நமக்கல்ல...
ந.பெரியசாமி .
கொடியது கண்டு
பொங்கிடும் மனமென்பது பொய்த்திட
பேடியென விழித்திருந்தோம்
அங்கொருவன் வாயில் மலம் திணிக்கப்படுகையில் உழைப்புக்கேற்ற கூலி கேட்டு
நதியில் விரைத்தப் பிணங்களை பார்த்திருந்தோம் அசைவற்று
நூறுநாள் வேலையாச்சேயென
சுமந்த கனவோடு கூடியவர்களை
அடித்து நொறுக்கியது அன்னியப் படைகளல்ல...
களிப்புற்று கவிபாடும் அரசுதானென
கைத்த புன்னகையைப் பரிமாறிப் பிரிந்தோம்
தீராவெறி மூண்டு
தீயில் கருக்கிய குழந்தைளை
மறைத்து வளர்கின்றன பூச்செடிகள்
ஆண்டுதோறும் கணக்கிட்டோம்
உழவாளி
தன் பசியாற வழியற்று
பிணமாய்த் தொங்குதலை
கருணையை போதிப்பதாய் கூறும்
கடவுளர்களை ஆயுதமாக்கி
வழியும் ரத்தம் பிசுபிசுக்க
வாய்பிளந்திருக்கிறோம்
வண்ணத் தொலைக்காட்சி முன்
நம் செய்கையின் வினை
வம்பு தும்பற்று வீட்டினுள் கிடக்கும்
மகனையோ மகளையோ பலியெடுத்திட
வலி கொண்டு இமைகளைத்தீய்க்கும் கண்ணீரும்
விளைவற்ற குறுஞ்செய்தியாகி மறையும்
தீதும் நன்றும் பிறர்தர வாராதென்பது
நாய்களுக்குப் பொருந்தக்கூடும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|