இடம் பிடித்தல்
அனுஜன்யா .
விலகியிருந்த விருட்சங்களாலும்
தீண்டாத கொம்புகளாலும்
தரையிலேயே படர்ந்திருந்தன
பலகாலமாய்க் கொடிகள்;
செயற்கைப் பற்றுதலில்
கூரை ஏறிய கொடிகளில்
பளபளக்கத் துவங்கின
பரங்கியும் பூசணியும்; மனங்குமைந்த மரஞ்செடிகள்
முறையிட்டன மேலிடத்தில்;
பின்வந்த வைபவத்தில்
மரத்தில் காய்த்த மாவும்
செடியில் பூத்த ரோஜாவும்
இலை தலை என்று இடம் பிடிக்க
கோலத்தைக் காவல்செய்த
பரங்கிப்பூ கண்டது
சாணியில் இருத்தலின் சுகம்;
காய்த்திருந்த பூசணிகட்கும்
வாய்த்ததென்னவோ வாசல்தான் -
கழிந்த திருஷ்டிக்கு
சிதறடிக்கப்பட்டு வீழ்ந்தவொன்று;
பின்வரப்போகும் திருஷ்டிக்கு
விகாரமாய்த் தொங்கிய மற்றொன்று.
மனம் நொந்த கொடிகளிடம்
அண்டை வீட்டு பழக்கொடி
திராட்சைகள் உயர்ந்தால்
நரிகளுக்கு புளிக்குமென்றது
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|