தேவேந்திர பூபதி கவிதைகள்
.
உயர்ந்த காதல்
எனது அலுவலகம் நனைந்து கொண்டிருக்கிறது
கிளை உயர்ந்த புளியங்கொம்புகளில்
வசித்த குரங்குகளைக் காணவில்லை
கீழ்த்தளத்தில் வாகனங்கள்
புகை எழுப்பி விரைய
ஒரு மாலையின் வரவை
எனது கோப்புகளில் இருந்து
பிரித்தெடுக்க முடியவில்லை
நவீனத்தின் கவிதைகளில் இருந்து
உனது முணுமுணுப்பு இம்மாலையை
காதலின் முத்தத்திற்கு தயார் படுத்துகிறது
இம்மழையின் பரிசுத்தம் உன் இதழ்கள்
எனது இயற்கையின் வெட்ட வெளியில்
உனது நடனம்
ஆயிற்று இருப்புகளைக் கலைத்து
ஒரு சந்திப்பு
தீராத உயிர்களின்
ஒரு நாள் தோற்றும்
முத்தம்
மாலை
இசை
மழை
எவ்வளவு பரிசுத்தம் உன் காதல்
ஞாபகமிருக்கிறதா
முன்னொருநாள்
உயர்ந்த கிளையில் அமர்ந்து எனக்கு
அதைச் சொன்னாய்.
ஓவியங்கள் புகைப்படமாவதில்லை
வானம் வரையும் ஓவியன்
சிறு பறவைகளை தொடுவானத்தில் வைக்கிறான் அதுபோலவே
வயல் வெளியில் செம்மறி ஆடுகள்
புல்லென்ற பசுமையினிடையே ஒரு கடும்பாறை
சாலையென்றால் வாகனங்களும்
கடலென்றால் கப்பல்களும்
ஆறென்றால் தூரத்து மலைகளும்தான் சூரியனை முடியவில்லை என்றால் என்ன நிழல்களும் கதிர்களும் இருப்பதில்லையா
எல்லாம் நிகழ்ந்த பின்தான் கேட்டுக் கொண்டேன்
அதிகம் பிரியமானவர்களுடன்
முரண்பாட்டின் கண்ணீரற்று அல்லது
பெருமிதத்தின் பரவசங்களற்று
தனியாக மிகத்தனியாக
ஒரு புகைப்படம் இருப்பதில்லை யாரிடமும்
காலங்களின் மீதான உத்திரவாதம்
நழுவிச்செல்லும் குளிர்கால நிலவைப்போல அல்லது அந்நியமாகிப்போன ஒரு தந்தையைப்போல
அனைத்தையும் விட்டுச்செல்லும் ஒரு தத்துவத்தின் முன்
ஏன் உறைந்ததில்லை ஒரு நிகழ்கணம்
அப்பா என என் குரல் துணுக்குறுகிறது
உறைந்த யாவும் கண்ணீர்த் திவலையாகக் கரையுமெனில்
என் மேய்ப்பனே
உன் வயல்வெளியில் ஒரு செம்மறியாடு
மேலும் ஒரு சிறு பறவை.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|