சாதி சங்கம், சாதி முனைப்பு, சாதித் தீவிர வாதம் போன்றவற்றை நாம் விரும்பவில்லை; ஏற்கவில்லை. எனினும் இவை உருவாவதற்கான உளவியல் வேர் எங்குள்ளது என்பதைக் கண்டறிய வேண்டும். அப்போதுதான் அதற்குரிய மருத்துவ முறையைக் கையாள முடியும்.

மேற்கண்டவற்றின் உளவியல் வேர் தற்காப் புணர்ச்சியில் உள்ளது. தற்காப்புணர்ச்சி உயிரினங் களிடம் உள்ள இயல்பூக்க (Instinct) ஆற்றல்களில் ஒன்று.

மனிதர்களின் தற்காப்புணர்ச்சி, மற்ற உயிரினங்களைப் போல் தன் தற்காப்புணர்ச்சியாகவும் இருக்கின்றது; மற்ற உயிரினங்களை விட மிகவும் வேறுபட்ட நிலையில் கூட்டுத் தற்காப்புணர்ச்சி யாகவும் இருக்கின்றது.

இயற்கைப் பாதிப்புகளிலிருந்தும், பிற உயிரினங்களிலிருந்தும், தன் இனத்தைச் சேர்ந்த சகஉயிரிகளிடமிருந்தும் தற்காத்துக் கொள்வதற்கான இயல்பூக்கம் தாவரங்களுக்கும் இருக்கிறது; விலங்குகளுக்கும் இருக்கிறது. இவற்றை அவரவர் பட்டறிவின் வழி, உய்த்து உணர்ந்து கொள்ளலாம். தாவரங்களிடம் கூட்டுத் தற்காப்பு ஆற்றல் குறைவாக உள்ளது. தாவரங்களை விட அதிக அளவில் கூட்டுத் தற்காப்பு ஆற்றல் விலங்கு களிடம் இருக்கிறது. விலங்குகளைவிடப் பன்மடங்கு அதிகமாகவும், பன்முகப்பட்டதாகவும் கூட்டுத் தற்காப்பு ஆற்றல் மனிதர்களிடம் இருக்கிறது. பிறப்பு முதல் இறப்பு வரை மனிதர்களின் கூட்டுத் தற்காப்பு ஆற்றல் செயல்படுகிறது. எனவே கூட்டுத் தற்காப்புணர்ச்சி என்பது, மனிதர்களிடம் கூடுதலாக இருக்கிறது.

தாய், தந்தை, தாத்தா, பாட்டி, உடன் பிறந்தோர் மற்றுமுள்ள நெருக்கமான உறவினர், வளர வளர நண்பர்கள், திருமண உறவு, அதன் பிறகு உருவாகும் புதிய உறவுகள் எனக் கூட்டுத் தற்காப்பு ஆற்றல் ஒவ்வொரு மனிதர்க்கும் விரிந்து கொண்டே போகிறது. கூட்டுத் தற்காப்பு ஆற்றல் என்பது மனிதர்கள் ஒருவர்க்கொருவர் உதவிக் கொள்வது, ஒருவர்க்கொருவர் பாதுகாப்பாக இருப்பது என்பதாகும்.

குடும்பம் சார்ந்த தற்காப்பு ஆற்றல்கள் தொழில் சார்ந்த, அமைப்புகள் சார்ந்த, விரி வடைந்த, அரசியல் சார்ந்த, மொழி சார்ந்த, இனம் சார்ந்த தற்காப்பு ஆற்றல்களாக வளர்கின்றன. இவ்வாறான தற்காப்பு ஆற்றல்களில் ஒன்றுதான் சாதி!

வர்ண-_சாதிப் பிரிவுகளால் மேல்_- கீழ் என்று பிளவுபட்டுள்ள சமூகத்தில் “சாதி“ என்பது கூடுதல் தற்காப்பு ஆற்றலாகச் செயல்புரிகிறது. எனவே சாதி உணர்ச்சியானது அடிப்படையில் ஒரு தற்காப்புணர்ச்சியே! ஆகவே சாதி வழிப்பட்ட தற்காப்புணர்ச்சி எல்லா சாதி மக்களிடமும் இருக்கிறது.

தற்காப்பு உளவியலை அடிப்படையாகக் கொண்ட தற்காப் புணர்ச்சி எல்லா சாதிகளுக்கும் அடிப்படையில், தொடக்க நிலைப் பொதுத்தன்மையாக இருந்தாலும் அதன் வளர்ச்சி நிலை வெவ்வேறு தன்மை கொண்டுள்ளது. ஆதிக்க சாதிகளுக்குத் தங்களின் ஆதிக்க நிலையைப் பாதுகாத்துக் கொள்வதற்கும், பாதிக்கப்பட்ட சாதிகளுக்குத் தங்களின் இருப்பைப் பாதுகாத்துக் கொள்ளவும், இயன்ற வரை உரிமைகளை மீட்டுக் கொள்வதற்கும் சாதி உணர்ச்சி பயன்படுகிறது.

இந்தக் கூட்டுத் தற்காப் புணர்ச்சியைப் பயன்படுத்தியே சாதிச் சங்கங்களும் சாதிக் கட்சிகளும் நிறுவப்படுகின்றன. சனநாயகம், தேர்தல்வழி ஆட்சி முறை என்ற அடிப்படையில் தோன்றிய அரசியல் கட்சிகளைத் தன்னல சக்திகள் தங்களின் பதவி வேட்டைக்கும் பணவேட்டைக்கும் பயன் படுத்திக் கொள்வதைப் போல், கூட்டுத் தற்காப்புணர்ச்சியின் அடிப்படையில் நிறுவப்படும் சாதி அமைப்புகளைத் தன்னல சக்திகள் பயன்படுத்திக் கொள்கின்றன.

இப்பொழுது நாம் தொடவேண்டிய இடம், சீரழிவுகளை விளக்கிக் கொண்டிருப்பதன்று. நோயின் மூலக்காரணத்தை நாடி நோயைப் போக்கும் செயலில் ஈடுபடுவதே ஆகும்.

கூட்டுத் தற்காப்புணர்ச்சி மனிதர்களின் இயல்பூக்கம் ஆகும்! எல்லோருடைய மனதிலும் இயற்கையாய் உள்ள உணர்ச்சி ஆகும். குருதி உறவுக்கு வெளியே, நேரடியான உறவி னர்களுக்கு வெளியே, ஒரே சாதி என்ற காரணத்தால் முன்னறி முகமும் முன்உறவும் இல்லாத மக்களிடையே கூட சாதி அடிப்படையில் கூட்டுத் தற்காப்புணர்ச்சி காரணமாக “நாம், நம்மவர்“ என்ற உணர்வு ஏற்படுகிறது.

நீண்ட காலமாகத் தொடர்ந்து வரும் சாதித் தனித்தன்மை, ஒவ்வொரு சாதிக்கும் தனித் தன்மையுள்ள பொதுப்பழக்க வழக்கங்களையும் குறிப்பிட்ட வரம்புக்குட்பட்ட பொதுப் பண்புகளையும் வளர்த்துள்ளன. இப்பண்புக் கூறுகள் ஒரு சாதி மக்களிடம் “நாம் நம்மவர்“ என்ற உணர்வை உருவாக்குகின்றன. “இவர் “நம்ம ஆளு“ என்று கருதுகின்றனர். இந்த “நம்மாளு“ உணர்வு சக சாதியினருக்கு நல்ல வகையில் துணை நிற்கவும் தூண்டு கோலாக இருக்கிறது; கெட்ட வகையில் துணை நிற்கவும் தூண்டுகோலாக இருக்கிறது.

சாதிகளுக்கிடையே முரண்பாடோ அல்லது மோதலோ வரும்போது, “நாம் நம்மவர்“ உணர்ச்சி தீவிரமாகச் செயல்புரிகிறது. அப்போது “ஞாயம், அநியாயம்“ போன்றவற்றை அவர்களில் பலர் ஆய்வு செய்வதில்லை இரு தரப்புச் செய்திகளையும் சீர்தூக்கிப் பார்ப்பதுமில்லை. இவ்வாறான முரண்பாட்டு மற்றும் மோதல் நேரங்களில் தற்காலிகமாகத் தீவிரப்படும் சாதி ஒரு முனைத் திரட்சியை நிரந்தரமாகப் பயன்படுத்திக் கொள்ளதன்னல சக்திகள் முயல்கின்றன. தற்காலிக முரண்பாடுகளும் மோதல்களும் தன்னல சக்திகளால் தொடர் கதையாக மாற்றப்படுகின்றன.

முரண்பாடுகளும் மோதல்களும் நிகழும் காலத்தில் ஆதிக்க சாதிகளிடம் உருவாகும் ஒரு முனைத்திரட்சி, கீழ் நிலைச் சாதிகளிடம் ஏற்படும் ஒரு முனைத் திரட்சியை விடத் தீவிர மாகவும் கோரமாகவும் இருக்கிறது. காரணம், அனுபவிக்கின்ற மேலாதிக்கத்தை இழந்து விடுவோமோ, காலம் காலமாக நமக்குக் கீழே இருந்தவர்கள் நம்மோடு சரிசமமாக வந்து விடுவார்களோ, காலப் போக்கில் நம்மையும் விஞ்சி நமக்குமேலே போய் விடுவார்களோ என்ற அச்சம் ஆதிக்க சாதியினருக்கு ஏற்படுகிறது. அத்துடன், ஆதிக்க சாதியினர்க்குத் தங்களுக்குக் கீழே உள்ள சாதியினரை அடக்கி வைக்க வாய்ப்புகளும் வசதிகளும் அதிகம்!

ஆதிக்க சாதியினர் என்று இங்கு நாம் குறிப்பிடுவது பார்ப்பனர்களை மட்டுமன்று. பார்ப்பனர்கள் தமிழகம் தழுவிய நிலையிலும் அனைத்திந்திய அளவிலும் முதல்நிலை ஆதிக்க சாதியினர் ஆவர். பார்ப்பன ரல்லாத சாதிகள் பல வெவ்வேறு படிநிலைகளில் பல்வேறு காரணங்களால் தங்களுக்குக் கீழே உள்ள சாதிகளை வெவ்வேறு விகிதங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இவற்றை யெல்லாம் உள்ளடக்கியே இந்த இடத்தில் ஆதிக்க சாதிகள் என்ற சொற்கோவையைப் பயன்படுத்துகிறோம்.

தமிழ்ச் சமூக மக்களிடையே சமூக வழிப்பட்ட கூட்டுத் தற்காப்புணர்ச்சி மிகவும் குறைந்து போயுள்ள காலமிது. இதில் பொருளியல் காரணிகள் மிக முகாமையான பங்குவகிக்கின்றன. 1990களின் தொடக்கத்திலிருந்து, இந்தியாவில் உலகமயப்பொருளியல் கொள்கையானது தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த உலகமயம் என்பது சமூக உறவுக்கான இணைப்புக் கண்ணிகளை அறுத்து மனிதர்களை உதிரிகளாக்கி வருகிறது.

பன்னாட்டு முதலாளிய நிறுவனங்கள் மனிதர்களை வெறும் நுகர்வோராக மாற்றி விட்டன. மனித மாண்புகள், மனித உறவுகள் என்பவை தனி மனித சுதந்திரத்தின் மீது ஏற்றப்பட்ட சுமைகள் என்று கருதும்படி உலகமயப் பண்பாடு திரித்து விட்டது.

முதுமையுற்ற தாய் தந்தையரைக் கவனிக்காத பிள்ளைகள், சிறகடிக்கும் வருவம் வந்தவுடன் உடன்பிறப்புகளின் ஒட்டுறவை வெட்டிக் கொள்ளும் உடன் பிறப்புகள், அற்பக் காரணங்களுக் கெல்லாம் கணவன் - மனைவி உறவை முறித்துக் கொள்ளும் இளைஞர்கள் அன்றாடம் அதிகரித்து வருகின்றனர். இது உலகமயப் பண்பாடு அளித்த பரிசு!

தாய், தந்தை, அண்ணன், தம்பி, அக்காள், தங்கை, தமிழன், தமிழச்சி என்ற உறவுகளும் அடையாளங்களும் உலகமய முதலாளிகளுக்கு இடையூறுகள்! “வாடிக்கையாளர்“ என்ற ஒற்றை அடையாளமே உலகமய முதலாளிகளுக்கும் அவர்களின் ஊது குழல்களாக உள்ள ஊடகங்களுக்கும் தேவை! “வாடிக்கையாளர்“, “நுகர்வோர்“, “பார்வையாளர்“ என்ற உறவுகளே போதும் அவர்களுக்கு!

1848ஆம் ஆண்டு மார்க்சும் எங்கெல்சும் எழுதிய கம்யூனிட் கட்சி அறிக்கையில், முதலாளியம் மனித உறவுகளை வெறும் ரொக்கப்பட்டுவாடாவாக மாற்றிவிட்டது என்றும், பாசம் என்பது பணம் என்ற பனிப்பாறைக்குள் மூழ்கி உறைந்து விட்டது என்றும் குறிப்பிட்டார்கள். இன்றைய உலகமயச் சூழலில் முதலாளியம் மனித உறவுகளை நுகர்வோர் உறவாக மாற்றிச் சமுதாயம் என்ற கட்டுக் கோப்பை அடித்து நொறுக்கி, மனிதர்களை உதிரிகளாக மாற்றிக் கொண்டிருக்கிறது.

உலகமய அரசியல், மனிதர்களை வெறும் வாக்காளர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறது. முதலாளிகளுக்கு வாடிக்கையாளர்கள் - அரசியல்வாதிகளுக்கு வாக்காளர்கள்! இதுதான் இன்றைய மனித உறவின்சாரம் என்று முதலாளியமும் அதன் அரசியலும் மாற்றிக் கொண்டுள்ளன.

உதிரிகளாகப் போய்விட்ட மனிதர்களிடையே கூட்டுத் தற்காப்பு ஆற்றல் குறைந்து விடுகிறது. ஆனால் மனிதர்கள் சந்திக்கும் பல்வேறு நெருக்கடிகளிலிருந்து தப்பிக்க அவர்களுக்குக் கூட்டுத் தற்காப்பு ஆற்றல் தேவைப்படுகிறது. இது இன்றைய முரண்பாடு!

கூட்டுத் தற்காப்பு ஆற்றல்கள் தேவைப்படும்போது உதிரிகளாக உள்ள மனிதர்களுக்கு, அவர்களின் முன்னோர்கள் பாதுகாத்து வைத்த கேடயமாக இருப்பது சாதி. உலகமயச் சூழலிலும் சாதி தன்னைத் தக்க வைத்துக் கொள்கிறது. கணிப்பொறித் துறையில் பணியாற்றுவோர், தனியார்துறை, அரசுத் துறை நிறுவனங்களில் பணியாற்றுவோர் போன்றோரின் திருமண அழைப்பிதழ்களில் வழக்கத்திற்கு மாறாக எல்லா உறவினர் பெயரிலும் சாதி ஒட்டிக் கொண்டிருப்பதை இப்பொழுது அதிகமாகப் பார்க்க முடிகிறது.

பெருமை பாராட்டிக் கொள் வதற்காக மட்டுமின்றி, கூட்டுத் தற்காப்பு வலிமையைக் காட்டுவதற்காகவும் முன்பைவிட அதிகமாக இப்போது, பெயருடன் சாதிப் பெயரைச் சேர்த்து வெளிப்படுத்திக்கொள்கி றார்கள்.

இதற்கு மாற்று என்ன? கூட்டுத் தற்காப்பு வலிமை இருக்கிறது என்ற உளவியல் எல்லோருக்கும் தேவை. எவ்வகையான கூட்டுத் தற்காப்பு வலிமையை வளர்ப்பது மெய்யாகப் பயன்தரும் என்று பார்க்க வேண்டும்.

உலகெங்கும் ஒரே தேசிய இனம், ஒரு மொழி பேசும் மக்களினம் என்ற உறவின் அடிப்படையில்தான் கூட்டுத் தற்காப்பு ஆற்றலைப் பெற்றுள்ளார்கள்.

தமிழ்நாட்டு மக்கள் அனை வரும் அண்மைக் காலங்களில் எதிர்கொண்டு வரும் நெருக்கடிகள் பெரிதும் இன அடிப்படையில் உருவானவையே! காவிரி - முல்லைப் பெரியாறு உரிமைப் பறிப்புகள், பாலாறு, தென்பெண்ணையாறு ஆகியவற்றில் கட்டப்படும் தடுப்பணைகள் இவற்றால் ஏற்பட்ட பாதிப்புகள், கச்சத்தீவு பறிக்கப்பட்டது - 600 மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது - தமிழ் ஈழத்தில் இரண்டு இலட்சம் தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்பட்டது இவை போன்ற சிக்கல்கள் அனைத்தும் இன அடிப்படையில் ஏற்பட்டவை. தமிழகத்தின் அனைத்துச் சாதி மக்களையும் பாதித்தவை.

தமிழ் மொழியை அழிக்கும் வகையில் இந்தி ஆங்கில மொழிகளின் ஆதிக்கம்வளர்வது, நெய்வேலி மின்சாரம் கார்நாடக, கேரள ஆந்திர மாநிலங்களில் ஒளிபாய்ச்சுவது தமிழ்நாடு கொடும் மின் வெட்டில் சிக்கித் தவிப்பது. தமிழகத்தில் உற்பத்தியாகும் பெட்ரோலியமும் எரிவளியும் தமிழகத்திற்கென ஒதுக்கப் படாமல் பிற மாநிலங்களுக்குப் போவது என எத்தனையோ சிக்கல்கள் இன அடிப்படையில் வந்தவை.

தமிழகத்தில் வெளிமாநிலத்தவர் அன்றாடம் மிகை எண்ணிக்கையில் குடியேறி தமிழகத் தொழில், வணிகம், வேலை வாய்ப்பு, கல்வி ஆகிய வற்றைக் கைப்பற்றுவது, தமிழ் நாடு -தமிழர்களின் தாயகம் என்ற உரிமை பறிபோகும் அளவுக்கு அயலார் ஆதிக்கம் பெருகுவது போன்ற அனைத்தும் இன அடிப்படையில் உருவான தீங்குகளே!

மேற்சொல்லப்பட்ட தீங்குகள் அனைத்தும் தமிழக அனைத்துச் சாதி மக்களுக்கும் பாதிப்புகளை இழப்புகளை, நெருக்கடிகளை ஏற்படுத்தி உள்ளன. இவற்றை எதிர் கொள்ள எந்தத் தனிச்சாதி யாலும் முடியாது. எந்தச் சாதி அமைப்பும் சாதி அமைப்பில் அமைந்த கூட்டுத் தற்காப்பு ஆற்றலைப் பயன்படுத்தி மேற் கண்டவற்றிற்கு எதிராக எந்தப் போராட்டமும் நடத்தவில்லை.

மேற்கண்ட தீங்குகளுக்கு எதிராகத் தமிழகத்தில் போராட்டங்கள் நடந்திருக்கின்றன வென்றால் அவை அனைத்தும் தமிழினம் என்ற அடிப்படையில் அமைந்துள்ள கூட்டுத் தற்காப்பு ஆற்றலைப் பயன் படுத்தி நடந்தவையே!

தமிழினம் என்ற கூட்டுத் தற்காப்புணர்ச்சி தமிழ் மக்களிடம் இயல்பாய் இருக்கின்ற காரணத்தால்தான், அதனைக் கூட்டுத் தற்காப்பு ஆற்றலாக செயல்படுத்த முடிகிறது.

தமிழினம் என்ற தற்காப்பு உணர்ச்சி மேலிட, சாதி உணர்ச்சி குன்றும், சாதி ஏற்றத் தாழ்வுகள் குறையும், சாதியால் வேறுபட்ட தமிழ் மக்களிடம் இணக்க உணர்ச்சி வளரும்!

நம் முன்னோரின் பிறப்பு அடிப்படையிலும் தமிழ் மொழி அடிப்படையிலும் இயற்கை யாய் அமைந்த தமிழினம் என்ற இன உணர்ச்சி, உலகில் பிற தேசிய இனங்களிடம் வளர்ந்தது போல், இயல்பாய் வளர முடியாமல் இங்கே இரண்டு புனைவு இனங்கள் குறுக் கிட்டன. ஒன்று இந்தியன், இன் னொன்று திராவிடன்!

இந்தியன், திராவிடன் என்ற இரண்டும் மரபினமும் அன்று தேசிய இனமும் அன்று! இவ் விரு புனைவு இனங்களும் செயற்கையான ஒரு கூட்டுத் தற் காப்பு உணர்ச்சியை உருவாக்க முயன்றன. புனைவு இனப் பெயர்களால் கூட்டுத் தற்காப் புணர்ச்சியை ஒருகாலும் உரு வாக்க முடியாது. அவ்வி ரண்டும் தாம் வாழாதது மட்டு மின்றி தமிழின உணர்ச்சி யையும் தடுத்தன.

 (தொடரும்.)

Pin It