Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
அக்டோபர் - டிசம்பர் 2008

ஆதமத்த நாடு, திக்கத்தச் சனம்
ஹரிகிருஷ்ணன்
.

போடுவாசி மவ சம்புநதிக்கி குமிஞ்சி நாட்டையில எழக்கட்ட முடியில. ரெண்டுத் தக்கம் குதுக்கு குதுக்குன்னு உதரம் புடுங்கி தீட்டாப் பட்டுக்கிட்டிருந்திச்சி. வூட்டுக்குத்தூரம் போறன்னைக்கிப் பாழாப்போனப் பொம்பளச் சென்மத்துக்கு ஒடம்பு ஒடம்பாட்டமா இருக்குது கருமாந்தரம்? மேலப்பூராஞ் சீலையாட்டந் தொவண்டுக்குது. கசகசன்னு ஈரம், ஒரே கசாட்டு, அந்தாண்ட இந்தாண்ட அக்கற எழய ஓடிப் பொணைக்கவுங் கைலாவல. இன்னைக்கி கோனு எட வேற கொறஞ்சிப் போவும், சின்னச்சேட்டுக்கிட்ட ஆரு பாட்டு வாங்கறதுன்னு பிள்ளைக்கிச் செட்யான வெசனம்.

பெத்தமனம் பித்து பிள்ளைமனங் கல்லுன்னு எந்த கேனச்சி சொன்னது? சம்புப் பிள்ள அவிங்கம்மா லங்கலாடி அரிசியத்துக்கிட்ட கொண்டாந்து அவன வுட்டடிக்கணும். அப்பவே இந்தப் பிள்ள விடியாந்தரம் அடிவவுறு கடுக்குது, அள்ளவவுத்த நோவுதிடி மூளின்னா, கேட்டாளா அவ? குண்டு முத்தம்மா கடயில புளிச்ச ரவ்வோத் தண்ணிய ஒரு முழுங்கு வாங்கிக் குடுத்து ஓடுறீ முட்டக்கண்ணின்னு தொரத்தியுட்டுட்டா. அவ வெசனம் அவுளுக்குப் பாவம். பேரு வௌங்குதேங் கப்பன் எம்.சி.யாருப் பேரு, சனங் காலு நீட்டிப் படுக்க முடியாதபடிக்கி அவங் கட்டிக் குடுத்தானே, காரவூடு அதுக்குப்பட்ட கடனக் கட்டமுடியாம அவப் பிருசந் தாத்தியம்பட்டியாம் போடுவாசி கூதமுட்டிச் செத்துப்போயிட்டான். செத்ததுதாஞ் செத்தாந் தாயாலி சும்மாச் செத்தானா? வருசத்திக்கிவொண்ணு வருசத்திக்கு ஒண்ணுன்னு சம்புப்பிள்ளைக்கி மின்ன நாலுப் பொட்டப்பிள்ளைங்க. காட்டுப்பியப் பேழும் மிந்தியே கருஞ்செவாப்பு வந்து அதலவொரு ஜதைய மண்ணுக்கு வாரிக் குடுத்துட்டாங்க.

கொங்கநாக் குட்டிப்போட்டு குப்பங் கொசவஞ் சூள வெச்சாப்பிடி, அனாமுத்தா பிள்ளைங்களப் பெத்துட் டுட்டு அப்பங்காரந்தான் புளுக்க மண்டிப் போட்டுட் டானே, அம்மாக்காரியாச்சிம் பொழப்பு மேல கருத்தா இருக்கணுமா வேண்டாமா?

அரிசியம்பிள்ளவொரு தாந்தோனி. பொம்பளைக்கி சேலம் ஒருக்கோடியா தெனஞ் சீனிமாப் பாக்கணும். ஆரியமோ, கம்போ, அரிசியோ, சாமையோ அது எதாயி ருக்குட்டும் அன்னைக்கி வூட்ல உண்டானத கொடைய மூட்டு ரட்சிமிக்கிட்ட அளந்துட்டுட்டுப்புட்டு வாங்கித் திங்கனும். ஆம்பளையாட்டம் பஸ்சி ஏறி நெனச்சப்பக்கம் போவணும் வரணும். அரக்கப்பரக்கப் பாடுப்பட்டாலும் பிள்ளைங்களுக்கு பாவம் படுக்கப் பாயில்ல. ஆயாக்காரி ஒருபக்கம் பெரும்போக்காத் திரிய, பிள்ளைங்க ஒரு பக்கம் அறங்கையும் பொறங்கையும் நக்கிக்கிட்டு எத்தன நாளைக்கி கெடக்குங்க? பாத்துட்டு அதுஅதுங்களே ஆளுக்கொரு மாப்பளைங்களத் தேடிக்கிட்டுப் போயிப் பொழைக்கிதுங்க. ஒருத்தி டெய்லருப் பையனொருத் தனக் கட்டிக்கிட்டு பொம்மிடி டேனிசிப்பேட்டையில இருக்கறா.இன்னோருத்தி ராரி டைவரொருத்தனச் சேத்திக்கிட்டு பூசாரிப்பட்டி தீவிட்டிப்பட்டியில இருக் கறா. சொத்தாப் பொழைச்சா வந்துப் போறதோடச் சேரி மிச்சப்படி எதிலியும் பட்டுக்கறதில்ல.

வாத்துரூம்புலப் போயி மூஞ்சி கை காலு கழுவிக்கிட்டு வந்தா களப்புக்குச் செத்த நல்லாயிருக்கும். மூணுத் தரத்துக்கு மேல மூத்தரத்துக்குப் போனாவே இந்த வாச்சி மேனு கெழவாடி பேரெழுதிக்கொண்டு சூப்ரேசுருப் பசங்கக்கிட்ட குடுத்துர்றான். அவிங்க அங்கென்னாப் புடுங்கற வேலைங்கறாங்க? ஆம்பளைங்கக்கிட்ட இப்பிடித்தான் ஆயிப்போச்சின்னு இந்த சமாச்சாரத்தச் சொல்லமுடியிமா? சேட்டு அவிங்கப்பன் பெரியசேட்டு இருக்கந்தினியும் ரவ்வுவேல கெடயாது, பவுலு மத்தியானம் ரெண்டே சிப்ட்டுத்தான். கோனு வைண்டிங்கி ரீலிங்கி ரெண்டுத்துக் கும் பொட்டப்பிள்ளைங்கதாஞ் சூப்ரேசுரு. அப்பிடி அல்லியும் வேணியும் அதுக்குமின்ன கோமிதியும் இருந் தப்ப இத்தன கெடுபிடி இல்ல. கோனு எட இல்லையின்னாக் கூட எதோ நேந்து நெரவுவாங்க.

டாக்கு எடுக்கனும், லோடு ஏத்தனுமின்னு அவீங்கள நேரங்கெட்ட நேரத்துல வரச்சொல்லி ஆபிசில வுட்டுச் செனையேறுனா, எவ ஒத்துக்குவா? சேர்றவிங்களுக்குத்தாம்பா இது சேரும், எல்லாத்துக்குமாச் சேரும்? நல்ல மவராசருக்கு அடையாளஞ் சொல்லாமப் பொறப்பட்டுருனுமில்ல? சேட்டுக்குப் பயந்துக்கிட்டு ரெண்டுபேரும் வேலைக்கே வர்ரதில்ல, நின்னுக்கிட்டாங்க. அவிங்க கத அப்பிடி ஆயிப்போச்சா, கோமிதியும், ஒயருமேனு கந்தசாமியும் பாத்த தாவுலப் பேசப் புடிக்க ஒருத்தரு மேலே ஒருத்தரு பிரியமாயிருந்தாங்க. அத எப்பிடியோ துப்புக்கண்டு பின்னிங்கி பிட்டரு செலுவராசு, கோமிதிப்பிள்ளயக் காங்கறப்பெல்லாம், கரண்டுக்காரன்னுது மட்லு மென்னா ஒசித்தி? மண்ணுத் திங்கற பண்டத்த ஆருத் தின்னா என்னா? நானுந்தா ஒரீடு பதம் பாக்கறனேன்னு ச்சும்மா எரண்டிக்கிட்டேயிருக்க, இவுளும் போனாப் போவுதுப் போனாப்போவுதுன்னுப் பொறுத்துக்கிட்டிருந்தா வவுநாளா.

ஒரு நாங்கறப்பெட்டுக்கு டெசுட்டு எடுத்துக்கிட்டுப் போனப்பிள்ளய லேப்புலவுட்டு செலுவ ராசு சீலய உருவ, அவ குய்யோ முய்யோன்னுக் கத்திப் ப்பாரிக்கிட்டு வெளியே ஓடியாந்துக்கறா. ஒடியாந்தவளக் குறுக்காட்டி, இன்னைக்கிச் சும்மா பிசுக்கு, வாயத் தொறந்து இத யெங்கியாச்சுஞ் சொல்லிப்பட்டையின்னு வெய்யி, சேட்டு வண்டியில தூக்கிப்போட்டுக்கொண்டி கந்தப்பட்டி ஏரியிலவுட்டுச் சின்னம் பண்டிப்புடுவமின்னு மெரட்ட, அந்தப்பிள்ள பத்து பதனஞ்சி நாளாட் டம் மில்லுப்பக்கம் தல வெச்சிப் படுக்கல. ஒழுக்கமா வேலைக்கி வந்துக்கிட்டிருந்தவ, வாரக்கணக்குல ஆளு அட்ரசியே காணமே. மேலுக்கு கீலுக்கு எதனாலுஞ் சவிரியமில்லியோ, என்னமோன்னு, ஒயருமேனு, தன சேவுரு, கோவாலு, பின்னிங்கி முருகேசன்னு அஞ்சாறு பசங்கப் போயி அவளப் பாக்க, இப்பிடி இப்பிடித்தான் நாயமின்னு எல்லாத்தையும் பூர்த்தியா புட்டுப் புட்டு வெச்சிட்டா.

இன்னைக்கி எலய அறுக்கறவன் நாளைக்கி கொலய ஏண்டா அறுக்கமாண்டான்? இந்த சங்கிதிய இப் பிடியே வுடக்கூடாதுன்னு பசங்கெல்லாம் ஒட்டுக்காச் சேந்துப்போயி சேட்டு காதுல இதப்போட்டு, பிட்ரு செலுவராசு, கோமிதிப்பிள்ளைக்கிட்ட தாஞ்செஞ்சது தப்புன்னு கால்ல வுழுந்து மாப்புக் கேக்குனுமின்னுச் சொல்ல, அவனிருந்துக்கிட்டு, ஒண்ணுமில்லாத விசியத்த ஆரு ஊதிப் பெரிசிப் பண்டனது? மில்லுப்பேருக் கெட்டுப் போவும், அப்பிடியிப்படி, அங்கயிங்கன்னு தபாய்க்கிறாந்தட்டி கழிக்கிறாஞ் சும்மா. அவ்ளதாஞ் சண்ட, பெருத்த சண்ட மூண்டுக்கிச்சி. பத்துப்பேரு பண் ணயம் பண்ற எடத்துல ஒருத்தன்மேல மட்லும் சேட் டுக்கு கருசனமின்னா அதுக்குங் காரணமில்லாம இல்ல.

சின்னப்பட்ட கழதைக்கி செனக்கழத கூத்தியாளாம், சேட்டு பண்ற கோளாறுக்கெல்லாஞ் செலுவராசி உள் ளொளவுக்காரன். ஏமாந்தப் பிள்ளைங்களக் கூட்டிவுட்டு அவுனுக்கு வௌக்குப் புடிக்கிறவனும் அவனே. ஆதியில சேட்டவிங்கப்பனும் செலுவராசி அவிங்கப்பனும் கொண்டலாம்பட்டி, மகுடஞ்சாவடி, எஸ்ப்பாலம், எளம் பிள்ளியக் கட்டி பழயத்துணிப் பொறுக்கி வித்தாங்க. பிற்பாடு தறி ஓட்டப்போயி, தானே தறிப்போட்டு, அப்பறம் நாலுமண்டி வெச்சி, படிப்படியா மின்ன வந்து பெரியச்சேட்டுக்கு நாலஞ்சி மில்லுஞ் சொந்தமாச்சி, நல்லது கெட்டது எல்லாத்துக்கும் கூடவேயிருந்து கடைசி முட்டும் ஒத்தாசிப் பண்டுனானில்ல, செலுவராசி அவிங் கப்பன், அந்த நன்னிக்கோசரம், மாளியக் கட்டி மரநாயக் குடிவெச்சாம் பெரியசேட்டு. மில்லுவாசல்ல மீட்டிங் பேசி, சின்னசேட்டு வண்டி மேல செருப்பக் கழட்டி வீசும்பிடி நாலுநாளா டைக்கி பண்ட, வேறெதுந் தோதுப் பத்தாம பிட்ரு செலுவராசி கோமிதிப் பிள்ளையிண்ட மாப்புக் கேக்க அவ என்னா நெனச்சாளோ மறுக்க மில்லுக்கே வரல. அன்னைக்கி வெஞ்சம் வெச்சாஞ் சேட்டு, ஆராருக்கு ஒடையடிக்கணுமின்னு. மொதல்ல அவங்கண்ல சிக்கனது ஒயருமேனு கந்தசாமி, அந்த சமாச்சாரத்த என்னான்னுச் சொல்றங் கேளுங்க...

காருவள்ளி கஞ்சநாயக்கம்பட்டியிலயிருந்து சத்திவேலு, சத்திவேலுன்னு ஒருப்பையன் மில்லு வேலைக்கி வந்துக் கிட்டிருந்தானப்பா அஞ்சாறு வருசமா. நாளுமேல ஒரு சிப்ட்டு ஒன்ரச் சிப்ட்டுன்னாலும் நல்லாக் கவடத்து பஞ்சித் திம்பாஞ் சலிக்காம. புளோரூமு, காடிங்கி யொரு தொங்கல்ல இருந்து கோனு வைண்டிங்கிமுட்டும் ஈரக் காத்து பதமா வேணுமின்னு சேட்டு ஏசி பிளாண்டு போட்டுருந்தாம் பக்கமா. பின்னிங்கில ஏறனா அவுத்த வுத்த பொட்டியில அண்டியிருக்கற பஞ்சிக்குப்பய வௌக்குமாத்துல அடிச்சிக் கூட்டணுஞ் சுத்தமா. உள்றப் போறப்ப பவுரு ஆபிசிலச் சொல்லி பீசுக்கட்டய மறக்காம புடுங்கி வெச்சிட்டுப் போவாந் தெனந்தப்பாம.

சேட்டு வூட்டாரு மாதரவொரு பிக்கேரிங்க ஆரும் இருக்க மாட்டாங்க. அப்பனாயா, பெத்துப்பொறப்பு, மாமம் மச்சான் ஒருத்தரு தொச்சமில்லாம வூட்டுச்சனமே மில்லுக் குள்றக் குடியாயிருக்கும். அன்னைக்கிங்கறப் பெட்டுக்கு சேட்டுப் பொண்டாட்டியந்தச் சொட்டப்பெருக்கான் விடிஞ்சிம் விடியாதமின்ன மில்லுக்கு வந்துட்டா குப்பூரு சொசைட்டியில பாலூத்திப்புட்டுப் போவ. மில்லச் சுத்தி வர ஆர்லுக்குள்ள ஆறேக்கரா கொறங்காடு கெடந்தது. அதயேஞ் சும்மாவுடனமின்னு சோளத்தட்டும், சீமத் தட்டும் ராசிப்பண்டி அத திங்கடிக்க பத்து உருப்பிடி சீம மாடு வளத்தனாங்க. அன்னாடம் அதுங்க அம்பதுப் படி, அறுவுதுப் படி பாலு பீச்சும். அதலவொரு வரும்பிடிப் பாத்துக்க அவிங்களுக்கு. சொட்டச்சி வந்தவ வந்தச் சோலியப் பாத்துக்கிட்டுப் போயிருக்கப்படாதா? ரவ்வுச் சிப்ட்டுக்காரப் பசங்க, பிள்ளைங்க யாராச்சிம் தூங்கறாங் களான்னுத் துப்பெடுக்க உள்ற வந்து ஒவ்வோரு எடமா நோட்டம் போட்டாப்பிடிச் சுத்திக்கிட்டிருந்தா, வாச்சி மேனு பாலு பீச்சிக் குடுக்கந்தினியும். அக்காளுக்கு உப்புசந் தாக்குப் புடிக்க முடியல, வேத்தூத்துதுன்னு சேட்டு மச்சனன் இ.எஸ்.சி என்னாப்பண்டுனான், சத்திப்பையன் பிளாண்டுள்ள இருக்கவே பீசுப்போட்டு மோட்டாரச் சாட்டுப் பண்டிவுட்டுட்டாம்பா.

ஏப்பா சின்னவெல மோட்டாரா? பதனாறயிட்டம் பூராம் இருவுது எம்.சி.பி மோட்டாரு, காத்தாச் சொழண்டடிக்க இந்த சத்தி மூச்சி வுடமாண்டாம மூணாளு ஒசக்கயிருந்து சுருண்டு வுழுந்தாங் கீழ. சோத்தாங்கையி மூட்டு வெலவிக்கிச்சி. கீழவுழுந்தவனத் தூக்கியொரு தண்ணி தப்பு குடுத்துத் தேக்கந் தேத்தாம, ஆரக்கேட்றா பிளாண் டுக்குள்ளறப் போனன்னு காதோதடச் சேத்தி அப்புறானே இ.எஸ்.சி ஒரு அக்குறும்பு. பசங்களும், பிள்ளைங்களும் நிமுசம் பையனத் தூக்கி சேட்டு வண்டியில வெச்சி புத்தூருக்குக் கொண்டுப்போனாங்க கட்டுப்போட. அன்னராவு வுட்டுட்டு விடிஞ்சி மக்யாநாளு பசங்க வந்து ஆரிந்த அலும்புப் பண்டனது?ன்னுக் கேக்கும்பிடி, இ.எஸ்.சி எனுக்கு எதும் தெரியாதுன்னே சாதிக்கறாம்பா வொரு அநியாயம்.

கந்தசாமி உம்மய ஒடச்சி சொல்லிப்புட்டான். ஓவ் இவங்கொல்ல வந்த மாத்தான் வுன்னுமாலும் இவன் ஒரே அரச்சணம் மில்லுல இருக்கப்படாதுன்னு மேத்திரிப் பசங்கச் சொல்ல, சேட்டு மச்சாங்காரனுக்கு சப்போட்டு நாயம், மொழுக்குநாயம் பேச இவிங்க விலுக்கோலு ஒத்துக்க மாட்டேனுப்புட்டாங்க. கிறுக்கு முறுக்குங்காம மச்சாங்காரன மில்லுக்கு வரவேண்டான்னுப்புட்டு, பையங் கையி எலும்புக் கூடிவருந்தினியும் சம்பளத்தோட ஆசிப்பத்திரி செலவையுஞ் சேத்திக்குடுத்துக்கிட்டிருந் தாஞ் சேட்டு. மூணு மாசங்கழிச்சி பண்டாத திருக்குசுப் பண்டி திலிப்பியும் மில்லுக்கு வந்துக்கிட்டிருந்தானப்பா இ.எஸ்.சி. சேட்டு புண்ணியத்துல. ஒருநாளு அளவத்த போதையோட ரவ்வு சிப்ட்டு பாத்துக்கிட்டிருந்த கந்தசாமி யிண்டப் பேசி பழசக் கௌறுகௌறுன்னுக் கௌறி அகராதிப் பேசி வலிவந்தமா சண்டைக்கி இழுக்க, இவனொண்ணுப் பேச அவனொண்ணுப் பேச ஒண்ணு மேலே ஒண்ணுப்போட்டு தகலாறு முத்தி கந்தசாமி, இ.எஸ்.சி. மண்டய அடிச்சி ஒழுக்கிப்புட்டான். இது தாண்டா சமயமின்னு சேட்டு ஓமலூரு டேசன்ல போயி கொலக்கேசி எழுதிக்குடுத்து ஒயருமேன உள்றத் தள்ளிப் புட்டான். நாயம் நெகாருன்னு ஒருத்தரும் வாயத் தொறக்க முடியல.

இதெல்லாம் ஒருபக்கங் கெடக்க, மூணு வருசத்துல பரமெண்டு பண்டறமின்னுச் சொன்னவிங்க ஏழு வருசமா வியும் ஒரே குஞ்சான குஞ்சிக்கி கார்டுக் குடுத்து பர மெண்டு பண்டல. பி.எப்பு, ஈயெஸ்சு ஒரு சுடுகாடங் கெட யாது. தீவாளிக்கி தீவாளி பிச்சப் போடறாப்ல முந்நூறு, நானூறு, மிச்சாமாப் போனா ஐநூறு உருவாதாம் போனசி. வருசமொருக்கா என்னமோ சாங்கியத்துக்கு ரெண்டுருவா சம்பளத்துல ஏத்துவான், அதுக்கு உண்டான வேலையுஞ் சேத்தி வாங்கிக்குவாங் கணக்கா.

ஏப்பா மூக்குமுடி புடுங்கினா ஆளு பாரங் கொறயுமா? அவனவனுக்கு தக்க சம்சாரமில்ல, சம்பளமே கட்டுப்பிடி ஆவலையின்னா எத வெச்சி சுதாதரிப்ப? புளோரூமு கொமாரு, காடிங்கி கணேசன், சிம்பலக்கி தனசேவுரு மொகாமையில மேட்டூரு சீரங்கனப் பாத்து ஊனியனு ஆரம்பிக்கலாமின்னு கலந்துப் பேசனததாங் காரணம், ஏப்பா சேலம் கிச்சிப்பாளையத்துலயிருந்து ரவிடிங்களக் கூட்டியாந்து, பசங்கள பஞ்சிக்கொடோன்ல வுட்டு அடிச்சா அடியா அது, மூக்கு வாயெல்லாம் ரத்தமாக் கொப்பிளிக்கிது. ஆளு தப்புனாலும் அடி தப்புல. ஓரடிப் பாக்கியில்லாம பூராம் உள்ளடி. தனசேவுருக்குத்தான் மீறன அடி. தறிக்காருக்கு கோனுத் திருடி வித்தாங்கன்னு திருட்டுப் பட்டங் கட்டி, போலிசிக்காரனுங்களே வண்டிப் போட்டுக் கொண்டி அவரவரு வூட்ல துள்ளத் துடிக்க எறிஞ்சிப்புட்டுப் போனாங்க அத்தாந்தரமா.

அதும்பொறவு உள்ளூரு ஆளுங்க ஒரே பசங்க இல்லாம துப்புரவா வேலயவுட்டு நிறுத்தி ராமநாதபொரம், மதரப்பக்கம் போயி, வெறும் பொட்டப்பிள்ளைங்க ளாவே மூனுவருசம் யெக்ரிமெண்டு முப்பதாயிரந் தாறம், நாலு வருசம் யெக்ரிமெண்டு நாப்பதாயிரந் தாறம், அதோட மாசச்சம்பளம், குடியிருக்க வூடுபோவ வர வண்டி வசிதின்னு படல்படலாக் கூட்டியாந்து கோட்ரசிக் கட்டிக் குடிவெச்சாங்க. நரிமின்ன நண்டுக் கரணமடிச் சாப்ல இவிங்கக்கிட்ட அவிங்க வந்து எனத்தக் கழட்ட முடியிம்? வந்த மாதரயே மாசமொரு கும்புலுச் சொல் லாமப் புடிக்காமப் பொறப்பட்ருச்சிங்க. மிச்சமீதி ஒண்ணு ரெண்டு தாக்குப்புடிச்சித் தடுமாறி மூணு வருசஞ் செலுத்த னவங்களுக்கும் அது நோனி இது நோனின்னு ஒரே அஞ்சிப்பிசா கைநட்டமில்லாமத் தொரத்தியுட்டுட் டாங்க. அப்பிடித்தாம் பட்டூம் இந்தச் சனந்திருந்திச்சா?

மதரக்காரன் வல்லையின்னா தரும்பிரிக்காரஞ் சும்மாவே வர்ரங்கறான். நாயங்கண்டுப்பேச ச்செட்யானப்படிக்கி மொகறயில மீசவெச்ச ஆம்பளையுமில்ல, மொழங் கால்ல மீச வெச்ச பொம்பளையமில்ல. சேட்டு மில்ல வெச்சி இன்னோரு வெவகாரமென் னுன்னா ஒராளு ஒரு வேலச் செய்யிதா அந்தவொரு வேல மட்லுந்தாங்கற கட்டுத்திட்டம் எதுங் கெடயாது. கரண்டு இல்லாம சென்ரேட்ல ஏழு வைண்டிங்கி மிசினுக்குப் பருத்தியா நாலுதான் ஓடுதா, மிச்சப்பேருப் போயி பின்னிங்கில சைடு கட்டணும், மிசுனுத் தொடைக்கனும், ஏப்ரான் ஒட்டுனும், அரியா எடுக்கணும், இதெதுமில் லியா புளோரூம்புக்குப்போயி மிச்சிங்ல பஞ்சள்ளிப் போடுணும்.

இன்னைக்கி காத்தால வந்தப்பத்தொட்டு ஏழாடங் கரண்டுப்போயி பஞ்சிக் கொடோன்லியேப் பழிக் கெடக்க விதியாச்சி. மத்தியான வெயிலு உக்கரம் புழுங்க ஒரே வேக்காடு, அதுல ஒடம்பு ஒடஞ்சிதான் இப்பிடி திரேகமே ரணமாயிட்டுது. கண்ணு இருண்டு, காது ரெண் டும் பஞ்சடஞ்சி, மேலு வெலவெலத்து, பிள்ள ரெக்கிரி யாட்டம் வதங்கிப்போயிட்டா. நின்னு நின்னு இடுப்பு நோவெடுக்க, காலுந் தானா மடியிது. வதயான வதப் பட்டுக்கிட்டு இவளிருக்க பொழுது மணி மூன்ற யாச்சி. இவளவுட்டுட்டு மித்த பிள்ளைங்கெல்லாம் அவரவரு எடுத்த கோனக் கொண்டி சேட்டுக்கிட்ட கணக்கு ஒப்ப டைக்க, இவ கடைச்சியாப் போயி மேலுக்கு சவிரிய மில்ல. நாளைக்கி சேத்தி ஓட்டிக் குடுக்கறன்னு தவுமா னஞ் சொல்லிக் குடுத்துட்டுப் போவலாமின்னுருந்தா.

ரட்சக்கணக்குல மொதுலுப் போட்டு மில்லோட்ற மொத லாளி, எரநூறு முந்நூறுப் பேத்துக்கு மாசம் முப்புது நாளும் படியளக்கப்பட்ட கருத்தா, ஆளு மேல ஆளு ரெண்டாளு வுட்டப்பொறவும் அவங்கிட்ட கையேந்தி கூலி வாங்கற வொரு பொட்டப்பிள்ள, கெட்டக்கேடு, இந்த மாதர வொரு மதியாதத்தனத்துல ரஸ்பீட்டு மயிரா நின்னுக்கிட் டிருந்தா, அந்த இஸ்பேட் புளுத்திக்கி ஏப்பா நோப்பாளம் வராது? எடுத்துக்கிட்டிருந்த கணக்க அப்பிடி அப்பிடியே வுட்டுட்டு, நெனச்சாப்பிடி குந்தியிருந்த சீட்டிய கிடீர்னு பொறவுத் தள்ளி எந்திரிச்சவன், திடுதிடுன்னு அந்தப் பிள்ளையிண்ட ஓட்டமா ஓடி ஏப் பொம்பளே, சேட்டு கூப்பர்றாந் தெர்லே? எர்மே மாரி நிக்றே ராஸ்கோல், கித்தனா கோன் பொம்பிளே, கித்தனா கோன்? ன்னு ஒரு அதட்டு அதட்டுனாம்பாரு விலுக்குன்னு துள்ளிவுழுந்தப் பிள்ள மெரண்டுட்டுதா, அந்தப்பயத்திலேயே இன்னோராடம் தீட்டாயிப்போச்சி.

ஒட்னக்கால எட்ட வெக்கறதுக்கில்லாமப் பட்டுக்கிட்டி ருந்த சித்தரவதயில பிள்ளைக்கிப் பேச நாவே எந்திரிக்கல. மொள்ள டேண்டு மேலயிருந்து கோனு எடுத்து சேட்டு மின்ன வெச்சா. எக், தோ, தீன்னு எண்ணிப்பாத்தவனுக்கு, எட்டேயெட்டு கோனுயிருக்கும்பிடி மொவரச் சுண்டி, படீர்படீர்னு நோங்கிநோங்கி பிள்ள தலமேலத் தட்டி, ஏப்பொம்பளே, எட்டவர் ஷிப்ட்லே, இவ்ளேதாங் கோனா? வயறு சோற் சாப்ட தெர்தூ, வாங்கறே பைசாக்கு வேலே செய்னும் தெர்லேன்னு கொரைக்க, உச்சியில ஈடுத்தாங்கி பிள்ளைக்கி நெருப்பு பருத்தி செவ்வ மாதர மேலேப்பூராம் த்திகு த்திகுன்னு எரிய அவுளுக்கும் மச திலிம்பிட்டுது. ஏந்திக்கிட்டிருந்த கோன நின்னவாக்குல விசிறி எஞ்சவ, டேய்ய் ஆர்ரா மேலே கைய வெக்கிறவந் தாயாலி, குடுக்கறத மட்லும் எண்ணி கணக்கு வெய்யி, மிச்சப்பிடி கை தீண்டற வேலகீல வெச்சிக்கிட்ட மரியாதி கிரியாதியெல்லாங் கெட்டுப்போயிருஞ் சாக்கிரிதின்னு இடுப்புல கட்டியிருந்த பையயிம், தலயிலக் கட்டியிருந்த வேடயும் அவுத்துச் சருட்டி அவம் மொவரையில யிட்டுப் புட்டு கொண்டயத்தட்டி முடிஞ்சிக்கிட்டு வேடிக்கப் பாத்தவிங்கப் பாத்தப்பிடியிருக்க, படப்படன்னு கேட்டு வாசலுக்கே வந்துட்டா.

வாசக்காலத் தாண்டி இந்தண்ட வந்ததும், அஞ்சி வருசமா அவளப் புடிச்ச பீடவுட்ட மாதரயிருந்திச்சி. பின்னயென் னாப்பின்ன இன்னைக்கி நேத்தா அவ சேட்டு மில்லுல குப்பப் போடறா? எண்ணி எட்டுவயசில மில்லுல அடி யெடுத்து வெச்சவ, ஆயிப்போச்சி அவுளுக்கு பதிமூணு வயசி. மொதவொரு மூணு மாசம் சேட்டு வூட்டாருக்கு சிக்கனம்பட்டி குதரக்குத்திப்பள்ளத்தல யிருந்து காப்பித் தண்ணி டீத்தண்ணி, ஜர்தாப்பொயில வாங்கிக் குடுத்துக் கிட்டிருந்தா. அதும்பொறவு கெண்டத் தூக்கப் போட் டாங்க. மூணுநாளு, நாலுநாளு கெடையா தொட்டியில ஊறனது. மக்கேரி நம்ப அள்ளி சும்மாடு கோலித் தூக்கி வெக்கையில அத்தன பாரத்துக்கு மனுசரு செத்த ஏமாந் தாப்பிடியிருந்தா கைசோட்டு விட்டய அலுங்காம போட் டுட்டு சத்தமில்லாம ஓடிப்போயிருனும். ஓஞ்சி நிக்கறதுக் குண்டா? உஸ்சின்னு சித்த குந்தறதுக்குண்டா? சும்மா யிருக்கறதக் கண்டுட்டான்னா பிஞ்சின்னும், மாருன்னும் வெச்சிப் பாக்கமாண்டாஞ் சேட்டு, அத எடு, இத எடு, அங்க ஓடு, இங்க ஓடுன்னு முடுக்கியேயிருப்பான். உள்ளங்காலுத் தேய ஓவத்து வேலச் செஞ்சாலும் மனசே மோவாதுச் சனியனுக்கு. நீ கொடலியே உருவி கைலக் காட்டு,

அதயும் வெறும் வாழநாருன்னுப்புடுவாந் தாயாலி. ஆறுமாசம், ஒரு வருசமாட்டம் கெண்டச் சொமக்கப் போட்டுட்டு, பொறவு காடிங்கிக்கும் ட்ராயிங் கிக்கும் சிலைவருக்கேனு தள்ளப் போட்டாங்க. அப்பிடி கேனத் தள்ளிக்கிட்டே அதோட எடப்பட, தடப்பட கீலு ரோலு, மேலுரோலு ரெண்டுஞ் சுத்தம் பண்டனும். அப்பிடியிப்பிடி எதனாலுந் துளி அசந்து ரோலுல பஞ்சி கிஞ்சி ஏறிப்போயிட்டா நறுவுசுப் பண்டனது பணிக் கில்லையின்னு அந்தச்சோட்டு ரோலுக்கட்டையிலியே மண்டமண்டயா இறுக்குவானந்த ட்ராயிங்கிப் பிட்ரு. மொள்ள பின்னிங்கிக்கி பாபினு மாத்தியுட்டுட்டு ஆறூசி, ஏழூசி எழக்கட்டச் சொன்னாங்க. இந்தப்பிள்ளைஞ் சூட்டுப்பா பத்தூசி, பன்னண்டூசிக் கட்டிச்சி. அப்பிடி யிருந்தும் முழுசாவொரு மிசினி அண்டியிருக்க முடியாது. அதுவுமிந்த ஆயரமூசி வளத்திப் பிரேமு வாங்கிப் பூட்னப் பொறவு சிப்ட்டுக்கு இருவுது அரியா, இருவத்திரெண்டு அரியா எடுத்தது எடுத்த மாதரயேயிருக்கணும்.

இந்தச் சீரெழவெல்லாம் பத்தாதுன்னு இன்னோரு பேரெழவுக்கும் பிள்ளைங்க கைக்குடுக்கனும். நெனைச் சிக்கிட்டாப்போதும் மூணுக்கொருக்கா, ஆறுக்கொ ருக்கா இந்த லேபரு ஆபிசிரு, பேட்ரி இனிசிப்பெட்ரு இவிங்கயெல்லாம் மில்லு மில்லா அல்லெடுக்க வரு வாங்க என்னம்மோ அவிங்க அவிங்களுக்குஎள்ளும் பொரியும் எறச்சி, கொண்டுப்போயி ஓமலூரு மலை யாளத்தாஞ் சோத்துக்கடையில சீமச்சாராயத்தோட ஆட்டுக்கெடாயுங் காவுக்குடுத்து, அவுத்த அந்த பாடமாத் தியில தேர திலுப்பி வழிக்கூட்டி அனுப்பமுட்டும் பிள்ளைங்க பாவம் பஞ்சிக்குழியில ஒண்டிக்கிட்டு மறப் பாப் படுத்துருக்கணும். காத்துண்டா? ஒரு வெளிச்ச முண்டா? பங்கினி மாசம், சித்தர மாசமாயிருந்து, அந்த அடப்பாசறத்துல ஒண்ணுமேல ஒண்ணா பொணமாட்டம் கெடந்துட்டு எந்திரிச்சா, அந்த ஜூட்டுக்கு ஒவ்வோருப் பிள்ளைங்களுக்கு அக்கி வந்தாப்பிடி மேலே கொந்திப் போயிரும்.

ஒவ்வொண்ணுங்களுக்கு தொடச்சந்துலியும், சூத்தாம்பட்டையிலையும் நல்லா இத்தத்தச்சோடு செலந்தி புட்ரிச்சிக்கிட்டு முட்டி, ஈ மிக்க ச்சும்மா சலமா ஊறும். செலந்தி ஒடஞ்சி மொளப்பு வாரந்தின்னியும் நடக்கறதுக்கில்லாம நாத்தமெடுத்துக்கிட்டு திரியினும். எப்பிடியோ ரெண்டு வருசமா பிரிப்பேட்தியிலியும், பின்னிங்கியிலியும் ஓரியாடிப்புட்டு, மூணாம் வருசந் தொட்டுத்தான் இந்த கோனு வைண்டிங்கிக்கி வந்தா. கூலிக்கித்தக்கன வேல வாங்கறாங்க, அதுக்கு எச்சாவும் நம்ப பாட்டத் திங்கறாங்க. பாடுப்பட பால்மார்ற பிள்ள யில்ல இவ. ஊத்த வாயிலவொரு வார்த்தயச் சொல்லிப் புட்டு அந்த சொல்லு அழியறாங்களே, அதக்கண்டா தானே, மனுசருக்கு வேவறது.

பேச்சிச் சுத்தம் இல்லாக்காட்டி அந்தெடத்துல எப்பி டிப்பா பிரியமா பண்ணயம் பண்டறது? அட விசியம் வேறொண்ணுமில்ல, போனப்பூட்டு தீவாளீக்கி சேட்டு என்னான்னுச் சொன்னானிங்கற, வருசம் முந்நூத்தி அறு வத்தஞ்சி நாளும் நிக்காம வேலைக்கி வாரவிங்களுக்கு, அடுத்த நோம்பிக்கி சைக்கிளு வாங்கித் தாறமின்னு சொன் னததுதாஞ் சாக்கு, இவ நோவா நொடியா, நோம்பியா கீம்பியா ஒர கல்லெடுப்பையுங் கண்டப் பாவியில்ல, அவுளுண்டு மில்லுண்டுன்னு கிருமமா வேலைக்கிப் போயிக்கிட்டிருந்தா. எப்பாவொரு பொட்டப்பிள்ள நாம்ப யின்னைக்கி வயிசிக்கி வாரமின்னுக் கண்டா வெச்சிருப்பா? சமஞ்சவளுக்கு தெரட்டிச் சுத்தி வூட்டுக்குக் கூப்படறாங்கயில்ல அந்தேழு நாளு மட்டும் பிள்ள மில்லுக்குப் போவல.

மறிச்சி அந்த வருசந் தீவாளி வந்தது. அல்லாருஞ் சேட்டு நோம்பிக்காசி அவுக்கறான்னு ஆளுமேல ஆளு ஏறிக் கிட்டுப் போயி வாங்கிக்கிட்டிருக்க, சம்புநதிப்பிள்ள அதயெதயுஞ் சட்டையேப்பண்டல. சைக்கிலு வாங்கறத் துலியேக் குறியாயிருந்தா, பின்ன ஊரேத் துடும்படிச்சிக் கிட்டுத் திரிஞ்சாளே, பொருளுயில்லாமப் போனா பெருத்த பங்கமில்ல ரவுசடங்கனதும் போயி இவ, இப்பிடித்தாஞ் சங்கிதி, சைக்கிலு வாங்கிக் குடுங்க சாருன்னு கேக்க... ஏழ்நாள் ஆப்ஜெண்ட் எந்த கணக்குல குடுக்கறது? கண்டதுக்கு வாரியெறைக்க இதுவொண்ணும் அனாதிங்க சொத்தில்லங்கறானே வாயே கூசாம, இல்லாதவச் சொல்லு சவ ஏறுமா? மவ மருவறா மருவறா அப்பிடி மருவறா, மாடாட்டம் அழுவறா.

ஆண்டியூம்பச் சொன்னா தாதப்பனுக்கு எங்கப்போச்சி பித்தி? இவுளுக்கு இதும் வேணும், இன்னமும் வேணு மின்னு மில்லே ஏவிடியும் பேசுது. புது வருசம், பொங்க லுன்னு எத்தன ரீவு நாள்ல வேலைக்கிப் போயிருப்பா? வந்த கணக்கவுட்டுட்டு வராத கணக்கச்சொல்லி வேல வுட்டுட்டானில்ல, இந்த அலுப்பநாயி, சாவகேசம் நம்பு ளுக்கு அரமாலுமே வேண்டாமின்னு, அன்னைக்கி நெஞ்சில வைராக்கியத்த வெச்சா, எண்ணம் இன்னைக்கித்தான் ஈடேறுது.

கசந்து வந்தவ கண்ணத் தொடச்சி அனுசரிச்சி, ரெண்டு வார்த்த தேறுதலா சொல்லாக்காட்டிப் போவுது, எங்கியோ காத்தடிக்கிது, எவுத்திலியோ மழப் பேயிதுன்னே இருக்குறாளே இந்த அரிசியம்பிள்ள. மொதநாளு அந்தியோட வந்து மூலையிலச் சுருண்டப்பிள்ள, மொடங்கனது மொடங்கனாப்பிடியே கெடக்குதே, என்னாயிருக்கும் ஏதாயிருக்குமின்னு பெத்த வவுறு ரவையாச்சிம் பதைக்கிமா பதைக்காதா? இந்தம்மாளுக்குப் பொந்தியில என்னா கருத்து ஓடுது...

இதேதறா, இந்தப்பிள்ள மில்லுக்குப் போவாம, டிமிக்கிக் குடுப்பாளாட்டமிருக்குதே... அம்மா இப்பிடியே மலத்திப் படிச்சி ஒய்யாரமாப் படுத்துக்கிட்டிருந்தா, அத வெச்சி ஒருநா, ரெண்டுநா சம்பளத்துல கிம்பளத்துல எதனாலுந் துண்டுகிண்டு வுழுந்துப்போச்சின்னா, பண்ணாடிமாருங்க பஞ்சாயத்துல முசுவா விக்கிறாங் களே டீவிப்பொட்டி, அத வாங்கற வழியெப்பிடின்னு ச்செட்யான கருக்கட வுழுந்துட்டுது. அந்த ஆவுசந் தாக்குப் புடிக்கமாட்டாமதாம் பொம்பள, மறாநாளு கோழிக் கூப்ட்டுச்சோ, இல்லியோ ஏண்டி மில்லுக்குப் போவுலியா? மில்லுக்குப் போவுலியான்னு மவள அரியா அரிச்சிப் புடுங்கறாளே வுடாம. அம்மாக்காரி சம்பஞ் சாலாக்கெல்லாம் மவக்கிட்ட ஒண்ணுஞ் செல்லுப்பிடி யாவல. சம்புப்பிள்ள புடிவாதாமா, படுத்தப் படுத்த வாக்குலயிருக்கா. ஓஹோ யிந்தச் சண்டிமாடு, ஆட்டம் பழக்கப் பாக்குது, அதயெப்பிடி நொகத்தடியிலப் பொணைக்கிறதுன்னு எனக்கா தெரியாது? தீனீயெடுக்காம புணிச்சிக்கிட்டுருக்கற யிந்த கேப்மாரி கன்னுக்குட்டி யிண்ட ஒரேடியா வாட்லாட்டியம் போட்டா காரியங் கந்தரயாயிப் போயிரும். எங்கப்போயிரப் போறா? ஒருச்சித்தய வுட்டுப்புடிக்கலாமுன்னு நெனச்சாளோ என்னம்மோ, பழயச்சோத்துதண்ணி நேரத்திக்கெல்லாம் அரிசியம் பொறுக்கலுக்குத் திலும்பிக்கிட்டா.

பொறுக் கலுக்குத் திலும்புனவ, முட்டப்போண்டா திங்கலா மின்னு, ஒரேத்துருவா காமலாப்பொரம் பெருமாளாசாரி கடைக்கேப் போயிட்டா. முட்டப்போண்டா திங்கப் போனாளில்ல ஆசாரிக்கடைக்கி, அவுத்தத்தான் எங்கியோ மில்லு நாயந் துப்புத் தெரிஞ்சிப் போச்சி. அவ்ளதாம்பா, படப்படன்னு சூரிக்காத்தாட்டம் வூட்டுக்கு வந்தவ, வந்தும் வராதமின்ன அலுப்பா கவுத்துக்கட்டுல்லத் தூங்கிக்கிட்டிருந்தப் பிள்ளைய, வெடுக்குனுத் தூக்கி கீழப்போட்டு மிதிச்சி ஏண்டி ஓலீ, சோறுப்போடற மவராசன், ஒருச்சொல்லு சொன்னா யென்னா? ரெண்டு ஈடுதான் வெச்சாயென்னா? ஒண்ணுமில்லாதப் பொத்துலு, உனக்கெதுக்கிடி ரோசமின்னு குமுறுகுமுறுன்னுக் குமுறி, மசத்தப் புடிச்சி தரத்தரன்னு இவள அடிச்சி வேல வாங்குங்க சாமீன்னு, சொல்லிவுட்டுட்டு வந்தப்பொறவுதான், அரிசியம் பிள்ளைக்கி மனசாறி, மத்தியானச் சோறேக் குடிச்சா.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com