thamizhar kannottam logo

பெரியாறு அணைச் சிக்கலில் இரு கட்சி அரசு களும் (தி.மு.க. - அ.தி.மு.க.) அடிமை மனப்பான்மையுடன் செயல்படுவதால் நமது உரிமையை இன்றைய நாள் வரை நிலைநாட்ட முடியவில்லை. பெரியாறு அணை சம்பந்தப்பட்ட எல்லாப் பிரச்சினைக்கும் உச்ச நீதிமன் றத்தில் மனுப்போட்டு தங்கள் கடனை முடித்துக் கொள்கின்றனர்.

அணையின் பராமரிப்புப் பணிகளில் கேரள அரசு எவ்வித இடையூறும் செய்யக் கூடாதென உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவாகக் கூறிய பிறகும் கேரள அரசு, அணையைப் பராமரிக்க விடுவதில்லை. உரிய ஆணை பிறப்பிக்கவும் என உச்ச நீதிமன்றத்தை மறுபடியும் அணுகியுள்ளது தமிழக அரசு. இன்னும் எம்மாதிரியான ஆணையை உச்ச நீதிமன்றத்திடமிருந்து எதிர்பார்க்கிறார்கள்? உச்ச நீதிமன்றம் என்ன ஆணை யிட்டாலும் அதனை செயலாக்கும் உறுதி தமிழக அரசுக்கு இல்லாதபோது என்ன பயன்?

அணையின் பாதுகாப்பு தமிழக அரசின் அதிகாரத் திற்கு உட்பட்டது. 2006இல் நடுவண் அரசின் உள் துறையைச் சார்ந்த அணைகள் பாதுகாப்புக்குழு ஒரு நடுவண் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் அணையை ஆய்வு செய்து, “கேரளக் காவல்துறையினர் இருக்கும்வரை அணைக்குப் பாதுகாப்பு இல்லை” என அறிக்கை கொடுத்தப் பிறகும், தொடர் நடவடிக்கை எடுக்காமல் அணையின் பாதுகாப்பிற்கு “நடுவண் தொழில் பாதுகாப்புப் படையை” நியமிக்க ஆணையிட உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது தமிழக அரசு.

தேனியில் பணியாற்றிய ஒரு தமிழ் மாவட்ட ஆட்சியரின் செயல்பாடும் பிற மாநிலத்தைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியரின் செயல்பாடும் இங்கு ஒப்பு நோக்கப்பட்டுள்ளது.

நான் 2008இல் தேனி மாவட்டக் கட்டடக் கோட்ட செயற்பொறியாளராகப் பணியாற்றினேன். அப்பொழுது, பெரியாறு அணையின் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஐயப்பன் என்ற உதவி செயற் பொறியாளரைக் கேரள வனத்துறையினர் பணியாற்ற விடாது தடுத்து தாக்கியிருந்தனர். இது குறித்து புகார் அளிக்க பீர்மேடு காவல் நிலையம் சென்றவர் மீதே கேரள வனத்துறையினரைத் தாக்கியதாக வழக்குப்பதிவு செய்தது கேரள காவல்துறை! (பொறியாளர் ஐயப்பன் பதவி ஓய்வு பெற்றப் பிறகும், இந்த வழக்கு தொடர்பாக பீர்மேடு நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டிருந்தார்). அப்பொழுது, தேனி மாவட்ட ஆட்சியராக திரு. பசீர் அகமது (இவர் ஒரு தமிழர்) பணியில் இருந்தார்.

இந்த சம்பவம் நடந்த அடுத்த நாள் மாவட்ட ஆட்சியரது வீட்டு அலுவலகத்தில் (Camp Office), கூரை யில் நீர்க்கசிவு உள்ளதாக அதனை ஆய்வு செய்ய என்னை அழைத் திருந்தார். அப்பொழுது, மாவட்ட ஆட்சியர் இல்லம் கட்டியிருக்க வில்லை. நெடுஞ்சாலைத் துறையின் பயணியர் விடுதியில் சில மாற் றங்கள் செய்து கொடுக்கப் பட்டு, அதை இல்லமாகப் பயன்படுத்தி வந்தார். அதில் ஒரு அறையை வீட்டு அலுவலகமாகப் (Camp Office) பயன்படுத்தி வந்தார்.

நான் சென்றபோது, யாரு டனோ கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தார். நான் அவர் பேசி முடிக்கட்டு மென்று, ஒரு ஆசனத் தில் அமர்ந்து விட்டேன். முந்தின நாள் பெரியாறு அணையில் நடந்த சம்பவத்தை யாருக்கோ தகவல் அனுப்பிக் கொண்டிருந்தார். “நம் முடைய பொதுப் பணித்துறைப் பொறியாளர்கள் தகராறு பண்ணி விட்டார்கள். அவர்களால் எப்போ தும் பிரச் சினைதான்” என்ற பாணி யில் இருந்தது அவரது பேச்சு.

அவர் பேசி முடித்ததும், “ஐயா எங்களது பொறியாளர்களைப் பணி செய்யவிடாது தடுத்து வன்முறை யில் ஈடுபட்டுள்ளார்கள் கேரள வனத்துறையினர். நீங்கள் உரிய நடவடிக்கை எடுக்காமல் தவறானத் தகவலைக் கொடுத்துக் கொண்டிருக் கிறீர்கள். எங்கள் பொறியாளர் சங் கத்திற்கு இது தெரிந்தால் விளைவு விபரீதமாகிவிடும்” என்றேன்.

அப்போதுதான் என்னைப் பார்த்து அவர் அதிர்ச்சியடைந்து, “நீங்கள் எப்போது வந்தீர்கள்? உங்களை வைத்துக் கொண்டு பேசி விட்டேனா?” என அதிர்ச்சி காட்டி னாரே தவிர, தனது செயல் குறித்து எந்த வருத்தமோ குற்ற உணர்வோ இல்லை.

2007இல் நான் மதுரையில் நீர் வள ஆதார அமைப்புத் தலைமைப் பொறியாளராகப் பணியாற்றினேன். அப்போது, பெப்ரவரி மாதத்தில் ஒருநாள் நான் அலுவலகத்தில் இருந்த போது, தேக்கடியில் பணி யாற்றும் நமது பொறியாளர் களிடமிருந்து காலை 11 மணியள வில் எனக்கொரு தொலைப் பேசி அழைப்பு. (தேக்கடியில் இரு துணைக் கோட்டங்களும், 6 பிரிவு களும் பெரியாறு அணை பராமரிப் புப் பணியில் உள்ளன). அலுவலகத் தைச் சுற்றி அரம்பர்கள் (ரவுடிகள்) கூட்டம் சூழ்ந்து கொண்டு தாக்குவ தாகவும், அலுவலகர்கள் அனை வரும் கதவைப் பூட்டிக் கொண்டு உள்ளே இருப்பதாகவும் தங்கள் உயிருக்கு ஆபத்து எனவும் பொறி யாளர்கள் பதறினார்கள். நான் உடனே நடவடிக்கை எடுப்பதாக வும் தைரியமாக இருக்கும் படியும் அவர்களுக்கு ஆறுதல் கூறினேன்.

ஆபத்தில் உள்ள பொறியாளர் களுக்கு ஆறுதல் சொல்லி விட் டேனே தவிர என்ன செய்வது எனக் குழப்பமாக இருந்தது. நான் கிளம்பி தேக்கடி போய்ச் சேர 4 மணிநேரம் ஆகும். தனி மனி தனாகப் போய் என்ன செய்வது?

தேனி மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு விவரம் தெரி வித்து, இது சட்டம் ஒழுங்கு பிரச் சினை, நமது பொறியாளர்கள் உயிருக்கு ஆபத்து, உரிய நட வடிக்கை எடுங்கள் எனக் கூறினேன்.

அப்பொழுது தேனியில் மா வட்ட ஆட்சியராகத் திரு. ஹர் சகாய் மீனா என்ற இராசஸ் தான் காரர் இருந்தார். அவர், “கவலைப் படாதீர்கள், நான் பார்த்துக் கொள் கிறேன். உங்கள் பொறியா ளர்களை அலுவலகத்திற்கு உள்ளேயே இருக் கச் சொல்லுங்கள். வெளியே செல்ல வேண்டாம்” எனக் கேட்டுக் கொண்டார்.

அடுத்த, அரை மணி நேரத்தில் தேக்கடியில் உள்ள நமது பொறியா ளர்களிடமிருந்து அழைப்பு வந்தது. ரவுடிகள் கேரளக் குமுளி நகர் காவல்துறையினரால் விரட்டி அடிக்கப்பட்டதாகவும், தற்சமயம் பிரச்சினை ஏதுமில்லை என்றும் கூறினார்கள். எனக்கு, மிகுந்த வியப் பாக இருந்தது. மாவட்ட ஆட்சி யாளரின் உதவியாளரைத் தொடர்பு கொண்டு மாவட்ட ஆட்சியர் எடுத்த நடவடிக்கை விவரம் கேட் டேன்.

தேனி மாவட்ட ஆட்சியர் கேரள இடுக்கி மாவட்ட ஆட்சி யரைத் தொடர்பு கொண்டு நிலை மையை விளக்கி, “நீங்கள் நட வடிக்கை எடுக்கிறீர்களா? அல்லது நான் தேனி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளரை தேக்கடிக்கு அனுப்பி கலவரத்தை அடக்கட் டுமா?” எனக் கேட்டுள்ளார். இடுக்கி மாவட்ட ஆட்சியர்தானே நட வடிக்கை எடுப்பதாக உறுதியளித்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

இன்னொரு சமயம் தேனி மாவட்ட ஆட்சியர் ஹர்சகாய் மீனாவிடம் பேசிக் கொண்டிருந்த போது என்னிடம், “உங்கள் தமிழர் கள் முழு முட்டாள்களா? அல்லது உலகம் தெரியாத அப்பாவிகளா? எனப் புரிந்து கொள்ள முடிய வில்லை” என்றார். ஏன் எனக் கேட் டேன். “கர்நாடகாவில் தேவ கவுடா என ஒரு முதல்வர் இருந் தார். சிறிது காலம் பிரதமராகவும் இருந்தார். தனது ஆட்சிக்காலத்தில் காவிரி யிலிருந்து ஒரு சொட்டு நீர்கூட தமிழகத்துக்குத் தரமாட்டோம் எனக் கூறியவர். அவர் தமிழகத் துக்கு சாமி கும்பிட வருகிறார். (அந் நேரம் கும்பகோணத்திற்கு நவக்கி ரக தரிசனத்திற்கு வந்திருந்தார்). அவருக்கு கட் அவுட் வைத்து மேள தாளத்துடன், வரவேற்பு கொடுக்கி றீர்கள். இதுவே இராசஸ்தானாக இருந்தால் அவர் உள்ளே வர முடி யாது. வந்தால் வெளியேற முடி யாது” என்றார். இவர்கள் அல் லவோ மனிதர்கள் என்று என்னால் ஏக்கப் பெருமூச்சு தான் விட முடிந் தது.

தேவகவுடாவின் கட்சிக்கு தமிழ்நாட்டிலும் கிளைகள் உண்டு. தேர்தலிலும் பங்கேற்கிறார்கள்.

2011 திசம்பர் மாதம் முல்லைப் பெரியாறு பிரச்சினை உச்சத்தில் இருந்த நேரம். தமிழகத்திலிருந்து, கேரளாவுக்கு கூலி வேலை செய்வ தற்கு சென்ற 250 பெண் கூலித் தொழிலாளிகளை கேரள அரசியல் ரவுடிகள் பிடித்து வைத்துக் கொண்டு, இரண்டு நாட்கள் அவர் களை பல்வேறு வகையில் அசிங்கப் படுத்திக் கொண்டிருந்தனர். தகவல் அவர்களிட மிருந்து கைப்பேசி மூலமாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் அவர்களது உறவினர் களுக்குத் தெரிய வந்தது.

தமிழக முதல்வர் என்ன நட வடிக்கை எடுத்திருக்க வேண்டும்? மாவட்ட ஆட்சியர் ஹர்சகாய் மீனா எடுத்த நடவடிக்கை போல, கேரள முதல்வர் உம்மன் சாண்டி யைத் தொடர்பு கொண்டு “தமிழக பெண் கூலித் தொழிலாளர்களை பாதுகாப்புடன் அனுப்ப ஏற்பாடு செய்கிறீர்களா? இல்லை நான் தமிழகக் காவல் படையை அனுப்பி அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யவா?” எனக் கேட்டிருந்தால், உம்மன்சாண்டி அலறி அடித்துக் கொண்டு நடவடிக்கை எடுத்திருப் பார்.

மாறாக, இத் தகவலறிந்து தன் னிச்சையாக கம்பத்தில் ஆண்-- பெண் என பொதுமக்கள் 1 இலட் சம் பேர் கூடி கையில் பெருக்கு மாறுடன் குமுளி நோக்கி சென்றவர் களை தமிழகக் காவல் துறையினர் அடித்து விரட்டினர். அந்தக் காவல் படைக்குத் தலைமை தாங்கியவர், அப்பொழுது டி.ஐ.ஜி. ((D.I.G.) யாக இருந்த ஜார்ஜ் என்ற கேரள மாநிலத்தவர். அதற்குப் பரிசாகவோ என்னவோ, தற்போது சென்னை மாநகரின் ஆணையராக அவர் பணியாற்றுகிறார்.

தமிழகத்தை தி.மு.க. - அ.தி.மு.க. ஆளும்வரை தமிழனுக்குப் பாது காப்பில்லை. தமிழர்கள் உரிமைகள் பாதுகாக்கப்படப் போவதுமில்லை. தமிழன் சுயமரியாதையுடன் வாழ முடியாது என்பதுதான் கடந்த கால வரலாறு!

Pin It

பாவேந்தர் பாரதிதாசன் 125ஆம் ஆண்டு விழாக் கருத்தரங்கிற்குத் தலைமை ஏற்றிருக்கும் பாவலர் முழுநிலவன் அவர்களே, பாவரங்கில் கலந்து கொண்டு எழுச்சிப்பாக்கள் வழங்கிய பாவலர் நெல்லை இராமச்சந்திரன் அவர்களே, பாவலர் அருள்மொழி அவர்களே, பாவலர் பிரகாசு பாரதி அவர்களே,

சிறப்புரை அரங்கத்தில் சிறப்பான ஆய்வுரை வழங்கிய பேராசிரியர் முனைவர் வீ. அரசு அவர்களே, முனைவர் தி. பரமேசுவரி அவர்களே, இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்துக் கொண்டிருக்கும் ஐயா அருகோ அவர்களே, மறைமலை அடிகளார் பேரன் ஐயா தாயுமானவன் அவர்களே, அண்ணல் தங்கோ அவர்கள் பேரன் தோழர் அருட்செல்வன் அவர்களே, மா.பொ.சி. பேத்தி முனைவர் பரமேசுவரி அவர்களை முன்பே விளித்து விட்டேன். இங்கு குழுமியிருக்கும் சான்றோர்களே, சகோதரிகளே, நண்பர்களே, தோழர் களே!

இங்கே ஐயா அருகோ அவர்கள் எனக்கு சால்வை அணிவித்துப் பாராட்டினார். அருகோ அவர்களுக்குத் தான் நாங்கள் சால்வை அணிவித்துப் பாராட் டியிருக்க வேண்டும். தமிழ்த் தேசியக் களத்தில் அவர் எங்களுக்கு முன்னோடி, தொடர்ந்து அக்களத்தில் வழிகாட்டிக் கொண்டிருப்பவர்.

இந்த விழாவில் பாவலர் பொன்னடியான் அவர் களை வரவழைத்துச் சிறப்பித்திருக்க வேண்டும். அவர் சென்னையில்தான் வாழ்கிறார். பாவேந்தர் பாரதிதா சனின் நேரடி மாணவர்களில் உயிரோடிருப்பவர் பாவலர் பொன்னடியான். புரட்சிப் பாவலருடன் கூட இருந்தவர். முன்கூட்டியே இந்தச் சிந்தனை எங்களுக்கு வரவில்லை. இன்று பிற்பகல் அருட்செல்வன் நினை வூட்டினார். பொன்னடியான் அவர்களால் இங்கு வர முடியாத நிலை. அவர் பெருங்குடியில் உள்ளேன் என்றார். அவருடன் நான் தொடர்பு கொண்டு பேசி னேன். வேறொரு வாய்ப்பில் பொன்னடியான் அவர் களை நாம் சிறப்பிக்க வேண்டும்.

இந்த நிகழ்ச்சியில் இளம் மாணவி சரண்யா சிறப் பாக சிற்றுரை வழங்கினார். அவரைப் பாராட்ட வேண்டும்.

தமிழ்க் கலை இலக்கியப் பேரவை பாவேந்தரின் 125ஆம் ஆண்டு விழாவைப் பல இடங்களில் நடத்தி வருகிறது. இன்று சென்னையில் இங்கு இவ்விழாவை நடத்திக் கொண்டுள்ளோம். ஏற்கெனவே, ஓசூர், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் நடந்த பாவேந்தர் விழாக்களில் நான் கலந்து கொண்டேன். கோபியிலும் இவ்விழாவை த.க.இ.பே. நடத்தியுள்ளது.

கோவேந்தர்களை விடவும் பாவேந்தர்கள் வரலாற் றில் நிலைத்து வாழ்கிறார்கள். எத்தனையோ மன் னர்கள் ஆண்டிருக்கிறார்கள். அவர்களில் கரிகால் பெருவளத்தான், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், இராசராசன், இராசேந்திரச் சோழன் போன்ற சில மன்னர்கள் மட்டுமே மக்கள் மனத்தில் தொடர்ந்து நிற்கிறார்கள். கபிலர் இல்லை என்றால் பாரியின் பெருமைகூட வரலாற்றில் நின்றிருக்குமா என்பது கேள்விக்குறிதான்!

கலை இலக்கியப் படைப்பாளிகள் மக்களின் மனத் துடன் பேசுகிறார்கள்; மனத்துடன் உரையாடுகிறார்கள். அதனால் அவர்கள் காலம் கடந்தும் வாழ்கிறார்கள்.

சிறந்த கலை இலக்கியப் படைப் பாளிகள் தாங்கள் வாழும் சமூகத்தின் - தாங்கள் வாழும் இனத்தின் முகமாக - ஆன்மாவாக விளங்கு கிறார்கள். டால்ஸ் டாய் இரசிய மக்களின் முகமாக விளங்கினார். அவரின் சமகாலப் படைப்பாளிகள் டால்ஸ்டாயை அப்படித் தான் அழைத்தனர்.

தாம் வாழ்ந்த காலத்தில் இருந்த ரசிய சமூகத்தின் சிக்கல்களை விவாதித்து - அச்சமூகத்தை அடுத்த கட் டத்திற்கு முன்னோக்கி நகர்த்துவதற்குரிய கருத்து களைத் தம் படைப்பு களில் வழங்கினார் டால்ஸ்டாய்.

ஒரு படைப்பாளி தான் வாழும் சமூகத்திற்குத், தன் இன மக்களுக்கு முழுமையாகத் தன்னை ஒப் படைத்துக் கொள்ளும் போதுதான் அப்படைப்பாளி அம் மக்களின் அடையாளமாக - முகமாக மாற முடியும்!

“நமக்குத் தொழில் கவிதை; நாட்டுக்குழைத்தல்; இமைப்பொ ழுதும் சோராதிருத்தல்” என்று தன் பணி பற்றிப் பாரதி பிரகடனம் செய்தான். அப்படியே அவன் வாழ்ந்தான்.

எனவே, இருபதாம் நூற்றாண்டில் தமிழ் மக்களின் அடையாளமாகப் பாரதி விளங்கினான். பாரதிக்குப் பின் தமிழர்களின் முழுமையான முகமாக, தமிழர்களின் ஆன்மாவாக விளங்கியவன் பாவேந்தன்!

இப்பொழுது தமிழில் பாரதியாரைப் போல், பாவேந்தரைப் போல் எழுத்தாற்றல் பெற்றவர்கள் இல்லையா? இருக்கிறார்கள். அவர்கள் ஏன் தமிழர் களின் முகமாக மாற முடியவில்லை. அவர்கள் முழுமை யாகத் தமிழர்களுக்குத் தங்களை ஒப்படைத்துக் கொள்ளவில்லை. எழுத்துக் கலையில் வல்லவர்களாக இருக்கிறார்கள். அதற்குமேல் அவர்கள் தங்களைத் தாம் வாழும் சமூக மக்களுக்கு ஒப்படைத்துக் கொள்ள வில்லை.

நம் தமிழினம் ஆங்கிலேயர்களுக்கு முன்பே அறிவு வளர்ச்சி பெற்ற இனம். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மொழியியல் குறித்து எழுதிய தொல்காப்பியர் பிறந்த இனம். அப்போது, ஆங்கிலேயர்களுக்கு அவர் களுடைய மொழியே பிறக்கவில்லை.

ஐரோப்பாவில் கி.பி. 13ஆம் நூற்றாண்டில்தான் Philology என்ற மொழியியல் தோன்றியதாக ஆய் வாளர்கள் கூறுகிறார்கள். மொழி குறித்த முழு அறிவு தமிழர்களுக்கு இருந்தது. அதுபோல் தேசம், இனம் குறித்த சிந்தனைகள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் பிருந்தே தமிழர்களுக்கு இருந்து வருகிறது.

தொல்காப்பியத்திற்கு அணிந் துரை வழங்கிய பனம்பாரனர் “வட வேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்உலகம்” என்று கூறித் தமிழர் தாயகத்தை வரையறுக்கிறார். அக்காலத்தில் தமிழ் நாட்டில் பல சிற்றரசுகள் இருந்திருக்கும். ஆனால், தமிழர்களுக்குத் தாயகம்,- தமிழர்களுக்கு நாடு ஒன்று தான் என்று தமிழ் அறிஞர்கள் கருதினர். அது தமிழ கம்! தமிழ் பேசப்படாத இடங்களை மொழி பெயர் தேயம் என்றனர். நம் மொழி பேசும் இடம் நம் தேயம் என்றனர். அந்தக் காலத்திலேயே தமிழர்களுக்குத் தேசம் குறித்த புரிதல் இருந்தது. ஒற்றை அரசின் கீழ் உள்ள தேசமாக உருவெடுப்பது பின்னர் - முதலாளிய உற்பத்தி முறை வளர்ச்சிக் காலத்தில் இருக்கலாம். ஆனால் தேசம் குறித்த கருத்தியல் மூவாயிரம் ஆண்டு களுக்கு முன்பே தமிழர்களுக்கு இருந்தது.

எப்பொழுதும் கருத்தியல் முந்திப் பிறக்கும். அதன் பிறகே அக்கருத்தியலுக்கான நடைமுறை வடிவம் கிடைக்கும்.

சங்க இலக்கியத்தில் தமிழகம் என்ற சொல் வருகிறது. சிலப்பதிகாரத்தில் தமிழ்நாடு என்ற சொல் வருகிறது.

இமிழ் கடல் வேலியைத் தமிழ் நாடாக்கிய

இது நீ கருதினை ஆயின், ஏற்பவர்

முது நீர் உலகின் முழுவதும் இல்லை;

இமயமால்வரைக்கு எம்கோன் செல்வது

கடவுள் எழுதவோர் கற்கே;

என்கிறது சிலப்பதிகாரம்!

“செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்” என்ற தொல்காப்பிய நூற்பா, கேள்வியும் பதிலும் குழப்ப மில்லாமல் இருக்கவேண்டும் என்று கூறுகிறது. “நான் மொழியால் தமிழன், இனத்தால் திராவிடன், நாட்டால் இந்தியன், கண்டத்தால் ஆசியன், உயிரினத் தால் ஒரு ஜந்து..” என்பது போல் இங்கே ஒரு மூத்த தலைவர் பேசிக் கொண்டுள்ளார். குழப்பமாகப் பேசுவ தற்கு இது “சிறந்த” எடுத்துக்காட்டு.

தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய இளம்பூரணர் குழப்ப மில்லாத வினாவுக்கும் விடைக்கும் எடுத்துக் காட்டு ஒன்று கூறினார். “நும் நாடு யாது என்றால் தமிழ்நாடு என்றல்” என்றார். இளம்பூரணர் காலம் கி.பி. 11ஆம் நூற்றாண்டு என்பர். அப்போது சோழ நாடு இருந்தது. பாண்டிய நாடு இருந்தது. தமிழ்நாடு எங்கே இருந்தது? தமிழ்நாட்டிற்குள்தான் சோழநாடு, பாண்டிய நாடு, சேரநாடு ஆகியவை இருக்கின்றன என்ற தேசக் கோட்பாடு தமிழர்களிடம் அப்போதே இருந்தது.

அப்போதெல்லாம் ஐரோப்பியர்களுக்குத் தேசக் கோட்பாடும் கிடையாது.

மொழி, இனக் கோட்பாடுகளும் இல்லை. தமிழ் மொழி, தமிழர், தமிழ்நாடு என்ற கோட்பாடு இரண் டாயிரம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் களுக்கு இருந்தது.

சங்க காலத்திற்குப் பிறகு, தமிழர்கள் அயலார் ஆட்சிகளுக்கு அடிமைகள் ஆகிவிட்டோம். களப்பிரர், பல்லவர் ஆகிய அயல் இனத்தார்க்கு அடிமைகள் ஆனோம். பிற்காலச் சோழர்கள் ஆட்சி, பாண்டியர்கள் ஆட்சி என்பவை தமிழர்கள் ஆட்சியாக சிறிது காலம் இயங்கியது. பின்னர், சுல்தான்கள் ஆட்சி, நாயக்க மன் னர்கள், தளபதிகள் ஆட்சியில் சிக்குண்டோம். அதன் பிறகு, வெள் ளையர்க்கு அடிமை ஆனோம். அதனால் நம் இன வளர்ச்சி தடைப்பட்டது.

ஐரோப்பியர்கள் 15ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தான் வளர்ச்சி அடைந்தார்கள். அதை அவர்கள் மறு மலர்ச்சிக் காலம் என்றார்கள். “நம் இனம் ஏற்கெனவே மலர்ச்சி பெற்றிருந்தது, பின்னர் வாடிப்போனது. இப்போது மறுபடியும் அந்த மலர் மலர்கிறது” என்ற பொருளில்தான் ஆங்கிலேயேர்கள் மறுமலர்ச்சிக் காலம் என்றார்கள். Renaissance என்பது அதுதான்!

பிரடெரிக் எங்கெல்ஸ் ஐரோப் பிய மறுமலர்ச்சி பற்றிக் குறிப்பிடும் போது, ரோமாபுரி நாகரிகத்தின் புதையுண்ட கட்டட இடிபாடுகளிலிருந்து தங்களின் வரலாற்றுப் பெருமிதங்களைக்கண்டறிந்தனர் என்றார்.

அப்படி வரலாற்றுப் பெருமை யுள்ள நாம் மீண்டும் பெருமிதங்களைப் படைக்க வேண்டும் என்று கூறி சமகால மக்களைத் தட்டி எழுப்பினர் என்பார். தமிழர் களும் தங்கள் மறுமலர்ச்சியில் வரலாற்றுப் பெரு மிதங்களைச் சொன் னார்கள். பாரதியும் பாரதிதாசனும் இப்பெருமிதங்களைச் சொன்னார்கள்.

நாம் நீண்ட காலம் அடிமை வாழ்வு வாழ்ந்ததால் நம் சமூகத்தில் மறுமலர்ச்சிக் காலம் ஐரோப்பாவில் தோன்றிய காலத்தில் தோன்றவில்லை. நீராவி எந்திரம் உருவாக்கியதுபோல ஐரோப்பாவில் உருவான தொழில் நுட்பப் புரட்சியும் தமிழ்ச் சமூகத்தில் அப்போது உருவாகவில்லை.

தமிழ் இலக்கிய மறுமலர்ச்சியின் தொடக்கப் புள்ளியாக வள்ளலார் இருக்கிறார். அது ஒரு தொடக்க நிலை. அதிலிருந்து பாய்ந்து அடுத்த கட்டத்திற்குத் தமிழ் இலக்கியத் தைக் கொண்டு சென்றவர் பாரதி யார். பாரதியிடமிருந்து உரம் பெற்று பாரதியைவிடக் கூடு தலாகப் பாய்ந்தவர் பாரதிதாசன்.

மறைமலைஅடிகள் 1916-இல் தொடங்கிய தனித் தமிழ் இயக்கம், தமிழில் வடமொழி ஆதிக்கத்தையும் வடமொழிக் கலப்பையும் நீக்கித் தனித்தமிழில் எழுதுவது, பேசுவது, அதுபோல் தமிழர்களின் குடும்பச் சடங்குகள் - கோயில் பூசைகள் ஆகியவற்றிலிருந்து பார்ப்பனர்களையும் வடமொழியையும் நீக்குவது என்ற கொள்கைகளைக் கொண்டது.

மக்களைப் பாடிய பாரதியின் தாக்கம், பாரதியின் எளியநடை, பெரியாரின் மூடநம்பிக்கை எதிர்ப்பு, பெண்ணுரிமை, கம்யூனிஸ்ட்டுகளின் பொதுவுடை மைக் கருத்துகள், உழைப்பாளர் உரிமைகள், மறை மலை அடிகளின் தனித்தமிழ்; தமிழர் எழுச்சி இவை அனைத்தின் சங்கமிப்பாகவும், புதிய வார்ப்பாகவும் உருவானவர்தான் பாரதிதாசன்!

“சாதி ஒழித்தல் ஒன்று - நல்ல தமிழ் வளர்த்தல் மற்றொன்று; இதில் பாதியை நாடு மறந்தால் மறுபாதி துலங்குவதில்லையாம்” என்று எனக்குப் பாரதி சொல்லித் தந்தார்” என்று பாவேந்தர் கூறு கிறார்.

“எஞ்சாதிக்கு இவர் சாதி இழிவென்று சண்டையிட் டுப் பஞ்சாகிப் போனாரடி சகியே” என்று சாதி ஆதிக்கத்தைச் சாடுகிறார் பாவேந்தர். தொடர்ந்து சாதி ஒழிப்பை எழுதி வந்தார் பாவேந்தர்.

ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வைப் போற்றினார்.

“சேரிப் பறையர் என்றும்

தீண்டாதோர் என்றும் சொல்லும்

வீரர் நம் உற்றாரடி” என்று பாடினார்.

“இருட்டறையில் உள்ளதடா உலகம்

சாதி இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே

மருட்டுகின்ற மதத்தலைவர் வாழ்கின்றாரே

வாயடியும் கையடியும் மறைவதெந்நாள்? “ என்று கேட்டார்.

பெண்ணுரிமையைப் பேசினார். சஞ்சீவிபர்வ தத்தின்சாரலில், கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ஒரு விவாதம் நடப்பது போன்ற காட்சியை உருவாக் கினார். மனைவியைப் பேச விடாமல் தடுத்துக் கணவர் பேசுவதுபோல் ஒரு காட்சி! அப்போது அந்த மனைவி கூறுவாள்:

“பெண்ணுக்குப் பேச்சுரிமை வேண்டாம் என் கின்றீரோ?

மண்ணுக்கும் கேடாய் மதித்தீரோ பெண்ணினத்தை

பெண்ணடிமை தீரும்மட்டும் பேசுந்திருநாட்டின்

மண்ணடிமை தீர்ந்துவருதல் முயற்கொம்பே

ஊமை என்று பெண்ணை உரைக்கு மட்டும்

ஆமை நிலைதான் ஆடவர்க்கும் உண்டு! “

என்பாள். இங்கே பாவேந்தர் ஓர் அருமையான வரலாற்று வழிப்பட்ட, உளவியல் வழிப்பட்ட கருத் தைக் கூறுகிறார். பெண்ணடிமைத்தனம் நீடிக்கும் வரை ஆணுக்கும் உண்மையான விடுதலை கிடையாது என்பதுதான் அந்த உயர்ந்த கருத்து!

அடிமைத்தனத்திற்கும் அண்டிப் பிழைக்கும் இழி விற்கும் பழக்கப் பட்டு, தன்மானமிழந்து கிடந்த தமிழர் களைப் பார்த்துப் பாடினார் பாவேந்தர். இன்றைக்கும் இப்பாடல் பொருத்தமாய் உள்ளது. தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் அரசியல் மக்களிடையே உருவாக் கியுள்ள அடிமை மனப்பான்மையை, அண்டிப் பிழைக் கும் இழிவை அப்படியே எடுத்துச் சொல்வது போல் இப்பாடல் உள்ளது. ஆனால் இதனை 1938-இல் பாவேந்தர் எழுதினார்.

“பள்ளம் பறிப்பாய் பாதாளத்தின்

அடிப்புறம் நோக்கி அழுந்துக! அழுந்துக!

பள்ளம் தனில்விழும் பிள்ளைப் பூச்சியே

தலையைத் தாழ்த்து! முகத்தைத் தாழ்த்து!

தோளையும் உதட்டையும் தொங்கவை ஈன

உளத்தை உடலை உயிரைச் சுருக்கு

நக்கிக் குடிஅதை நல்லதென்று சொல்”

என்றெல்லாம் அடிமைத் தனத்தைக் கூறிவிட்டு பின்னர் அதே பாட்டில், அந்த அடிமையை எழுப்பு கிறார் பாவேந்தர்.

“மனிதரில் நீயுமோர் மனிதன் மண்ணன்று

இமைதிற எழுந்து நன்றாய் எண்ணுவாய்

தோளை உயர்த்து சுடர்முகம் தூக்கு

மீசையை முறுக்கு மேலே ஏற்று

விழித்த விழியில் மேதினிக்கு ஒளிசெய்

நகைப்பை முழக்கு நடத்து உலகத்தை!

...

ஏறு வானை இடிக்கும் மலைமேல்

ஏறு விடாமல் ஏறு ஏறு மேன்மேல்

ஏறிநின்று பாரடா எங்கும்

எங்கும் பாரடா இப்புவி மக்களை

பாரடா உனது மானிடப் பரப்பை

பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்!”

தன்னம்பிக்கையும், தன்மானமும் கொண்ட தமிழ் மக்கள் - உலக மக்களை உறவாக நினைக்கும் பரந்த மனம் கொள்ள வேண்டும் என்ற மனித நேயத்தை-- உலக நேயத்தை வெளிப்படுத்துகிறார். இனவெறிக் கருத்தோ - மொழிவெறிக் கருத்தோ பாரதிதாசனிடம் இல்லை.

மொழியை வெறும் தகவல் பரிமாற்றக் கருவி என்று கூறும் வறட்டுப்பார்வை பலரிடம் உண்டு. ஆனால், பாவேந்தர், சமூக அறிவியல்படி மொழியின் பாத்திரத்தைக் கூறுகிறார்.

“இனத்தைச் செய்தது மொழிதான் - இனத்தின்

மனத்தைச் செய்தது மொழிதான்” என்றார்.

ஓர் இனம் அல்லது ஒரு தேசிய இனம் உருவா வதற்கு முதல் தேவை மொழியாகும். அதேபோல், அந்த இனத்தில் உள்ள மக்களிடையே நாம் ஒரே இனத்தைச் சேர்ந் தல்வர்கள் “நாம், நம்மவர்” என்ற (We Feeling) உணர்வை -அவ்வாறான உளவியல் உருவாக்கத்தை உருவாக்குவது மொழி. தேசிய இன உருவாக்கம் குறித்துப் பேசும்போது, ஜே.வி.ஸ்டாலின் இதைக் குறிப்பிடுகிறார்.

இந்த சமூக அறிவியலைப் புரட்சிப் பாவலர் பாரதிதாசன் தம் சிந்தனை ஆற்றல் கொண்டு சொல் கிறார். இனத்தின் மனத்தை அதாவது உளவியல் உருவாக்கத்தைச் செய்தது மொழிதான் என்கிறார்.

“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்

மங்காத தமிழென்று சங்கே முழங்கு”

என்று பாவேந்தர் பாடியது வெறும் மொழிப் பாராட்டன்று. அது ஒரு கோட்பாடு! தமிழ்மொழி அழிந்தால் தமிழர்கள் ஒரு தேசிய இனமாக இருக்க மாட்டார்கள். பல்வேறு அயல் மொழிகளைப் பேசிக் கொண்டு உதிரிகளாகி சொந்த மண்ணிலேயே அடுத்த இனத்தாரை அண்டிப் பிழைக்கும் இரண்டாம்தர, மூன்றாம் தர மக்களாகி விடுவர். அதனால் தான் “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் - மங்காத தமிழென்று சங்கே முழங்கு” என்றார்.

பெரியார் தலைமையில் இயங்கியதால் திராவிடர் - திராவிடம் என்ற கருத்துகளை ஏற்றுக் கவிதைகள் எழுதி வந்தார் பாரதிதாசன். பின்னர், 1950களின் பிற்பகுதியில் திராவிடர் என்று இருந்த இடங்களை தமிழர் என்று மாற்றினார். 1956 அல்லது 1958 என்று நினைக்கிறேன். தனித்தமிழ் நாடு விடுதலை கேட்ட ஆதித்தனாரின் நாம் தமிழர் கட்சி மாநாட்டில் பாரதி தாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ஆதித் தனார் “தாயின் மேல் ஆணை” என்ற தலைப்பில் பாவேந்தரின் தமிழர் எழுச்சிப் பாடல்களைத் தொகுத்து வெளியிட்டார். அதில், “திராவிடர்” என்று இருந்த இடங்களில் தமிழர் என்று மாற்றினார் பாவேந்தர்.

பாரதிதாசன் ஆய்வில் கரை கண்ட ஐயா இளவரசு அவர்களிடம் திராவிடர் என்பதைத் தமிழர் என்று பாரதிதாசனே மாற்றிய விவரம் பற்றிக் கேட்டேன். “ஆம் பாரதிதாசனே அப்படி மாற்றினார். குடும்ப விளக்கு நூலை மறுபடி பதிப்பிக்கும் போது, இன் னின்ன இடங்களில் திராவிடர் என்பதை தமிழர் என்று மாற்றினார்” என்று இளவரசு குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசிய நோக்கில் 17.06.1958 அன்று குயில் இதழில் பாரதிதாசன் எழுதிய இந்தப் பாடலைக் கேளுங்கள்;

“செந்தமிழா உன்நாட்டின் பேரென்ன செப்பென்றால்

இந்தியா என்றே இளிக்கின்றான் என்தாயே!

பைந்தமிழ் நாட்டினையும் பாரதம் என்றும் சொல்வான்

எந்தவகையில் இச்சேய் உருப்படுவான் என்தாயே?

..

தமிழ்மொழிதான் தாய்மொழி என்னும் தமிழன்

தமிழ்நாடுதான் தனது தாய்நாடென் றெண்ணானோ?

தமிழ்நாடென் தாய்நாடு தாய்மொழி தான்என்றன்

தமிழ் என்றுணரான் சழக்கனன்றோ என்தாயே?

நம்தாய் அடிமை; வடநாட்டான் நம்ஆண்டான்

இந்தநிலை மாற்றா திருந்தென்ன என்தாயே!”

தமிழ் மண் பதிப்பக உரிமையாளர் ஐயா இளவழகன் அவர்கள் பாரதிதாசன் அவர்களின் அனைத்துப் பாடல்கள், கட்டு ரைகள் ஆகியவற்றைப் ’பாவேந்தம்’ என்ற தலைப்பில் 25 தொகுதிகளாக வெளி யிட்டுள்ளார். முனைவர் இரா. இளவரசு, இளங்குமர னார், தமிழகன் ஆகியோர் பதிப்பாசிரியர்களாக இருந்துள்ளனர். இவற்றை வாங்கிப் படிக்க வேண்டும்.

மறைமலையடிகள் வலியுறுத்திய தனித்தமிழில் பிற்காலத்தில் பாக்கள் எழுதினார் பாவேந்தர். இவ் வாறாகத் தமிழ்த் தேசியப் பாவலராக விளங்கினார்.

தொடக்கத்தில் துதிப்பாடல்கள் பாடினார். இறுதிக்காலத்தில் சீனப்படையெடுப்பை ஒட்டி இந்திய ஆதரவுப் பாடல்களை எழுதினார். ஆனால் பாரதி தாசன் என்ற படைப்பாளி இவற்றால் அறியப் பட வில்லை; அரவணைக்கப் படவில்லை. அவரது தமிழின உணர்வு, பகுத்தறிவு, பொதுவுடை மை, தனித்தமிழ்நாடு, சாதி எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு, பெண்ணு ரிமை போன்ற முற்போக்குப் படைப்புகளுக்காகத்தான் அவர் தமிழ் மக்களால், அனைத்துத் தரப்பு மக்களாலும் ஏற்கப்பட்டார்.

பாரதிதாசனிடமிருந்து இளை ஞர்கள், இளம் படைப்பாளிகள் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு செய்தி உள்ளது. தமிழ் மொழியைக் காட்டுமிராண்டி மொழி என்று 1939 தொடங்கி கடைசி வரை கூறி வந்தவர் பெரியார். தமிழ் சனியனைக் கைவிட்டுவிட்டு வீட்டில் மனைவியுடன் வேலைக்காரிகளுடன் ஆங்கி லத்தில் பேசிப் பழகிக் கொள்ளுங்கள் என்று 1968-இல் கூடக் கூறினார் பெரியார்.

1939லிருந்து தமிழுக்கெதிராகவும் ஆங்கிலத்திற் காதரவாகவும் பெரியார் கருத்துக் கூறி வந்தபோது, அவரைத் தம் தலைவராக ஏற்றுக் கொண்டிருந்தார் பாவேந்தர். ஆனால், அதற்காக அவர் ஒரு போதும் தமிழை இழித்தோ பழித்தோ எழுதியதில்லை.

தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று பெரியார் கூறிய போதுதான் பாரதிதாசன் “தமிழுக்கும் அமுதென்று பேர் -- அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்று எழுதினார்.

“தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்

தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர் தந்த தேன்”

என்று எழுதினார்.

பெரியாருக்காக தமிழ் குறித்த தமது உயர் மதிப்பீட்டை - அன்பைப் பாரதிதாசன் மாற்றிக் கொள் ளவில்லை. பெரியாருக்காக - தமிழை இழிவுபடுத்திய புலவர்கள் சிலரும் அப்போது பெரியாருடன் இருந் தனர்.

தமிழைத் தொடர்ந்து இழிவு படுத்தி வந்த பெரியாரைத் திறனாய்வு செய்து, கண்டனம் செய்து, குயில் ஏட்டில் 10.01.1961-இல் ஒரு கவிதை எழுதினார் பாரதிதாசன். பெரியார் பெயரைக் குறிப்பிடவில்லை. ஆனால், அவரைத்தான் குறிப்பிடுகிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

”தமிழைக் கொண்டே தமிழகம் ஆனது

தமிழகத் தமிழர் தலைவர் தாமும்

தமிழ்நாடென்று சாற்றவும் மறுத்தனர்

தமிழால் தமிழர்க்குத் தலைவர் ஆயினர்

தமிழால் தலைமை அடைந்த அவர்கள்

தமிழில் ஏதுளது என்று சாற்றுவர்

தமிழைப் பேசித் தலைவர் ஆயினர்

தமிழை எழுதித் தலைவர் ஆயினர்

தமிழாற் பயன்ஏது என்று சாற்றினர்

தமிழர் வாழத் தக்கவை யான

எல்லாக் கருத்தையும் இயம்பி வந்தனர்

எல்லா உண்மையும் எடுத்துக் காட்டினர்

அரைநூற்றாண்டாய் அறிவு புகட்டினர்

அந்த அருமைத் தலைவரே இந்நாள்

ஆங்கிலம் தாயாய் அமைக என்றும்

தமிழால் உருப்படோம் என்றும் சாற்றினர்

இந்தத் தமிழில் விஞ்ஞானம் இல்லை

அந்த ஆங்கிலத்தில் அதிகம் உண்டே

ஆதலால் அழியத் தக்கது தமிழாம்

நாட்டுக் குழைத்த தலைவர்கள்

கேட்டுக் குழைப்பதால் பெறுவது கெடுதியே!”

“நாட்டுக் குழைத்த தலைவர்கள், கேட்டுக் குழைப்பதால் பெறுவது கெடுதியே” என்பதில், இந்தக் கெடுதி நாட்டுக்கு மட்டுமல்ல, அந்தத் தலைவர்களின் புகழுக்கும் கெடுதியே என்ற பொருளில் பாடுகிறார் பாவேந்தர்.

பாரதியாரைத் தம் குருவாகக் கடைசிவரை ஏற்றுக் கொண்டிருந்தார் பாரதிதாசன். அதற்காகப் பார்ப்பன ஆதிக்கத்தை - பார்ப்பனியத்தை எதிர்ப்பதில் சற்றும் பின்வாங்கவில்லை. ஏ.டி.பன்னீர்ச்செல்வம் விமான விபத்தில் இறந்தபோது எழுதிய இரங்கற் பாவில்,

எல்லையில் தமிழர் நன்மை என்னுமோர் முத்துச்சோளக்

கொல்லையில் பார்ப்பான் என்னும் கொடுநரி உலவும்போது

தொல்லைநீக்க வந்ததூயர் பன்னீர்ச் செல்வம்

என்றார்.

குடியேறும் ஆரியப் பாதகர்கள் சூழ்ச்சியால்

கொலையுண்ட தமிழர் நெஞ்சும்

குறுநெறிச் சங்கரன் புத்தநெறி மாற்றிட

கொல்வித்த தமிழர் நெஞ்சும்

என்று பாடி ஆரியத்தைச் சாடினார் பாவேந்தர்.

பெரியாரைத் தலைவராக ஏற்றுக் கொண்டதால் பெரியாரைப் பின்பற்றித் தமிழை இழிவுபடுத்தவில்லை பாரதிதாசன். பாரதியாரைக் குருவாக ஏற்றுக் கொண் டதால் பார்ப்பன ஆதிக்கத்தை, -பார்ப்பனியத்தை எதிர்க்க மறுக்கவுமில்லை பாவேந்தர். பாவேந்தரின் இந்தத் தெளிவு, இந்த ஆளுமை நம் இளைஞர்களுக்கும் நம் படைப்பாளிகளுக்கும் வேண்டும்.

பாரதியார் பார்ப்பன வகுப்பில் பிறந்தவர் என்பதற் காகப் பெரியாரியவாதிகள் பாரதியாரைப் புறக்கணித் தார்கள். ஆனால் அறிஞர் அண்ணா திராவிடர் கழகத்தில் இருந்தபோதே, பாரதியாரை மக்கள் கவிஞர் என்று 1948இல் பாராட்டி, அனைத் திந்திய வானொலியில் சிறப்பாக ஆங்கிலத்தில் பேசி னார்.

நவீன காலத்தில் வள்ளலார் தமிழை மக்கள் மயப் படுத்துவதில் முதல் அடி எடுத்து வைத்தார். அவர்க்குப் பின் வந்த பாரதியார் உலக மொழிகளில் ஏற்பட்ட சமகால வளர்ச்சியைத் தமிழுக்குத் தந்தவர். பாரதியார் பார்ப்பானை ஐயர் என்ற காலமும் போச்சே என்று பாடினாலும், ஆரிய தேசம், ஆரிய சம்பத்து, வேதப் பெருமை என்றெல்லாம்பாடி, பார்ப்பனி யத்தை - ஒரு வகையில் ஆதரித்தார் என்பது எனது கருத்து. ஆனா லும், புறக்கணிக்கப்பட வேண்டியவர் அல்லர் பாரதி யார். “கிறுக்கன் பாரதி” என்றார் பெரியார். அப்படி முற்றிலும் புறக்கணிக்க முடியாது பாரதியாரை.

பாரதியின் வரலாற்றுப் பாத்திரத்தை பாரதிதாசன் தெளிவாகக் கூறுகிறார்.

ஜாரின் கொடுமை தாங்கா உருசியம்

ஏருற லெனினை ஈன்றே தீரும்

செல்வர் சில்லோர் நல்வாழ் வுக்கே

எல்லா மக்களும் என்ற பிரான்சில்

குடிகள் குடிகட் கெனக் கவிகுவிக்க

விக்டர் யூகோ மேவினான் அன்றோ

தமிழரின் உயிர்நிகர் தமிழ்நிலை தாழ்ந்ததால்

இமைதிற வாமல் இருந்த நிலையில்

தமிழகம் தமிழுக்குத் தகும்உயர் வளிக்கும்

தலைவனை எண்ணித் தவங் கிடக்கையில்

இலகு பாரதிப் புலவன் தோன்றினான்

பைந்தமிழ்த் தேர்ப்பாகன் அவனொரு

செந்தமிழ்த் தேனீ சிந்துக்குத் தந்தை

என்றார் பாவேந்தர். இது சரியான பார்வை!

அதே வேளை பாரதியாரிடம் உள்ள பார்ப்பனி யத்தை மறுக்கவும் நாம் திறம் பெற்றிருக்க வேண்டும். பாரதி முழுக்க முழுக்க ஒரு பார்ப்பனியவாதியாக மட் டும் இருந்தவர் அல்லர் என்ற உண்மையையும் புரிந்து கொள்ள வேண்டும்.

பாவேந்தர் பாரதிதாசனின் தமிழின எழுச்சிப் பாடல்களை மேடைகளில் நரம்பு புடைக்க முழங்கித் தமிழர்களைத் திரட்டிய தி.மு.க. தலைவர்கள், தி.மு.க. பேச்சாளர்கள், அவர்கள் வளர்ந்த பிறகு, ஆட்சிக்கு வந்த பிறகு, பாரதிதாசனின் தமிழ்த் தேசியக் கொள் கையை - தமிழ் மொழிக் கொள்கையைக் கைவிட்டு விட்டு, ஆதிக்க இந்தியத் தேசியத்தை ஆதரிக்கின்றனர். தமிழைப் பலியிட்டு ஆங்கில ஆதிக்கத்தை வளர்த்த னர்.

அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்; அவர்களின் வரலாறு செத்து விட்டது. அவர்களின் பிணங்களை அவர்களே சுமக்கட்டும்; இளைஞர்கள் சுமக்கச் செல்ல வேண்டாம்.

நாம் தமிழ்த் தேசியர்கள்; பாவேந்தர் பாரதிதாச னின் தமிழினக் கொள்கைகளை, தமிழ் மொழிக் கொள் கைகளை சமூகவியல் கொள்கைகளை முன்னெடுப் போம்; பாவேந்தரின் ஒளிச்சுடரை ஏந்துவோம்!

Pin It

இந்தி நடிகர் சல்மான் குடிபோதையில் வண்டி யோட்டி சாலை ஓரம் சென்ற ஒருவரைக் கொன்றுவிட்டார் என்ற வழக்கில் மும்பை கீழமை நீதிமன்றம் ஐந்தாண்டுக் கடுங்காவல் தண்டனை கொடுத்தது. ஆனால் அவர் ஒரு நாள்கூட சிறையில் இல்லாமல் பிணையில் வெளியே வந்துவிட்டார். இதற்கு சட்டத்தில் இடமிருக்கிறதா?

மும்பையில் கீழமை நீதிமன்றம் சல்மான் கானுக்கு ஐந்தாண்டு கடுங்காவல் தண்டனை விதித்தது. மூன்றாண்டுவரை தண்டனை பெற்றால் அதே நீதிமன்றத் தில் அன்றே பிணை பெற சட்டத்தில் இடமுண்டு. மூன்றாண்டுக்கு மேல் என்னும்போது, மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து - உயர் நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்து மேல் முறையீட்டை ஏற்றால் பிணை கொடுக்கலாம்.

சல்மான்கான் வழக்கில் 5 ஆண்டுத் தண்டனை வழங்கி கீழமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியவுடன் இரண்டு நாள் பிணை கொடுத்தது. கீழமை நீதிமன்றத் தின் தீர்ப்பு நகல் இல்லாமலேயே உயர் நீதிமன்றம் சல்மான்கானின் மேல் முறையீட்டை ஏற்று பிணை வழங்கியது. கீழமை நீதிமன்றம் இரண்டு நாள் பிணை கொடுத்த நகலை வைத்துக் கொண்டு உயர் நீதிமன்றம் மேல் முறையீட்டை ஏற்றுப் பிணை வழங்கியது.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது போற்றத்தக்க பொன் மொழியே தவிர, கட்டாயம் கடைபிடிக்கப்படும் நடைமுறை அன்று!

வல்லான் முன் சட்டம் வளையும்; இல்லான் முன் சட்டம் எகிறும்! மானம் பெரிதென மதிக்கும் நீதிபதிகள் வல்லான் முன்னும் மானமிழக்காமல் இருப்பார் கள். இப்படிப்பட்டவர்கள் அரிதாகவே இருக்கி றார்கள்.

பேரறிவாளன், நளினி உட்பட ஏழுபேர் 24 ஆண்டுகளாக பரோல் கூட மறுக்கப்பட்டு சிறையில் கிடக்கிறார்கள். இவர்களை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அடிப்படையில் தமிழக அரசு விடுதலை செய்தும் வெளியே வரவிடாமல் தில்லி ஏகாதிபத்தியம் அடைத்து வைத்துள்ளது. தமிழர்களைப் பொறுத்த வரை, தில்லியால் நீதி மறுக்கப்படுவதற்குத் தமிழர் களாய்ப் பிறந்த “குற்றமே” போதும்!

சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, தமிழ்நாட்டில் தொடங்கப்பட உள்ளதாகவும், 17.05. 2015 அன்று சென்னையில் முதல் கிளையின் உறுப்பி னர் சேர்ப்பு நடப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது பற்றி என்ன கருதுகிறீர்கள்?

தெலுங்கு தேசம் கட்சி என்பது தெலுங்கு தேசத்திற் குரிய கட்சி. ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு மட்டுமே உரியது. அதனால் தான் அப்பெயர் அக்கட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் அக்கட்சி கிளை தொடங்கினால் தமிழ்நாட் டையும் தெலுங்கு தேசத்தின் ஒரு பகுதியாகச் சந்திர பாபு நாயுடு கருதுகிறார் என்று பொருளாகும். அதே போல், இங்குள்ள சிலரும் அக்கட்சியில் சேர்ந்தால் தமிழ்நாட்டைத் தெலுங்கு தேசத்தின் ஒரு பகுதியாக மாற்றிட முனைகிறார்கள் என்று பொருள். இது பிறந்த மண்ணுக்கு செய்யும் துரோகம் ஆகும்.

காங்கிரசு, கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்றவை அனைத்திந்தியக் கட்சிகளாக அமைக்கப்பட்டவை. அதற்கான விதிமுறைகள் அக்கட்சிகளுக்கு உள்ளன. திராவிட முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, கேரளம் முதலிய ஐந்து மாநிலங்குரிய கட்சி. அ.இ.அ.தி.மு.க. அனைத் திந்தியாவுக்குரிய திராவிடக் கட்சி! ஆனால், தெலுங்கு தேசம் தெலுங்கு தேசத்திற்கு மட்டுமே உரியது.

தமிழ்நாட்டில் தமிழர், தெலுங்கர் என்ற இனப் பிளவுகளை உருவாக்கத்தான் சந்திரபாபு நாயுடு தெலுங்கு தேசத்தை இங்கு தொடங்கப் போகிறார் என்று ஊகிக்க முடிகிறது. அண்மையில்தான் சந்திர பாபு நாயுடு இருபது தமிழர்களை சுட்டுக் கொல்ல ஆணையிட்டார்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் குடியேறி தமிழகத்தைத் தாயகமாகக் கொண்டுவிட்ட தெலுங்கு பேசும் மக்கள், அயலார் அல்லர். தமிழ்த் தேசிய மக்களே! அண்மைக் காலங்களில், ஆந்திராவி லிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து இங்குள்ள தொழில் - வணிகம் - திரைத்துறை ஆகியவற்றில் ஆதிக்கம் செலுத் தும் தெலுங்கர்கள் தங்களுக்கான அரசியல் அமைப்பை தமிழ்நாட்டில் நிறுவ முயலுகிறார்கள். இத் தன்னல ஆற்றல்களின் வலையில், தெலுங்கு பேசும் தமிழக மக்கள் விழக் கூடாது.

பா.ச.க. தலைவர் அமீத்ஷா வங்காள தேசத்திலிருந்து இந்துக்கள் இந்தியா வந்தால், அவர்களை ஏற்று இந்தியக் குடிமக்களாக்குவோம் என்று கூறியுள்ளார். இது சரியா?

1947 இந்திய - பாகிஸ்தான் பிரிவினையின்போது, இந்து - முஸ்லீம்கள் இடப்பெயர்வினால் ஏற்பட்ட படு கொலைகளையும் இரத்தக்களரியையும் மீண்டும் அரங்கேற்றத் துடிக்கிறது பாரதிய சனதாக் கட்சி என்பதே அமீத்ஷாவின் இந்துக்களுக்கான அழைப்பில் பொதிந்துள்ள உண்மையாகும்.

வங்காள தேசத்திலுள்ள இந்துக்கள் இந்தியாவில் குடியேறலாம் என்பதன் மறுபக்கம், இந்தியாவிலுள்ள முஸ்லீம்கள் வங்காள தேசத்திற்கு வெளியேறலாம் என்பதுதான்! ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ச.க. அமைப்பு கள், இரத்த வெறி அமைப்புகள் என்பதற்கு, அமீத் ஷாவின் பேச்சு இன்னொரு சான்றாகும்.

சிங்கள பௌத்த இனவெறியர்களால் இனப்படு கொலை செய்யப்பட்டதால், உயிரைப் பாதுகாக்க தமிழ் நாட்டில் தஞ்சமடைந்துள்ள தமிழீழ மக்களில் பெரும் பாலோர் இந்துக்கள்தாம். இந்தத் தமிழ் இந்துக்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்க, பா.ச.க. முன்வருமா? இந்துவே ஆனாலும் தமிழ் இந்துவை ஏற்க மாட்டோம் என்று ஆரிய இனப்பகையைத்தான் தொடருமா? பா.ச. க.வின் தமிழ்நாட்டுத் தலைவர்கள் தான் இதற்கு விடை சொல்ல வேண்டும்.

ஆந்திரப்பிரதேசத்தில் அண்மையில் இருபது தமிழர் கள், அம்மாநிலக் காவல்துறையினரால் இனப்படு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழீழ வடக்கு மாகாண அவையில் முதலமைச்சர் விக்னேசுவரன் தீர்மானம் கொண்டு வந்திருக்கிறாரே?

தீர்மானம் கொண்டு வந்தது மட்டுமல்ல, இருபது தமிழர் படுகொலை ஈழத்தில் நடந்த இனப்படுகொ லையை நினைவூட்டுகிறது என்று திரு. விக்னேசுவரன் அந்த அவையில் பேசியது, பாராட்டத்தக்கது.

இதற்குமுன், ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்றும் அதனை விசாரிக்க பன்னாட்டுப் புலனாய்வு அமைப்பை இலங்கை அரசு அனுமதிக்க வேண்டு மென் றும் அதே அவையில் விக்னேசுவரன் முன் மொழிந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் பாராட்டத்தக்க செயல்!

குடியியல் உரிமைகளுக்காகவும், சனநாயக உரிமை களுக்காகவும் தமிழீழ வடக்கு கிழக்கு மாகாண அவை களும் மக்களும் ஒருங்கிணைந்து போராட வேண்டிய காலமிது!

பிரித்தானியாவில் நடந்த தேர்தல் மீண்டும் பழைமை வாதக் கட்சி ஆட்சிக்கு வாய்ப்பளித்துள்ளது. அதுவும் தனிப்பெரும்பான்மையுடன். இது எந்தப் போக்கைக் காட்டுகிறது?

பிரித்தானியாவுக்குள்ளேயே இத்தேர்தல் முடிவு ஓர் ஒற்றைப் போக்கைக் காட்டவில்லை. ஸ்காட்லாந்தில் உள்ள 59 பகுதிகளில், 56 தொகுதிகளை ஸ்காட்லாந்திய தேசியக் கட்சி கைப்பற்றியுள்ளது. தனிநாட்டுக்கானக் கருத்து வாக்கெடுப்பு கடந்த செப்டம்பரில் நடந்த போது, தனிநாட்டுக் கோரிக் கைக்குக் குறைந்த வாக்கு வேறுபாட்டில் தோல்வி ஏற்பட்டது. அதன்பிறகு, தனிநாட்டுக் கோரிக்கை வலு வடைந்துள்ளது என்பதை இம்முடிவு காட்டுகிறது. ஸ்காட்லாந்தில் வழக்கமாகக் கூடுதல் இடங்களைப் பெற்றுவந்த தொழில் கட்சி, படுதோல்வி அடைந் துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்திருப்பதா வேண்டாமா என்ற கருத்து வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று பழைமைவாதக் கட்சிப் பிரதமர் கேமரூன் தேர்தலில் வாக்குறுதி கொடுத்தார். தொழில் கட்சியோ, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகக் கூடாதென்று தேர்தல் பரப்புரையில் கூறியது.

பிரித்தானியரின் தனித்தன்மையையும் தனிச் செல் வாக்கையும் காத்திட ஐரோப்பிய ஒன்றியத் திலிருந்து விலக வேண்டும் என்ற கருத்து கூடுதல் ஆதரவைப் பெற்றுள்ளதாகத் தெரிகிறது. ஸ்காட் லாந்திலோ பிரித்தானியாவிலிருந்து பிரிந்து போகும் கோரிக்கைக் குக் கூடுதல் வலு கிடைத்துள்ளது.

தமிழ்நாட்டில் இனி ஒருகட்சி ஆட்சிமுறை தேவை யில்லை, கூட்டணி ஆட்சியே தேவை என்று விடு தலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தோழர் தொல். திருமாவளவன் கூறியுள்ளது பற்றி உங்கள் கருத்தென்ன?

வரவேற்கத்தக்கக் கருத்து! கலைஞரின் ஆலோசனையின்றி திரு. திருமாவளவன் சொந்தக் கருத்தாகக் கூறியிருந்தால் மேலும் சிறப்பு.

தே.மு.தி.க. தலைவர் விசயகாந்து புதுதில்லியிலும் போய், செய்தியாளர்களோடு முண்டா தட்டியுள்ளாரே?

ஸ்டண்ட் நடிகர் அரசியல் தலைவரானதால், பழக்க தோசம் போகவில்லை.

சொத்துக்குவிப்பு வழக்கில் செயலலிதா விடுதலை செய்யப்பட்ட தீர்ப்பிற்கும் பாரதிய சனதாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்று எச். இராசா கூறியுள்ளாரே?

எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதைதான்!

எல்லா நீதிமன்றத்திற்கும் மேலான நீதிமன்றம் மனச் சாட்சி தான் என்று கலைஞர் கருணாநிதி கூறியுள் ளாரே?

கூட்டணிக் கட்சிகளுக்குப் போதிய தொகுதி ஒதுக் காதபோது, என் இதயத்தில் இடமிருக்கிறது என்று கருணாநிதி சொல்வார். அதுபோல்தான், இப்பொழுது மனச்சாட்சி நீதிமன்றத்தை உருவாக்கியிருக்கிறார். இந்த மனச்சாட்சி நீதிமன்றம் 2ஜி வழக்குத் தீர்ப்புவரை நீடித்தால் நல்லது.

Pin It

பல நேரங்களில் கீழமை நீதிமன்ற நீதிபதிகள் காவல்துறையினர் தளைப்படுத்தி தம்முன்னால் நிறுத்தும் அனைவரையும் காவலில் வைக்க ஆணை யிடும எந்திரம் போல் செயல்படுகிறார்கள். தனக்கு முன்னால் வைக்கப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை யும், அதில் சொல்லப்பட்டுள்ள தண்டனைச் சட்ட விதிகளும், காவல்துறை அதிகாரியின் தளைப்படுத்தல் குறிப்புகளும் ஒன்றுக்கொன்று ஒத்திசைந்து போகிறதா என்றுகூடப் பார்க்காமல் காவலில்வைக்கும் இயந்திரம் போல் தம்முன் நிறுத்தப்பட்டவரை நீதிமன்ற காவ லுக்கு அனுப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் கள்.  

நமது சுவரொட்டி வழக்கிலும் அதுதான் நடந் துள்ளது.

     “20 தமிழர் இனப்படுகொலை !

     தமிழ்த்தேசியமே தற்காப்பு

     கன்னடர், மலையாளி, தெலுங்கர், சிங்களர்

     தமிழர் உரிமைகள் பறிக்கின்றனர்.

     தமிழர்களைத் தாக்கி அழிக்கின்றனர் - ஏன் ?

     இந்தியாவை நம்பியதால் அனாதை ஆனோம்.

     திராவிடத்தை ஏற்றதால் ஏமாளி ஆனோம்.

     தமிழ்த் தேசியமே தற்காப்பு ஆயுதம்”

என்ற வாசகங்கள் அடங்கிய தமிழ்த்தேசிய பேரியக் கத்தின் சுவரொட்டிக்காகவே இந்த வழக்கு.

இந்தச் சுவரொட்டியைத் தயாரித்து ஒட்டச் சொன்னவர் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், ஒட்டியவர் தமிழ்த் தேசியப் பேரியக்க திருச்சி மாநகரச் செயலாளர் மூ.த.கவித்துவன் என்று திருச்சி கன்டோண்மென்ட் காவல் நிலையத்தினர் முதல் தகவல் அறிக்கை அணியம் செய்து தோழர் கவித் துவனை 23.4.2015 அன்று பிற்பகல் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினர்.

சுவரொட்டிச் சொற்கள் பல்வேறு இனங்களுக்கு இடையே பகையை மூட்டிவிடுகிறது என்பதால் இந்தி யத் தண்டனைச் சட்டப் பிரிவு 153Aபடி தண்டனைக் குரியக் குற்றம் என்றும், பொது இடங்களில் சுவ ரொட்டி ஒட்டி பொது இடத்தை அசிங்கப் படுத்தி விட்டதால் 3 TNO PPD Act குற்றச்செயல் என்றும், முதல்தகவல் அறிக்கை கூறியது.

இக்குற்றச்சாட்டின் அடிப்படையில் தன்முன்னால் நிறுத்தப்பட்ட தோழர் கவித்துவனை நீதிமன்றக் காவ லில் வைத்து சிறைக்கு அனுப்புவது சரியா, இல்லை முதல் தகவல் அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்ட வாசகத்திற்கும், முதல் தகவல் அறிக்கையில் சொல்லப் பட்ட தண்டனைச் சட்ட பிரிவுக்கும் முதல் நிலை பொருத்தமாவது இருக்கிறதா, என்றுகூட பார்க்காமல் முதல் தகவல் அறிக்கையை ஏற்றுக் கொண்டு வழக் கைப் பதிவு செய்து தோழர் கவித்துவனை சிறைக்கு அனுப்பினார்.

முதல் தகவல் அறிக்கையானது வழக்குப் பதிவு செய்யத் தகுதியா னதா என்று பார்க்காமல் நடுவர் மன்ற நீதிபதிகள் சிறைப்படுத்தும் இயந்திரங்களாக (ரிமான்டிங் மிசின்) செயல்படக்கூடாது என பல்வேறு உச்சநீதிமன்ற தீர்ப்புகள் கண்டித்திருக்கின்றன.

எடுத்துக்காட்டாக,அல் மோகன் தாஸ் - எதிர் - மேற்கு வங்க அரசாங்கம் என்ற வழக்கில் 1968 அக்டோபர் 25-ல் அளித்த தீர்ப்பில் உச்சநீதிமன்றம் கீழ்வருமாறு கூறு கிறது.

“விசாரணை மேற்கொள்ளும் ஒரு நடுவர்மன்ற நீதிபதி தனக்கு அளிக்கப்படும் அறிக்கையைப் பதிவு செய்துகொள்ளும் இயந்திர மாக (ரிக்கார்டிங் மிசின்) செயல் படு வதற்காக அமர்த்தப்படவில்லை” என்று கூறுகிறது.

அதே போல் ஏ.பி.ராகவன்-- எதிர் - எம்.எச். அப்பாஸ் என்ற வழக்கில் மூன்று நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற ஆயம் இன்னும் தெளிவாக இதனைக் கூறுகிறது.

“ஒரு நீதிமன்ற நடுவர் வெறும் அஞ்சல் அலுவலகம் போல் (போஸ்ட் ஆபீஸ்) செயல்படக் கூடாது என்பதில் எந்த ஐயமும் இல்லை. தனக்கு முன்னால் வைக் கப்பட்டுள்ள வழக்கு மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு அனுப்புவ தற்கு தகுதியானதா என முடிவு செய்த பிறகே அவ்வழக்கை பதிவு செய்யவேண்டும்” என்கிறது. (1978, 1 SCR, 287)

ஆனால், பல குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதிகளுக்கு தனக்கு இப்படி ஓர் அதிகாரம் இருப்பதே தெரியுமா என்பது தெரியவில்லை.

இச்சுவரொட்டி ஒட்டப்பட்டு நான்கு நாட்களுக்கு பிறகே இவ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. முதல் தகவல் அறிக்கைப்படி இச் சுவரொட்டி ஒட்டியதால் திருச்சி யில் பொது இடம் அசிங்கப் பட்டுவிட்டது என்று யாரும் புகார் சொல்லவில்லை. ஏனெனில் சுவ ரொட்டி ஒட்டியதால் பொது இடம் அசிங்கப்பட்டுவிட்டது என ஒருவர் சொல்லி அதன் மீது வழக்கு பதிவதாக இருந்தால் காவல் நிலை யத்திற்கு வேறு எந்த வேலையும் செய்ய முடியாது.

திருச்சியில் மட்டுமல்ல, மிகச் சிறிய நகரங்களில் கூட திரும்பிய பக்கமெல்லாம் சுவரொட்டி கள் தான். அவற்றுள் ஆபாச சுவரொட் டிகள், அருவருப்பான புகழ்பாடும் சுவரொட்டிகள் போன்றவை ஏரா ளம்.

பிணை மனுவில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் தோழர் பானு மதி திருச்சி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கூறியது போல் சுவரொட்டி ஒட்டியதால் நகரம் அசிங்கப்பட்டுவிட்டது என வழக்கு தொடுத்து சிறைப்படுத்தவதாக இருந்தால் தமிழ்நாட்டில் சிறைச் சாலைகளே போதாது.

பொதுமனிதருக்கு கூட எளி தில் புரியும் இந்த உண்மை. திருச்சி குற்றவியல் நீதிமன்ற நடுவருக்கு தெரியாமல் போனது வியப்பளிக் கிறது.

சுவரொட்டி வாசகங்கள் இ.த.ச. பிரிவு 153 A -ன் கீழ் வருமா என்ற முதல் நிலை ஆய்வைக்கூட நீதி மன்ற நடுவர் செய்ததாகத் தெரிய வில்லை. எந்திர கதியில் வழக்கைப் பதிவு செய்து தன்முன் நிறுத்தப் பட்ட தோழர் கவித்துவனை சிறைக்கு அனுப்பிவைத்திருக்கிறார்.

நியாயமற்றமுறையில், தேவையே இல்லாமல் 11 நாட்கள் திருச்சி நடுவண் சிறையில் இருந்து விட்டு, உயர் நீதிமன்றத்தில் பிணை பெற்று கடந்த 4.5.2015 அன்று தோழர் கவித்துவன் விடுதலை யானார்.

இவ்வழக்கு அப்பட்டமான சனநாயக உரிமைப் பறிப்பு - தமிழின உரிமை மறுப்பு, மட்டுமின்றி சட் டத்திற்கே புறம்பானது என்பதால் முதல் குற்றம் சாட்டப்பட்டவரான தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலை வர் தோழர் பெ.ம. முன்பிணை வாங்க வில்லை. கைதுக்கு அணிய மாக இருந்தார். அதே நிலை இப் போதும் தொடர்கிறது.

முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள இ.த.ச.பிரிவு 153 A இங்கு முகாமையாக விவாதிக்கப் படுகிறது.

இந்திய அரசமைப்புச்சட்ட உறுப்பு 19 (1)(a) அனைத்துக் குடி மக்களுக்கும் கருத்துரிமையை உறுதி செய்கிறது. அதே நேரத்தில் 19(2) இக்கருத்துரிமைக்கு நியாயமான வரம்புகளையும் விதிக்கிறது.

இந்திய தண்டனைச் சட்ட விதிகளில் சில இக்கருத்துரிமையில் குறிக்கிடும்போது அல்லது இ.த.ச. படியான வழக்குகள் இக்கருத்துரி மையில் குறுக்கிடும்போது அது 19(2)ன் படி நியாயமான வரம்பு தானா என்பதை நீதிமன்றங்கள் முடிவுசெய்கின்றன.

அந்த வகையில் இ.த.ச பிரிவு 153 A அண்மைக்காலமாக கடும் திறனாய்வுக்கு உட்பட்டு வருகிறது. ஏனெனில் பல்வேறு மாநில அரசு களும் அவற்றின் காவல் துறையின ரும் பல அறிஞர்கள் அல்லது தலை வர்களின் உரையையோ, நூல் களையோ, அறிக்கைகளையோ இச் சட்டப்பிரிவின் கீழ் குற்றமாக வழக்கு பதிவு செய்வது அதிகரித்து வருகிறது.

உலகப் புகழ்பெற்ற ஓவியர் எம்.எப். உசேன், மீது அவரது ஓவி யத்திற்காக இப்பிரிவின் கீழ் வழக்கு மேல் வழக்கு தொடுக்கப்பட்டு ஆரிய இந்துத்துவ அச்சுறுத்தலும் சேர்ந்துக்கொண்டு அவர் இந்தி யாவை விட்டே வெளியேறி வெளி நாட்டில் தஞ்சம் புகுந்ததை அனை வரும் அறிவர்.

எந்தக்கருத்தையும் சமூக நல்லி ணக்கத்திற்கு எதிரானது என வகைப்படுத்தி, தண்டனைக்குரிய குற்றமாக வரையறுக்கும் வகையில் 153 A உருவாக்கப்பட்டுள்ளது. அது கூறுவதாவது,

‘153 A : மதம், இனம், பிறப்பிடம், வாழிடம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் பல்வேறு குழுக் களுக்கு இடையே பகைமையை தூண்டுவது மற்றும் நல்லிணக்கப் பாதுகாப்புக்கு ஊறுவிளைவிக்கும் செயலில் ஈடுபடுவது.

யாரொருவர்,

(a)   மதம், இனம், பிறப்பிடம், வாழிடம், மொழி, சாதி அல்லது வகுப்பு அல்லது வேறு எந்த அடிப் படையிலாயினும் பேசப்பட்ட அல்லது எழுதப்பட்ட சொற்கள் வாயிலாகவோ, அல்லது குறியீடுகள் வாயிலாகவோ, அல்லது கண்ணுறக் கூடிய குறிப்புகள் வழியாகவோ அல்லது வேறுவகையிலோ, பல் வேறு மத, இன, மொழி அல்லது பிரதேச குழுக்களுக்கிடையிலோ அல்லது சாதிகளுக்கிடையிலோ, அல்லது சமூகங்களுக்கிடையிலோ, பகைமை எண்ணங்களையோ இணக்க குலைவையோ, வெறுப் பையோ அல்லது கசப்பையோ உரு வாக்கினாலோ அல்லது உருவாக்க முனைந்தாலோ

(b)   அல்லது பல்வேறு மத, இன, மொழி அல்லது பிரதேச குழுக்களுக்கிடையேயோ, அல்லது சாதிகளுக்கிடையையோ, அல்லது சமூகங்களுக்கிடையேயோ, இணக் கத்தை பாதுகாப்பதற்கு புறம் பான செயலில் ஈடுபட்டாலோ, அவரது செயல் பொது அமைத்திக்கு ஊறு விளைவித்தாலோ, அல்லது ஊறு விளைவிக்கும் வாய்ப்பு இருந் தாலோ,

அவர் மூன்றாண்டு சிறை அல் லது அபராதம் அல்லது இரண் டும் சேர்த்து தண்டனை வழங்கப்படு வார்”

இப்பிரிவின் வாசகத்தை பார்த் தாலே எந்தச் செயலையும் தண்ட னைக்குரிய குற்றமாக வரையறுத்து விட முடியும் என்பது புலனாகும். இது ஆட்சியாளர்களுக்கும் காவல் துறைக்கும் மிக விரிவான கேள்வி முறையற்ற அதிகாரங்கள் வழங்கு வது தெளிவாகும்.

153 A ன் கீழ் தொடுக்கப்படும் வழக்குகளில் பெரும்பாலானவை தள்ளுபடி ஆவதற்கான காரணமும் இதன் வரையறுப்பிலேயே இருக்கி றது. ஆயினும் மிக நீண்டகாலம் நடக்கும் இந்த வழக்குளால் கால இழப்புக்கும் பொருள் இழப்புக்கும், மனஉளைச்சலுக்கும் ஆளாவோர் ஏராளம்.

இச்சட்டப்பிரிவு உண்மையில் அரசமைப்புச் சட்டத்திற்கே எதிரா னது என்பது இப்பிரிவின் வாசகங் களிலிருந்தும், அதன்படி தொடுக்கப்பட்ட வழக்குளிலிருந்துமே தெளிவாகும்.

கருத்துரிமைக்கு எதிரான தகவல் தொழில்நுட்பச் சட்டத் தின் 66 (A) பிரிவை நீக்கி உச்ச நீதி மன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பு இ.த.ச. 153 A வுக்கும் பொருந் தக்கூடியதே ஆகும். 2015 மார்ச் 24 அன்று சலமேஸ்வர் மற்றும் ரோகின்டன் நாரிமன் ஆகிய நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு அளித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு தகவல் தொழில் நுட்பச் சட்டபிரிவு 66 A இந்திய அரசமைப்பு சட்டத்தின் உறுப்பு 19 (1) (a) வழங்கும் கருத்துரிமைக்கு எதிரானது, நியாயமற்ற வரம்பு விதிக்ககூடியது எனக் கூறி 66கி பிரிவை நீக்கியது.

தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66 A ‘பிறர்மீது அருவருப் பான அச்சுறுத்தக்கூடிய, ஆபத்து விளைவிக்ககூடிய, இழிவுப் படுத்தக் கூடிய, மனதை காயப்படுத்தக்கூடிய, தொந்தரவு தரக்கூடிய, பகைமை யைப் பரப்பக்கூடிய, வெறுப்பைப் பரப்பக்கூடிய, இனவாதத் தன்மை யுடைய, பல்வேறு மொழி இனங் களுக்கிடையில் பகைமையைத் தூண்டக்கூடிய அல்லது தீமை பயக் கக்கூடிய அல்லது சட்ட விரோதத் தன்மையுடைய, அல்லது வேறு வகையில் எதிர்க்கப் பட வேண்டிய மின்னணு தகவல் பரிமாற்றங்கள் தண்டனைக்குரிய குற்றங்கள்” என வரையறுக்கிறது.

இவ்வாசகங்கள் பெரிதும் இ.த.ச. 153 A உடன் ஒத்து இருப்பதைப் புரிந்துகொள்ளலாம்.

ஒரே வேறுபாடு த.தொ.ச. 66 A மின்னணு தகவல் பரிமாற்றங்களை குறிக்கிறது. இ.த.ச 153 A அனைத்து வகை தகவல் பரிமாற்றங்களையும் குறிக்கிறது.

த.தொ.த.ச. பிரிவு 66 A காவல் துறைக்கு கட்டற்ற அதிகாரத்தை வழங்கி கருத்துரிமையை பறிக்கக் கூடியதாக விளங்குகிறது என்ற உச்ச நீதிமன்றத்தின் முடிவு இ.த.ச பிரிவு 153Aக்கும் பொருந்த கூடி யதே ஆகும்.

எனவே, இந்திய அரசு இந்தியத் தண்டனைச்சட்டத்திலிருந்து 153 A பிரிவை நீக்கி சட்டத்திருத்தம் பிறப்பிக்க வேண்டும் அல்லது உச்ச நீதிமன்றம் தானே முன்வந்து விசாணை நடத்தி இப்பிரிவு 153A ஐ நீக்க வேண்டும்.

சாதிகளுக்கிடையிலோ, சமூகங் களுக்கிடையிலோ பகைமையை ஏற்படுத்தக்கூடிய எழுத்துகளோ பேச்சுகளோ வராதா? அப்படி நிகழ்ந்தால் அவற்றை தண்டிப்ப தற்கு சட்டம் வேண்டாமா என்ற கேள்வி எழலாம்.

இவ்வகை குற்றச்செயல்களை விசாரித்து தண்டனை வழங்க பல்வேறு பிரிவுகள் இருக்கவே செய்கின்றன. குறிப்பாக இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 505(2) இவ்வகை குற்றச்செயல் களுக்கு தண்டனை வழங்கக் கூடியதாக, இன்னும் சொல்லப் போனால், ஒரு வகையில் காவல் துறைக்கு விரிவான அதிகாரம் வழங்கக்கூடியதாக விளங்குகிறது. அப்பிரிவு வருமாறு

”505(2), வகுப்புகளுக்கிடையே பகைமையை, வெறுப்பை அல்லது கசப்பை உருவாக்கக்கூடிய அல்லது வளர்க்கக்கூடிய அறிக்கைகள் -

யாரொருவர் மதம், இனம், பிறப்பிடம், வாழிடம், மொழி, சாதி அல்லது சமூகம் அல்லது வேறு அடிப்படையில் பல்வேறு மத, இன, மொழி அல்லது பிரதேச குழுக்களுக்கிடையையோ அல்லது சாதிகளுக்குகிடையிலோ அல்லது வகுப்புகளுக்கிடையிலோ பகை மையை அல்லது வெறுப்பை அல்லது கசப்பை ஏற்படுத்தும் நோக்கோடு அறிக்கைகள் அல்லது சுற்றறிக்கைகள் அல்லது உரைகள் போன்றவற்றை உருவாக்கி வெளி யிட்டால் அல்லது வதந்தியைப் பரப்பினால் அல்லது அச்சுறுத்தும் செய்தியைப் பரப்பினால் அவர் மூன்றாண்டு சிறைவாசம் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக பெற தக்கவர் ஆவார்.

விதிவிலக்கு

மேற்சொன்ன குற்றச்செயலில் ஈடுபடும் நோக்கமின்றி நல்லெண் ணத்தின் அடிப்படையில் உரு வாக்கி வெளியிடப்படும் அறிக்கை கள் அல்லது உரைகள் அல்லது சுற்றறிக்கைகள் அல்லது வதந்திகள் இப்பிரிவின் படி வரையறுக்கப்படும் குற்றச்செயல் ஆகாது”

இப்பிரிவானது, 153A-ல் கூறப் பட்டுள்ள அனைத்து வாசகங்களை யும் அப்படியே கொண்டிருந்தாலும், அதில் கூறப்பட்டுள்ள விதிவிலக்கு காவல் துறையின் கட்டற்ற, ஒரு தலைச்சார்பான அதிகாரத்திற்கு ஓரளவாவது வரம்புகட்டுவதாக அமைந்துள்ளது.

மேலும் 153Aன் படி தொடுக்கப் பட்ட வழக்குகளின் மீது வழங்கப் பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் இப்பிரிவின் கீழ் வரையறுக்கப்படும் குற்றங்கள் தற்செயலானதாக அமையாமல் உள்நோக்கத்தோடு செய்யப்பட்டதாக மெய்ப்பிக்கப்பட்டால் தான் குற்றச்சாட்டு மெய்பிக்கப்பட்டதாக பொருள் கொள்ள வேண்டும். உள் நோக்கம் இல்லாமல் நடக்கும் இப்பிரிவில் வரையறுக்கப்பட்ட செயல்கள் தண்டனைக்குரிய குற்ற மாகாது என தெளிவுபடுத்தியுள் ளன. (பிலால் அகமது கலூ- எதிர்-ஆந்திரப்பிரதேச அரசு- 6.8.1997. மற்றும் மன்சார் சையீது கான்-- எதிர் - மராட்டிய மாநில அரசு 5.4. 2007 தீர்ப்புகள்).

உள்நோக்கத்தோடு செய்யப் படாத சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கும் எந்த செயலும் 153Aன் கீழ் வராது என்று ஆனபிறகு இ.த.ச.பிரிவு 505(2) இவ்வகை குற்றச் செயல்களுக்கு போதுமானது என்பது தெளிவாகும்.

எனவே, இந்தியத் தண்டனைச் சட்ட புத்தகத்திலிருந்து பிரிவு 153A உடனடியாக கிழித்தெறியப் பட வேண்டிய ஒன்றாகும்.

இது ஒருபுறம் இருக்க, நமது சுவரொட்டி வாசகங்கள் 153A ன் கீழ் வருமா என்பதை அடுத்து பார்க்கலாம்.

மேலே எடுத்துக்காட்டப்பட்ட பிலால் அகமது கலூ வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ். ஆனந்த், மற்றும் கே.ட்டி. தாமஸ், ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த தீலீப்பு கவனிக்கத்தக்கது.

பிலால் அகமது கலூ என்ற காசுமீரி இளைஞர் ஐதராபாத்தில் கைதுசெய்யப்பட்டு அவர் மீது தடா உள்ளிட்ட பல்வேறு பிரிவு களில் வழக்கு தொடுக்கப்படுகிறது. அவற்றுள் 153A குறித்து இத்தீர்ப்பு முன்வைக்கும் விவாதம் கவனிக்கத் தக்கது.

கலூ தடைசெய்யப்பட்ட அல் ஜிகாத் அமைப்பைச் சார்ந்தவர் ஆவார். ஐதராபாத்தில் பல்வேறு முஸ்லீம் இளைஞர்களைச் சந்தித்து காசுமீரில் இந்திய ராணுவம் காசு மீரி முஸ்லிம் இளைஞர்களுக்கு எதி ராக பல்வேறு அடடூழியங்கள் செய் தது என பரப்புரை மேற் கொண் டார் என்பது அவர் மீதான குற்றச் சாட்டு. காசுமீரி முஸ்லீம்களுக்கு எதிராக இந்திய இராணுவம் அட்டூழியங்கள் செய்ததாக அவர் செய்த பரப்புரையே 153A ன் கீழ் குற்றமாக முன்வைக்கப்பட்டது.

இது குறித்து தீர்ப்புரைத்த உச்சநீதி மன்றம் ‘ஒரு சமூகத்தின் அல்லது ஒரு குழுவின் உணர்ச்சி யைத் தூண்டுவது மட்டும் 153Aன் படி குற்றமாகாது. ஏதாவது இன் னொரு சமூகம் அல்லது பிரிவுக்கு எதிராக பகையைத் தூண்டும் வாசகம் இருந்தால்தான் 153A செயல்படலாம்” என்று கூறி கலூ மீதான 153A குற்றச்சாட்டைத் தள்ளுபடி செய்தது.

இதை விட மேலே காட்டப் பட்ட மான்சார் சைபீத்கான் வழக் கின் தீர்ப்பு இன்னும் தெளிவானது.

“சிவாஜி, இஸ்லாமிய இந்தியா வில் இந்து அரசன்” என்ற தலைப் பில் பேராசரியர் ஜேம்ஸ் லைன் எழுதிய நூலை ஆக்ஸ்போர்ட் பல் கலை கழக அச்சகம், அதன் தலைமை நிர்வாகி மன்சார் சையது கான் என்பவர் வழியாக வெளி யிட்டது. இந்நூலின் வாசகங்கள் மராட்டியர்களை இழிவுபடுத்தி புண்படுத்திவிட்டது என்பது தான் வழக்கு.

ஒரு சமூகம் அல்லது அந்த சமூகத்தின் தலைவன் இன்னொரு சமூகத்திற்கு எதிராக சில செயல்கள் செய்ததாக வரலாற்று ஆய்வு என்ற அடிப்படையில் ஒருவர் எழு தினால் அது அச்சமூகத்திற்கு எதி ராக பகைமை பரப்பியதாக ஆகாது என்று இத்தீர்ப்பு தெளிவுபடுத்தியது.

அதுமட்டுமின்றி பகவதி சரன் சுக்ளா வழக்கை மேற்கோள் காட்டி இத்தீர்ப்பு கூறுவது கவனம் கொள்ளதக்கது. ‘வெளியிடப்படும் சொற்களின் விளைவுகளை மதிப் பிடும்போது மனவலிமை உள்ள, உறுதியான மற்றும் நெஞ்சுரம் உள்ள மனிதரின் மனதை அச் சொற்கள் எப்படி பாதித்தது என் பதை வைத்து மதிப்பிட வேண் டுமே அன்றி பலவீனமாக மற்றும் ஊசலாடும் மனதை உடை யவர் நிலையிலிருந்து ஆய்வு செய்யக் கூடாது. பலவீனமான மனிதர்கள் எல்லா எதிர்க் கருத்துகளிலும் அபாயம் இருப்பதாக கருதிக் கொள் வார்கள். அவர்களது மனநிலையை அளவு கோலாகக் கொண்டு குற்றத் தின் தன்மையை மதிப்பிடக்கூடாது.” என்று கூறுகிறது.

இதன் வெளிச்சத்தில் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சுவரொட்டி வாசகங்களை ஆய்வு செய்யலாம்.

இச்சுவரொட்டி, கன்னடர், மலையாளி, தெலுங்கர், சிங்களர் ஆகிய தேசிய இனங்களை சேர்ந்த வர்கள் தமிழர் உரிமையைப் பறிக் கின்றனர், தமிழர்களைத் தாக்கி அழிக்கின்றனர் என்ற வர லாற்றுத் தகவல்களைக் கூறுகிறது. நடப்பு நிகழ்வுகளையும் கூறுகிறது. இச் சொற்களுக்கான விளக்கங்களை தமிழ்த் தேசியப் பேரியக்கம் ஒவ்வொரு நிகழ்வின் ஊடாக ஆதாரத் தோடு எடுத்துக்காட்டிப் பரப்புரை செய்துவருகிறது.

இன்றைய நிலையில் பெரும் பாலான தமிழ்நாட்டு மக்கள் இக் கூற்றையும்,மதிப்பீட்டையும் ஏற்றுக்கொண்டுதான் உள்ளனர்.

ஒரு சிலர் இக்கருத்தில் வேறு படக்கூடும். கர்நாடக அரசு, கேரள அரசு, ஆந்திர அரசு, சிங்கள அரசு ஆகியவைதான் தமிழருக்கெதிராக செயல்படுகின்றனவே தவிர அவ் வினத்தார் அவ்வாறு செயல்பட வில்லை எனக் கருதிக் கொண்டிருக்கலாம். அது உண்மை நிலையை புரிந்துக் கொண்டதாகாது என்ற போதிலும் அவ்வாறு கருதிக் கொள்வதற்கு, அதனை வெளிப் படுத்துவதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு.

அது வரலாற்றைப் பற்றிய, நிகழ்வுகள் குறித்த இன்னொரு பார்வை.

சிவாஜி குறித்த நூலில் சிவாஜி யின் ஆட்சியில் நடைப் பெற்றதாக அந்நூலாசிரியர் சொல்லவது அவ ரது வரலாற்று பார்வைதானே தவிர,இனங்களுக்கிடையே பகைமை மூட்டியதாக ஆகாது என உச்ச நீதிமன்றம் கூறிய மதிப்பீடு நமது சுவரொட்டி வாசகத்திற்கும் பொருந்தக்கூடியதே.

ஏனெனில் இன்னின்ன தேசிய இனங்களெல்லாம் தமிழருக்குப் பகையாக நடந்துக்கொள்கின்றன. எனவே அவர்களையெல்லாம் திருப்பித் தாக்குங்கள் அல்லது அம் மாநிலத்தின் மீது தாக்குதல் நடத் துங்கள் என்று இச்சுவ ரொட்டி வாசகம் கூறவில்லை. நடந்த நிகழ்வு களைப்பற்றிய வரலாற்று மதிப் பீடே அது. மன்சார் சையீது கான் வழக்குத் தீர்ப்பு வெளிச்சத்தில் நோக்கினால் சுவரொட்டியின் மேற்கண்ட வாசகத்திற்கு 153A பொருந்தாது என்பது தெளிவாகும்.

பிலால் அகமது கலூ வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்புரைத்தது போல் ஐதராபாத் முஸ்லீம் இளை ஞர்களிடம் கலூ இந்திய இராணு வத்தின் அட்டுழியங்களைப்பற்றி பரப்புரை செய்துவிட்டு கூறியது இந்தியா முஸ்லீம்களுக்கு பகை என்பதாகும். இது அவரது மதிப் பீடே தவிர இம்மதிப்பீட்டை பரப்புவதாலேயே சமூகங்களுக்கிடையே நல்லிணக்கம் குலையும் என எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என அத்தீர்ப்பு உறுதிபட கூறியிருக்கிறது.

அதே போன்றதுதான் பேரியக்க சுவரொட்டி வாசகம்.

அடுத்தடுத்து அண்டை அயல் இனத்தாரால் தமிழர்கள் பாதிப்புக் குள்ளாவதை எடுத்துக்கூறி இத னைத் தடுக்க அல்லது தட்டிக் கேட்க இந்திய அரசு வரவில்லை. எனவே இந்தியாவை நம்பியதால் அனாதையானோம் எனக் கூறு கிறது. அதேபோல், கொடுமையான இழப்புகளை தமிழினம் சந்தித்த போதும் முதன்மை திராவிடக் கட்சிகளான அ.இ.அ.தி.மு.க, தி.மு.க. ஆகியவை வேடிக்கை பார்த்தன. அவர்களது திராவிடம் என்ற கோட்பாடும் தமிழர்களின் தற்காப் புக்கு உதவாமல் ஏமாற்றி விட்டது. எனவே திராவிடத்தை ஏற்றதால் ஏமாளியானோம் எனக்கூறுகிறது. இந்த நிலையில் தமிழ்த் தேசியமேத் தற்காப்பு ஆயுதம் என்ற மாற்றுக் கருத்தியலை முன்வைக்கிறது.

இது இந்தியத்தைப் பற்றிய, திராவிடத்தைப் பற்றிய தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் மதிப்பீடு. தமிழர்கள் உரிமை பெறுவதற்காக பேரியக்கம் முன்வைக்கும் மாற்று கருத்தியல். இதுவும் எந்த இனப் பகைமையையும் ஊட்டிவிட வில்லை. மாறாக பாதிக்கப்பட்ட வனின் கதறலாக, பாதிக்கப்பட்ட வன் மேற்கொள்ள வேண்டிய தற்காப்பு கருத்தியலை முன்வைப்ப தாக மட்டுமே உள்ளது.

இது 153Aன் படி இனங்களுக் கிடையே பகைமை மூட்டியதாக குற்றம்சாட்டவே முடியாது.

அரியானா மாநில அரசு - எதிர் - சௌத்ரி பஜன்லால் வழக்கை மேற்கோள் காட்டி மன்சார் சையீது கான் வழக்கில் உச்சநீதி மன்றம் சொல்வது போல் முதல் தகவல் அறிக்கை 153A ன் படியான குற்றங்கள் எதையும் தெளிவுபட எடுத்துக்காட்டாத நிலையில் அந்த முதல் தகவல் அறிக்கையின் மீது புலன் விசாரணையோ, சாட்சியங் களை பதிவு செய்வதோ தேவையற் றது. அந்த முதல் தகவல் அறிக் கையை விசாரணைக்கு தகுதியற் றது என நீக்கம் செய்துவிடலாம்.

இத்தீர்ப்புகளை விட கோபால் கோட்சே - எதிர் - இந்திய ஒன்றிய அரசு என்ற வழக்கில் உச்சநீதி மன் றம் கூறிய தீர்ப்பு இன்னும் விரி வானது.

“காந்தி படுகொலையும் நானும்” என்ற கோபால் கோட்சேயின் நூல் பற்றிய வழக்கு அது. இந்த நூல் முஸ்லீம்களுக்கு எதிராகப் பகை மையைஊட்டுவதாகவும், காந்தியை இழிவுபடுத்தி, காந்தி கொலையை நியாயப்படுத்தி ஒட்டுமொத்த இந்திய மக்களை மனம் புண் படுத்திவிட்டதாகவும் முடிவு செய்து தில்லி பிரதேச மாநில அரசு நூலை 153A ன்படி தடை செய்தது.

இவ்வழக்கில் சந்திரசூட், மோடி, மற்றும் பி. தேசாய் ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற ஆயம் 6.8.1969-ல் வழங்கிய தீர்ப்பு 153A பிரிவை ஆய்வு செய்கிற எல்லோரும் படிக்க வேண்டிய தீர்ப்புரையாகும்.

சவர்க்காரை மேற்கோள் காட்டி, அக்கூற்றுக்கு ஆதரவு அளித்து கோபால் கோட்சே “முஸ்லீம்கள் இந்தியாவுக்குப் பகை யானவர்கள், சுயமரியாதையுள்ள இந்துக்கள் முஸ்லீம்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்த வேண்டும்” என்று அந்நூலில் பல இடங்களில் கூறுவ தாக அத்தீர்ப்புரையே சொல்கிறது. ஆயினும் அது பாகிஸ்தான் பிரிவி னையை ஒட்டி விவாதிக்கப் படுகிற செய்தியே தவிர எந்தக் குறிப்பிட்ட முஸ்லீம்களுக்கு எதிராகவும், ஆயு தம் தூக்கச் சொல்லவில்லை என்று கூறி அந்த வாசகங்கள் 153A ன் படி வரமுடியாதவை என்று அத்தீர்ப் புரை உறுதிபடக் கூறு கிறது.

இதுபோல கோட்சேயின் நூலில் பல இடங்களில் இடம் பெற்றுள்ள அதிர்ச்சி தரும் வாசகங் கைளைக் கூட அது ஒன்றும், மதப் பூசலையோ, இனப்பகையையோ உண்டாக்கிவிடவில்லை என கூறி 153Aன் படியான குற்றச்செயல்கள் அல்ல என வரையறுத்து அந் நூலின் மீதான தடையை நீக்கியது. அதுமட்டுமின்றி நூலாசிரியருக் கும், பதிப்பகத்தாருக்கும் ஒரு தொகையை இழப்பீடாக வழங்கவும் அரசுக்கு ஆணையிட்டது.

இவற்றையெல்லாம் ஆய்வு செய்தால் தமிழ்த் தேசியப் பேரி யக்கம் வெளியிட்ட சுவரொட்டி 153Aன் படி குற்றமாகாது என்பது தெளிவாக விளங்கும்.

எடுத்த எடுப்பிலேயே குற்றவி யல் நடுவர் இந்த முதல் தகவல் அறிக்கையை ஏற்க மறுத்து குற்றச் சாட்டிலிருந்து தோழர் பெ.ம, மற்றும் தோழர் கவித்துவனை விடுவித்திருக்க வேண்டும்.

இ.த.ச.பிரிவு 153A அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.

சுவரொட்டி வழக்கு 153க்கு பொருந்தாதது.

Pin It

அன்புக்குரிய மணியரசன் அவர்கட்கு,

வணக்கம். தமிழர் கண்ணோட்டம் தொடர்ந்து படித்து வருகிறேன். அண்மையில் சுவரொட்டிக்காகத் தங்களைத் தளைப்படுத்த முனைந்த செய்தியையும் படித்தேன். தமிழ்நாட்டைத் தமிழன் ஆளவில்லை. தமிழ் மக்களும் தமிழ் மக்களாக இல்லை. இதனாலேயே தமிழினம் சொல்ல முடியாப் பேரிழப்புகளிலும் அவலங்களிலும் அழுந்திக் கிடக்கிறது.

இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டுதான் ஐந்து பக்கங்களிலிருந்தும் தமிழர்க்கு எதிரான செயல்களே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கேரளத்தான், ஆந்திரன், கருநாடகத்தான், சிங்களன், தில்லிக்காரன் (இந்தி வெறியன்) - அவனவன் பங்குக்கு அவனவன் நம் உரிமைகளை நசுக்குவதே குறியாயிருக்கிறான். கடந்த ஐம்பது அறுபது ஆண்டுகளாகப் போலிகளை நம்பி நம் மக்கள் ஏமாறி, இன்னும் ஏமாறிக் கொண்டிருப்பது தான் காரணம்.

பிற மாநிலத்தவர்கள் எல்லாம் வடமொழியையும் இந்தியையும் ஏற்றுக் கொண்டு தில்லிக்காரனுக்கு நல்ல பிள்ளைகளாக நடந்து கொள்கிறார்கள். அதே பொழுது தங்கள் மொழிவழித் தேசியத்தையும் காப் பாற்றிக் கொள்கிறார்கள். அவர்களின் மொழிக்கு வடமொழி யாலோ இந்தியாலோ ஏதும் நேர்வதில்லை என்பது காரணமாக இருக்கலாம். தமிழ் ஒன்றே தனித்து நிற்கின்றது.

தன் தனித்தன்மையைக் காப் பாற்றிக் கொள்ள விரும்புகின்றது. வடநாட்டானுக்கு இது பிடிக்க வில்லை. அதனால் அவன் தமிழ்த் தேசிய உணர்வை வெறுப்புடனும் எதிர்ப்புணர்வுடனும் பார்க் கின்றான். நம் போலும் தமிழ்த் தேசிய உணர்வாளர் கட்கு இது நன்றாகவே புரிகின்றது. நாம் நம் போராட்டங்களை நடத்திக் கொண்டு வருகின்றோம்.

நம் ஏமாறுந்தன்மையாலும், போலி அரசியல் வாணர்களின் அருவருக்கத்தக்க பதவி ஆசையால் விளைந்த - நடுவணரசுக்கு வால்குழைக்கும் - அடிமைத் தனத்தாலும் கச்சத்தீவை இழந்தோம். சிங்களன் சூழ்ச்சி வலைக்கும், நேரு- இந்திரா போன்றோரின் தமிழர் மீது அக்கறையின்மைக்கும் உட்பட்டு இலங்கை மலையகத் தமிழரின் வாழ்வை நடுத்தெருவுக்கும் கொண்டு வந்தோம். மொழிவழிப் பிரிவினையின் பொழுதும் இன விழிப்பும் அரசியல் விரகாண்மையும் கடுகளவுமற்ற தமிழகத் தலைவர்களின் போலி ஒருமைப்பாட்டுணர் வால் வடவேங்கடம் இழந்தோம்.

காவிரி தோன்றுமிடமான குடகுப் பகுதியையும் கைவிட்டோம். தேவிகுளம் பீர்மேட்டை இழந்தோம். எல்லாவற்றிலும் பிறமொழிக்காரர்களின் சூழ்ச்சிக்கும் வஞ்சக விரகாண்மைக்கும் பலியானோம். பார்ப் பனியத்தின் விரகாண்மையால் தமிழ்வழிக் கல்வியை இழந்தோம். ஆங்கிலவழிக் கல்வி எனும் கொடிய மலைப் பாம்பு இன்று நம் மக்களை விழுங்கிக் கொண்டு வருகிறது.

தமிழ் தமிழ்நாட்டின் அலுவல் மொழியாக இல்லை. வழக்கு மொழியாக இல்லை. வாணிக மொழி யாக இல்லை; ஏன். கலையுலகிலும் தமிழ் புறக்கணிக்கப் படுகின்றது. திரைப்படம் உட்பட எல்லாத்துறை களிலும், வேற்று மாநிலத்தார் உட்கார்ந்து கொண்டு தமிழனைச் சுரண்டிக் கொழுக்கின்றனர். எல்லா உயர் பதவிகளிலும் வேற்று மொழிக்காரனே இருக்கின்றான்.

இம் மண்ணின் மக்களைப் பற்றியும் அவர்கட்கு வழங்க வேண்டிய உண்மைக் கல்வி பற்றியும் எவருக் கும் அக்கறையில்லை. எந்த ஆக்கவழியிலும் தமிழை வளர்ப்பதற்கான எந்த முயற்சியும் இல்லை. தமிழரின் வாழிடங்கள் பறிபோகின்றன. கூடங்குளம் அணு உலைகள் எவ்வளவு பெருங்கொடுமை!

எல்லாச் செய்திகளிலும் தமிழன் இளக்காரமாகவே நடத்தப்படுகின்றான்; மீத்தேன், எரிவளி, சிறுதொழில் பறிப்பு, நிலங்கையகப்படுத்துதல், சிறப்புப் பொருளியல் மண்டலங்கள், -பழங்குடி மக்கள் அவர்களின் இயற்கை வாழிடங்களிலிருந்து விரட்டப்படுதல் யாவும் தமிழ னுக்கெதிரானவை.

தமிழக மீனவர்படும் அல்லல் கொஞ்சமா? தில்லி சிங்களனோடு கைகோத்துக் கொண்டு தமிழ் மீனவர் களை அழிப்பதில் முன்னிற்கின்றது.

இப்பொழுது கூலித்தொழிலாளர்கள் வடக்கிலி ருந்து ஆயிரக்கணக்கில் இறக்கப்படுகின்றனர். இன்னும் எத்தனையோ சொல்லிக் கொண்டு போகலாம். அவர வர் மாநிலத்தில் அப்பாவித் தமிழரை அழிக்க ஆயிரம் சூழ்ச்சிகள் நடக்கின்றன. ஆனால், தமிழகத் திலோ வேற்று மொழிக்காரன் வந்திருந்து விருந்துண் கிறான். தமிழரையே மேலாண்மை செய்கின்றான்.

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர், பேதை

பெருஞ்செல்வம் உற்றக் கடை.

என்கின்றார் வள்ளுவர். பேதைத் தமிழினத்தின் பெருஞ்செல்வத்தையெல்லாம் வேற்று மாநிலத்தான் கொள்ளை கொண்டு போகின்றானே, இந்தத் தமி ழினம் இருக்கின்றதா செத்துவிட்டதா? விசை முறிந்த மணிப்பொறியாய், வெந்து தணிந்த சாம்பலாய்ப் போய்விட்டானே தமிழன். அவனை எப்படி எழுப்பு வது? எப்படி விழிப்புணர்வூட்டுவது? இதுவரை நம் போராட்டங்கள் ஒரு சிறிய மாறுதலையாவது கொண்டு வந்திருக்கின்றனவா?

மிகமிகச் சிறிய செய்தி - தமிழ்வழிக் கல்விக்கூட நம்மால் கொண்டுவர முடியவில்லையே.

பகைவரும் உட்பகைவரும் தமிழ்நாட்டில் தமிழ் முதன்மை அடைந்துவிடாமலிருக்க என்ன என்ன தந்தி ரங்களைச் சூழ்ச்சிகளை மேற்கொள்கின்றனர்! பெரும் பெருஞ்செய்தித்தாள்கள் எவையும் தமிழன் பக்கம் இல்லையே. தமிழுக்கு மாறான எண்ணங்களே நடுநி லைப் பூச்சுப்பூசி இந்த இதழ்களால் எங்கும் பரப்பப் படுகின்றன. தமிழைக் கலப்பட மாக்குவதே இவற்றின் வேலையாயிருக்கின்றது.

இனித்தமிழனால் நடத்தப்படும் நாளிதழ்கள் கிழமை, மாத இதழ்கள், தொலைக்காட்சி ஊடகங்கள் மேலுக்குத் தமிழ் பேசிக் கொண்டு, தமிழுக்கும் தமிழ்ப் பண்பாட்டுக்கும் ஊறு விளைவிக்கும் வேலையைத் தானே செய்து கொண்டுள்ளன.

பார்ப்பனிய இதழ்கள் தங்கள் வாணிக நலன்கட் காகவும், தமிழ் மக்களிடையே காலூன்றிக் கொள்வ தற்காகவும் தமிழர் நலன்பற்றிப் பேசினாலும், தமிழில் முற்போக்கு முன்னோடிகள் போல் காட்டிக் கொண்டாலும் பார்ப்பன இன நலன்கட்கெதிராக ஒரு துரும்பைக்கூட எடுத்துப்போட்டு நாம் பார்த்ததில்லை. ஆனால், நம் தமிழ் இதழ்கள் எப்படியிருக்கின்றன? கடுகளவேனும் தமிழ் நலம் கருதியதுண்டா? இவற்றின் எந்தச் செயலும் தமிழுக்குச் சார்பாக இருப்பதில் லையே! பார்ப்பானையும் விஞ்சிற் தமிழன் தன் மொழி யில் கலப்படம் செய்கின்றானே! பண்பாட்டைச் சீரழிக் கின்றானே.

காவிரி நீரில் தமிழ்நாட்டுக்குரிய முறையான பங்கி னைக் கேட்டால் கருநாடகத் தமிழர் தாக்கப் படுகின்ற னர். தமிழ்ப் பெண்கள் பாலியல், வன்முறைக்கு ஆளா கின்றனர். என்ன கொடுமை! ஒரு மக்களாட்சி நாட்டில் இது நடக்கலாமா? ஆனால், நடுவணரசு இதைப் பார்த் துக் கொண்டு சும்மா இருக்கின்றது. இந்தக் கொடுமை களைக் கூடத் தட்டிக் கேட்கத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் முன்வருவதில்லை.

தமிழ்த் தேசிய உணர்வு மக்களிடம் பரவி அவர் கட்குப் புத்தெழுச்சியூட்டித் தங்கள் மொழிக்கும் இனத் துக்கும் பொங்கி எழுத்து போராடும்படி அவர் களைத் தூண்ட வேண்டும்.

ஆட்சியை அதிகாரத்தைக் கைப்பற்றாமல் நாம் தமிழுக்கும் தமிழர்க்கும் எந்த நலமும் செய்து விட முடியாது. தேர்தலில் உண்மைத் தமிழுணர்வாளர் களுக்கு மட்டுமே ஒப்போலையிட்டு அவர்களைச் சட்ட மன்றத்தில் ஏற்றுமளவுக்கு நாம் மக்களை உருவாக்குதல் வேண்டும். மக்கள் உள்ளத்தில் மொழி, இன உணர்வை - அதாவது தமிழ்த் தேசிய உணர்வை எழுப்பினாலொழிய இதைச் செய்தல் இயலாது!

மக்கள் நடுவில் கருத்துப் பரப்பல் போர்க்கால அடிப்படையில் முழுமூச்சாக மேற்கொள்ளப் பட் டாலன்றி நம்மால் எள்ளளவும் அசைக்க இயலாது.

நீங்களும் நெடுமாறன் அவர்களும் இன்று மக்கள் உள்ளத்தில் தமிழ்த் தேசிய உணர்வை எழுப்பும் பணியில் முழுமூச்சுடன் ஈடுபட்டு வருகின்றீர்கள். உங்களிரு வரையும் நான் உள்ளத்துள் வழிபட்டு வரு கின்றேன் என்றே சொல்லலாம். எனினும் அமைப் பளவில் முன் னின்று ஈடுபடவியலாதவனாக நான் இருந்து வருகி றேன். வேறு இன்றியமையாப் (மொழி பெயர்ப்பு) பணி யினை நான் மேற்கொண்டுள்ளேன். எனினும் நாம் ஒன்று திரண்டு ஒருபுறம் போராடவும் மறுபுறம் மக்கள் நடுவில் செல்லவும் வேண்டியவர் களாக இருக்கின் றோம்.

அன்புடன்,

தங்கப்பா

Pin It