15 ஆவது நிதிக்குழுவில் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு - குறிப்பாகத் தென் மாவட்டங்களுக்கு - நிதி ஒதுக்கீடு குறைய வாய்ப்புள்ளது என்று செய்திகள் கூறுகின்றன. அதனையொட்டித் தமிழகத்தின் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், நிதிக்குழுத் தலைவர் என்.கே. சிங் அவர்களைப் பார்த்தபோது, “கவலை வேண்டாம், பார்த்துக்கொள்ளலாம்“ என்று அவர் கூறியுள்ளார் என்றாலும், இறுதியில் உரிய நிதி நமக்கு வரப்போவதில்லை என்பதுதான் உண்மை.

என்ன காரணம்? முன்பு 1971ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கை அடிப்படையாகக் கொண்டிருந்ததாகவும், இப்போது 2001 ஆம் ஆண்டுக் கணக்கை அடிப்படையாகக் கொண்டிருப்பதாகவும் கூறுகின்றனர். 2001 ஆம் ஆண்டுக் கணக்கின்படி, தமிழகம் வளர்ந்த மாநிலமாக உள்ளது என்பதால் நிதி குறையும் என்கின்றனர்.

இங்கே நமக்கு ஓர் ஐயம் எழுகின்றது. தொட்டதற்கெல்லாம், கடந்த 50 ஆண்டு காலத் திராவிட ஆட்சியில் (திமுக, அ.தி.மு.க. இரண்டு கட்சிகளின் ஆட்சிகளை ஒரே கணக்கில் வைப்பது நமக்கு உடன்பாடில்லை என்பது ஒரு புறமிருக்கட்டும்) தமிழகம் பின் தங்கிவிட்டது என்று சொல்லிக்கொண்டே இருக்கின்றனர். இப்போது எப்படி வளர்ந்த மாநிலம் ஆகிவிட்டது? இது யாருடைய ஆட்சியில் நடந்துள்ளது?

தேர்தல் வந்தால், தமிழ்நாடு திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் பின்தங்கி விட்டது என்கின்றனர். நிதி கேட்டால், தமிழ்நாடு வளர்ந்த மாநிலம் என்கின்றனர். எது உண்மை?  

Pin It