தொலைந்து போன தேசம்
அகிலன்
அவளது
ஊரின் புழுதிச் சாலையையும்
பழகிய நிலவையும்
பிரிய முடியாக் கிழவியின்
புலம்பலினை ஆற்ற முடியா
அலையின் வார்த்தைகள்
மண்டியிட்டு வீழ்கின்றன
அவள் காலடியில்.
இந்தக் கடலுக்கு
அப்பால் தான்
நம் ஊரிருக்கிறதா?
மறுபடி மறுபடி
கேட்டுக் கொண்டிருக்கின்றன
குழந்தைகள்.
தன்
முதுமைச் சுருக்கங்களில்
படியும் மெல்லிய
பிரகாசத்துடன்
தலையசைத்த படியிருக்கிறாள்
கிழவி... ஆமென்று.
இந்த நிலவா
அங்கேயுமிருந்தது?
மறுபடியும் கிழவியின்
நினைவுகளைக் கலைத்த
குழந்தைகள் கேட்டன
ம் அதே தான்.
வழியவிட்ட பெருமூச்சிற்கிடையில்
இதேதான் அங்கேயுமிருந்ததாய்
கிழவி சொன்னாள்.
அப்ப...!
நிலவும் அகதியாய்
எம்முடன் வந்ததா?
விடை தர முடியாக்
கேள்வியைத் தூக்கிக் கொண்டு
குழந்தைகள் ஓடின....
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|