மனித வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவைகளாக இருப்பவை உணவு, உடை, உறைவிடம். இவைகளின் பின்னணியில் மனித உழைப்பு தவிர்க்க முடியாதபடி இருக்கிறது. அதுதான் சமுதாயம் என்ற ஓர் அமைப்பின் அடிப்படையாக அமைந்துள்ளது. உழைப்பு சக்தியின் தோற்றத்தையும் மாற்றத்தையும் வளர்ச்சியையும் ஒருங்கிணைந்து வரலாற்றை மனிதர்கள் வடிவமைக்கிறார்கள். அந்த வரலாற்றின் உள்ளீடாக அமைந்துள்ள நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வாழ்க்கையில் வளர்ச்சியைப் புரிந்து கொண்டு அதை மதிப்பீடு செய்கிறோம்.

இந்த வகையான ஒரு புரிதலையும் அறிதலையும் உணவுபூர்வமாக உள்வாங்கிக்கொண்டு இந்த நாவலில் கொங்கு பகுதியை முன் நிறுத்தி சுப்ரபாதி மணியன் வடிவமைத்திருக்கிறார். அதை வாசிப்பின் வாயிலாக உணர்ந்து கொள்ள முடியும்.

subrabhrathimaniyan novel siluvaiநீர் வளமும் நிலவளமும் மனித வளமும் மிகுந்த இந்தியா அதன் இயல்பிலேயே பன்முகத் தன்மை உடைய ஒன்றாக நின்று நிலவி வந்தது கடந்த 300 வருட உலகின் வளர்ச்சிப் போக்கில் நீண்ட மாற்றங்களின் தாக்கங்கள் இந்தியாவையும் மாற்றி அமைத்தன. கடந்த 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் தனித் தன்மைகள் தொடர்ந்து புதிய தாக்கங்களை உள்வாங்கிக் கொண்டு வேகமாக வளரத் தொடங்கின. அந்த வரலாற்று மாற்றங்களை கணக்கில் எடுத்துக் கொண்டு இந்தியாவின் வளர்ச்சியை இவர் மதிப்பீடு செய்கிறார், நாவல் அனுபவம் மூலம்.

ஐரோப்பியரின் வருகை தொடர்ந்து கிறிஸ்தவமும் முகமதிய மதமும் இந்திய மக்களிடையே படிப்படியாக பரவி வாழ்க்கையை மாற்றி அமைத்தன. குறிப்பாக அரேபியர், ஆங்கிலேயர்கள், புரட்சிக்காரர்கள் போர்ச்சுக்கீசியர் சீனர் போன்ற பிற நாட்டினர் நாட்டையே கைப்பற்றி தொடர்ந்து செயல்பட்டு ஆதிக்கம் செலுத்த முனைந்தனர். காலம் காலமாக அறியாமையிலும் ஏழ்மையிலும் வறுமையிலும் வாழ்ந்து வந்த மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களைக் குறித்து கிறிஸ்துவ முகமதிய மதங்களின் பரவர்களின் விளைவாகப் புதிய வாழ்க்கையை வடிவமைத்துக் கொள்ளும் மக்களின் மன மாற்றங்களையும் புதிய உறவு நிலைகளையும் தொடர்ந்து அடையாளப் படுத்துகிறார். வரலாற்றின் நீண்ட காலமாகப் பயன்படுத்தாமல் கிடந்த பல வகையான மரபுப் பழக்கங்களைப் பயன்படுத்தி ஒரு சில மனிதர்களின் வாயிலாக இனம் காட்டுகிறார் இந்த நாவலில் கொங்கு மனிதர்களின் அனுபவம் மூலம்.

தொழில் வளர்ச்சியின் காரணமாகப் புதிய தொழில்களையும் வேலை வாய்ப்புகளையும் தேடி விரிந்த நிலப்பரப்பின் பல பகுதிகளுக்குள்ளும் புலம்பெயரும் உழைக்கும் மக்களின் மனப்போக்குகளையும் வாழ்க்கை மாற்றங்களையும் அன்னிய மற்றும் இந்திய மதங்களின் தாக்கங்களையும் தொழிற்சங்க தோற்றங்களையும், வளர்ச்சியையும் தொடர்ந்து பதிவு செய்கிறார்.

 பல வகையான இந்திய மக்களின் வாழ்க்கை முறைகளுக்குள் ஊடுருவும் கிறிஸ்து மதத்தின் பின் தங்கிய வறுமை மிகுந்த ஏழை எளிய மக்களின் வாழ்க்கையில் வறுமையைப் போக்க முனைவதோடு கல்வி மருத்துவம் புதிய கலாச்சார வாழ்க்கை முறைகளிலும் விரிவான, பரவலான மாற்றங்களை ஏற்படுத்தி அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தில் அவர்கள் தங்களை உயர்த்திக்கொள்ள வாய்ப்பளித்திருக்கிறார்கள்.

கொங்கு மக்களின் 300 ஆண்டுகளின் வாழ்க்கை மாற்றங்களின் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளைத் தனிப்பட்ட அளவிலும் விரிவான அளவிலும் தகுந்த யதார்த்தமான இயல்பு வாழ்க்கை நிகழ்வுகளை முன்வைத்தும் மனதை நெகிழச் செய்யும் விதத்தில் இந்த நாவலை வடிவமைத்து இருக்கிறார்... கிறிஸ்தவக் குடும்பம் ஒன்றின் பல்வேறு தலைமுறை வாழ்க்கையை நெசவாளர் பின்னணியில் ஆரம்பித்து பின்னலாடை தொட்டு வெவ்வேறு வேலை முறை வாழ்க்கையில் மாறுபடுவதை இந்த நாவல் காட்டுகிறது.

நாவலை மூன்று பாகங்களாக பிரித்து தொழிலிலும் அதன் உற்பத்தி உறவுகளிலும் நிகழ்ந்த மாற்றங்களையும் வழக்கு போக்குகளையும் தகுந்த தகவல்களையும் அடிப்படை ஆதாரங்களையும் முன்வைத்து எதிரும் புதிரமான மனப்போக்குகள் தெளிவாகத் தெரிந்துகொள்ளும் வகையில் புலப்படுத்துகிறார்.

கதை சொல்லும் மரபிலிருந்து மாறுபடும் கற்பனையான களங்களைத் தவிர்த்து, வரலாற்று நிகழ்ச்சிகளின் பின்னணியில் மாறிக்கொண்டிருக்கும் மக்களின் வாழ்க்கையை நம்பகத் தன்மையுடன் விளக்குகிறார். இதற்கு ஆரம்பத்தில் கிறிஸ்துவ வாழ்வின் ஆதாரங்கள் உதவுகின்றன.

வளர்ச்சி குறைந்த ஒரு காலகட்டத்தில் கைத்தொழில் அளவில் கைத்தறி நெசவு போன்றவை வளர்ந்ததைத் துல்லியமாகச் சித்திரிக்கிறார்.

அறிவியல் பொருளாதார வளர்ச்சியின் விளைவாக கைத்தொழிலைக் குறைத்து இயந்திரங்களின் உதவியால் உற்பத்தியில் அளவு மாற்றங்களையும் இரண்டாவது பாகத்தில் சித்திரிக்கிறார். மின்சக்தியையும் தொழில்நுட்ப வளர்ச்சியையும் அடிப்படையாகக் கொண்டு நெசவுத் தொழிலை பெருமளவுக்கு நவீனப்படுத்திய செயல்முறைகளையும் மூன்றாம் பாகத்தில் அடையாளப்படுத்துகிறார்.

இதற்காக கோவை மாவட்டத்தின் சோமனூர், செகனந்தாளி கிராமம், திருப்பூர் மற்றும் வேலூர், திருப்பத்தூர் ஆகிய ஊர்களைக் களனாகக் கொள்கிறார்.

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நெசவுத் தொழிலாளர்கள், மில் தொழிலாளர்கள் போதிய அளவுக்கு வாழ்க்கைத் தேவைகளை நிறைவுசெய்ய நிகழ்த்திய வரலாற்று சிறப்பு மிகுந்த போராட்டங்களின் வாயிலாக உரிமைகளைப் பெற முயன்ற நிகழ்வுகளையும் இவர் ஆவணப்படுத்தி இருக்கிறார். இதில் கதாபாத்திரங்களின் உரையாடல்களின் வாயிலாக விவரிப்புகளையும் குறைத்து எளிய உரைநடையின் வாயிலாக கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்திக்கொள்ளும் புதிய உத்தியைக் கையாண்டு உள்ளார்.

மதக் கருத்துக்களைக் கூட தர்க்கரீதியாகவும் உரையாடலின் வாயிலாகவும் பரிமாறிக் கொள்ளும் முறையில் மாறுபட்ட ஒரு முறையைக் கையாண்டு உள்ளார்.

வெவ்வேறு காலக் கட்டத்தில் மொழியின் மாறுபாடும் காட்டப்படுகிறது என்பதும் முக்கியமானது.

கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த அரசியல் தலைவர்களையும் அவர்களின் தொழிற்சங்கப் போராட்டங்களையும் அதன் விளைவுகளையும் ஒளிவு மறைவு இல்லாமல் நேரடியாகவும் வெளிப்படையாகவும் சித்திரித்துக் காட்டுகிறார்.அதில் நெசவு, பஞ்சாலை தொழில்கள் முதன்மை பெறுகின்றன. அங்கங்கே மாறுபட்ட மனிதர்களின் சித்திரிப்பு வாயிலாக கதைத் தன்மையைக் கையாண்டாலும் வரலாற்றுத் தன்மையையும் எதார்த்தத்தையும் தவிர்க்கவில்லை.

300 ஆண்டுக் கால மனித வாழ்க்கையை நிகழ்ச்சிகளின் சித்திரிப்பு வாயிலாக் காட்டி மாறுபட்ட ஒரு வாழ்க்கை வரலாற்றைப் புதிய முறையில் அறிவுப்படுத்தும் வகையில் இந்த நாவல் வடிவமைக்கப் பட்டிருக்கிறது.

 மாறுபட்ட பல்வேறு கதைகளின் தொகுப்பாகவும் அசலான நமது காலத்து வரலாறாகவும் அமைந்துள்ள “சிலுவை” நாவல் ஏராளமான வரலாற்று நிகழ்வுகளை அரசியல் சமூகம் ஆன்மீகம் தொழில்நுட்பம் கொண்டதான வாழ்க்கை நிகழ்ச்சிகள் கலாச்சார பண்பாட்டு தன்மைகளைக் கடந்த 300 ஆண்டுகளின் காலகட்டத்தில் உள்ளடக்கிய மாறுபட்ட ஒரு புதிய கண்ணோட்டத்தில் சிலுவை நாவலைப் படைத்திருக்கிறார் சுப்ரபாரதிமணியன். கடந்த நூற்றாண்டுகளைக் கொங்கு பகுதி சார்ந்த மக்களின் வாழ்க்கை வரலாறாகச் சிலுவை நாவல் விளங்குகிறது.

(சிலுவை, சுப்ரபாரதிமணியன், விலை: ரூ.1200

வெளியீடு: நியூ செஞ்சுரி புத்தக நிலையம், சென்னை)

- சி.ஆர்.ரவீந்திரன்

Pin It