எழுதப்பட்ட வரிகளுக்குள் குழந்தையன்றின் அழுகையைத் துடைக்கிற ஒற்றை எழுத்து இருக்குமாயின், அந்தக் குழந்தையின் நீள் பயணத்தை வழி நடத்திச் செல்லும் ஓர் இதயத்திற்கு பக்கத் துணையாக ஒரு வரி இருக்குமாயின் அது கவிதையை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று பொருள்.

உலகத்தை மாற்றுகிறதோ இல்லையோ அப்படி மாற்றுகிறதாக சொல்கிறவனின் கையில் ஓர் ஆயுதமாக வந்து கவிதை கம்பீரப்படுகிறது. மென்ரசனையும் வலு உணர்வும் கவிதையின் கைரேகைப் பதிவுகள்.

சிறகுகளைப் பறிகொடுத்து, பறக்கத் தவிக்கும் பறவை மனதுக்கு சிறகுகளை எங்கிருந்தோ எந்திக் கொண்டு வருகிறது கவிதை.

துயரத்தின் சுவையை அருந்தி பசிகொண்ட மனதிற்கு அறுசுவை விருந்தாக கவிதைக்குள் ஏதேனும் ஒருவரி அமைந்திருக்கிறது.

கவிதை ஆட்கொண்ட மனதிற்குள் என்றென்றும் ஒரு கொதிநிலையும் மென்குளிர்வும் கலந்தேயிருக்கிறது.

காற்றில் அலையும் ஒற்றைச் சருகாக, நெடும்பாலையில் அத்துவானப் பாதையில் யாரோவுக்காக காத்திருக்கும் நிழல் மரமாக நல்ல கவிதை காத்துக் கொண்டேயிருக்கிறது.

கவிதை போர்க்குரலின் முதல் துவக்கம்.

கவிதை பேரன்பின் உச்சம்

கவிதை ஆற்றுப்படுத்துதலில் வஞ்சனையற்ற துணை

- புன்னகை

Pin It