கல்விக் கூடங்களில் நடைபெறும் ‘ராக்கிங்’ என்பதும் வன்முறையின் வேறு ஒரு வடிவம்தான்.

பெற்றோர் தங்கள் பிள்ளைகளைப் படிக்கக் கல்விக் கூடங்களுக்கு அனுப்புவது அறிவை வளர்க்கவும், ஒழுக்கத்தைக் கற்றுக் கொள்ளவும் என்பது முதன்மையானது. ரவுடியத்தைக் கற்றுக் கொள்ள அல்ல.

அண்மையில் கோவை பி.எஸ்.ஜி. தொழில் நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற ராக்கிங் கொடுமை அருவருக்கத் தக்கதாகும்.

அக்கல்லூரி மாணவர் விடுதியில் 225 ஆம் எண் அறையில் நுழைந்த சீனியர் மாணவர்கள், அறையில் இருந்த ஜூனியர் மாணவரிடம் ‘மது’ அருந்தப் பணம் கேட்டுள்ளனர்.

இல்லை என்று சொன்ன ஜூனியர் மாணவரை மாடியில் இருக்கும் 401 ஆம் எண் அறைக்கு இழுத்துச் சென்று ஐ.டி.கயிறாலும், பெல்ட்டாலும் இரவு முழுவதும் அடித்துத் துன்புறுத்தி இருக்கின்றனர் அந்த சீனியர்கள்.

கல்வியில், ஒழுக்கத்தில் சீனியர்களாக வர வேண்டியவர்கள் ரவுடியத்தில் சீனியராகியிருப்பது வேதனைக்கு உரியது.

இப்பொழுது கொடுமைப் படுத்திய அந்த ஏழு மாணவர்களும் காவலர்களால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

அவர்கள் மாணவர்கள் என்ற தகுதியை இழந்து விட்டார்கள்.

உண்மையாகச் சொன்னால் அந்த “இழப்பு” மாணவர்களின் பெற்றோர்களுக்கும் போய்ச் சேர்கிறது.

அதே சமயம் கல்வி நிறுவனங்களும் இதுபோன்ற ராக்கிங் நடைபெறுவதைத் தடுக்க அல்லது நடைபெறாவண்ணம் இருக்க உரிய நடவடிக்கைகளைச் செய்திருக்க வேண்டும்.

மாணவர்கள் நாட்டின் எதிர்காலத் தூண்கள் என்பதை அவர்களும் உணர வேண்டும்.

ராக்கிங் என்பது யாருக்கும் மகிழ்ச்சி தரும் நிகழ்வல்ல. பாதிக்கப்படும் மாணவருக்கு அதுவே துன்பத்தைத் தருகிறது.

உணர்ச்சி வசப்பட்டு எதிர்காலத்தை இழப்பதைவிட, உணர்வுப்பூர்வமாக ராக்கிங்கைத் தவிர்ப்பதே நல்லது.

- கருஞ்சட்டைத் தமிழர்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.