மத நல்லிணக்கத்தை பேசும் "திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்" ஆவண படத்தை புதுக்கோட்டையில் திரையிட காவல்துறை மறுத்துள்ளது வன்மையான கண்டனத்திற்கு உரியது. வீதி கலை இலக்கிய களம் என்ற அமைப்பு இந்த படத்தை திரையிடும் முயற்சிகளில் ஈடுபட்டது. திராவிட மாடல் ஆட்சியில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து தமிழ்நாடு முழுதும் எந்த தடையுமின்றி இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டு வந்தது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை அலுவலகத்திலும் திரையிடப்பட்டது.
`திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவோம்!' என்ற வெறிக்கூச்சலோடு மதவாத சக்திகள் சட்டங்களை கையில் எடுத்துக் கொண்டு செயல்பட்டதையும்; நீதிமன்ற தீரப்பின் முரண்பாடுகளையும் இந்த ஆவணப்படம் அம்பலப்படுத்துகிறது.தமிழ்நாட்டில் மதக் கலவரத்தை உருவாக்கும் இந்த முயற்சியை திராவிட மாடல் ஆட்சி உறுதியாக முறியடித்தது. காவல்துறை அனுமதி மறுப்பதற்கு மேலிட உத்தரவு என்ற ஒரு காரணத்தை கூறுகிறது. எந்த மேல் இடத்திலிருந்து உத்தரவு வந்தது? பெரியார் அம்பேத்கரை தங்களின் கொள்கைத் தலைவராக அறிவித்துக் கொள்ளும் த.வெ.க ஆட்சி அவர்கள் வலியுறுத்திய கொள்கைக்கு எதிராக செயல்படுவதை வன்மையாக திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கண்டிக்கிறோம்.
கழகப் பொதுச்செயலாளரின் அறிக்கை `திவிக தென்சென்னை' முகநூல் பக்கத்தில் செய்தி கார்டு வடிவில் பகிரப்பட்டிருந்த நிலையில், அதனை இந்தியாவில் யாரும் பார்க்க முடியாத வகையில் முடக்கியுள்ளது முகநூல் நிர்வாகம். முடக்கப்பட்டதற்கான காரணத்தில், ‘இந்தப் பதிவைத் தடுக்கச் சொல்லி வந்த ஒரு சட்டப்பூர்வக் கோரிக்கையை நாங்கள் ஏற்றுக்கொண்டு முடக்கியுள்ளோம்’ என பதிலளித்துள்ளது முகநூல் நிர்வாகம். தடை செய்யச்சொல்லி கோரிக்கை வைத்தது தமிழ்நாடு அரசா? அல்லது ஒன்றிய அரசா? என்பது இன்னும் தெரியவில்லை. எனினும், கருத்துரிமைக்கு எதிரான மிகமோசமான இந்த நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது. இச்செயலுக்கு தமிழ்நாடு டிஜிட்டல் ஊடலவியலாளர்கள் சங்கமும் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
- விடுதலை இராசேந்திரன்