Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru Logo "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Vizhippunarvu
Vizhippunarvu Logo
மார்ச்-ஏப்ரல் 2006
மதத்தை வேரறுத்த தோள்சீலைப் போராட்டம்

இரா. சிவக்குமார்

உன் சாதி என்ன? எத்தனை பேர் உனக்கு ஆதரவாக ஓட்டளிப்பார்கள்? சாதியின் உட்பிரிவுகளில் எத்தனை பிரிவுகள் உனக்கு ஆதரவாய் உள்ளன? என்பன போன்ற கேள்விகள் அனைத்துத் தமிழக அரசியல் கட்சிகளின் தேர்தல் வேட்பாளர்களுக்கான நேர்காணலில் கேட்கப்பட்டவை. சென்னை ஐ.ஐ.டியில் தாழ்த்தப்பட்டவர் என்பதற்காகவே ஆதிக்கச் சக்திகளால் பந்தாளப்படும் பேராசிரியர் வசந்தா கந்தசாமி, தமிழகச் சாதிய ஒடுக்குமுறையின் கோரமுகத்தைக் காட்டி நிற்கும் பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டகாச்சியேந்தல் ஊராட்சிகள், இந்தியக் குடியரசு நாளின் போது கொடியேற்றிய குற்றத்திற்காக தாழ்த்தப்பட்ட ஊராட்சித் தலைவருக்கு விழுந்த செருப்படிகள், மலத்தைத் தின்னச் செய்த திண்ணியங்கள், தாழ்த்தப்பட்ட சாதிக் கட்சிகளுக்கு தமிழகத்தின் பெருங்கட்சிகள் வழங்கிய தேர்தல் தொகுதி ஒதுக்கீட்டுக் கூத்துக்கள், ஆகியவை சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டுத் தளங்களில் இரண்டாயிரம் ஆண்டுகளாய் தமிழகத்தில் நிகழும் சாதிய வன்கொடுமையின் வெளித் தெரியும் எச்சங்களாகும்.

தமிழகத்தின் உள்ளடங்கிய சிற்றூர்களில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் சில பொழுதுகளில் மட்டுமே ஊடகங்களால் வெளிக் கொணரப்படுகின்றன. சமூக அமைதி என்பதைக் காரணம் காட்டி பெரும்பாலான நிகழ்வுகள் ஆட்சியாளர்களாலும், ஆதிக்க சக்திகளால் நடத்தப்படும் ஊடகங்களாலும் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன. மனுவின் வர்ணாசிரமக் கொடுமையை முன்னிறுத்திய இந்தியச் சட்டங்களும், நீதிமன்றங்களும், அதிகார மையங்களும் சாதிய அடையாளங்களை ஊக்குவிப்பதிலும், அதன் அடிப்படைக் கருத்தியலை நீர் ஊற்றி வளர்ப்பதிலும்தான் முழுமூச்சுடன் அக்கறை காட்டுகின்றன.

Tholseelai சாதியத்தின் கொடுங்கிளைகளை வெட்டி எறிவதற்கு, வெகு சில முற்போக்கு சக்திகள் முனைந்து போராடிக் கொண்டிருக்கின்றன. இரண்டு படி முன்னேறினால், நான்கு படிகள் பின்னே சரிகின்றன நமது முயற்சிகள். வரலாற்றின் போக்கில் ஆங்காங்கு நிகழ்ந்த பல்வேறு எதிர்க்குரல்களும், கலகங்களும் தான் சமூகத்தை இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்கின்றன. என்பதையும் நாம் மறந்துவிடலாகாது. எத்தனையோ தடைகள் நம்மை நிலைகுலைய வைத்தபோதும் தொடர்ச்சியான போராட்டங்களும், எழுத்து மூலமான கருத்துப் பரவல்களும் ஆங்காங்கு நிகழ்ந்து கொண்டிருக்கின்றன எனும் போது மாபெரும் மலையையும் மடுவாக்க இயலும் என்ற நம்பிக்கை ஒன்றுதான் முற்போக்கு இயக்கங்களையும், சக்திகளையும் இன்னும் இயங்கச் செய்து கொண்டிருக்கிறது; இனியும் இயங்கச் செய்யும்.

முற்போக்கான பல்வேறு செயல்பாடுகளுக்கு முன்னுதாரணமாய்த் திகழும் தமிழகம், பொது நலத்துடன் சமூக நீதிக்குப் பாடுபட்ட பல்வேறு தலைவர்களைத் தற்போது சாதிய அடையாளங்களுக்குள் அடைத்து வைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இது நிகழ்காலத் தமிழகத்தின் அவலப்போக்கிற்கு மிகச் சிறந்த சான்றாகும். சாதிய ஏற்றத்தாழ்வுகளால் சிக்கிச் சீரழிந்து கொண்டிருந்த தமிழகம், அவ்வப்போது எதிர் கொண்ட கலவரங்களால் பல்வேறு வரலாற்றுப் பக்கங்களை தனக்குள் பதிந்து வைத்திருக்கிறது. உயிர்களை உடமைகளை உரிமைகளை இழந்து பிறந்த மண்ணில் அகதிகளாய் தமிழ்ச் சமூகத்தின் பெரும்பகுதி வாழ்ந்த கொடுமையை எண்ணிப்பார்த்தால், உயிர்போயினும் அந்தக் கொடுமை இனி ஒருக்காலும் நடக்க அனுமதிக்கக்கூடாது என்பதாகவே நமது வைராக்கியம் இரும்பு உருக்கொள்கிறது.

ஒரு காலத்தில் ஒவ்வொரு சாதியினரும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? எங்ஙனம் ஆடைகள் உடுத்த வேண்டும்? என்றெல்லாம் விதிகள் வகுத்து பார்ப்பதும, தொடுவதும் தீட்டு என்ற தீண்டாமைக் கொடுஞ்செயலை அங்கீகரித்து, அவற்றுக்கு அரச மரியாதையை அளித்த மன்னர் இராஜதானிகளும் இருந்தன. எண்ணற்ற அடக்குமுறைகள் தமிழகத்தில் நிழ்ந்த காலம் ஒன்றுண்டு. அதுபோன்ற சாதியக் கொடும் வரலாற்றுத் தடங்களில் ஒன்றுதான் இன்றைய குமரி மாவட்டத்தில் 18-19ஆம் நூற்றாண்டுகளில் நடைபெற்ற தோள்சீலைப் போராட்டம்.

18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் மிகப் பெரும் மக்கள் போராட்டம் அன்றைய கேரளப் பகுதியிலிருந்த தென் திருவிதாங்கூரிலும், தமிழக எல்லைப் புறத்திலும் நடைபெற்றது. சாணார் என்றழைக்கப்பட்ட நாடார் சாதி மக்கள் நம்பூதிரிகள், நாயர்கள், வேளாளர்கள் உள்ளிட்ட ஆதிக்க சாதிகளால் கடுமையான இன்னலுக்கும், ஒடுக்குமுறைக்கும் ஆளாக்கப்பட்டனர். இந்து உயர் சாதி மக்களிடம் ஒடுக்கப்பட்ட இந்து வகுப்பினரான பள்ளர், பறையர், புலையர், ஈழவர் ஆகியோர் எத்தனை அடி தூரத்திலிருந்து நின்று பேச வேண்டும் என்றெல்லாம் அடிக்கணக்கு வைத்து தீண்டாமையைப் போற்றி இருக்கிறார்கள். சாணார் போன்ற கண்ணில் படக்கூடாத சாதி மக்களும் இருந்திருக்கிறார்கள். (உலகில் எங்கும் இப்படி ஒரு கொடுமை நடந்தது கிடையாது. இனி நடக்கவும் கூடாது) ஆதிக்க சாதிகளால் நிர்ணயிக்கப்பட்ட இந்தத் தீட்டுத்தூரத்தை எவரேனும் மீறினால் கடுமையான தண்டனைக்கு ஆளாக்கப்பட்டார்கள்.

இதில் கொடுமையான இன்னொரு விசயம் என்னவென்றால், பனந்தோப்புகளைச் சொந்தமாக வைத்துள்ள, வசதி படைத்த சாணார்கள், தங்கள் தோப்புகளில் கூலி வேலை செய்யும் சாணார்களை மேல் சாதி ஆதிக்க மனப்பான்மையிலேயே நடத்தி வந்தனர் என்பதும் இங்கு குறிக்கத்தக்கது. இதனை சாமித்தோப்பு அய்யா வைகுண்ட சாமி தனது அகிலத்திரட்டில், துரியோதனனும், பஞ்சவரும் சேர்ந்து ஒரு வயிற்றில் பிறக்கக் கண்டேனே சிவனே ஐயா என்று வேதனையோடு பதிவு செய்திருக்கிறார். சாதி ஒடுக்குமுறையோடு வர்க்க ஒடுக்கு முறையும் சேர்ந்ததன் காரணமாக, தமிழகத்தின் பிற பகுதிகளில் வசித்த சாணார் சமூக மக்களைக் காட்டிலும் பல மடங்கு இழிவான நிலையிலேயே குமரி மாவட்டச் சாணார்கள் வாழ்ந்து வந்தனர். கீழ்ச்சாதி என்று சொல்லப்பட்டவர்கள் அரசாங்கத்திற்கு சம்பளமின்றி வேலை செய்தாக வேண்டும் என்று திருவாங்கூர் அரசாங்கம் 1814ல் உத்தரசே போட்டது.

திருவிதாங்கூர்ப் பகுதிகளில் வாழ்ந்த சாணார் சமூக மக்களின் உழைப்பு அதிகார வர்க்கத்தினரால் மிகக் கொடுமையான அளவில் சுரண்டப்பட்டது. கூலி மறுக்கப்பட்ட அடிமைகளாய் சாணார்கள், விலங்குகளை விடக் கேவலமாக வாழ்ந்தனர். அரசுக்கும், ஆதிக்க சாதிகளுக்கும் அடங்க மறுத்தவர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர். உழைப்பிற்கான ஊதியத்தை தர மறுக்கின்ற வேலையை ஊழியம் என்று அழைத்து அவ்வேலைகளையெல்லாம் சாணார் மக்களைச் செய்யப் பணித்தனர். இதனை உப்பு ஊழியம் என்றும், அரசு அலுவலகங்களில் எழுதுவதற்காக வழங்கப்படுகின்ற பனை ஓலைகளை இலவசமாகத் தருகின்ற வேலைக்கு ஏட்டோலை ஊழியம் என்றும் அழைத்து அந்த வேலைகளையெல்லாம் சாணார் மக்களைச் செய்ய வைத்தனர். அது மட்டுமன்றி, கோயில்களில் எண்ணெய், விளக்குத்திரி கொடுக்கின்ற ஊழியம் உட்பட பல்வேறு ஊழியங்களைப் பட்டியலிடலாம். உழைக்கின்ற சாணார் சமூக மக்கள் குடைப்பிடிக்கக்கூடாது, செருப்பு அணிதல் கூடாது, மாடி வீடு கட்டக்கூடாது, தங்க நகைகள் அணியக் கூடாது, பெண்கள் தங்களது மார்பினை மேலாடைகளால் மறைக்கக்கூடாது, முழங்காலுக்குக் கீழே உடுத்தக்கூடாது, பசு மாடுகள் வளர்க்கக்கூடாது என்று பல்வேறு கூடாதுகளுக்கு ஆளாக்கப்பட்டனர். இதற்கு பணக்கார சாணார்களும் உடந்தையாக இருந்தனர்.

18ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டங்களில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் வரிவசூல், நீதி, நிர்வாக முறைகளில் பெரும்பாலும் நாயர்களே இருந்தனர். வானாளாவிய அதிகாரத்தின் காரணமாய், அடித்தட்டு மக்களை ஒடுக்குவதில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். அதிலொன்றுதான் வரி. உயிரோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் வரி செலுத்த வேண்டும். இதற்குத் ‘தலைவரி’ என்று பெயர். தப்பித் தவறி எவரேனும் தொழில் செய்தால் அதற்குத் தொழில் வரி. பெண்கள் மேலாடை அணிந்து வருவதற்கு ‘தலைவரி’ என்று பல்வேறு வரிகளை ஒடுக்கப்பட்ட மக்கள் மீது திணித்து அவர்களின் வாழ்வியலைக் கேள்விக்குள்ளாக்குவதில் முனைந்து நின்றார்கள் இந்து ஆதிக்க சாதியினர்.

வழக்கமாகத் திருவிதாங்கூரில் உயர்ந்த அந்தஸ்துடையவர்களின் முன்னிலையில் தாழ்ந்த அந்தஸ்துடையவர்கள் மரியாதையின் அடையாளமாகத் தங்கள் மார்பைத் திறந்து போடுவது வழக்கம். சாதி வரிசையின் நீண்ட படிகளில், உதாரணத்துக்கு நாயர்கள், நம்பூதிரி பிராமணர்களின் முன்னிலையில தங்கள் மார்பைத் திறந்து போட்டார்கள். பிராமணர்களோ தெய்வங்களின் முன்னிலையில் தங்கள் மார்பைத் திறந்து போட்டார்கள்.... இந்த வழக்கத்தின்படி மற்ற தாழ்ந்த சாதிகளைப் போல நாடார்களும் எந்த நேரத்திலும் தங்கள் மார்பை மூடுவதினின்றும் தடுக்கப்பட்டார்கள்... நாடார் ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிய உடை அரையில் முழங்கால் வரை ஒரு முரட்டுத் துணியைச் சுற்றிக் கொள்ளுவதாகும் (ஹாட்கிரேவ் 59, தெற்கிலிருந்து என்ற நூலில்) 1829ஆம் ஆண்டு சாணார் சமூகப் பெண்கள் மேலாடை அணியக் கூடாது என்று திருவிதாங்கூர் அரசாங்கமே உத்தரவிட்டது.

1801 முதல் 1809 வரை திருவாங்கூர்த் தளவாயாக இருந்த வேலுத்தம்பி, அடித்தட்டு மக்களின் மேம்பாட்டிற்காக எண்ணற்ற பணிகளைச் செய்தார். தன்னுடைய எல்லாவிதமான போராட்டங்களுக்கும் பொது மக்களின் ஒருங்கிணைப்பையே பெரிதும் நம்பினார். இதனால் மக்கள் ஒன்றுபட்டுப் போராடும் எண்ணத்தை வளர்த்துக் கொண்டனர். இந்த எண்ணம் பின்னர் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களுக்கு உந்து சக்தியாக இருந்தது. நாடார் சமூகத்தினரும், இதர ஒடுக்கப்பட்ட வகுப்பினரும் அணி திரண்டனர். ஆதிக்க சக்திகளின் எல்லைக் கோடுகள் தகர்த்தெறியப்பட்டன. இந்தியத் துணைக்கண்டத்தில் ஆரியர் படையெடுப்பால் நிகழ்த்தப்பட்ட வர்ணாசிரமக் கொடுஞ்சட்டங்கள், இசுலாமியர்கள், பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள், போர்த்துக்கீசியர்கள், ஆங்கிலேயர்களின் படையெடுப்புகளால் மிகப் பெருமளவில் ஆட்டம் கண்டன. அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் மேற்கண்டவர்களின் படையெடுப்பால் சற்றேனும் மாற்றம் நிகழ்ந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.

வெள்ளை ஏகாதிபத்தியத்தால் இந்தியா பல்வேறு இன்னல்களுக்கு ஆளானபோதிலும், அவர்கள் காலத்தில் அடித்தட்டு மக்களின் ஒடுக்குமுறைகளுக்கு சிற்சில நேரங்களில் தீர்வுகள் கிடைத்தன என்பதும் மறுக்க முடியாத உண்மை. கிறித்தவத்தைப் பரப்பும் முகத்தான் இந்தியா வந்திருந்த கிறித்தவ மிஷனரிகள், சாதிய வன்கொடுமையின் கோரத்தாக்கத்தால் நிலைகுலைந்திருந்த மக்களுக்கு ஆதரவாய்க் குரலெழுப்பினர். அவர்களின் தேவாலயங்களும், பள்ளிகளும் உரத்துக் குரல் கொடுத்தன. 1812இல் திருவிதாங்கூரில் ஆங்கிலப் பிரதிநிதியாகப் பணியாற்றிய கர்னல் மன்றோ ‘கிறிஸ்தவராக மாறிய பெண்கள்’ மற்ற தேசக் கிறிஸ்தவப் பெண்களைப் போலத் தாங்கள் மார்பை மறைத்துக் கொள்ள உரிமை அளிக்கும் என்ற ஆணையைப் பிறப்பித்து, சாணார் பெண்களின் சமூக மறுமலர்ச்சிக்க வித்திட்டார். மிஷனரிகளின் அணுக்கமான தன்மையினாலும், அன்புக் கருணையாலம் ஈர்க்கப்பட்ட மக்கள் இந்து மதத்திலிருந்து வெளியேறி கிறித்தவ மதத்தைத் தழுவினர். கொத்துக் கொத்தாய் நிகழ்ந்த இந்த மத மாற்றமே சாணார் மக்களுக்கும், இந்து மதத்திலிருந்த சாணார்களுக்கும் தீர்வாய் அமைந்தன. இதன் பயனாக கிறித்தவ மதத்தினைத் தழுவாத இந்துச் சாணார் பெண்களுக்கும் துணிச்சல் பிறந்தது. துணிந்து அவர்களும் மார்பை மறைத்து தோள் சீலை அணியத் தலைப்பட்டனர்.

தாங்கள் வகுத்திருந்த விதிகளும், தங்களது ஆதிக்கமும் கண் முன்னே சிதைவதைக் கண்ட நாயர்கள் 1828ஆம் ஆண்டு பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். கிறித்தவத்திற்கு மதம் மாறிய நாடார்களை அச்சுறுத்தினர். தோள் சீலை அணிந்து கொண்டு வரும் பெண்களின் ஆடைகள் கிழித்தெறியப்பட்டன. அடித்து உதைக்கப்பட்டார்கள். கிறித்தவ நிறுவனங்கள் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டன. திருவிதாங்கூர் அரசு ஆதிக்க சாதிகளின் அடிவருடியாகவே இருந்து நாடார்களுக்கு எதிராகப் பல்வேறு ஆணைகளைப் பிறப்பித்த வண்ணம் இருந்தது. நாடார்களிடம் பீறிட்டெழுந்த சுதந்திர உணர்விற்கு முன்பாக அரசின் அடக்குமுறைகள் பிசுபிசுத்துப் போயின. இதன் விளைவாக ஒடுக்கப்பட்டு வாழ்ந்த பிற இந்து சாதிப் பெண்களும் மேல் சாதி இந்துப் பெண்கைளப் போன்றே ஆடைகளை அணியத் தொடங்கினர். தொடர்ச்சியான போராட்டத்தின் விளைவாக 1855ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானம் அடிமை முறையை ஒழித்து சட்டம் இயற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

“பறையனைத் தொட்டால் தீட்டு, சாணானைப் பார்த்தாலே தீட்டு” என்று சொல்லி அடக்குமுறையின் உச்சத்தில் கிடத்தி வைக்கப்பட்டிருந்த நாடார் சமூகம் எண்ணற்ற தடைகளைக் கடந்து இன்று பல்வேறு தளங்களில் தன்னை சமூக வளர்ச்சிக்கான காரணியாக நிரூபித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் தற்போதைய சூழலில் சாதிய வன்கொடுமைகள் ஆங்காங்கு அரங்கேறிய வண்ணம் இருக்கின்றன. வடுக்களாய்க் கிடக்கும் நாடார் சமூக மக்களின் வேதனைகள், பிற சமூகத்தையும் கைதூக்கி மேம்படுத்துவதில் காட்டப்படுமேயானால், சமத்துவ சமூகம் மலர்வதற்கு மாபெரும் பங்களிப்பாக அமையும். சாதிகளற்ற தமிழ்ச் சமூகம் உருவாவதற்கு அனைத்து சாதியினரும் பங்களிப்பார்களேயானால், வர்ணாசிரமக் கொடுங்கோட்டை தகர்த்தெறியப்படும். சாதிகளற்ற சமூகம் அமைப்பதென்பது நமது தொலைநோக்குச் செயல்திட்டம்.

ஆனால் அதே சமயத்தில் சமூகத்தின் அடித்தட்டில் உழன்று கொண்டிருக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் எல்லாவித உரிமைகளுக்கும் உடமைப்பட்டவர்களாக உருவாக்க வேண்டிய பெருங்கடமை தமிழ்ச்சாதிகளுக்கு இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஒரு காலத்தில் கோவிலில் கடவுளை வழிபட உரிமை மறுக்கப்பட்ட ஒரு சமூகம் இன்று தாங்கள் கட்டிய கோவில்களில் யாரால் தங்களின் கடவுளை வழிபடும் உரிமை மறுக்கப்பட்டதோ, அந்த பிராமணர்களையே அர்ச்சகராக வைத்துக் கொண்டு அவர்கள் மூலம் கடவுளை வழிபடுவது போராடிய வரலாற்றை மறப்பதாக உள்ளது. இது மிகவும் வேதனை தரும் ஒன்றாகும். நாமெல்லாம் அறிவார்ந்தவர்கள். உண்மையான முகங்களையும், கோரத்தை மறைத்துக் கொண்டிருக்கும் முகமூடிகளையும் அடையாளம் கண்டு உணரத் தொடங்கினால், சாதிகளற்ற தமிழினத்தின் தலைநிமிர்வு என்பது வெகு விரைவில் சாத்தியமே.

மேலாடை மீண்ட வரலாறு

சாணார், ஈழவர், காவேரிநாவிதர், பறையர், புலையர், சாம்பவர், வள்ளுவர், சேரமர் போன்ற சாதிகளில் உள்ள பெண்கள், மேலாடை அணிவதிலிருந்து இந்து ஆதிக்க சாதிகளான நம்பூதிரிகள், நாயர்கள், வேளாளர்கள், தமிழ்ப் பார்ப்பனர்களால் தடை செய்யப்பட்டனர். அரசில் பெரும் பொறுப்பு வகிக்கும் அதிகாரிகள் மற்றும் தலைவர்கள் முன்பு திறந்த மார்போடுதான் இருக்க வேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும் மேலாடை கொண்டு மூடுவது சாதிக் குற்றமாகக் கருதப்பட்டது. தாழ்த்தப்பட்ட இந்துச் சாதியினர் இந்துக் கோயில்களுக்குச் செய்ய வேண்டிய ஊழியங்களை கிறித்தவ மதத்திற்கு மாறினாலும் கூடச் செய்தாக வேண்டும் என்பதைச் சட்டமாகவே வலியுறுத்தினர். மேற்காணும் இரண்டு ஒடுக்குமுறைகளும் தான் தாழ்த்தப்பட்ட மக்களிடையே பெரும் எழுச்சியைக் கொண்டு வந்ததாக திருவிதாங்கூர் வரலாற்றாசிரியர்கள் பதிவு செய்துள்ளனர்.

சமூகத்தில் பெரும் மரியாதைக்குரிய ஒரு மனிதரிடம் ஒரு பெண் தனது மார்பைக் காட்டுவது என்பது அந்நபருக்கு சமூகம் அளிக்கும் மரியாதையாகவே கருதப்பட்டது என்று சாமுவெல் மேட்டீர் திருவிதாங்கூரின் இயல்பு வாழ்க்கை என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். 1865இல் திருவிதாங்கூர் மன்னர் ஆயில்யம் திருநாள் வெளியிட்ட அரசு ஆவணம் ஒன்றில், நாயர் பெண்கள் அரசாங்க அலவலர்களைக் கண்டு உரிமையைப் பெறுவதற்கு நடைபெற்ற போராட்டங்களை 1822-23, 1823-30, 1855-59 என மூன்று காலகட்டங்களாகப் பிரித்துக் காட்டுகிறார் வரலாற்றாசிரியர் கே.ஏ.ஜார்ஜ். 1822 மே மாதம் தேவாலயத்திற்கு மேலாடை அணிந்து சென்ற பெண்ணைத் தடுத்து சிலர் கிண்டல் செய்தனர். இதனை எதிர்த்து நிகழ்ந்த கலவரத்தால் மீட் பாதிரியார் திருவிதாங்கூர் ரெசிடென்டுக்கு விண்ணப்பம் செய்தார். பத்மநாபுரம் நீதிமன்றத்தில் விசாரணைக்காக வந்த இவ்வழக்கில் கிறித்தவப் பெண்கள் மட்டும் மேலாடை அணியலாம் என்று தீர்ப்புக் கிடைத்தது.

இரண்டாவது கலவரமும் கிறித்தவப் பெண்களுக்கு எதிராகவே நடைபெற்றது. இதற்கு எதிராய்க் குரலெழுப்பிய மீட் பாதிரியாரைக் கொலைசெய்ய பெரும் ஆயுதங்களுடன் ஒரு கும்பல் புறப்பட்டுச் சென்றது. முடிவில் முதலில் வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்பபை ஒட்டியே மதத்திற்குச் செல்வதில் தடையில்லை என்பதையும் அறிவித்தார். மூன்றாவதாக ஆற்றுங்கல்லில் நடைபெற்ற போராட்டம் காக்ஸ் என்ற பாதிரியார் முன்னிலையில் வலுப்பெற்றது. திருவிதாங்கூர் மற்றும் நாகர்கோவிலின் பெரும்பாலான பகுதிகளிலும் மிகத் தீவிரமாய் எதிரப்புப் போராட்டங்கள் பரவின. பொதுச்சொத்துக்களும், உயிர்களும், உடமைகளும் கடுமையான சேதத்திற்க உள்ளாயின. சென்னையில் வெள்ளை ஆளுநரிடம் கலவரம் தொடர்பாக மனு கொடுக்கப்பட்டது. இதன் விளைவாக திருவாங்கூர் மன்னர் உத்திரம் திருநாள், 1847ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் நாள், நீதிமன்றத் தீர்ப்பு வெளியிடப்பட்டது.

ஒடுக்கப்பட்ட இந்துக்கள் மேலாடை அணியவோ, நகைகள் அணியவோ உரிமை அளிக்கப்பட மாட்டாது. ஆனால் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியவர்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் கிடையாது என்பதாகத் தீர்ப்புக் கூறியது. ஆங்கிலேய அரசின் வற்புறுத்தலால் சொல்லப்பட்ட அந்தத் தீர்ப்பு வேறு விதமான விளைவு ஏற்படுத்தியது. அதன் பின் கன்னியாகுமரியில் ஏற்பட்ட மாற்றங்கள் யாரும் எதிர்பாராதது. அனைவரும் கூடிப் பேசினர். மதங்களையும் கடவுள்களையும் விட உரிமைதான் முக்கியம் என்று முடிவெடுத்தனர். 80%க்கும் அதிகமான நாடார் இன மக்கள் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறினர். பல்வேறு போராட்டங்களின் மூலம் கிடைக்கப் பெறாத தோள்சீலை அணியும் உரிமை கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதன் மூலமே அங்குள்ள நாடார்களுக்குக் கிடைத்தது. இன்றும் குமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ மதம் வேரூன்றி இருப்பதற்கு இதுவே காரணம்.

சார்லஸ் மீட் என்ற பாதிரியார் கிறித்தவ ஆலயங்களுக்கு வரும் பெண்களுக்கென்றே ஆடை ஒன்றை வடிவமைத்து அதனை அணியச் செய்தார். பெண்களின் மேலாடைப் போராட்டத்திற்கு பெருமளவில் இவரும் இவரது துணைவியாரும் ஆதரவு தெரிவித்தனர். வரலாற்றாசிரியர் சங்குண்ணி மேனம், மேலாடைப் போராட்டத்திற்குத் தலைவராக மீட் அவர்களே இருந்தார். அவரே இதற்குக் காரணகர்த்தா என்று கூறியுள்ளார்.

திருவிதாங்கூர் மகாராணியின் முன் ஒரு சாணார் சாதிப் பெண் ரவிக்கை அணிந்து வந்தார் என்பதற்காக அவரது மார்பை வெட்ட திருவிதாங்கூர் நிர்வாகம் உத்தரவிட்டது.

********

நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வந்த சாணார் உட்பட அனைத்து தாழ்த்தப்பட்ட சாதி நபர்களும் நீதிபதி அமரும் இருக்கையிலிருந்து 64 அடி தொலைவில் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.

கன்னியாகுமரி அருகேயுள்ள கொட்டாரத்தில் திருமணமான சில நாட்களில் தாலி, மேலாடையுடன் வந்த பெண் அரசாணையை எதிர்த்த குற்றத்துக்காக பொது இடத்தில் தாலியறுத்து உடை களைந்து அரசுப் படையால் கொலை செய்யப்பட்டார். அந்த இடம் இன்றும் தாலியறுத்தான் சந்தை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

ஏறக்குறைய இதே காலகட்டத்தில் பிறந்த வைகுண்ட சாமிக்கு, அவரது பெற்றோர் இடம் பெயர் முடிசூடும் பெருமாள். மேநிலைச் சாதியினரின் பெயரை தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த வைகுண்ட சாமிக்கு வைத்ததால் உள்ளூர் ஆதிக்க சாதியினர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதன் விளைவாக முடிசூடும் பெருமாள் முத்துக்குட்டி ஆனார் என்பது அன்றைய சாதி ஒடுக்குமுறையின் அவலப் பக்கங்களில் ஒன்றாகும்.

******************

கேரளாவின் ஒரு பகுதியாக இருந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த அன்றைய குமரி மாவட்டம் சுதந்திரத்திற்குப் பின் அம்மாவட்ட மக்களின் பல போராட்டங்கள் உயிர்த் தியாகத்திற்குப் பிறகு 1956ல் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது.

குறிப்பு நூல்கள்:

1. பொன்னீலன் எழுதிய தெற்கிலிருந்து
2. பாளையங்கோட்டை சவேரியார் கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் மையம் வெளியிட்ட பண்பாட்டு வேர்களைத் தேடி
3. அ.கா.பெருமாள் எழுதிய தென் குமரியின் கதை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...



படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anaruna.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP