Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Vizhippunarvu
Vizhippunarvu Logo
ஜூன் 2009
துயரங்களின் பதிவுகள்
முடியும் வரை தொடரும்

முள்ளி வாய்கால் பகுதியில் கடந்த மூன்று நாட்களில் வரலாறு காணாத மனிதப் படுகொலை ஒன்று நடைபெற்றிருக்கிறது. சிங்கள்ப் பேரினவாதம், அரச பாசிசம், பௌத்த அடிப்படைவாதம், இந்திய உளவுப்படை, சீன ஆயுதங்கள், அமரிக்க ஆதிக்கம் எல்லாம் ஒருங்கிணைந்து நந்திக் கடலை இரத்தக் கடலாக மாற்றிவிட்டிருக்கிறது. குழந்தைகளின் பிணங்களையும், முதியோரின் மரண ஓலங்களையும் பிரபாகரனின் பிணத்திற்குள் மறைத்திருக்கின்றன இந்த நாசகார சக்திகள். மனிதப் பிணங்களின் மேல் ஏறிநின்று பிரபாகரனின் பிணத்தைத் தேடுவதாக நாடகமாடிக்கொண்டிருக்கிறார்கள்.

தம்முடைய எதிர்காலம் இருண்டு போயிருப்பதாகத் தெரியாத அப்பாவிச் சிங்கள மக்கள் இலங்கைத் தெருக்களிலே கூத்தாடிக்கொண்டிருக்கிறார்கள்.

பிரபாகரன் இறந்து போயிருக்கலாம், அல்லது இறந்து போனவராகச் சித்தரிக்கப்பட்டிருக்கலாம். இதுவரை எந்த சாட்சியும் இதற்கில்லை. ஆனால், மக்கள் கூட்டம் கூட்டமாகக் கொன்று போடப்பட்டதற்கு சாட்சிகளாக இந்த அழிவைப் பார்த்துக்கொண்டிருந்த எல்லோரும் இன்னும் உயிரைக் கவ்விக்கொண்டு உலாவுகிறோம்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் செத்துப் போனாரா இல்லையா என்று பூச்சாண்டி காட்டிக்கொண்டே நாட்களை விலைக்கு வாங்கிக் கொண்டிருக்கும் இலங்கை அரசு, செத்துப் போன அப்பாவிகளை அப்புறப்படுத்திக் கொண்டிருக்கிறது. சாட்சி இல்லாமலே மரணித்த மனிதர்களை மறைத்துக் கொண்டிருக்கும் இலங்கை அரசிற்குத் துணைபோகும் சர்வதேசமும், அரசும், அரச ஆதரவுத் தமிழ்க் குழுக்களும் இறந்து போன மக்களைப் பற்றி மூச்சுக்கூட விடவில்லை. தெற்காசியாவின் சன சந்தடியில்லாத ஒரு மூலையில் ஐம்பதாயிரம் அப்பாவிகள் சாட்சியின்றிக் கொன்று வீசப்பட்டனர் என்று என்றாவது ஒருநாள் ஒரு குழந்தை மனிதனாகிக் குரலெழுப்பும்.

இங்கு அழிந்து போனது புலிகளோ வெற்றி கொண்டது அரசோ அல்ல. மனிதம் அழிந்திருக்கிறது. மக்கள் தோற்று போயிருக்கிறார்கள்.

தமது சொந்த தேசத்தின் இன்னொரு மூலையில் பிணக்குவியல்கள் அனாதையாக எந்தத் தேசிய அடையாளமும் இழந்து சுத்தம் செய்யப்படுவதற்காக் காத்துக்கிடக்கும் போது, இந்த அப்பாவிகள் தாம் வெற்றி பெற்றுவிட்டதாக ஆனந்தக் கூத்தாடுகின்றனர்.

சர்வதேச நாசகார சக்திகள், இலங்கைப் பாசிச அரசுடன் இணைந்து, நன்கு திட்டமிடப்பட இராணுவ நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றி முடித்திருக்கின்றன. கொல்லப்பட்ட தமிழர்கள் இவர்களுக்கெல்லாம், போர்ப் பரிசோதனை கூடத்து விலங்குளாகவும், மகிந்த அரசின் பாசிசப் பசிக்கு விருந்தாகவும், தம்மை அர்ப்பணித்திருக்கிறார்கள்.

பௌத்த மதக் கொடியோடு அன்னிய தேசத்திலிருந்து இலங்கை வந்திறங்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, தான் வளர்த்தெடுத்த பாசிசத் தீயிற்கு எண்ணையூற்றியிருக்கிறார்.

தமனது உறவுகளின் தலைகளில் இரசாயனக் குண்டு விழும் போது அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருந்த பச்சைக் குழந்தைகளும், பட்டினி போடப்பட்டு சாகடிக்கப்பட தடை முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவிகளும், இலங்கைத் தமிழ்ப் பேசும் மக்களுக்காகக் கண்ணீர்வடிக்கும் தமிழக உறவுகளும், பேரின வாதத்தின் பிடியிலிருந்து தப்பியோடி வந்த தமிழ்ப் பேசும் மக்களும், தம்மை அறியாமலே அரசியற் தற்கொலை செய்து கொண்டிருக்கும் பெரும்பான்மைச் சிங்கள மக்களும் மகிந்த வளர்த்தெடுக்கும் பாசிசத்தை எங்காவது முட்புதருக்குள் என்றாவது ஒரு நாள் புதைத்து விடுவார்கள்.

அரச பயங்கரவதிகள் பாவித்த மரண ஆயுதங்களும், எரிகுண்டுகளும், கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையும் போருக்குப் பின்னால் பரிமாறப்பட்ட கோடிக்கணக்கான வியாபர ஒப்பந்தங்களும் மௌனமாய் மறைக்கப்பட்டிருக்கின்றன.

மருத்துவ மனைகள் மீதும், மக்கள் குடியிருப்புக்கள் மீதும் எரிகுண்டுகளைப் போட்டு அழித்துவிட்டு, வெற்றிக் களியாட்டம் நடத்தும் இலங்கை அரசிற்கு இந்திய அரசு வாழ்த்துச் செய்தி அனுப்பிவைத்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபை கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. மனிதாபிமானம் பற்றியும், ஜனநாயகம் பற்றியும் கூக்குரலிடும் மேற்குலகம் கண்துடைப்பிற்காகச் சில அறிக்கைகளை விடுத்துச் சமாளித்திருக்கிறது.

குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை தன்னை இனிமேலும் நம்ப வேண்டாம் என்று உலகின் ஒடுக்கப்படும் மக்களுக்கு ஆணித்தரமாகச் சொல்லிவைத்திருக்கிறது.

இவைகளையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த கோடிக்கணக்கானவர்கள் சாட்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இனிமேல் இவர்கள் யார் மீதும் நம்பிக்கை வைக்கப்போவதில்லை. சமாதானம், ஜனநாயகம், மனித உரிமை என்ற அழகான வார்த்தைகளோடு ஊலா வந்த சர்வதேச நாசகர சக்திகளெல்லாம் தங்களை மக்களுக்கு இனம் காட்டிவிட்டன. இனியரு போராட்டம் இவர்களின் போலி வார்த்தைகளையும், கபட நாடகங்களையும் மீறி உருவாகும் என்பதற்கான அடித்தளமே இவர்கள் அம்பலப் பட்டுப் போயிருப்பது தான்.

- இனியரு


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.