மா. காளிதாஸ் கவிதை
மிகவும் பரிச்சயமான
அன்பான
எளிமையான
தூய்மையான
பாசாங்கற்ற
சில சொற்கள்
பூக்கத் தொடங்கியுள்ளன உன் தோட்டத்தில்
கனியாத சில சொற்களை
பறித்துச் செல்லும் நோக்கோடு
நேற்று பின்னிரவு வந்து போயிருக்கிறாள்
ஒரு பூப்படைந்த ராட்சசி
காலையில் உதிர்ந்து கிடந்தன
அணில் கடித்த சில சொற்கள்
எவர் கண்ணிலும் படாமல்
பொத்தி வளர்க்கப்பட
முளைவிட்டிருக்கின்றன சில சொற்கள்.
மழைக்காலத்தில்
நம்மை உலர்த்த தேவையாய் இருந்தன
ஒரு சில சொற்கள்.
கலைந்தும் களைந்தும் சென்று விட்டாய்
பார்த்த மாத்திரத்தில்
உருத்தெரியாமல் கருமேகம் போல
உலராமல் இருக்கிறது
நீ உதிர்த்த துளியும் ஒற்றைச் சொல்லும்
அறுத்தெறியப்பட்ட
எலுமிச்சையை மிதித்ததைப் போல
அதிர்கிறாய்
வடிவம் கொண்டலைகிறது
மிகவும் அனிச்சையான
என் அந்தச் சொல்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|