சுய அனுபவமும், ஆழமான சொற்சிக்கனமும் கவிதையின் தோற்றுவாய்! அவ்வனுபவம் யாருக்கானது? அவ்வனுபவ வெளிப்பாடு கவிதையாகிற போது, தன் சுய அரிப்பை வெளிப்படுத்தி, மற்றவர்களுக்குப் பயனற்றுப் போகுமாயின் அது ஒரு சிறந்த கவிதையாகிவிடுமா?

ஒவ்வொரு மனதும் ஒவ்வொருவிதமான அனுபவத்தை எதிர்கொள்கிறது. எல்லா அனுபவங்களும் மனவலியை ஏற்படுத்தியவைகளா? அல்லது அவ்வாறான போலி வெளிப்பாடா? என்பதை ஒரு வாசக மனம் எளிதில் புரிந்து கொள்ளும்!

அடிமைத்தனத்திலும், சுரண்டலிலும் தன்னை இழந்தபடியிருக்கும் ஒரு சமூகத்தை மீட்டெடுக்கும் சொற்களோ, எதிர்கொள்ளும் அனுபவமோ இல்லையாயின் அம்மனதை கவி மனது என்று எப்படி ஒப்புக் கொள்ளமுடியும்?

சொற்கள், உதிரச்சொற்களாக வெளியாகி கவிஞனை உச்சநிலை கவிதையொன்றை எழுதத் தூண்டும்படி தூண்டும் ஓர் அனுபவமே கவிச் சிகர அனுபவமாகும்!

கவிதைக்கான அனுபவம் ஓர் அடர்வனத்தை உருவாக்க வேண்டும்.

கவிதைக்கான அனுபவம் ஓர் அடர்வனத்தை உருவாக்குகிற விதையாக இருக்க வேண்டும்.

கவிதைக்கான அனுபவம் ஓர் அடர்வனத்தை உருவாக்கும் விதையை முளைக்கச் செய்கிற வீரிய மண்ணாக இருக்க வேண்டும்.

Pin It