உடலை எழுதுதலும் வாசித்தலும் என்ற பொருள், நான் விளங்கிக் கொண்ட வகையில் மிகப்பரந்த ஆய்வுக்கட்டுரையைக் கோரும் என்ற விஷயமென்றாலும், அதற்கான திறவுகோலாய் மட்டுமே இக்கட்டுரையை எடுத்துக் கொள்ளும்படித் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். மேலும், இதை ஓர் ஒற்றை உரையாக எண்ணி விலகி நிற்காமல் உரையாடலாக ஆக்கினால், எடுத்துக்கொண்ட இப்பொருள் தன் பயன்பாட்டை அடைவதற்கான குறுகிய வழியாகவும் இது இருக்கும் என்று நம்புகிறேன்.
உடலை வாசித்தல்
எல்லோரும் அவரவர் உடலின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்கிறோமா என்ற கேள்விக்குப் பதில் காணும் முகமாகத்தான் இத்தலைப்பை இட்டேன். அதற்காக, ஒரு மருத்துவரைப் போல ஒருவர் தன்னுடல் கூறுகளை முற்றுமுழுதுமாக அறிந்து வைத்திருக்க வேண்டிய அவசியல்லை. அதே சமயம், ஒரு மதவாதியைப் போலவும் அதைப் புதிராகப் பாதுகாக்க வேண்டியதுமில்லை. ஆனால், ஒருவருக்குத் தன் உடலைக் காட்டிலும் விலைமதிப்பிலாத அருஞ்சொத்து என்பது வேறு எதாக இருக்கமுடியும்? சித்தர் அறநெறி, அதற்கு முன்பான பெளத்த அறநெறி எல்லாமே மனித உடலை அதிலும், தனது உடலை ஆய்ந்தறியும் அறிவு, அதை அறிவதற்கான பயிற்சி, பாலியல் உறவைப் புரிந்து கொள்ளல், அதன் நெறிகள் குறித்ததே. உடலின் எல்லைக்கு வெளியே உள்ளது பற்றி இவ்விரண்டு நெறிகளுமே பொருட்படுத்தவில்லை. அல்லது இவ்விரண்டு நெறிகளுமே உடலை அவ்வெளியுடன் பொருட்படுத்திப் புரிந்து கொள்ளவே உதவின.
அண்டத்தில் உள்ளதே பிண்டம், பிண்டத்தில் உள்ளதே அண்டம். இயற்பியல் விஞ்ஞானத்தை, பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்ள விஞ்ஞானக் கோட்பாடுகளைப் பயன்படுத்துவது போலவே உடலைப் புரிந்து கொள்ளவும் அவற்றைப் பயன்படுத்துதலே மெய்ஞ்ஞானம். மெய்ஞ்ஞானம் என்பது உடலைப் பற்றியது. உடலைக் கடந்து வரையறுக்கப்படும் ‘ஆன்மிகம்’ என்று சொல்லப்பட்ட பழங்கதைகளை, மரபின் வேர்களையல்லாமல் விழுதுகளையே தொங்கியபடி நாமிங்கே ஆடிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமுமில்லை. மேலும், அத்தகைய ஒரு விவாதத்தைப் புறக்கணித்தப் புரிதலுடன் தான் இதை ஈங்கு குறிப்பிடுகிறேன்.
ஒருவர் என்ன உண்ணுகிறார், என்ன அணிகிறார் ஆகிய பண்பாட்டு அலகுகள் வழியாகத் தான் ஓர் உடல் அணுகப்படுகிறது. அதே சமயம் இப்பண்பாட்டில் செயல்படுத்தப்படும் பாகுபாடுகள் வழியாகவே பாலியல் வேறுபாடு நிலைநிறுத்தவும் படுகிறது. ஆக, பண்பாடு தான் பெண் – ஆண் பாலிமையை வேறுபடுத்துவதற்கான ஊடகமாகிறது. மேரி டக்ளஸ் எனும் இனவரைவியலாளர் விளக்குவதைப் போல், இவ்வுடலென்னும் பரப்பின் மீது தான் பண்பாட்டின் நியதிகளும், அதிகாரமுறைகளும், மீபொருண்மை உடன்படிக்கைகளும் பொறிக்கப்பட்டு இன்னும் இன்னும் வற்புறுத்தப்பட்டு, குறிப்பிட்ட உடல் மொழியாலும் உடல் அசைவாலும் வலுவேற்றப்படுகிறது. ஆக, பெண் உடல் என்பது ஆதிக்க, அதிகாரப் பண்பாட்டை நிறுவி வளர்ப்பதற்கான வெறும் உருவகமே. எப்பொழுதும் வாசித்துப் புரிந்து கொள்வதற்கான பிரதியாகவும், அதை மறு உருவாக்கம் செய்வதற்கான வடிவத்திலும் இருப்பது பெண்ணுடல் தான். இத்தகைய பெண்பிரதிகள் தாம் வகைமாதிரிகளாக நமக்கு நினைவூட்டப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இத்தகைய பெண்மாதிரிகள், உதாரணத்திற்கு சீதை, கண்ணகி, ஆண்டாள், சாவித்திரி போன்றவர்கள் தம் இயல்பூக்கங்களைத் துறந்து தன் உடலை காலாகாலத்திற்குமான ஒரு பிரதியாக மாற்ற நேர்ந்ததால் அனுபவிக்க வாய்த்த அங்கீகாரங்களைக் காட்டி, நமக்கும் அந்த ஆசையையே ஊட்டுவர். அல்லது, அப்படி ஒரு பிரதியாகப் பேணத் தவறிய பெண்கள் சந்திக்க நேர்ந்த அவலங்களை நமக்குப் படிப்பினைகளாக்குவர்.
பெண்ணுடல் முற்றிலும் பண்பாட்டிற்கான ஒரு பிரதியாகவே இருக்கிறது, அந்தப் பிரதி பாலியல் வேறுபாட்டை கணந்தோறும் நமக்கு எச்சரித்துக் கொண்டே இருக்கும். பண்பாடு என்பது உடலுக்குக் கடத்தப்பட்டது போலவே, பண்பாட்டையே நெய்யப்பட்ட ஓர் ஆயத்த வடிவ உடலாக வாசித்தல் சார்ந்தும் நமது உடலை நாம் புரிந்து வைத்திருக்கிறோம். பெண்ணுடல் வெறுமனே பண்பாட்டு வாசிப்புத் தான் செய்யப்படுகிறது. அதற்கு, சமூக, பொருளாதார ஊக்கங்களோ பயன்களோ இன்னும் வழங்கப்படவில்லை. அத்தகைய உடலாக மாற்றும் பணியில் தாம் நாம் எல்லோரும் இன்று இங்கே ஈடுபட்டிருக்கிறோம்.
பெண்ணின் உடலில் அவளின் பால்நிலையும் அதன் உயிர்த்துடிப்பும், மிகுந்த ஊக்கத்துடனும் அன்றாடம் அதன் புறத்துடிப்புகள் இயக்க நிலையில் இருப்பதாகவும் பண்பாட்டு ஊடகம் பார்த்துக் கொள்கிறது. அதாவது அவள் உடுக்கும் உடை, நடை, பாவனைகள், அசைவுகள், மொழிகள் எல்லாமே ஆணின் அல்லது ஆணாதிக்க சமூகத்தின் பண்பாட்டுப் பாலியல் கிளர்ச்சிக்குத் தூண்டுகோலாக இருக்கிறதா என்று பரிசோதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். இதையெல்லாம் மீறி, இயல்பானதொரு மனித உடலை அறிய இவ்வகையான பண்பாட்டு இயக்கங்களை உடனடியாகவேனும் அல்லது சில தயக்கங்களுடனேனும் நாம் முறியடிக்க முன்வரவேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம். பாலியல் பண்பாட்டுக் கூறுகள் அதிகார நிலையில் இயங்குவதைப் பேசும்போதெல்லாம் பேசுபவர், வெறுமனே கருத்துரை வழங்க வந்தவராகவோ அல்லது வெறுமனே கிளுகிளுப்பூட்டும் பாலியல் பொருண்மைத் தருபவராக மட்டுமே பார்க்கப்படுவது தமிழினத்தின் ஓர் அவலம் தான்!
மேலும், பெண்ணின் உடல் பெண்மை என்று 'வரையறுக்கப்பட்ட வினையூக்கிகளால்’ (அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு / தன் இனவிருத்தி ஆற்றலை வெளிப்படுத்துவதுடன் தன் வாழ்க்கைப் பணியை நிறுத்திக் கொள்ளல் / யோனியை ஒரு பிளாஸ்டிக் பையைப் போன்று பயன்படுத்தித் தூக்கி எறியும் ஒரு பொருளாகப் பயன்படுத்து! போதும்!! என்று கட்டளையிடும் நவீனப் பெண்ணியம் உட்பட) ஆன பிரதியாக மாற்றும்படிப் பணிக்கப்பட்டிருக்கின்றனர்.
இதற்கு மறுப்பு காட்டும் இன்னொரு வகைப்பெண்களோ ஆண்களின் வினையூக்கங்களையே தங்கள் உடல்களுக்கும் செயற்கையாக ஊசிகள் வழியாக ஏற்றி, உடலை ஆதிக்கம் நிறைந்த உடலாக மாற்றுகின்றனர். இரண்டு செயல்பாடுகளிலுமே பெண் உடலின் இயல்பான படைப்பூக்கமும் பண்பூக்கமும் உணராமல், குறிப்பாக இனவிருத்தி வலிமையின் தொடர்ச்சியானதோர் ஆற்றலை (ஒரு தாயிலிருந்து மற்றொரு தாய், அவரிலிருந்து இன்னொரு தாய் / இதில் கிளைப்பதும் வேர்கொள்வதும் தான் மானுட இனம் என்ற உணர்வின்மை) உணராத வெள்ளெழுத்துப் பிரதியாக இருக்கிறது. இத்தகைய ஆண்மைய உடல் தான் இருபதாம் நூற்றாண்டின் வற்புறுத்தப்பட்ட ‘பெண்ணுடல்’ பிரதியாக இருந்தது. அதாவது, ஆண் செய்த பாலியல் குற்றங்களையும், அதிகாரப் பிழைகளையுமே தமக்கான உரிமையாகவும் கோரும் 'ஆதிக்க சாதிப் பெண்ணியம்'!
அதே சமயம், ஆதிக்கசாதியினர் அல்லது ஆதிக்க வர்க்கத்தினர், வலிந்துச் சித்திரிக்கும் பிரதி என்பது, பாலியல் ஒழுக்கத்தை ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்குத் தொடர்ந்துக் கற்பித்தல் அல்லது ஒடுக்கப்பட்டவர்கள் தம் பாலியல் இயல்பூக்கத்தை ஒருங்கிணைத்துப் புத்துயிர்ப்பு ஊறும் சுனையாய் பயன்படுத்த முன்வரும்போதெல்லாம் அந்தப் ‘பாலிமையைச் சிதறடித்தல்’ என்பதை ஓர் இயக்கமாகச் செய்கின்றனர். ரசமிழந்த கண்ணாடியில் தொனிக்கும் ஓர் உருவச் சித்திரம் தான், இது! இதன் வழியாக பாலியல் ஊக்கம் பெற்ற அவர்கள் உடல் மீண்டும் மீண்டும் அவர்கள் சார்ந்த சாதியை அதிகாரப்படுத்துகிறது. இதையே ‘வன்முறை’யாகவும், வன்மமாகவும், பாலியல் வல்லுறவாகவும் ஒடுக்கப்பட்டவர் மீது திருப்பிச் செலுத்த முடியும். ஆகவே, நமது உடல்களின் பாலியல் இயல்பூக்கத்தை எப்பொழுதும் அதன் அகஉயிர்ப்போடு வைத்திருப்பதற்கான பயிற்சியினை நாம்தான் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.
உடலை எழுதுதல்
எத்திணை மருங்கினும் மகடூஉ மடல்மேல்
பொற்புடை நெறிமை இன்மையான்
என்று தொல்காப்பியர் கூறியதிலிருந்தே பெண்ணுக்கும் மொழிதல் என்னும் உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. காதலோ, காமமோ, தன் கருத்தோ தம் இயல்பான மொழிதலைக் கட்டுப்படுத்திக்கொள்வது தான் பெண்பாலிய அறமாகக் கருதப்பட்டது. எழுத்து என்னும் மொழிதல் கூட பாலியல் நியதி எனும் பண்பாட்டுத் தணிக்கை செய்யப்பட்ட பிரதி தான். பெண்ணுடலுக்கு இயல்பூக்கங்களை உரிமையாக வழங்காத ஒரு சமூகத்தில் நாம் இன்று அன்றாடம் சந்தித்துக்கொண்டிருக்கும் அரசியல், பொருளாதார, இராணுவ தளவாட.. என எல்லா வகையான பிரச்சனைகளையும் தாம் சந்திக்கவேண்டியது இருக்கும்.
இக்கட்டத்தில் உடலை எழுதுவது ஏன் அவசியம்? நம் தமிழகம் தனித்த நாடு இல்லை. இந்தியாவின் அனைத்து சமூக, பொருளாதார, பண்பாட்டு விஷயங்களுக்கும் அடிபணிந்த சமூகக் கூட்டம் தான், நாம். இந்நிலையில் சாதிமயப்படுத்தப்பட்ட உடலாகத்தான் நாம் அடையாளப்படுகிறோம். நாம் அணிந்திருக்கும் சட்டைகளுக்கும் கீழே, சட்டைகளின் வர்க்கங்களுக்குப் பின்னால், அப்பட்டமான பால் அடையாளப் பண்புகளின் வெளிப்பாட்டிற்கும் அப்பால், ஒவ்வோர் உடலையும் தீர்மானிப்பது அவ்வுடல் ஏற்றிருக்கும் சாதியப் பண்புகள் தாம்.
இது எந்த ஒரு பெண்ணுக்குமோ ஆணுக்குமோ விதிவிலக்கன்று. ஆதிக்க சாதிப் பெண்ணுக்கும் கூட அவள் உடல் சார்ந்த பாலியல் ஒடுக்குமுறைகள் எல்லாமே அவளாகத் தேர்ந்தெடுக்காமல் திணிக்கப்பட்ட சாதியால் உருவானது தான். ஆனால், இன்னும் இத்தகைய ஓர் ஒடுக்குமுறைக்கான அரசியல் பின்னணி, விவாதத்திற்கு எங்குமே உட்படுத்தப்படாமல் இருக்கிறது. இதற்கான காரணம், ஆதிக்க சாதிப் பெண்களே தம் குறைந்தபட்ச அதிகாரத்தையும் இழக்கத் தயாராக இல்லாமல், ஒடுக்கப்பட்ட பெண்களைத் தம் அதிகாரத்திற்காகவும், அங்கீகாரத்திற்காகவும் பயன்படுத்திக்கொள்ளுதல் தொடர்வதால் தான். அல்லது இவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் மீது தம் சுயம் முன்னிறுத்தி எழும் வெறுப்புணர்வையேனும் மட்டுப்படுத்துவதில் ஈடுபடலாம். தலித்தியத்தின் மையநோக்கு என்பது சாதி மறுப்பாக இருக்க, அது ஆதிக்க சாதிப் பெண், தாழ்த்தப்பட்ட பெண் ஆண் இருபாலார் என அனைவருக்கும் பொதுவான பாலியல் உரிமைக்காகப் போராடுவதாக இருக்க, ஏன் அது பிற ஆதிக்க சாதியினரால் விவாதிக்கப்படாததாகவே இருக்கிறது. இது ஏன் மனித உரிமையாகவோ, மனித நெறியாகவோ பார்க்கப்படுவதில்லை. இவ்விடத்தில் மட்டும் ’பெண்ணியம்’ என்று பேசுபவர்கள் ‘மனித இயம்’ என்று தடம்புரள்வது ஏன்?
காரணம் மிக எளிமையானது. இதுவரை, தாங்கள் அனுபவித்து வந்த சாதிய அதிகாரத்தால் ஆண்கள் தாங்கள் சுகித்து வந்த சமூக, பொருளாதார ஆனந்தங்களையும் பெண்கள் தாங்கள் அனுபவித்து வந்த பண்பாட்டு அல்லது பாலியல் சுகங்களையும் இழக்கத்தயாராக இல்லை. மேலும், இது வரை இலங்கும் சாதி அடுக்குகளைக் குலைத்தால் தன்நிலை குறித்து எழும் நிலையின்மையால் தொடரும் பதட்டமும் இவர்களைப் பீடித்திருக்கிறது. அப்படியான ஓர் ஆயத்த நிலைக்குக் கூட அவர்கள் தங்கள் நிலையைக் கற்பனை செய்தது இல்லை. இவ்வடுக்கைக் குலைக்கும் போது அவர்கள் செய்ய வேண்டிய தியாகத்தால், இது வரை அவர்கள் தண்ணீர் மறுத்த, வாயில் மறுத்த வீடுகளில் விருந்து உண்ண வேண்டியிருக்கும். திருமண உறவு கொள்ள வேண்டியிருக்கும். இதுவரையிலும் தான் அதிகாரம் செய்து வந்தவருக்குச் சமமாக எப்படி விருந்துண்ணுவது? சமமான பாலியல் உறவில் எப்படி ஈடுபடுவது?
இது தான் ஆதிக்க சாதிப் பெண்களிடம் பாலியல் அத்துமீறலாகவும், பரத்தமையாகவும் வெளிப்படுகிறது. இவ்வாறாக விளக்கும்போதே, இதற்கு எதிரான நிலை என்பது உறுதியாக, ‘பாலியல் ஒழுக்கம்’ என்பதில்லை. தன் சுய உடலுக்கு மரியாதையையும், பாலியல் சமத்துவம் பாராட்டாத சமூகத்தில் தனக்கு ஏற்ற பாலியல் உறவைத் தானே தேர்ந்தெடுக்கும் வாய்ப்பையும், ஏற்கெனவே சமூக உறவுகளில் பிணைக்கப்பட்டுச் சின்னப்பின்னமாக்கப்பட்டிருக்கும் பிற பெண்கள் போராடிப் பெற்ற பாலியல் உரிமைகளைக் குலைக்காமலும், அதுவழியாக அவர்கள் தங்களிடம் வளர்த்து வைத்திருக்கும் பாலியல் திறத்தை தம் அதிகார மமதையால் சிதைக்காமல் இருப்பதும் தான் முழுமையான ’பாலியல் அறம்’ நோக்கியது.
பாலியல் ஒழுக்கம் என்பது எப்படி இந்துமதத்தினுடன் அடையாளம் பெறுகிறதோ அதுபோலவே பாலியல் சுதந்திரம் என்பது ஆதிக்கசாதிப் பெண்களுடன் அடையாளம் பெறுவது. சாதி என்பதன் பெயரால் பெறமுடியாத பாலியல் உரிமைகளை, ஆதிக்கசாதிப் பெண்கள் முன்மொழியும் ‘பாலியல் சுதந்திரம்’ எவ்வகையில் வழங்கிவிடப்போகிறது? அதுபோலவே, இப்பெண்கள் நிகழ்த்தும் ‘பாலியல் அற’ மீறல்களைக் கண்டிக்கும் போதெல்லாம் பழமைவாதச்சித்திரங்களை அதாவது இவர்கள் அதிகாரத்தை மட்டுமே ஒடுக்கும் புராண மரபுகளை பொய்க்காரணமாகத் துணைக்கு அழைத்து நம் நெறிகளைச் சாடுவதே இவர்களின் பாலியல் அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கான ஓர் உத்தி தான்! ஆக, என்றோ கட்டுடைத்த பெண்ணியம் என்று சொல்லப்பட்டதை, இன்று வரை பெண்ணியம், பெண் விடுதலை, நவீனப் பெண்ணியம் என்று கூவித் திரிவதிலிருந்து நாம் விடுபட்டே ஆகவேண்டும்.
சமூகத்தில் ஒரு பெண் – ஓர் ஆண் பாலுறவுக்கென செய்யவேண்டிய அடிப்படையான பேரங்கள் எல்லாமே, ஒரு வீட்டில் வசிப்பதற்குச் செய்யவேண்டிய பேரங்களைப் போன்றே நிலைத்த சமூக விதிகளைக் கொண்டிருக்கின்றன. ஆக, பிறப்புறுப்பு என்பது குறியீட்டு வடிவில் வாடகைக்கான வீடும் என்றே ஆகிறது. களவு கற்பு இரண்டும் தான் சமூகத்தில் பேசப்பட்ட இரு பாலியல் பிரதிகள். இவ்விரண்டிலுமே ஆதிக்க சமூகத்தின் சாதி விதிகள் தீவிரமாகக் கடைபிடிக்கப்பட்டன. களவு என்பது திருமணத்திற்கு முன்பாக கொண்டிருக்கும் பெண்- ஆண் உறவு. கற்பு என்பது, களவு என்பதை யாரிடம் கொண்டிருந்தாலும் கவலையற்று யோனியை ஒருவருக்கே குத்தகை விட்டுப் பேணும் பாலியல் மரபு. பரத்தமை என்பது அதிகாரம் மிக்கோர், நலிவுடையோர் மீது செயல்படுத்தும் பாலியல் ஆதிக்கம். இந்த மூன்றிலுமே எங்குமே ’பாலியல் அறம்’ என்பது சமத்துவ நோக்குடன் சொல்லப்படவே இல்லை. ஆதிக்க சாதி ஆண் ஒருவன் தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்ணுடன் பாலுறவு கொள்ளலாம். தாழ்த்தப்பட்ட சாதி ஆண் ஒருவன் ஆதிக்க சாதிப் பெண்ணொருத்தியுடன் களவோ கற்போ கொள்ளக் கூடாது. இதை தாழ்த்தப்பட்ட சாதி ஆணுக்கு மறுக்கப்பட்ட சலுகையாகப் பார்ப்பதை விட ஆதிக்க சாதிப்பெண்ணுக்கு அதிகமாக வழங்கப்பட்ட அதிகாரமாகத்தான் பார்க்கமுடிகிறது. ஆதிக்கசாதிப் பெண் தாழ்த்தப்பட்ட சாதி ஆணின் மீது தன் பாலியல் அதிகாரத்தைச் செயல்படுத்துவதற்கான சகல வாய்ப்புகளையும் இது தொடர்ந்து வழங்கிக்கொண்டே இருக்கிறது. இதுவே பரத்தமை எனப்படுவது.
பரத்தமை என்ற உறவும் கூட ஒரு பாலுறவாகப் பேசப்படவில்லை. ஆதிக்க சாதியினரின் பாலியல் நிறுவுதலுக்கான ஒரு சமன்பாடு. ஆக, ஆதிக்க சாதிப்பெண்கள் அல்லது ஆண்கள் தமது பாலியல் அதிகாரத்தைச் சுகிப்பதற்கான வாய்ப்பாகவும் அதிகாரமாகவும் தாழ்த்தப்பட்ட சாதி ஆணை அல்லது பெண்ணை பயன்படுத்திக்கொள்கிறார்கள். இது சாதியச் சுரண்டலின் ஒரு வடிவம். ஆதிக்க சாதிப் பெண்ணின் சாதி அதிகாரம்: தன் சாதி ஆணிடம் போராடிப் பெற முடியாத உரிமையையும் அதிகாரத்தையும் இப்படித்தான் பாலியல் துய்ப்பாக மாற்றிச் சேமித்து வைத்துக்கொள்கிறது. தன் உடல் அனுபவித்த ஒடுக்குமுறைக் கோபத்தைத் தாழ்த்தப்பட்ட சாதி ஆண் உடல் மீது வன்மமாகச் செலுத்தி தன் பரத்தமையையும் அதன் வழியாக சாதிய அடுக்குமுறையையும் நிலைநிறுத்தும் பணியும் அவளுக்கு வழங்கப்படுகிறது.
மேலும், நம் மன ஆழத்தைத் தோண்டித் துருவிப் பார்த்தோமானல், எல்லா வகையான பாலுறவு சேர்க்கைகளும் நமக்குப் பொருந்தாத ஒன்றாகப் பார்த்துப் பழகிப்போயிருக்கிறோம். அப்பழக்கத்திலேயே தனிப்பட்ட அளவில் ஒருவர் சுகிக்காத பாலியல் உறவை எந்த ஓர் ஆய்வுமின்றிக் கண்டிக்கிறோம். இப்படியான பொதுப்புத்தி, செவ்வியல் இலக்கியங்கள் வழியாகவும் பண்பாட்டு ஊடகங்கள் வழியாகவும் தொடர்ந்து ஊட்டப்பட்டு வருகின்றன. இது முற்றும் முழுதுமாக, மனு இயற்றிய ஏடுகளால், காலந்தோறும், தலைமுறை தோறும், நம் மரபணு தோறும் பயிற்றுவிக்கப்படுபவையே. ஏன், மரபணு என்று சொல்கிறேன் என்றால், நான் ஆணாய்ப் பிறந்திருந்தாலும் பெண்ணாய்ப் பிறந்திருந்தாலும் என் மீது சுமத்தப்படும் சாதி அடையாளம் மாறப்போவதில்லை. வேண்டுமானால், ஆண் என்பதால் கொஞ்சம் உபரியான சலுகைகள் வழங்கப்படலாம்.
முறைகேடான பாலியல் உறவுகள் என்று சொல்லப்படுபவையும், அவை காலந்தோறும் மீறப்படுபவையும் ஆதிக்க சாதிமனநிலையின் ’சர்க்கஸ்’ வேலைகள் தாம். சாதிக்கட்டுமானத்துக்கும் அதன் அதிகாரக்கட்டுக்கோப்புக்கும் உடன்பட்டவர்களுக்குத் தாம் இவை தேவையாயிருக்கின்றன. இதனால், நான் முற்போக்கான சிந்தனையைப் பின்னிறுத்துவதாக அவசரப்பட்டு எண்ணிவிட வேண்டாம். மாறாக, எப்பொழுதுமே நம்மிடையே எல்லா வகையான பாலியல் உறவுகளும், அதன் சுகிப்புகளும் அதன் திண்மையுடனும் அழகுகளுடனும் இலைமறை காய்மறையாகவேனும் பயிலப்பட்டுத் தாம் வந்திருக்கின்றன. ஓரினச்சேர்க்கையோ, ஈரினச்சேர்க்கையோ, தன் பால் அடையாளத்தைத் தன் உணர்வெழுச்சிக்குத் தக்க மாற்றிக்கொள்ளுதலோ எப்பொழுதுமே நம் சமூகத்தில் இரண்டறக் கலந்த ஒன்றாக, தனித்த பொருளில் விவாதிக்கும் பிரச்சனையாக இல்லாமல் பயிலப்பட்டுத்தாம் வந்திருக்கின்றன. ஒடுக்கப்பட்ட, உழைக்கும் சமூகத்தினரிடம் அது ஒரு பேசுபொருளாக இல்லாமல், வாழ் நெறியாகவே இருந்திருக்கிறது. எப்பொழுது அதிகாரப் படிநிலை என்பது சாதி, மதம், வர்க்கம், பால் இன்ன பிறவற்றால் நியமங்களாக ஆக்கப்பட்டனவோ அன்றுதான் இந்தப் பாலியல் குழப்பங்கள் உருவாயின. இதை இன்று அவர்கள் ஒரு புரட்சியாகவும், வாழ்வோடு கலந்த ஒன்றை வாழ்வுக்கு வெளியே துருத்திய ஒன்றாகக் கட்டமைப்பதும் வேடிக்கையாகவும் நகைப்பளிப்பதாகவும் இருக்கிறது.
எப்பொழுதும் செழுமையாவும் உயிர்ப்புடனும் இருந்த நமது பாலியல் இயல்பூக்கம், ஆதிக்க சாதியினருக்குத் தேவையான சமூகப், பொருளாதாரப் பயன்பாடுகளுக்காக உடல் உழைப்பாக மடைமாற்றம் செய்யப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில், நமது பாலிமையை நாம் அடையாளம் காணவும், அதை நமக்கேயான விளைச்சலாக மாற்றிக்கொள்ளவும் அவகாசமும் இன்றி, நம் யோனிகள் அடிமைகளையும், ஆதிக்க சாதியினருக்குத் தேவையான கூலிகளையும், நவீன யுகத்தில் பகுத்தறிவு மூளைகளை உடைய கருத்தியலாளர்களையும் உற்பத்திச் செய்யப் பணிக்கப்பட்டிருக்கின்றன. அதாவது, கருத்தியல் சுரண்டல்களை நிகழ்த்தத் தேவையான விதைமுளைகளைத் தயாரிப்பவர்களாக! இதை வாசிப்பவர் எவராயினும், அவர் தன் மனநிலையின் மீது ஆதிக்கம் செலுத்தும் சாதிநிலையிலிருந்து தன்னைத்தானே வலிந்து வெளியே இழுத்து வந்து வாசித்தால் தான், தன் பாலியல் செழுமையினை முழுதுமாய் உணரமுடியும். ‘பாலியல் அறம்’ பற்றிய புரிதலை அதன் பெருங்களிப்பை அவரும் அடையமுடியும்.!
அற்பமான ஆளுமை வடிவங்களைப் பெண்ணியத்தின் கூறுகள் என்று முன்வைத்து, இது தான் பெண்ணியம் என்று வரையறுக்கும் நிலையிலிருந்து முதலில் நாம் விடுபடவேண்டும். அவ்விதம் விடுபடவில்லையென்றால் இருவிதமான அபாயங்களை நாம் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் ஒன்று: எல்லாவிதமான பாலியல் உறவுகளுக்கும் வாய்ப்பைத் தேடிப்போகவும், அவற்றைப் பரிசோதித்துப் பார்க்கவுமே நமக்கு காலம் போதுமானதாக இருக்கும். இதனால், நமது இயல்பான பாலிமைச் செழுமையை ஒருபோதும் உணராமல் போகக்கூடும். இரண்டாவது; ஆதிக்கச் சமூகம் வரையறுக்கும் பாலியல் சுதந்திரம் என்பது காலந்தோறும், சந்தர்ப்பங்கள் தோறும் தன் விளக்கத்தை மாற்றிக்கொள்ளும் பிழைப்புவாதம் நிறைந்தது; மாயைகள் கூடியது. இந்நிலைகளிலிருந்து விடுபட்டு ஒருவர் தன் உடல் பாலியல் இயல்பூக்கத்திற்கும் பகுத்தறிவுக்கும் ஏற்ற முழுமையான பாலியல் தேர்வை நிகழ்த்துவதற்கான சமத்துவ உணர்வை முன்மொழிவது தான் பாலியல் அறம் என்பது.
உடலை எழுதுதல் என்பது தீண்டாமைக்கு தனிமனித உடல் என்பது உட்படுத்தப்படும்போது தான் உருவாகிறது. மனிதர்கள் உற்பத்தி செய்யும் பொருளைப் பயன்படுத்தும்போதோ, விளைவித்த நெல்லை உண்ணும் போதோ, அவர்கள் இறைத்த நீரைப் பருகும்போதோ, அல்லது அவர்கள் செய்த செருப்பைப் பயன்படுத்தும் போதோ, அவர்கள் உடலை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தும்போதோ ’தீண்டாமைக்கு உட்படுத்தப்பட்ட உடல்’ தீட்டுக்குரியதாகத் தோன்றுவதில்லை. எப்பொழுதெல்லாம் தன்னுள் சேமித்த சாதியதிகாரத்தை செயல்படுத்துவதற்கான உத்வேகமும் வெறியும் தலைதூக்குகிறதோ அப்பொழுதெல்லாம் ஒரு பெண்ணின் உடல் சூறையாடப்படுகிறது. அதுவரை செயலுறாத தீண்டாமை என்பது, நமது பாலியல் உரிமைகளை நாமே எடுத்துக்கொள்ளும் போதும் நிலைநாட்டிக்கொள்ளும் போதும் தான் உயிர்பெறுகிறது, விவாதமாகின்றது என்பதை நாம் அறியாதவர்களா என்ன?
- குட்டி ரேவதி
குறிப்பு: இக்கட்டுரை, 13.02.2011 அன்று காஞ்சிபுரம் இலக்கியக்களம் நடத்திய இலக்கியக் கூட்டத்தில் உரையாக வாசிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டது. இக்கட்டுரையை எழுதுவதற்கு, உதவிய கட்டுரைகள்: ராஜ் கெளதமனின் ‘பாலியல் அறங்கள்’ (தமிழினி, டிசம்பர் 2010) மற்றும் Writing on the body நூலில் உள்ள Susan Bordo-வின் ‘The Body and the Reproduction of Femininity என்ற அத்தியாயம்.
பாலியல் ஒழுக்கம் என்பது தான் ஏற்றுக்கொண்ட துணைக்கு நேர்மையாக இருப்பதும், துரோகமிழைக்காமல ் இருப்பதும்தான். இது இருபாலர்க்கும் பொருந்தும். ஆனால் கற்பு என்பது அப்படியில்லை. அது இந்துமதத்தால் பெண்ணுக்கு மட்டும் விதிக்கப்பட்டதா கும். கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்பதுதான் கற்பு. பெண்ணுக்கு வேறு எந்த வாய்ப்பையும் மறுப்பதாகும் அது. பாலியல் ஒழுக்கம் பெண்ணையோ, ஆணையோ அவ்வாறு கட்டுப்படுத்தும ் ஒன்றல்ல. அது சேர்ந்து வாழும் வரைக்குமான ஒரு நியதி.. பிரிந்து வேறொரு துணையைத் தேடுவதை அது கட்டுப்படுத்துவ தில்லை. 'Dignity in sex' என்பது மேலைநாடுகளிலும் வலியுறுத்தப்படு கிறது.. ஒழுக்கம் தவறினான் என்பதற்காக ஆணை விவாகரத்து செய்யும் பெண்களை அனேக மேலைநாடுகளில் பார்க்க முடியும். அவர்களுக்கு கற்பு பொருட்டல்ல.. என்னுடன் வாழும்வரை எனக்கு உண்மையாக இரு என்பதுதான் அவர்களின் கோட்பாடு.. பாலியல் ஒழுக்கத்திற்கும ் கற்புக்கும் வேறுபாடுகள் உள. Please correct me if I am wrong.
Your views are little bit difficult to understand and slightly confusing. Many social changes occuring day by day,which you forget to notce. This may be true to traditional society. But modern society feels that sex is an just outlet;not more than that.
Now , we are int the rapid changing phase. Days will come when we loose our cultural identity. An unique set of norms forms our culture. Whats wrong in our old culture? only mis- interpretation of our cultural uniqueness makes the problem.
I, as a male gender,very much ashamed to tell my wife disintegrates herself from her daily routine stating that she has to treated something special when she ovalutes. But,no male wants such sanctions!
Partially true facts cant be accepted as universal facts!!!!
Please feel to contact me if you want more of my views....
D.KARUNAKARAN,P UDUCHERRY
இன்று இணையத்தில் கட்டற்ற பாலியல் சுதந்திரம் பேசும் சில பின்நவீனத்துவாத ிகள், அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் முற்போக்குகள் - இவர்களது வாதங்களால் சற்று குழம்பித்தான் போயிருந்தேன். இதெல்லாம் இவர்களின் பாலியல் அதிகாரத்தை நிலைநிறுத்துவதற ்கான ஓர் உத்தி தான் என்ற உங்களது வரி தெளிவுபடுத்தியத ு. நன்றி குட்டி ரேவதி!!
RSS feed for comments to this post