anro 451

ஆவணப்பட இயக்குநர் ஆன்றோவை ஒரு சில மாற்றுத்திரை திரையிடல் நிகழ்ச்சிகளில் சந்தித்திருக்கிறேன். கலை இலக்கியப்பெருமன்றம், கீற்று வெளியீட்டகம் நடத்திய திரைவிழாக்கள் அவை. தமிழகத்தின் ஆவணப்பட வரலாற்றில் துரும்பர்கள் எனப்படும் புதிரை வண்ணார்கள், நீலகிரிவாழ் ஆதிப்பழங்குடிகள் என அடித்தளமக்கள் சார்ந்த உலகத்தையும் வாழ்வியல் துயரங்களையும் ஆன்றோவின் ஆவணப்படங்கள் நம்மிடையே காட்சிப்படுத்தி உள்ளன. புனைவுகளின்றி உள்ளதை உள்ளபடியே காட்சிப்படுத்தும் ஒரு படைப் பாக்க முறையைக்கொண்டதுதான் டாக்குமென்டரி ரியலிசம் - ஆவணப்பட யதார்த்தம் என்னும் வகைமை.

தனது தும்பல் என்னும் கிராமத்து மண்ணிலிருந்து பயணத்தைத் துவங்கிய ஆன்றோவின் தும்பலில் இன்று குடியரசு தினம் எளிய மக்களின் நிறைவேற்றப்படாத கனவுகளையும் தேவைகளையும், ஆளும் அரசுகளின் போலிமையான கொண்டாட்டங்களையும், ஏமாற்றுகளையும் ஒரு சேரக் காட்சிகளின் வழியாக விவரணையாக்கம் செய்திருந்தது.

நவம்பர் 2005களில் வெளிவந்த கனவுப்பாலம் - டிரீம் பிர்ட்ஜ் பெரும் வெள்ளம் பாய்ந்தோடும் ஆற்றைக் கடக்க ஒரு கரையிலிருந்து மறுகரைக்கு தலையில் பெரும் சுமட்டோடு இடுப்பளவு நீரில் நடந்து செல்லும் வயதான பெண்ணின் அவலம், இன்னும் நம் நதியோரக் கிராமங்களுக்கு கனவாகவே போய்விட்ட நடை பாலங்களைக் குறித்துப் பேசுகிறது.

ஆன்றோவின் பிளஸ் 2 வேதியியல் பாடம், உலக பாரம்பரிய 39 நினைவுச்சின்னங்கள் (வேர்ல்ட் ஹெரிட்டேஜ் 39 சைட்ஸ்) போன்ற ஆவணப்படங்கள் கல்விசார்ந்தும், வரலாற்றியல் அறிவுசார்ந்தும் இன்னொரு படைப்பாக்க முறையியலை நமக்கு அறிமுகம் செய்கின்றன.

பொதுப்பரப்பின் சாதாரண விழிப்புணர்ச்சி சார்ந்த ஹெச்.ஐ.வி.எய்ட்ஸ், உள்ளுர் நிதி திரட்டல் (லோக்கல் பண்ட் ரைஸிங்) போன்ற அரசு நிறுவனமே பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் ஆவணப்படுத்தல்களையும் ஆன்றோ செய்துள்ளார் என்றாலும் அவரது தனித்துவமானப் போக்கையும் இங்குக் குறிப்பிட வேண்டும். ஆன்றோவின் ஆவணப்படத்தின் ஒரு முக்கிய தரப்பாக வெறுமனே பொத்தாம் பொதுவாக ஆவணப்படுத்தும் திரைக்காட்சிகளிலிருந்து மற்றுமொரு நீட்சியாக இது விரிவடைந்தது. அவரது பிற்கால ஆவணப்படம் என்பது வெளிச்சத்திற்கு வராத அடித்தள மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்யும் இனவரைவியல் படம் (எத்தினோகிராபிக் பிலிம்) என்கிற நிலையில் மாறுபாட்டைத் தந்தது. துரும்பர்கள் எனப்படும் ஒடுக்குதலுக்கும், தீண்டாமைக் கொடுமைக்கும் ஆளான புரத வண்ணார்கள் குறித்த எச்ச மிச்சம்; ஆவணப்படம் இதை சாத்தியப்படுத்தியது. இது 2015 ஏப்ரலில் திரையிடப்பட்டது. இவ்வாறாக ஆன்றோ தனது படைப்புத் திறனை நீட்சி செய்து பார்த்தவர்.

இதுபோன்றதொரு முக்கிய ஆவணப்படம் புலியாருக்கு. இப்படம் முதுமலை புலிகள் சரணாலயம் அமைக்கும் திட்டம் எவ்வாறு நீலகிரி ஆதிவாசி தோடர் பழங்குடிமக்களின் வாழும் உரிமைகளைப் பறிக்கும் அபாயங்களைப் பேசுகிறது. இதனை சேகர் தத்தாத்ரியின் புலிகள் பற்றிய உண்மைகள் எனும் ஆவணப்படத்தோடு இணைத்து ஒப்பு நோக்கு உரையாடல்களும் நிகழ்ந்தது.

மிகச்சிறந்த புகைப்படக் கலைஞராகவும் இருந்த ஆன்றோவின் படைப்பு வரிசையில் நீரும் வாழ்வும் (வாட்டர் அன்ட் லைப்) என்பதான ஆவணப்படமும் உண்டு. என்றாலும் ஆவணப்படம் என்ற ஒற்றை மாதிரியில் பன்மை வடிவங்களை, எதிர் அழகியலை காட்சிமொழியாகப் படைத்த ஆன்றோவின் பயணம் நிறைவுறாத பயணமாகவே ஆகிவிட்டது. தனது அடுத்த படைப்பு தொடர்பாக ஆங்கிலத்தில் ஒரு குறிப்பை 18 ஏப்ரல் 2016 இல் ஆன்றோ என்னும் ஆன்டெனி மைக்கேல் எழுதுகிறார்.

சேலம் மாநகராட்சியின் தண்ணீர் வழங்கும் வடிகாலில் ஜவுளி ஆலை சாயப்பட்டறைகளின் கழிவுநீர் கலக்கும் ஆபத்தை தனது அடுத்த படம் ‘வாட்டர்’ வெளிப்படுத்த இருப்பதாக அதில் சொல்லியிருந்தார். 51 தினங்களுக்குள் ஆன்றோவின் மறைவு நிகழ்ந்திருக்கிறது... ஒரு படைப்பாளியின் பிரதி சார்ந்த மரணமாக இல்லாமல் உண்மையான மரணமாக இது நிகழ்ந்திருப்பது நம் மனதுக்கு மிகவும் வருத்தத்தைத் தருகிறது.

Pin It