 |
ஞாநி
பதில்களைத் தேடும் கேள்விகள்!
சமுதாயத்தில் முதலில் தோன்றிய தொழில் என்று வர்ணிக்கப்படும் விபசாரம், சட்டப்படி குற்றமே அல்ல! முன்பின் தெரியாத இருவர் உடல் உறவில் ஈடுபடுவதான விபசாரச் செயலும் குற்றம் அல்ல. ஆம். வயது வந்த இருவர் பரஸ்பர சம்மதத்துடன் உடல் உறவில் ஈடுபடுவது சட்டப்படி குற்றமாகாது.
விபசாரத்துக்கு அழைப்பதுதான் சட்டப்படி குற்றம். விபசாரத்தில் கட்டாயமாக ஈடுபடுத்த ஒருவரைக் கடத்துவதுதான் குற்றம்.
விபசாரத்துக்கு அழைப்பது குற்றம் என்றால், அழைப்பது யார் பாலியல் தொழிலாளரா? அல்லது, அவரிடம் செல்ல விரும்பும் வாடிக்கையாளரா? சட்டம் இதுவரை பாலியல் தொழிலாளரைத்தான் ‘அழைப்பவ’ராகக் கருதி வருகிறது. அழைக்கப்பட்டவர், அதாவது வாடிக்கையாளர் குற்றவாளி அல்ல!
இந்த ‘அழைக்கும்’ குற்றம் என்பதே அபத்தமானது. பெரும்பாலான போலீஸ் ரெக்கார்டுகளில் இத்தகைய வழக்குகளில், பாலியல் தொழிலாளிகள் தெரு ஓரத்திலோ, வேறு ஒரு பொது இடத்திலோ நின்று, போகிற வருகிறவரையெல்லாம் விபசாரத்துக்கு அழைத்ததாகவே எழுதப்பட்டிருக்கும். ஆனால், கைது நடந்த தென்னவோ ஏதோ ஒரு விடுதி அறைக்குள்தான்! தமிழ்நாட்டிலேயே இவ்வாறு கைதான சில பெண்கள், போலீஸ் தெரிவித்தது பொய் என்றும், தாங்கள் நின்று அழைத்ததாகச் சொல்லப்பட்ட இடத்திலேயே தாங்கள் இருக்க வில்லை என்றும் கோர்ட்டில் நிரூபித்து போலீஸுக்கு எதிராக வழக்கில் ஜெயித்திருக்கிறார்கள்.
விபசார வழக்குகள் எல்லாமே போலீஸுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் தரகர்களுக்கும் சாதகமான வையே தவிர, சமூக ஒழுக்கத்தை மேம்படுத்தியவை அல்ல!
ஒரு பக்கம் எய்ட்ஸ் போன்ற கொடிய நோய் பற்றிய விழிப்பு உணர்வு மற்றும் தடுப்புப் பிரசாரங்களுக்குப் பாலியல் தொழிலாளிகளின் ஒத்துழைப்பு அரசுக்கு மிகமிகத் தேவைப்படுகிறது. அப்போது அரசு அவர்களை மனிதர்களாக மதிக்கிறது. இன்னொரு பக்கம், அதே அரசு அமைப்பின் போலீஸ் இயந்திரம் அவர்களை வதைக்கிறது. லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின்படி லஞ்சம் கேட்பதும் குற்றம்; கொடுப்பதும் குற்றம். ஆனால், விபசாரத்தில் ஒரு தரப்பு மட்டுமே குற்றவாளியாகக் கருதப்படுகிறது.
இதை மாற்றியமைக்க வேண்டும் என நீண்ட காலமாக மகளிர் அமைப்புகளும் பாலியல் தொழி லாளர் அமைப்புகளும் அரசிடம் கோரி வந்திருக் கின்றன. ஒருவழியாக இப்போதைய டெல்லி காங்கிரஸ் கூட்டணி அரசு, இந்தக் கோரிக்கையை ஏற்று சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டு வந்துவிட்டது. அதை மக்களவையின் தேர்வுக் குழு ஆய்வு செய்து, தன் பரிந்துரைகளையும் தந்திருக்கிறது. விரைவில் இது சட்டமாகிவிடும்.
இதன்படி, இனி விபசாரத்தில் ஈடுபடும் பாலியல் தொழிலாளி குற்றவாளியாகக் கருதப்பட மாட்டாள்.வாடிக்கையாளர்கள்தான் குற்றவாளிகளாகக் கருதப்படுவார்கள். ஆனால், இந்தப் புரட்சிகரமான திருத்தத்தை டெல்லி, குஜராத், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், கேரள அரசுகள் மட்டும் எதிர்த்துள்ளன. இதர மாநில அரசுகள் அங்கீகரித்துள்ளன.
இப்போதுள்ள நடைமுறைப்படி வாடிக்கையாளரை விட்டுவிட்டு பாலியல் தொழிலாளியை மட்டுமே கைது செய்வதில் மிக அதிகமாகப் பாதிக்கப்படுபவர்கள் பெண்களும், அரவாணிகளுமே! உண்மையில், பாலியல் தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்களைப் பாதிக்கப்பட்டவர்களாகக் கருதாமல், கொடூரக் குற்றவாளிகளாகத்தான் அதிகார அமைப்பு கருதி வந்திருக்கிறது. இதனால் லாபம் அடைந்தவர்கள் அந்தப் பெண்களைப் பயன்படுத்தியவர்கள்தான்! இந்தச் சூழ்நிலை, இப்போது வரும் சட்டத் திருத்தத்தால் நிச்சயம் பெரும் மாற்றமடையும்.
பாலியல் தொழிலாளர்களுடன் பணிபுரியும் தொண்டு அமைப்புகளின் வாயிலாகப் பல முறை அவர்களுடன் பணிபுரியும் வாய்ப்புகள் கிட்டின. ஒரு முறை, அவர்கள் பங்கேற்ற ஆவணப் படத்தைத் தயாரித்தேன். இன்னொரு முறை, அவர்கள் கருத்தை வெளிப்படுத்தும் சிறு நாடகம் ஒன்றை எழுதி, அவர்களே நடிக்க, இயக்கினேன்.
அவர்கள் யாரும், எப்போதும் தங்கள் வாடிக்கையாளர்களைப் பற்றிக் குறை சொன்னதே இல்லை. தரகர்கள், போலீஸ் இருவரின் கொடுமைகளைப் பற்றி மட்டுமே அவர்கள் அதிகமாகவும் ஆவேசமாகவும் பேசினார்கள்.
தங்கள் தொழிலை அவர்கள் யாரும் இழிவாகக் கருதவே இல்லை. தாங்கள் இதற்கு வரக் காரணமாக இருந்த காதலன், கணவன், குடும்பத்தார் ஆகியோர் பற்றிய வருத்தங்களே அவர்களுக்கு அதிகம். போலீஸ், தரகர் வன்முறையிலிருந்து விடுதலை ஒன்றே அவர்களின் ஒற்றைக் கோரிக்கை.
உடலை விற்றுச் சம்பாதிப்பது ஒழுக்கமானதா?
‘எது ஒழுக்கம்?’ என்பதே அவர்களின் பதில் கேள்வி.
பலரும் சொன்ன பதில்கள்... ‘‘இந்தச் சமூகத்தில் எல்லாரும்தான் உடலைப் பயன்படுத்திச் சம்பா திக்கிறீர்கள். மூட்டை தூக்குவதிலிருந்து கணினியை இயக்குவது வரை உடலின் பல பாகங்கள் பயன்படுகின்றன. நாங்கள் பயன்படுத்தும் பாகங்கள் மட்டும் ஏன் உங்களுக்கு ஒழுக்கப் பிரச்னை ஆகிவிடுகிறது? உங்களுக்கு விருப்பம் இல்லாத வேலைகளை எல்லாம் அலுவலகத் தில் மூளையைப் பயன்படுத்திச் செய்துவிட்டுச் சம்பளம் வாங்கும் போது மட்டும் ஏன் அது ஒழுக்கப் பிரச்னை ஆவதில்லை? இது விபசாரம் என்றால், அதுவும் விபசாரம் இல்லையா?’’
சில கேள்விகளுக்கு நமது சமூகத்தில் நியாயமான பதில்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. தெரிந்தாலும் சொல்ல முடிவதில்லை!
இந்த வார அதிர்ச்சி!
பொதுத் துறை நிறுவனமான ‘ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா’வுக்குச் (Ôசெயில்Õ) சொந்தமான சில பொருட்களை விற்பதற்கு, கொல்கத்தா நீதிமன்றம் 1993ல் சௌமித்ரா சென் என்ற வழக்கறிஞரை ரிஸீவராக நியமித்தது. விற்பனைத் தொகையை மறு உத்தரவு வரை பத்திரமாக வைக்கச் சொல்லியது. விற்றதில் வந்த 32 லட்ச ரூபாயை அவர் தன் பெயரில் வங்கி டெபாசிட்டாகப் போட்டார். பிறகு, அதை எடுத்து ஒரு தனியார் கம்பெனியில் டெபாசிட் செய்தார். இதற்குள் வக்கீலாக இருந்த அவர் நீதிபதியாகிவிட்டார். அவர் டெபாசிட் போட்ட கம்பெனி திவாலாகிவிட்டது. டெபாசிட்டுக்கு ஈடாக மூன்று அடுக்கு மாடி வீடுகளை அந்த கம்பெனி, நீதிபதிக்குக் கொடுத்துவிட்டது. இந்த வருடம் ஏப்ரலில்தான் ‘செயில்’ விழித்துக்கொண்டு, தனக்குரிய விற்பனைத் தொகையைக் கேட்டு வழக்குப் போட்டது. விசாரித்த நீதிபதி கல்யாண் ஜோதி சென்குப்தா, நீதிபதி சௌமித்ராவை உடனடியாக 32 லட்ச ரூபாயை வட்டியுடன் சேர்த்து 52 லட்சமாகக் கட்டும்படி உத்தரவிட்டார். அவரோ வட்டிக் கணக்கு தப்பு என்று சொல்லி 45 லட்ச ரூபாய் மட்டும் கட்டியிருக்கிறார்!
இந்த வார மகிழ்ச்சி!
மகாராஷ்டிர மாநிலத்தில் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ சாஸ்தா நிலோப்ரே வித்யாலயா பள்ளியின் வெள்ளி விழாவே, இ.வா.ம!
நூற்றாண்டு விழாக்களைக் கண்ட பல பள்ளிகள் தேசத்தில் இருக்கும்போது, இந்த வெள்ளி விழாவுக்கு ஏன் அத்தனை மகிழ்ச்சி? காரணம், இந்தப் பள்ளி முழுக்க முழுக்க, ஃபெயிலாகும் மாணவர்களுக்கான பள்ளி. அவர்களைச் சேர்த்துப் பயிற்சி தந்து படிக்க வைத்து, தேர்வுகளில் வெற்றிபெற வைப்பதே நோக்கம்.
சமூக சேவகர் அன்னா ஹசாரே வழிநடத்தும் இந்தப் பள்ளியில் இப்போது தேர்ச்சி விகிதம் 80 சதவிகிதம். 800 மாணவர்கள் படிக்கிறார்கள். பள்ளிச் சுவரைச் சீர்செய்யத் தேவைப்பட்ட 2.5 லட்ச ரூபாயைப் பழைய மாணவர்கள் திரட்டிக் கொடுத்திருக்கிறார்கள்!
இந்த வாரப் புதிர்!
குடியரசுத் தலைவர் பதவியில் இருப்பவர் மீது நாம் வழக்கு போட முடியுமா, முடியாதா? சட்டம் என்ன சொல்கிறது?
1. போடலாம்.
2. போட முடியாது.
எது சரியான விடை என்பதே இப்போது கேள்விக்குறியாகி இருக்கிறது.
அரசியல் சட்டம் 361(1) பிரிவின்படி குடியரசுத் தலைவர், ஆளுநர் ஆகியோர் தங்கள் பதவிகளுக்கான அதிகாரத்தின் கீழும் கடமைகளின் கீழும் செய்யும் எந்தச் செயல் பற்றியும் எந்த நீதிமன்றமும் கேள்வி எதுவும் கேட்க முடியாது. சட்டப்பிரிவு 361(4)ன்படி, குடியரசுத் தலைவரும் ஆளுநரும் அந்தப் பதவியில் இருக்கும்போதோ, அல்லது அதற்கு வருவதற்கு முன்போ செய்த எந்தச் செயல் மீதான, எந்த சிவில் சட்ட நடவடிக்கையையும் அவர்கள் அந்தப் பதவியில் இருக்கும் காலம் வரை மேற்கொள்ள முடியாது. அதாவது, ஒருவர் ஜனாதிபதி/கவர்னர் பதவிக்கு வருவதற்கு முன்பு கடன் வாங்கியிருந்தால், அந்தக் கடனைக் கேட்டு வழக்குப் போட, அவர்களின் பதவிக் காலம் முடியும் வரை காத்திருக்க வேண்டும்!
இது இப்படியிருக்க...
காசி பல்கலைக்கழகத்தின் ஒரு முக்கிய பதவியான விசிட்டர் பதவியில் ஜனாதிபதி இருக்கிறார். விசிட்டருக்கு மேற்பார்வையிடும் அதி காரம் உள்ளது. விசிட்டர் என்ற முறையில் பல்கலைக்கழகத்துக்குச் சென்றபோது, அங்கே பேராசிரியர் அசோக் சொன்கார் என்பவரை வேலை நீக்கம் செய்தார் அப்துல்கலாம். அதை எதிர்த்து அசோக் போட்ட வழக்கில், இப்போது உச்ச நீதிமன்றம் அப்துல் கலாமுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது!
ஆனந்த விகடன் 6.12.2006
|