தமிழ்நாட்டில் மிகச்சரியாக நடந்து கொண்டிருக்கும் திமுக ஆட்சியைக் குறை சொல்கிறார் பிரதமர் மோடி. திமுக வை அழித்து விடுவேன் என்று பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். ஒரு கட்சியின் மூன்றாம்தர, நான்காம்தரப் பேச்சாளரைப் போல ஒரு நாட்டின் பிரதமர் பேச முன் வந்திருக்கிறார். அதுவே வரவிருக்கும் தேர்தல் குறித்து அவர்களுக்குள் இருந்து வெளிப்படும் தோல்வி பயத்தை வெளிப்படுத்துகிறது.

ஆனால் ரங்கசாமி என்னும் ஒரு பொம்மையை முதல்வராக உட்கார வைத்து விட்டு, பாஜக நடத்துகிற ஆட்சி புதுவையில் என்னவாக இருக்கிறது என்பது இப்போது வெளிப்பட்டுள்ளது.

tamizhisai soundarrajan 322கடந்த 2 ஆம் தேதி, புதுவை முத்தியால் பேட்டைப் பகுதியில், வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்பது வயதுச் சிறுமி ஆர்த்தியைக் காணவில்லை. பல நாள்கள் தேடிய பின்பு, அந்தச் சிறுமியின் பிணம் ஒரு மூட்டைக்குள் கட்டப்பட்டுச் சாக்கடையில் கிடந்ததைக் கண்டுபிடித்துள்ளனர். அதே பகுதியில் வாழும் விவேகானந்தன், கருணாஸ் ஆகிய இருவர், கஞ்சா அடித்து விட்டு போதையில் அந்தச் சிறு குழந்தையைப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கி, இறுதியில் கொலையும் செய்து, சாக்கடையில் வீசி எறிந்து இருக்கிறார்கள் என்பதை இப்போது கண்டுபிடித்து உள்ளதாய் காவல்துறை சொல்கிறது!

தமிழ்நாட்டைப் போலன்றி, புதுவை ஒரு சின்ன சிறிய யூனியன் பிரதேசம். அந்தச் சின்னப் பகுதியில் கூட ஆட்சி நடத்த துப்பில்லாதவர்கள், மற்ற மாநிலங்களை எல்லாம் பார்த்துக் குறை சொல்கிறார்கள்.

இப்போது புதுவையே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அரசியல்வாதிகள் என்றில்லை, பொதுமக்கள், இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் என்று அனைத்துத் தரப்பினரும் தெருவுக்கு வந்து போராடுகின்றனர். ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வண்டி ஓட்டுநரின் குழந்தைக்கு நேர்ந்திருக்கும் இந்த நிலை புதுவையில் வாழும் மக்கள் அனைவரையும் அச்சுறுத்தியுள்ளது.

கஞ்சா எப்படிக் கட்டுக்கடங்காமல் புதுவைக்குள் வந்தது என்பதைக் கண்டறியாமல், போராடும் மக்களைக் காவல்துறையை முடுக்கிவிட்டு ஒடுக்குகிறது, பின்புறம் இருந்து ஆட்சியை நடத்தும் பாஜக அரசு. போதாக்குறைக்கு மக்களை அடித்து நொறுக்க துணை ராணுவத்தை வேறு வரவழைத்திருக்கிறது.

தமிழ்நாட்டின் ஆளுநர், தேவையற்ற அனைத்தைப் பற்றியும் அன்றாடம் பேசுகின்றார். புதுவை ஆளுநர் தமிழிசையோ. இப்போது அங்கே வாய்மூடி நிற்கிறார்.

ஆர்த்தியின் சாவுக்குப் பொறுப்பேற்று, அரசு பதவி விலக வேண்டும் என்பது இப்போது அங்கே ஓங்கி ஒலிக்கும் குரலாக இருக்கிறது!

சுப.வீரபாண்டியன்

Pin It