உண்மை அறியும் குழு எழுப்பும் கேள்வி

சென்னை வேளச்சேரியில், கடந்த 23ஆம் தேதி அதிகாலை, என்கவுன்டர் என்னும் பெயரில் காவல்துறையினரால் ஐவர் சுட்டுக்கொல்லப் பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் வங்கிக்கொள்ளையர்கள் என அறிவிக்கப்பட்டது. எனினும் காவல்துறையின் கூற்றுகளில் முன்னுக்குப்பின் முரணாகப் பல செய்திகள் தென்பட்டன. அதனை ஒட்டி பேராசிரியர் அ.மார்க்ஸ் தலைமையில், பல்வேறு மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்த 10 பேரைக் கொண்ட ஒரு குழு, உண்மை அறியும் குழுவாக அமைக்கப்பட்டது. அக்குழுவின் இடைக்கால அறிக்கை அண்மையில் வெளியாகியுள்ளது. அதிலிருந்து சில பகுதிகள் கீழே தரப்படுகின்றன:

death_37023ஆம் தேதி அதிகாலையில் துப்பாக்கிச் சூடு நடை பெற்றதாகக் காவல்துறை கூறுகின்றது. ஆனால், 22ஆம் தேதி இரவு 10 மணி அளவிலேயே காவல் துறையினர் அங்கு வந்தனர் என்று அக்கம் பக்கத்து மக்கள் கூறுகின்ற னர். தொலைக்காட்சித் தொடர் பார்த்துக் கொண்டிருக்கும் போது, சத்தம் கேட்டு வெளியே வந்ததாகவும், காவல் துறை யினர் கதவுகளையும், சன்னல்களையும் மூடிவிட்டு, விளக்குகளையும் அணைத்து விடுமாறு எச்சரித்ததாக அவர்கள் கூறுகின்றனர்.

தங்கள் தற்காப்பிற்காக சன்னல் வழியே கொள்ளையர் களைச் சுட்டதாகக் காவல்துறை கூறுகின்றது. ஆனால் சன்னலிலோ, சன்னல் கம்பிகளிலோ குண்டு காயங்கள் எதுவும் கிடையாது. இரத்தக் கறைகூட தரையில் மட்டுமே இருந்தது. சத்தத்தைக் கேட்ட மக்களும், துப்பாக்கிச் சூடு ஒலி கேட்டதே தவிர, நீண்ட நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்த மாதிரியாகத் தெரியவில்லை என்று கூறுகின்றனர்.

முற்றுகையைச் சில நாள் நீடிப்பதன் மூலமோ, மயக்கப் புகையை உள்ளே அனுப்பிவிட்டு, கதவை உடைத்து உள்ளே செல்வதன் மூலமோ அவர்களை உயிரோடு பிடிப்பதற்குக் காவல்துறை ஏன் முயற்சி செய்யவில்லை என்பதும் விடை சொல்லப்படாத கேள்வியாகவே உள்ளது. அவர்களை உயிரோடு பிடித்திருந்தால், பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்திருக்க முடியும். அதனை ஏன் காவல்துறை செய்யவில்லை?

கொள்ளையர்கள் பொம்மைத் துப்பாக்கி வைத்துத்தான் வங்கிகளில் கொள்ளையடித்ததாக முதல்நாள் காவல்துறையின் மாநகர ஆணையர் கூறினார். ஆனால் இப்போது துப்பாக்கிச் சண்டை நடந்ததாகக் கூறுகிறார்கள். இப்போது காட்டப்படும் துப்பாக்கிகள் கூட வெறும் நாட்டுத் துப்பாக்கிகள்தான். இவற்றை வைத்துக் கொண்டு, நவீன ஆயுதங்களைப் பயன்படுத்தி உள்ள காவல் துறையுடன் நெடுநேரம் சண்டை யிட்டிருக்க முடியுமா?

கொள்ளைச் சம்பவங்கள் குறித்து எந்தத் தகவலையும் வெளியில் சொல்லக்கூடாது என்று வங்கி ஊழியர்கள் மிரட்டப்பட்டதாக ஒரு பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. பெருங்குடி பரோடா வங்கி அதிகாரி பாலாஜியை உண்மை அறியும் குழுவினர் சந்தித்தபோது அவர் எதுவும் பேச மறுத்துவிட்டார். பத்திரிகைச் செய்தி உண்மைதானோ என்னும் ஐயத்தை இந்நிகழ்வு ஏற்படுத்துகின்றது. தகவல்களை வெளியே வரவிடாமல் காவல்துறை ஏன் தடுக்கிறது என்பது தெரிய வில்லை.

இதுகுறித்து உயர்நீதி மன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் நீதி விசாரணை தேவை என்று கோருகிறது உண்மை அறியும் குழு.

- தேசிய மனித உரிமை ஆணைய நெறிமுறைகளின் படி, ஆணையர் திரிபாதி, இணை ஆணையர் சண்முகராஜேசுவரன், கூடுதல் ஆணையர் தாமரைக்கண்ணன், உதவி ஆணையர் சுதாகர் உள்ளிட்ட பதினான்கு பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதும் குழுவின் கோரிக்கை.

Pin It