாம் நூலகமாக்கினார். பின்பு தன்னுடைய பெரும்பகுதி ஊதியத்துடன் தன்னுடைய நிலபுலன்களையும் விற்பனை செய்து தான் சேகரித்து எழுதியவைகளில் இரண்டு பாகங்களை 1938ஆம் ஆண்டு வெளிவிட்டார். பிறகு ஒரு பகுதியை தானும் மீதியைத் தமிழ்நாடு அரசு உதவியுடனும் வெளியிட்டார்.

மூன்று பகுதி அகராதி மிகப்பெரிய அளவில் வெளிவந்தபிறகு மருத்துவ உலகமும், அரசும், இவருடைய தன்னிகரில்லாத உழைப்பைக் கண்டுணர்ந்து இதைத் தொடர்ந்து தன்னுடைய பணியைத் தொடர்ந்து ஐந்தாவது, ஆறாவது தொகுதியை உருவாக்க முனைந்தார். இவருடைய ஆழமான ஆய்வைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசு 1949ஆம் ஆண்டு ரூ.5000 நிதியுதவி வழங்கியதோடு சென்னை திருவல்லிக்கேணியில் வசிப்பதற்கும் வழி செய்தது. இது போலவே இவருடைய ஆய்வுப் பணியைப் பாராட்டும் விதத்தில் சென்னைப் பல்கலைக் கழகமும் மைசூர்ப் பல்கலைக் கழகமும் முறையே ரூ.5000 நிதி கொடுத்துதவின. இவர் 1953ஆம் ஆண்டு நவம்பர் 12இல் தனது 73ஆம் வயதில் இயற்கை எய்தினார். இவருடைய 6537 பக்கங்கள் கொண்ட அகராதியை தமிழ்நாடு அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை மறுபதிப்பு செய்து The Greatness of Siddha Medicine என்று பெயரிட்டு சென்னையில் நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டில் 1968ஆம் ஆண்டு வெயிட்டது.

சாம்பசிவம் பிள்ளை மறைவுக்குப் பிறகு தமிழ்நாடு அரசு அவருடைய அகராதி, தொகுப்புகளைத் தன்னிடம் வைத்துக் கொண்டு பதிப்பிக்காது வாளா இருந்தது. 1972இல் சித்தாந்த நூற்பதிப்புக் கழக நிறுவனர் வ.சுப்பையாபிள்ளை செந்தமிழ் செல்வி எனும் மாத இதழில் இவ்வகராதி குறித்து ஒரு கட்டுரை எழுதினார்.

சித்த மருத்துவம் குறித்த இந்த அரிய அகராதியை அறிந்த விஞ்ஞானி ஜி.டி.நாயுடு IV, V பாகங்கள் வெளியிட முன்வந்தார். ஆனால் இதற்கான ஆயத்த வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே மறைவுற்றார். இருப்பினும் அவருடைய மகன் ஜி.டி.என்.கோபால் 1977இல் IV பாகத்தையும் 1978இல் V பாகத்தையும் வெளிக்கொணர்ந்தார்.

நூலின் சிறப்பு

தமிழர்களின் சித்த மருத்துவத்தை உலகெங்கிலும் உள்ளவர்கள் சுருக்கமாக தெரிந்து கொள்ளவேண்டும். அம்மருத்துவ சொற்களுக்கான நவீன மருத்துவச் சொல்லின் ஒப்புமைகளும் சுருக்கமான விளக்கங்களுடன் இருக்க வேண்டும். என்ற நோக்கில் வெளிவந்ததே டி.வி.சாம்பசிவம் பிள்ளையின் இந்த மருத்துவ அகராதி. இது சித்த மருத்துவக் கலைகளஞ்சியமாகவும் உள்ளது. இந்த அகராதி தமிழ், ஆங்கிலம் சொற்களுக்கான விளக்கங்களை அளிக்கிறது. சித்த மருத்துவம் அனைத்தும் தமிழ்க் கவிதையில் உள்ளதாய், சரியான தகவலை அறிய பாடல் வரிகளைப் புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதனைக் களைந்து உலகளவில் சித்த மருத்துவ முறைகளை அறிவூட்டுவதற்கு வழிவகுக்கும், நவீன மருத்துவச் சொற்களுடன் உள்ள தொடர்புகள் சரியான அர்த்தங்களைப் புரிந்து கொள்வதற்கு இந்த அகராதிகள் ஆதாரப் பொருளாக விளங்குகிறது.

இத்தொகுப்பு உள்ளடக்கமும் செழுமையின் தரமும் மிகையாக இரண்டு பகுதிகளைக் கொண்டது. ஒன்று கலைச்சொல் பகுதி. மற்றொன்று விளக்கப் பகுதி. விளக்கப்பகுதி தமிழிலும் ஆங்கிலத்திலும் விளக்கப்பட்டுள்ளன.

தமிழில் சமஸ்கிருதம் வலிந்து திணிக்கப்பட்டு நன்கு கலந்து வேரூன்றியிருந்த காலத்தில் வெளிவந்த அகராதி. ஆகவே இந்நூலில் மிகப் பெருமளவு கலைச் சொற்களும் அவற்றுக்கான விளக்கத்திலும் சமஸ்கிருதச் சொற்கள் கையாளப்பட்டுள்ளன. எ.கா. முதல் தலைச் சொல்லுக்கான விளக்கத்திலேயே ‘சர்வாந்தர் யாமி’ , ‘பாஷை’, ‘சிருஷ்டி’, ‘ரூபம்’ ஜெபித்தல், விஷம், கிருகதோஷம் என்றெல்லாம் வருகின்றன. மேலும் எது தமிழ்ச் சொல் எது பிறமொழிச் சொல் என்று அறிஞர்களே அறிந்து கொள்ளமுடியாத நிலை இருந்தது. எ.கா. இந்நூலில் ஆநாகரோகம் என்கிற பிறமொழிச் சொல்லுக்கு தமிழில் ‘உஷ்ணவாடி’ என்று பெயர் என்பதாக நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். உஷ்ணம், வாயு இரண்டுமே தமிழ் இல்லை, இருப்பினும் இதன் மூலம் அக்கால கட்டத்தில் தமிழ்நாட்டில் வழக்கிலிருந்த சொற்களை அறிய உதவுகிறது எனலாம்.

பாராட்டு

“சித்த மருத்துவம் படிப்பவர்கள் யாராக இருந்தாலும் இவரது அகராதியை படிக்காமல் இருக்கமாட்டார்கள். அந்த அளவுக்கு சித்த மருத்துவத்திற்கு பெரும் பங்களிப்பு ஆற்றியுள்ளார். டி.வி.சாம்பசிவம் பிள்ளை” என்று மைய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் க.கனகவல்லி தெரிவிக்கிறார்.

தேவநேயப் பாவாணர் 1985இல் வெளியிட்ட தன் செந்தமிழ் சொற்ப்பிறப்பியல் முதல் பாகத்தில் உள்ள 6500 சொற்களில் ஏறத்தாழ 1250 சொற்கள் டி.வி.சாம்பசிவம் பிள்ளை அகராதியிலிருந்து பெறப்பட்டது என்று கூறுவதோடு தன்னுடைய மற்றைய அகராதி தொகுப்புகளிலும் சாம்பசிவம் பிள்ளையின் பல கருத்துகளை எடுத்தாண்டுள்ளதாகவும் தெரிவிக்கிறார்.

இந்திய ஒன்றிய அரசு பாராட்டு

இந்திய அரசு இவரைப் பாராட்டும் வகையில் பன்னிரண்டு இந்திய மருத்துவ மேதைகளின் வரிசையில் இவருக்கும் 5 ரூபாய் மதிப்பு அஞ்சல் தலையை 2019 ஆகஸ்டு 30ஆம் தேதி வெளியிட்டது. இதற்கு முன்னதாக இந்த 12 மருத்துவர்களைப் பாராட்டும் விதமாக ஆயுஷ் காலண்டர் வெளியிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராயம் சாம்பசிவம் பிள்ளையின் அகராதிகளை வெளியிட திட்டமிட்டு இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைத்து முதல் தொகுதியை 2014இல் வெளியிட்டுள்ளது. மற்றைய தொகுதிகளையும் வெளியிட்டால் தமிழுக்கு செய்யும் பெருந்தொண்டாக அமையும்.

- டாக்டர் சு.நரேந்திரன், சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக சிறப்புநிலைப் பேராசிரியர்