தலையங்கம்
1. அக புறவய நெருக்கடிகளால் அலைக்கழியும் நடுத்தர வர்க்கமும் மேட்டுக்குடியும் பட்டிதொட்டியெங்கும் பரவி கொழித்துவரும் மடங்களுக்குப் போய் ஞான யோக தியான ஸ்பெஷன் வைத்தியராய் இருக்கும் யாரேனுமொரு ஆன்கீக டீலரிடம் நிம்மதியை ஒரு சரக்குபோல வாங்கி வருகின்றனர். ஆன்மீகத்தை மொத்தமாகவோ சில்லரையாகவோ அணா பசை செலவின்றி அடையும் எளிய வழியை நரேந்திரமோடி தனது கர்மயோக் புத்தகத்தில் பரிந்துரைத்திருக்கிறார். அதாவது சமூகத்தையும் கடவுளையும் மகிழ்ச்சிப்படுத்தவும், உள்ளொளி பெற்று ஆன்மீகப் பேரானந்தத்தில் திளைக்கவும் பீயள்ளுவதைவிட சிறந்தவழி வேறெதுவுமில்லை என்பதாலேயே அத்தொழிலில் தலித்துகள் ஈடுபட்டிருப்பதாக குறிப்பிடுகிறார்.கடவுள் வழியாக கண்டுவந்த ஆன்மீகத்தை மோடி கக்கூசுக்குள் கண்டுபிடித்திருக்கிறார்.
அவரது பூஜையறைக்குள் பீக்கரண்டியே தூபக்கரண்டியாய் இருந்து ஆசீர்வதிப்பதாகுக. அதிலிருந்து கிளம்பும் அருட்புகை தரும் கிளர்வில் இனி அவரும் அவரைச் சார்ந்தோரும் ‘பீயே போற்றி போற்றி’ எனத் துதித்து ஆன்மீகப் பரவசத்தை இலவசமாகவே துய்த்துணர வாய்ப்பளிக்கும் வகையில் பீயள்ளும் தொழிலை அவர்களுக்கே விட்டுக்கொடுக்க முழு சித்தசுவாதீனத்துடன் தலித்துகள் இதன்மூலம் ஒப்புதல் அளிக்கின்றனர். இனி கடவுளுக்கு நைவேத்தியம் செய்வதற்குப் பதிலாக பீவேத்தியம் செய்யலாமெனவும், கோயில்களுக்கான புண்ய, ஷேமக்காரியங்களில் பீயள்ளுவதையும் சேர்க்குமாறும் தலித்துகள் பரிந்துரைக்கின்றனர். தலையங்கத்திலேயே பீயா என்று மூக்கைப் பிடிக்கிற குமட்டலர்கள் கண்டிக்க வேண்டிய முகவரி : நரேந்திர மோடி, கா.பெ./பா.ஜ.க.சோனியாவைக் கண்டிக்கிறோம்: மரணத்தை அரசு செலவில் இலவசமாக வழங்கியவர் என்று தெஹல்வால் அம்பலப்படுத்தப்பட்டவரை மரணவியாபாரி என விளித்தமைக்காக.
2 எய்ம்ஸ் இயக்குநர் பொறுப்பிலிருந்து வேணுகோபாலை வெளியேற்றினால் அதிருப்தி தெரிவிக்கிற நீதிமன்றங்கள் திண்ணியத்தில் தலித்துகள் வாயில் மலம் திணித்தவர்களை குற்றமற்றவர்களென விடுவித்தது குறித்து மவுனம் காக்கின்றன. வன்கொடுமை வழக்கில் மேல்முறையீடு வேண்டும் என்று கேட்பதும்கூட மூடநம்பிக்கையோ? ஆமென்கின்றன காவல்துறை, நீதித்துறை மற்றும் அரசின் செயல்பாடுகள்.
3. எப்பவும் எதிலும் சாதி, பால்நிலை எனப் பாகுபாடு பார்ப்பதே உங்களுக்குப் பொழப்பாயிடுச்சு. . என் அதையுமே ப்ளெய்னா பார்க்க மாட்டேங்கறீங்க என்று பதறும் அன்பர்கள் சாகித்திய அகாதமி, நூலகத் தேர்வுக்குழு போன்றவற்றில் சமூகநீதிக் கோட்பாடு பேணப்பட வேண்டும் என்ற கோரிக்கையால் கடுப்படையக்கூடும். அவ்வமைப்புகளின் நியமனங்கள் தேர்தல்கள் பரிசுகள் எல்லாவற்றிலும் வெளிப்படைத்தன்மை நிலமிட அவற்றை சமூகநீதியின் மூலம் ஜனநாயப்படுத்துவது முன் நிபந்தனையாக இருக்கிறது.
இளைஞர்களே, கொஞ்சம் பொறுங்கள். இளவரசருக்கு முடிசூட்டு விழா முடிந்ததும் நம் பிரச்சனையெல்லாம் தீர்ந்து விடும் என்ற சரித்திரக்கதையை திரும்பவும் மேடையேற்றப் போகிறார்கள் போலும். ஊதாரித்தனத்திலும் ஆடம்பரத்திலும் கட்சிப்பணம் என்ற பெயரால் மக்கள் பணத்தை விரயமாக்குவதிலும் யாருக்கும் சளைத்தவரல்ல என்பதை வெறும் பந்தல் போட்டுக் காட்டியே அம்பலப்பட்டுப் போன ஸ்டாலினைப் பாராட்டுகிறோம்.
- ஆசிரியர் குழு
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|