எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி 2008, சூலை 22 அன்று அறிவிக்கப்பட்ட “கடற்கரை மேலாண்மை மண்டலச் சட்ட வரைவு” இப்போது கைவிடப்படுவதாக இந்திய  அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே செயலில் உள்ள கடற்கரை ஒழுங்குமுறை மண்டலச் சட்டத்திற்கு பதிலாக மேற்கண்ட வரைவு முன் வைக்கப்பட்டது. மீனவர்களைக் கடல் தொழிலிலிருந்தும், கடற்கரையிலிருந்தும் அப்புறப்படுத்திவிட்டு, அவற்றைப் பன்னாட்டு நிறுவனங்களுக்குக் கையளிக்கும் சதித்திட்டமே கடற்கரை மேலாண்மைச்சட்டம் ஆகும். (விரிவிற்கு காண்க. புதிய தமிழர் கண்ணோட்டம் - அக்டோபர் -2008) இத்திட்டத்தை எதிர்த்து மீனவர் அமைப்புகளும், சில தொண்டு நிறுவனங்களும் தொடர் கிளர்ச்சியில் ஈடுபட்டன. இவற்றின் விளைவாக இந்திய அரசின் வனவளம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் 2009, சூலை 22 இல் இந்தச் சட்ட வரைவு காலாவதியாகும்படி விடப்படுவதாக அறிவித்துள்ளது.

கொலைக்காரத்தனமான இச்சட்டத்தை வரைந்து கொடுத்த எம்.எஸ். சுவாமிநாதன் குழுவே, அதைக் கைவிடும்படி கேட்டுக்  கொண்டதாகவும் அதனை ஏற்று அச்சட்டத்தை கைவிடுவதாகவும் அரசின் செய்திக் குறிப்பு கூறுகிறது. மக்கள் விரோதி சுவாமிநாதனைக் காப்பாற்ற இப்படியொரு நாடகம்! எப்படியோ, கைவிடப்பட்டவரை சரி!

Pin It