வீரகாவியங்களில் பெண்கள் அறைகளுக்கு நடுவே ஆடும்
திரைச்சீலைகளைப் போன்றவர்கள்
இருளும் வெளிச்சமும் இரு முகங்கள்
ஆண்களின் கட்டில்களுக்கு மறைப்பு தருபவை
பல உறவுகளின் சுமையெடுத்து
நரையெய்து எறியப்படுவார்கள்
தரையிறங்கி நடந்து வெளியேற இயலாதவை
கதவுகளைப்போல உரிமை கோருவதில்லை
திரைச்சீலைகள் தாசிகளையொத்தவை
ஆளில்லா அரண்மனையைக்கூட
ஆர்ப்பாட்டமாய் அலங்கரிப்பவை
காலையொளியில் வசீகரமாய் அசைந்து
மாலையில் பருவப்பெண்ணைப்போலக் குதூகலித்து
இரவின் வாயிலில்
துக்கம் அடைத்த தொண்டையுடன் தொங்குபவை
கிசுகிசுப்பையும் அழுகையொலிகளையும் தாங்குபவை
மெத்தென்ற தமது உடலைப்
பஞ்சணைக்கு எப்பொழுதோ விரித்தவை
குஞ்சங்கள் தொங்கச் சலங்கை பூட்டிய பெண்களைப்போல
வாசலோடு பரவசப்பட்டுக்கொள்பவை
விடுதலைக்காய்ப் போராடி
விளக்குத்திரியைப் பற்றி எரிந்துபோனவை
அரண்மனைகள்தாம் திரைச்சீலைகளை வேண்டுகின்றன

குட்டி ரேவதி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.