1. அலகாபாத் உயர் நீதிமன்றம் இந்திராவின் தேர்தல் 'செல்லாது என்று 12.6.1975ல் தீர்ப்பு வழங்கியது.
2. ஆனால், பதவியைவிட்டு விலக இந்திரா மறுத்தார்.
3. மத்திய அமைச்சராக இருந்த திரு.சென்னாரெட்டி தேர்தல் செல்லாது என்று ஆந்திர உயர்நீதிமன்றம் 26.4.1968ல் தீர்ப்பு வழங்கியபோது, ராஜினாமா கோரிப் பெற்ற இந்திரா காந்திக்கு இதுபோன்ற தீர்ப்பு தனக்கு வந்தபோது பதவியை விட மனமில்லை.
4. மாற்று ஏற்பாடுகள் செய்து, புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க தனக்கு அவகாசம் தருமாறு காரணம் கூறி, தீர்ப்பை நிறுத்தி வைக்க இடைக்காலத் தடை பெற்றார் இந்திரா. இதைப் பயன்படுத்திக்கொண்டு தனது பதவியைக் காப்பாற்றும் சட்ட முயற்சிகளில் இறங்கி அப்பீல் செய்தார்.
5. ராஜினாமா செய்யுமாறு நாடெங்கும் எதிர்ப்புகள் கிளம்ப ஆரம்பித்தவுடன், தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள அவசர நிலைப் பிரகடனம் (Emergency) செய்தார் இந்திரா.
6. நாட்டுத் தலைவர்கள் காரணமின்றி மிசாவின்கீழ் கைது செய்யப்பட்டனர்.
7. பத்திரிகைகளுக்கு முன் தணிக்கை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இந்திராவையோ, காங்கிரசையோ. அமைச்சர்களையோ எதிர்த்து யாரும் எழுத முடியாது.
8. அவசர அவசரமாக தேர்தல் சட்டங்கள் திருத்தப்பட்டு, தன்மீதும் ஜனாதிபதிமீதும் யாரும் தேர்தல் வழக்குப் போடமுடியாதவாறு சட்டத்தைத் திருத்தினார்.
9. அவசர நிலைப் பிரகடனம் செய்யும் முடிவையே, அமைச்சரவையை கலந்தாலோசிக்காமல், ஜனாதிபதி மூலம் பிரகடனம் செய்யச் சொல்லிவிட்டு, மறுநாள் தான் அமைச்சரவையைக் கூட்டி அதற்கு ஒப்புதலைப் பெற்றார்!
10. தேர்தல் சட்டங்களைத் திருத்திக்கொண்டு, திருத்தப்பட்ட புதிய சட்டம் 1971 முதலே அமுலுக்கு வந்ததாகக் கருதப்படும் என்று எழுதி, அந்த அடிப்படையில், தனது தேர்தல் செல்லும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பைப் பெற்றார். (இந்தத் திருத்தப்பட்ட சட்டங்கள் முன் தேதியிட்டு அமுலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது) எந்தெந்த சட்டத்தின் மூலம் இந்திராவின் தேர்தல் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதோ, அந்தச் சட்டங்களைத் தனது தேர்தல் செல்லும் என்று சொல்லத்தக்க வகையில் மாற்றி அமைத்துக் கொண்டார்.
11. மேற்குவங்க காங்கிரஸ்கட்சி முதலமைச்சராக இருந்த சித்தார்த்த சங்கர்ரே என்பவருடன் மட்டுமே இந்திரா காந்தி ஆலோசனைகளை நடத்தினார். இந்தியாவின் அனைத்து ஊடகங்களின் தகவல் தொடர்பு, மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டும் என்று இந்திரா வலியுறுத்தியதை சித்தார்த்த சங்கரே ஏற்கவில்லை,குடியரசுத் தலைவரும் ஏற்கவில்லை.
12.நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தையும் ஆறு ஆண்டுகள் என்று அதிகரித்துக் கொண்டு தேர்தலைத் தள்ளி வைத்து உத்தரவிட்டார். 42ஆவது அரசியல் சட்டத் திருத்தம் என்ற பெயரால் மாநில அதிகாரங்களைப் பறித்து, தன் கையில் வைத்துக்கொண்டு முழுச் சர்வாதிகாரியானார்.
- விடுதலை இராசேந்திரன்