Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
அக்டோபர் - டிசம்பர் 2007


இரவாகிவிடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை
ஆதவன் தீட்சண்யா

தொடர்மழைக்குப் பிறகான இளவெயில் மரக்கிளை களினூடே மஞ்சளாய் பரவிக் கொண்டிருந்தது. வெயிலின் தயைமிகுந்த சிறுகதிர்கள் சன்னல்வழியே படுக்கையின்மீது ஒளிர்கின்றன. விரைவிலேயே இன்னொரு மழையைக் கிளப்பி கொண்டுவருகிற உக்கிரம் கூடுகிறது வெயிலுக்குள். மறுபடி மழை பிடித்துக் கொள்ளுமானால் மீண்டும் வெயிலின் முகம் பார்ப்பதெப்போ என்று பதறுகிறது மனம்.

போர்த்திக் கொண்டிருந்த கனத்தக் கம்பளியை உதறி யெறிந்துவிட்டு ஓடிப்போய் வெயில் காயவேண்டும் என்று பரபரக்கிறது கால்கள். இன்னொருவர் துணையில்லாமல் எழுந்து உட்காரவும் ஏலாத ஒரு முதியவளுக்கு அது சாத்திய மல்லவே... சுருக்கம் பாய்ந்தத் தன் நடுங்கும் கைகளை மெதுவே ஒரு கொடி போலசைத்து படுக்கை மீதிருந்த வெயிலைத் தடவிக்கொடுக்கிறாள்.

ரஞ்சித்தும் இந்த வெயிலைப் போன்றவன்தான். யாவும் நமுத்து நைந்து ஈரத்தில் சொதசொதத்துக் கிடந்த சமூகத்திற்குள் சூடும் சுரணையும் பாய்ச்சுவதே அவனது திட்டமாயி ருந்தது. அதன்பொருட்டே மூடிக்கிடந்த வீடுகளின் சன்னல் களுக்குள்ளும் தன் கிரணங்களை ஊடுருவவிட்டவன். முடங்களையும் ஜடங்களையும்கூட தன் கருணை பொங்கும் கதிர்க் கரங்களால் தொட்டுத்தடவி சொஸ்தமாக்கத் துடித்தவன்.

இதோ இந்த கிழட்டுக்கரங்களின் ஆதூரமான ஸ்பரிசத்தில் குழைந்து நிற்கும் வெயிலைப் போலவே அவனும் தன்னருகில் இருந்த தருணங்களை நினைத்துக்கொள்கிறாள். ரஞ்சித்... என்று ஒருமுறை தனக்குள்ளேயே சொல்லிப் பார்க்கிறாள். பெண்களுடையதைப் போன்ற நீண்டு ஒயிலாகப் புரளும் கூந்தலை விலக்கிக்கொண்டு நான் எங்கும் போகவில்லை, இங்குதானிருக்கிறேன் என்கிறான் ரஞ்சித்.

இப்படியொரு வசீகரமான சிகையலங்காரம் வாய்க்க ரஞ்சித் எப்போதும் மெனக்கெட்டது கிடையாது. வாரத்திற்கொரு முறை எண்ணெய் தேய்த்துக்கொள்வதே அபூர்வம்தான். அதுவும்கூட ராஜாராம் போன்றவர்களின் விடுதியறைக்குப் போகும்பாது பூசிக்கொண்டால் உண்டு. இல்லையானால் எண்ணெய் வாங்க ரஞ்சத்திடம் காசு ஏது? சீசா ஏது? டர்பன் கட்டிக் கொள்வதில்லை என்றாகிவிட்டப் பிறகு கிராப் வெட்டிக்கொள்ள வேண்டியதுதானே என்று யாரோ கேட்டதற்கு, ஐரோப்பியனை காப்பியடிப்பதைவிட எனது முன்னோர்களைப்போல மழித்துக் கொள்ளாதிருப்பதுதானே சரியானது என்று பதிலளித்ததை நினைத்துக் கொண்டாள்.

இந்தக்கோலத்தில் தான் அவன் கடைசிவரையிலும் இருந்தான். நூறுவகைகளில் அவனது புகைப்படங்கள் வெளியாகியிருந்தபோதும் எடுப்பாகவும் பொருத்தமாகவும் முக விகாசங்களை வெளிப்படுத்துவதாகவும் இருக்கிற இந்தத் தோற்றம்தான் அவளது கண்ணுக்குள் நின்றிருக்கிறது. ஒரு முறை அவனே நேரடியாக ஈடுபட வேண்டிய ஆக்சன் ஒன்றுக்காக வசீகரமான தன் கூந்தலை கிராப்பாக கத்தரித்துக் கொண்டான். கிராப்பும் அதற்கேற்ற முறுக்குமீசையும் வேட்டைக்கார ஐரோப்பியனைப் போன்ற தொப்பியும் நீண்ட அங்கியும் அணிந்துகொண்ட அந்த மாறுவேடத்தில் சென்று ஆக்ஷனை நிறைவேற்றிவிட்டு அவன் வீடு திரும்பிய அந்த இரவை மறக்கமுடியுமா?

அவன் வந்துவிடக்கூடிய நேரம்தான், கண்ணயர்ந்துவிடாதே என்று லஜ்ஜாவதி பல்லியைப்போல் இவளை எச்சரித்துக் கொண்டேயிருந்தாள். முன்வாசல் பக்கம் அவளும் பின் வாசல் கதவண்டை இவளுமாக சுவற்றில் காதுபொருத்தி காத்திருந்தனர். அவன் வந்துவிடுவதாய் தூதுவர் மூலம் சொல்லியனுப்பியிருந்த நேரத்தை மீறி கடியாரம் நகர்ந்து கொண்டிருந்தது. சருகின் சிறுதுடிப்பும் சஞ்சலமூட்டியது லஜ்ஜாவதிக்கு. திடீர் திடீரென ஓடிவந்து, சிக்கிக் கொண்டிருப்பானோ என்று பீதியோடு கேட்டுக் கொண்டேயிருந்தாள். நீ பதட்டமடைய ஒரு காரணமுமில்லை பெண்ணே. அமைதியாயிரு. அவன் எத்தனை ஆக்ஷன்களைக் கண்டவன்? என்று இவள் அவளுக்கு சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தாலும் நேரமாக ஆக இவளுக்கும் பயம் துளிர்த்தது.

மாறுவேடமிட்டுச் சென்று நிறைவேற்றுகிற ஒவ்வொரு ஆக்சனுக்குப் பிறகும் போலிசின் யூகங்களுக்கு பிடிபடாத இடங்களைத் தேர்வு செய்து தலைமறைவாக தங்கிவிடுவது ரஞ்சித்தும் அவனது தோழர்களும் கையாளும் தந்திரம். ஒரேயிடத்தில் அனைவரும் தங்குவது தமக்குத்தாமே சூனியம் வைத்துக்கொள்வது போலாகும். எனவே தங்குவது ஆளுக்கொரு இடமாக இருக்கும். மொட்டைத்தலை அல்லது கோணல் வகிடெடுத்த கிராப்புடன், குஞ்சம் கட்டிய குடுமியுடன் என்று முடியை வைத்தே அவர்கள் நூதனமான பல அவதாரங்களை எடுத்து ஆக்சனில் ஈடுபட்டார்கள்.

ஆக்சனின்போது தென்பட்ட உருவத்தில் போலிஸ் தேடிக் கொண்டிருக்க இவர்கள் மீண்டும் தங்களது சுயஉருவில் தாடிமீசை வளர்த்துக்கொண்டு வெளியே சுதந்திரமாக நடமாடத் தொடங்குவார்கள். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு இதெல்லாம் சாகசம் போலத் தோன்றலாம். ஆனால் நம்மைப் பொருத்தவரை இந்தநேரத்தில் நம்மால் இப்படித் தான் செயல்பட முடியும் என்பதைத் தவிர வேறொன்று மில்லை தோழர்களே. எனவே ஆக்ஷன்களை வெற்றிகரமாய் நிகழ்த்துவதைப்போலவே மறைவிடத்துக்கு திரும்புவதும் அவசியம் என்று தன் சகாக்களுக்கு சொன்ன எச்சரிக்கை இவனுக்கும் பொருந்தும்தானே?

முதல்கோழி கூவிவிட்டது. இன்னும் அவனைக் காணலியே என்று விசும்பத் தொடங்கிய லஜ்ஜாவதியை இவள் ஆறுதல்படுத்தினாள். அது தன்னைத்தானே தேற்றிக்கொள்ளும் உபாயமாகவும்பட்டது இவளுக்கு. விவசாயிகள் வயற்காடுகளுக்கு கிளம்பிப் போகத் தொடங்கியிருந்தனர். தெருவில் மாடுகளின் கழுத்துமணி எழுப்பும் ஓசை அமைதியின் ஒரு பகுதியாக கரைந்து கொண்டிருந்தது. தெருமுக்கில் யாரோ டயர் கொளுத்தி குளிர்காய்ந்து கொண்டிருந்தனர். டயர் கருகும் நாற்றம் காற்றில் பரவி சுவாசத்தை திணறடிப்பதாயிருந்தது. குப்பைக்கூளங்களை அரித்துப்போட்டு காய வேண்டியதுதானே... என்று முனகிக்கொண்டாள் இவள்.

தன் கிராமத்தைப் பற்றி பேசும் தருணங்களில் மாலைப் பொழுதுகளில் நெருப்புமூட்டி குளிர்காய்ந்த அனுபவங்களை மிகுந்த மனக்கிளர்ச்சியோடு நினைவுகூர்வான் ரஞ்சித். அதை விவரிக்கிறபோது அனலுக்கு முன்பாக காட்டுகிறதான நினைப்பில் கைகளை முன்னோக்கி நீட்டி விரித்துக் கொள்வான். குளிர்காய்வது தன் கிராமத்துக்கு பனிக்காலம் கொண்டுவந்து சேர்க்கிற சுகமென்பான். பிற்பகலில் லேசான சில்லிப்பாய் தொடங்கி மாலைவேளைகளில் கிராமத்தின் மீது கவிந்து கொள்ளும் பனிக்குள் நிழலைப்போல் நடமாடிய அந்தக்காலம் திரும்ப வராது என்பான்.

பகற்பொழுதில் பனியிறங்கும் முன்பாக உலர்ந்த செடிசெத்தைகளை சேகரித்து வைக்க இவனொத்த பொடியன்களுக்குள் பெரும் போட்டாப் போட்டியே நடக்குமாம். பெரியவர்களின் பேச்சில் சுவாரசியம் இழக்கிற சிறுவர்கள் சில கங்குகளை பகிர்ந்தெடுத்துப் போய் தனியே மூட்டி வட்டம் கட்டி உட்கார்ந்து பின்னிரவு வரை கதை பேசிக் கிடப்பார்களாம்.

ஆனால் பெரியாட்களின் வட்டத்தில் இருப்பதில்தான் ரஞ்சித்துக்கு ஈடுபாடாம். அங்கே குழுமிய விவசாயிகளின் உரையாடல்களில் பொதிந்து கிடந்த துயரமும் அதிலிருந்து விடுபட வேண்டுமென்ற அவர்களது தவிப்புமே தன்னை ஒரு அரசியல் ஊழியனாய் மாற்றியது என்பான். இன்றுபட்ட துயரமெல்லாம் இந்த நெருப்பிலாவது பொசுங்கிவிடாதா என்ற ஏக்கத்திலேயே அவர்கள் இப்படி கூடிக் கலைவதாக இவனுக்குத் தோன்றுமாம்.

இன்னும் கொஞ்சநேரத்தில் விடிந்துவிடும். இரவுரோந்தில் பாரா பார்த்த போலிஸ்காரர்கள் ஸ்டேசனுக்குத் திரும்ப இந்த தெரு வழியாகத்தான் போவார்கள். ரஞ்சித் வந்தானென்றால் மாட்டிக் கொள்வானே. பிடிபட்டு விட்டானானால் விசாரணையின் கடுமை தாளாமல் தன்பெயரையும் சொல்லிவிடு வானோ என்றெல்லாம் அவள் உளைச்சல் மிகக் கொண்டு அரற்றத் தொடங்கியபோது மாடோட்டிக் கொண்டு போன ஒரு விவசாயியின் நிழலுக்குள்ளிருந்து ஒருவன் வெளியேறி பின்வாசலை நெருங்குவதை சன்னல் வழியே கண்ட இவள் அவனது சமிக்ஞைக்காக கதவடியில் காத்திருந்தாள். ஆர்வ மிகுதியில் லஜ்ஜாவதிதான் ஓடிப்போய் கதவைத் திறந்தாள்.

வந்தவனைப் பார்த்து இவர்களிருவருக்கும் மூச்சடைத்து விட்டது. அவனை இவர்கள் முன்பின் பார்த்ததில்லை. ரஞ்சித் இங்கே வரக்கூடும் என்பதை எப்படியோ துப்பறிந்து விட்ட யாரோ ஒரு அதிகாரி வீட்டை சோதனையிட வந்து விட்டானெனத் தோன்றியது. கதவைத் திறந்துவிட்டாலும் அவன் உள்ளே நுழையமுடியாதபடி வழியை அடைத்துக் கொண்டு மறிப்பாய் நின்று கொண்டனர். அவனோ எதுவும் பேசாமல் வழியை விடுங்கள் என்று மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தான். முன்னெப்போதும் கேட்டிராத அக்குரலின் கடுமை நடுக்கத்தை உண்டுபண்ணுவதாய் இருந்தது.

உங்களுக்கு யார் வேண்டும்? ஸ்திரிகள் மட்டுமே இருக்கும் ஒரு வீட்டுக்குள் இப்படி அகாலத்தில் நுழைவது அத்துமீறல் இல்லையா என்றாள் இவள். அப்படியானால் எனக்கும் ஒரு சேலையோ கமீஸோ கொடுங்கள் உடுத்திக்கொள்கிறேன், நாமெல்லோரும் ஸ்திரிகளாகிவிடுவோம் என்று அவன் கேலியாக சிரித்தபோதுதான் அவனை இவர்களுக்கு அடையாளம் தெரிந்தது. நின்ற மூச்சு திரும்ப வந்தது.

ஆனால் இம்முறை அவன் பெரும் கெடுபிடிகளுக்கு மத்தியில்தான் ஆக்ஷனை முடித்துவிட்டு தப்பி வந்திருக்கிறான். மற்ற தோழர்கள் ஆளுக்கொரு திசையில் பிரிந்து அவரவர்க்கு தீர்மானிக்கப்பட்ட தலைமறைவு பகுதிகளை நோக்கி நகர்வதை ஊர்ஜிதம் செய்துகொண்ட பிறகே அவன் அவ்விடத்திலிருந்து கிளம்பியிருக்கிறான். நேரமற்ற நேரத்தில் பதுங்கிவருவதை விடவும், ஜனநடமாட்டம் தொடங்கி விடும் அதிகாலைப் பொழுதில் கூட்டத்தோடு கூட்டமாக கலந்து தப்பிப்பது எளிதாயிருக்கிறதென கூறிக்கொண்டான். விடிய விடிய தூங்காமல் காத்திருந்த இவர்களைத் தூங்குமாறு வேண்டிக்கொண்டான்.

தூக்கத்தை விடவும் ஆக்ஷன் பற்றி அறிந்து கொள்வதிலேயே இவர்களுக்கு ஆர்வமிருந்தது. அவனும் களைப்பை உதறியவனாய் தனது வழக்கமான உற்சாகமூட்டும் குரலில் எல்லாவற்றையும் விவரிக்கத் தொடங்கினான். ஆனால் பார்த்துப் பழகிய உருவம் அல்லாத வேறொருத்தன் எல்லாவற்றையும் சொல்வதுபோலிருந்ததால் கண்களை மூடிக்கொண்டு, முன்நெற்றியில் வந்து புரளும் முடிக்கற்றறைகளை வெகுஇயல்பாக காதோரம் ஒதுக்கிவிட்டபடி பேசும் ரஞ்சித் உருவத்தை இவள் அந்தக் குரலோடு இணைத்துக்கொண்டாள். சற்றே ஆசுவாசமாய் இருந்தது. ஆனால் போலிசும், பிற்காலத்தில் வந்த அவனது இயக்கத்தினரும் அந்த ஜவான் வேடத்தைத்தான் ரஞ்சித்தின் மெய்யான உருவம் என்று சித்தரித்ததை அவளால் ஒப்புக் கொள்ளவே முடியவில்லை.

ரஞ்சித் இந்தமுறை கொஞ்சம் கூடுதலான காலம் இவர்களோடு தங்கியிருந்தான். லஜ்ஜாவதி மிகுந்த சந்தோஷத்தோடு அவனை கவனித்துக்கொண்டாள். இத்தனைக்கும் அவர்களுக்குள் நீண்டநாள் பழக்கமொன்றுமில்லை. கடந்த செப்டம்பர் மாதக் குளிர் இரவொன்றில் ஒரு கல்லூரியின் இருண்ட தாழ்வாரத்தில் தனது இயக்கத்தின் நோக்கங்கள் குறித்து ரஞ்சித் நிகழ்த்தவிருந்த விளக்கவுரையைக் கேட்க லஜ்ஜாவதியின் அண்ணன்தான் இவர்களிருவரையும் அழைத்துப் போயிருந்தான். அரசியலில் பெரிதும் ஆர்வமற்றிருந்த இவ்விரு பெண்களும் அன்றிரவின் உரையில் தம்மை வேறொரு பிறப்பாய் உணர்ந்தனர்.

அசையும் ராந்தல் விளக்கொளியில் மங்கலாய் தெரிந்த அந்த முகம் அதன்பின் வாழ்நாளுக்கும் மறக்கமுடியாததாய் மாறப்போகிறது என்பதை இவள் அந்த கணமே அறிந்துகொண்டவளைப் போல் தெளிந்த பார்வை கொண்டாள். ஆனால் லஜ்ஜாவதி அந்தகணத்திலேயே ரஞ்சித்துடன் சேர்ந்து அவனது எல்லா இயக்க நடவடிக்கைகளிலும் பங்கேற்கும் தீவிரம் கொண்டாள். அவளுக்கு அது சாத்தியம்தான். அவளது அண்ணனும் இளைய சித்தப்பாவும்கூட ரஞ்சித் இயக்கத்தில் சேர்ந்து நாலைந்து ஆக்ஷன்களில் பங்கெடுத்தவர்கள்தான். போலிசோடு நடந்த ஒரு மோதலில் கால்களை இழந்த இந்த சித்தப்பாவை கவனித்துக் கொள்ளும் செவிலியாகத்தான் இவள் லஜ்ஜாவதி வீட்டுக்குள் தங்கியிருக்கிறாள்.

லஜ்ஜாவதியோடு ஒப்பிடும்போது தான் ஒன்றுமேயில்லை என்று இவள் நினைத்தாலும் அதற்காக தாழ்வுணர்ச்சி கொண்டதில்லை. புரட்சிகரமான பல்வேறு சஞ்சிகைகளில் இவள் கவிதை எழுதிக் கொண்டிருந்தாள். பின்னாளில் பெண் விடுதலைக் குறித்த கருத்துக்களை உருவாக்கிக்கொள்வதில் அக்கவிதைகளே தன்மீது செல்வாக்கு செலுத்தியதாக ரஞ்சித் தன் சுயசரிதையில் பதிவு செய்திருந்தான். ரஞ்சித்மீது தனக்கிருப்பது காதலோ என்று சிலநேரங்களில் தனக்குள்ளேயே கேள்வியெழுப்பி சிந்தனையடுக்கை கலைத்தும் புரட்டியும் பதில்தேடி அப்படியொன்றுமில்லை என்ற முடிவுக்கு வந்து சேர்வாள். லஜ்ஜாவதிக்கும்கூட இதே குழப்பங்கள் நேர்வதுண்டு. ஆனால் இதற்காக அவள் ஒருபோதும் தீவிரமாய் பொருட்படுத்தி சிந்தித்ததில்லை.

தலைமறைவாய் இவர்களோடு தங்கியிருந்த இந்தநாட்களில் ரஞ்சித் ஓயாமல் படிப்பதும் குறிப்புகள் எடுப்பதுமாய் இருந்தான். படிப்பதில் கூடுதல் சுவராஸ்யம் உள்ள பகுதிகளை இவர்களுக்கும் வாசித்துக்காட்டுவான். ஜனத்தொகையில் சரிபாதியாய் இருக்கும் நீங்கள் பங்கேற்காமல் எதை சாதிக்க முடியும் என்ற கேள்வியை அடிக்கடி எழுப்பிக் கொண்டேயிருந்தான். எல்லாப் பெண்களுக்காகவும் நாங்கள் பதிலளிக்க முடியுமா ரஞ்சித்? எங்களால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்து முடிக்க சித்தமாயிருக்கிறோம். ஆணையிடு என்றாள் லஜ்ஜாவதி. இதற்கும் ஆணையிடுமாறு ஒரு ஆணிடம் ஏன் கோரவேண்டும்? உனக்கு எது ஏலுமோ அதைச் செய் என்றான். ஆண்பெண் பேதமற்ற தோழர்கள் என்ற அர்த்தத்தில் கேட்கிறேன், ஆணையிடு என்றாள்.

உணர்ச்சிபொங்க பேசிவிட்டாலும் அவன் இட்ட ஆணையை நிறைவேற்ற முடியாதவளாய் நிலைகுலைந்து போய்விட்டாள் லஜ்ஜாவதி. அவனுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போனது குறித்த உளைச்சலில் உணர்வுகளின் சமநிலை குலைந்து சாகும்வரை பெரிதும் அது குறித்தே புலம்பிக்கொண்டிருந்தாள். அந்த புத்தகங்கள்தான் எவ்வளவு மேதைமையானவை? அதில் எத்தனை புரட்சிகரமான கருத்துக்களையெல்லாம் தெரிவித்திருந்தான் என்பது ஞாபகமிருக்குது தானே என்பாள் அடிக்கடி இவளிடம்.

உண்மைதான். ஏப்ரல் 28 ஆக்ஷனுக்குப் பிறகு தப்பித்துப் போகாமல் கைதாகி சிறைக்கொட்டிலில் இருந்தகாலத்தில் அவன் எழுதியிருந்த நான்கு புத்தகளுக்கு இணையான ஒன்றை இவளும் இந்நாள்வரை கண்டதில்லை. அவன் பல்வேறு பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளை விடவும், சிறு பிரசுரங்களை விடவும் தெளிவான அரசியல் பார்வையை இந்த நான்கு புத்தகங்களும் கொண்டிருந்தன.

திருட்டுக் குற்றங்களுக்கான தண்டனைக்காலம் முடிந்து சிறையிலிருந்து விடுதலையாகி வந்த மங்கத் என்ற கைதியின் மூலம்தான் ரஞ்சித் அந்த புத்தகங்களை கொடுத்தனுப்பியிருந்தான். மங்கத் தன் இடுப்புப்பகுதிக்குள் மறைத்து கடத்தி கொண்டு வந்திருந்தான் நூலின் கையெழுத்துப் படிகளடங்கிய பையொன்றை. பைக்குள் என்ன இருக்கிறதென்று பார்ப்பதைவிடவும் ரஞ்சித்தைப் பற்றி விசாரிப்பதிலேயே அவர்கள் பரபரப்பு கொண்டிருந்தனர். ரஞ்சித்தும் அவனது தோழர்களும் சிறைக்குள்ளேயே 114 நாட்கள் உண்ணாவிரதம் இருந்ததால் தற்போது குறிப்பாக அரசியல் கைதிகளும் பொதுவாக கைதிகள் அனைவரும் ஓரளவுக்கு கண்ணியமாக நடத்தப்படுவதாக தெரிவிக்கும்போது மங்கத் சற்றே உணர்ச்சி மேலிட்டவனாய்த் தெரிந்தான்.

குற்றப் பின்னணியுள்ள தன்னைப் போன்றவர்களிடமும் தோழமையோடு பழகிய ரஞ்சித் பற்றி பேச மங்கத்திடம் நிறைய சேதிகளிருந்தன. ‘கள்ளம் கபடமற்று பிறக்கும் மனிதனை திருடனாகவும் கொலைகாரனாகவும் ஏமாற்றுப் பேர்வழியாகவும் மாற்றுகிற மோசடியை இந்த சமூக அமைப்பே செய்கிறது என்பதால் உங்களை குற்றவாளிகளாக பார்க்க முடியவில்லை. யாரோ யாருக்காகவோ எழுதி வைத்துக் கொண்டிருக்கும் சட்டத்திற்குதான் நீங்கள் குற்ற வாளியே தவிர எனக்கல்ல...’ இப்படியாக காலைப்பொழுதுகளில் தண்ணீர்த் தொட்டியருகில் இவர்களோடு பிரியமாய் பேசிக் கொண்டிருப்பானாம் ரஞ்சித்.

ரஞ்சித் சிறையதிகாரிகளோடு வாதாடி ஜூலை 12ம் தேதி 404 பக்கங்களைக் கொண்ட குறிப்பேடு ஒன்றை பெற்றிருப்பதாகவும் அதில் தான் படிக்கும் புத்தகங்களின் முக்கியப்பகுதிகளை குறித்து வைப்பதாகவும் சொல்லியனுப்பி இருக்கிறான். உண்மை தான் சகோதரிகளே, அவன் தலைமாட்டில் அம்பாரமாய் குவிந்திருக்கின்றன புத்தகங்கள் என்றான் மங்கத். தூங்கத் தெரியாவன்போல் எப்போதும் விழித்துக்கொண்டேயிருக்கிறான். தனது கைதியாக முடங்கிக் கிடக்கட்டும் என்று சிறையிலடைத்தவனின் நினைப்பு ஜெயித்துவிடக்கூடாது. இந்த பகலும் மாலையும் இரவும் காலையும் நம்முடையது. அதை வீணாக்குதல் எதற்கு என்பானாம். ஜலந்தரைச் சேர்ந்த அந்த மங்கத் குறித்து அதன்பின் தகவலொன்றுமில்லை.

பைக்குள் வெவ்வேறு தலைப்புகளிலான நான்கு நோட்டுகள் இருந்தன. சிறையதிகாரிகளின் கண்மயக்கி எழுதப்பட்டதால் சில இடங்களில் கையெழுத்து தெளிவற்று இருக்கக்கூடும் என்றும், படிகளை தேவையெனில் திருத்தம் செய்து அச்சுக்கு அனுப்பிவைக்குமாறும் குறிப்பெழுதப்பட்டிருந்தது. அச்சாகி வந்ததும் காந்திஜிக்கும், அம்பேத்கருக்கும், எம்.என்.ராய்க்கும் நூல்களை அனுப்பி வைக்குமாறும் அவர்களது கருத்துக்களை கேட்டு தனக்கு தெரிவிக்குமாறும் கேட்டிருந்தான். கடந்த வருடம் செப் 12, 14 தேதிகளில் மத்திய சட்டசபையில் தங்களை விடுவிப்பதற்காக குரலெழுப்பிய ஜின்னாவுக்கு நன்றி தெரிவித்து அவன் கைப்பட எழுதியிருந்த கடிதத்தை அவரிடம் எப்படியாவது புத்தகத்தோடு இணைத்து ஒப்படைக்குமாறும் தெரிவித்திருந்தான்.

திரும்பத் திரும்ப படிப்பதும் திருத்தங்கள் ஏதும் தேவையா என விவாதிப்பதுமாய் இருந்ததில் ஒருமாதம் கழிந்துவிட்டது. அதற்குள் அச்சுக்கு போய்விட்டதா என்று மூன்றுமுறை தகவல் கேட்டு அனுப்பியிருந்தான் ரஞ்சித். ஆனால் வெளியே நிலைமை சரியாய் இல்லை. மே-5ம் தேதி சிறப்பு நீதிமன்ற விசாரணை தொடங்கிவிட்டதையடுத்து கெடுபிடி அதிகரித்துவிட்டது. ரஞ்சித்துக்கும் அவனது கூட்டாளிகளுக்கும் ஒத்தாசையாய் இருந்தவர்களைத் தேடி வெறிகொண்டலைந்தது போலிஸ். தலைமறைவுக் காலங்களில் அடைக் கலம் கொடுத்த வீடுகளுக்குள் அகாலங்களில் சோதனையிடப் பட்டது. சந்தேகத்தின் பேரில் இழுத்துச் செல்லப்பட்ட பலரும் விசாரணையின்றி சட்டவிரோதமாய் காவலில் அடைத்துவைத்து சித்ரவதை செய்யப்பட்டனர்.

காந்தியின் ஆதரவாளர்கள் சிலரும்கூட ஆள்காட்டிகளாய் இருந்தனர். டிசம்பரில் வைஸ்ராயின் சிறப்பு ரயிலைத் தகர்க்க நடந்த முயற்சியைக் கண்டிக்கும் காந்தியின் தீர்மானம்- அவரது முழு செல்வாக்கையும் பயன்படுத்தியப் பின்னும்- 1713 பேர் கொண்ட காங்கிரஸ் அவையில் வெறும் 81 வாக்குகளை மட்டுமே அதிகம் பெற முடிந்ததால் கிலியுற்ற மிதவாதிகள், அமிதவாதிகளை காட்டிக் கொடுக்கும் வேலையில் வெட்கமற்று ஈடுபட்டனர்.

யங் இந்தியாவில் வெளியான கட்டுரைகள் வழியே புரட்சிகர நடவடிக்கைகளை ஒடுக்கும் அரசின் அத்துமீறல்களுக்கு தனது ஒப்புதலை காந்தி சூசகமாக பகிரங்கப்படுத்தியிருந்தார். அப்போதிருந்து போலிசின் அட்டூழியத்தில் நாடு திணறத் தொடங்கியது. ரஞ்சித் சிறைக்குப் போய்விட்ட இந்த பதினெட்டு மாதங்களில் தாங்கள் இன்னும் போலிசின் விசாரணை வளையத்திற்குள் இழுத்து வீசப்படாமல் இருப்பதற்கு யாருக்கு நன்றி சொல்வது? இந்த நிலையில் ஒரு அச்சகத்தைத் தேடி கண்டுபிடிக்க ஏலுமா? ரஞ்சித் தங்களிடம் ஒப்படைத்தக் கடமையை நிறைவேற்றுவதுதான் எப்படி?

நிலைமை முன்னிலும் மோசமாகி விட்டிருந்தது. அக்டோபர் 7ம் தேதி தனது விசாரணையை முடித்துக்கொண்ட சிறப்புநீதிமன்றம் ரஞ்சித்துக்கும் அவனது கூட்டாளிகள் இருவருக்கும் மரணதண்டனையை தீர்ப்பாக்கியிருந்தது. லஜ்ஜாவதியும் இவளும் எதிர்ப்பு முழக்கங்களடங்கிய சுவரொட்டிகளை தயாரித்து தமது கமீசுக்குள் மறைத்துக்கொண்டு போய் நகரெங்குமுள்ள சகாகக்களை சந்தித்து ரகசியமாய் விநியோகித்தனர். நகரின் பிரதான சதுக்கங்களில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை மக்கள் கூட்டங்கூட்டமாக திரண்டு வாசித்தனர்.

கண்டன ஹர்த்தால்கள் பலவிடங்களிலும் தன்னெழுச்சியாய் நடந்தன. மாணவர்கள் கலாசாலைகளைப் புறக்கணித்துவிட்டு தெருக்களில் கூடி கொடும்பாவி கொளுத்தினர். வழக்கத்திற்கு மாறாக தி டிரிப்யூன் நாளிதழ் அன்றைக்கு விசேஷமாக மாலை பதிப்பை வெளியிட்டு தீர்ப்பின் விவரங்களை அம்பலப்படுத்தி கண்டித்திருந்தது. தீர்ப்பை எதிர்த்து நாடெங்கும் வெடித்தக் கிளர்ச்சிகள் வட்டமேசை மாநாட்டில் வாதாடி அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை காந்தி ரத்துசெய்ய வேண்டும் என்பதாயிருந்தது.

11லட்சம் வேண்டுதல் பிரேரணைகள் கடிதமாகவும் தந்தியாகவும் காந்திக்கும் அரசுக்கும் வந்த வண்ணமிருந்தன. ஆனால் மார்ச் மாதத்தின் முதல் வாரத்திலேயே மூன்றுமுறை வைஸ்ராயை காந்தி சந்தித்திருந்தபோதும் 19ம் தேதிதான் இந்த மரண தண்டனையை ரத்து செய்யவேண்டும் என்று கோரியிருந்தார். காந்தியின் காலந்தாழ்ந்த இம்முயற்சிக்கு உள்நோக்கம் இருக்கக்கூடுமென மக்களிடையே அரற்றம் பரவியது. தூக்கிலிடும் முன்பாக வெளியே எஞ்சியிருக்கும் புரட்சியாளர்களை நரவேட்டையாடக் கிளம்பியது அரசாங்கம். இம்முறை தப்பமுடியாதென்று தோன்றியது இவளுக்கு. லஜ்ஜாவதிக்கும் நிலைமை புரிந்திருந்தது.

ஒருவேளை தங்களது ஜாகை சோதனையிடப்படுமானால் தாங்களாகவே துணிச்சலாக முன்வந்து அறிவித்துக்கொண்டாலென்ன என்று ரஞ்சித்திடம் ஆலோசனை கேட்க பல்தேவ் அண்ணாவை அனுப்பிவைத்திருந்தனர். ரஞ்சித் இதற்கு ஒப்பவில்லை. எல்லோரும் சிறைக்குள் வந்துவிட்டால் யார் இயக்கத்தைக் கட்டுவது? தடயங்களை அழித்துக் கொண்டு அல்லது மறைத்துக்கொண்டு சாதகமான தருணத்திற்காக காத்திருக்கும்படி சொல்லியனுப்பியிருந்தான். நூல்களை அச்சுக்கு கொடுக்க இது பொருத்தமான தருணம் அல்ல என்பதை தான் உணர்ந்தே இருப்பதாயும் எனவே பதட்டப்பட்டு எதிலும் மாட்டிக்கொள்ள வேண்டாம் என்றும் எச்சரித்திருந்தான்.

எனினும், அவன் கொல்லப்படுவதற்கு முன்பாக அவற்றை அச்சு வடிவில் கொண்டுவந்து அவனுக்கு காட்ட வேண்டும் என்று இவர்கள் ரகசியமாக மேற்கொண்ட முயற்சிகள் பலிதமாகவில்லை. அரசுக்கும் காங்கிரசுக்கும் எதிரான முழக்கங்களைக் கொண்ட சுவரொட்டிகளைக் கண்டு பீதியடைந்திருந்த போலிசார் அச்சாபீஸ்கள் மீது கூடுதல் கண்காணிப்பு கொண்டிருந்தனர். குறிப்பாக நவ ஜவான் பாரத் சபாவுக்கு அனுசரனையாக லாகூரில் இயங்கி வந்த அரோர்பன்ஸ் அச்சகத்தை சுற்றி எப்போதும் ரகசிய போலிஸ் ஏஜெண்ட்டுகளின் நடமாட்டம் அதிகரித்திருந்தது.

அரசுகெதிராக போர்தொடுத்திருக்கும் தங்களை போர்க்கைதிகளாகவே கருதி சுட்டுக்கொல்ல வேண்டுமென்ற ரஞ்சித் மற்றும் அவனது தோழர்களின் இறுதிவிருப்பம் போலவே அவனது புத்தகங்களை அச்சில் கொண்டு வந்துவிட வேண்டுமென்ற இவர்களது முயற்சியும் நிறைவேறாமலே போனது. மார்ச் 23ம் தேதி அவர்களை தூக்கிலிட்டுவிட்ட பிறகு லஜ்ஜாவதியும் இவளும் அழுவதற்கும் தெம்பற்று தொய்ந்தார்கள். தூக்கிலிடப்பட்டதற்கு மறுநாள் காங்கிரஸ் நாடு தழுவிய பொது ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தது. அப்படியொரு அழைப்பை விடுக்காதிருந்தாலும் மக்கள் அந்த மகத்தான தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தித் தானிருப்பார்கள் என்றாள் இவள். கொலைக்கு துணைபோன குற்றவுணர்விலிருந்து தப்பிக்க இப்படியொரு பரிகாரம் போலும் என்று சாடினாள் லஜ்ஜாவதி. இவளுக்கும் அதே கருத்துதான்.

அவர்களை இறுதியாகப் பார்க்கும் வாய்ப்பும் தங்களுக்கு கிட்டாதது குறித்த வேதனை நெறிக்கட்டியாய் வலிக்கத் தொடங்கியது. தூக்கிலிடப்பட்டது பற்றி சஞ்சிகைகளிலும் ரேடியோவிலும் வெளியாகும் செய்திகள் இவர்களை மேலும் துவளச்செய்தன. தி டிரிபியூன் போன்ற ஒருசிலவற்றைத் தவிர பிற உள்ளூர் பத்திரிகைகள் இச்செய்தியை வெளியிடவும் தயக்கம் காட்டிய நிலையில் நியூயார்க்கிலிருந்து வெளியாகும் கம்யூனிஸ்ட் ஆதரவு நாளிதழான டெய்லி ஒர்க்கர் 25ம் தேதியே தலைப்புச் செய்தியாக வெளியிட்டு அஞ்சலி செலுத்தியிருந்தது. மதராசில் குடியரசு பத்திரிகையில் ஈ.வெ.ராமசாமி, வழக்கின் தன்மையை விஸ்தாரமாக விவரித்து அஞ்சலி தெரிவித்ததோடு காப்பாற்ற முன்வராத காங்கிரசை கடுமையாக விமர்சித்துமிருந்தார்.

தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து பெரும் போராட்டங்கள் வெடித்துப் பரவிக் கொண்டிருந்தன. சராசரியாக ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் இருவர் கைது செய்யப்பட்டுக் கொண்டிருப்பதாக ஒரு நாளிதழ் தெரிவித்திருந்தது. கராச்சி காங்கிரசில் காந்திக்கு எதிராக கம்யூனிஸ்ட்டுகளும் இடது சாரிகளும் ஆட்சேப கோஷங்களை எழுப்பினர். மகாநாடு நடைபெறும் மைதான வாயிலில் ஆயிரக்கணக்கில் திரண்ட பொதுமக்கள் நாட்டின் விடுதலைக்கு ரஞ்சித்தின் பாதையே தேவையென்று தொடர்ந்து கோஷமிட்டபடியே இருந்ததில் மகாநாட்டு நடவடிக்கைகள் முற்றாக சமன்குலைந்தது. வரவேற்புக் குழுத்தலைவர் சுவாமி கோவிந்தானந்தாவும் மகாநாட்டுத் தலைவர் சுபாஷ் சந்திரபோசும் செய்த சமாதானங்களும்கூட அங்கு அமைதியை கொண்டுவரவில்லை.

இச்செய்திகளையெல்லாம் திரட்டிக் கொண்டுவந்து தெரிவிக்கிற பல்தேவ் அண்ணா நேற்றிரவு தெரிவித்த செய்தி இவர்களது மனவுறுதியை முற்றாக குலைக்கக் கூடியதாயிருந்தது. அவர்களை தூக்கிலிட்டு ஓரிரு நிமிடங்களில் கழுத்தை முறித்ததும் குற்றுயிரும் குலையுயிருமாக கீழேயிறக்கி மரக்கட்டைகள் அடுக்கிய லாரி ஒன்றில் மறைத்து லாகூர் கண்டோன்மென்ட்டுக்கு கொண்டு போனார்களாம். போகும் வழியிலேயே ரஞ்சித்துக்கு நினைவு திரும்பியதாம். கண்டோன் மென்டில் வெறியோடு காத்திருந்த சாண்டர்ஸ் குடும்பத்தினர் லாரியிலிருந்து இறக்கப்பட்ட மூவரையும் ஆத்திரம் தீருமட்டும் துப்பாக்கியால் சுட்டு பழி தீர்த்துக்கொண்டனராம்.

தூக்கிலிடப்பட்ட உடலில் குண்டுக்காயம் எப்படி வந்தது என்று யாரும் பிரச்னை எழுப்பிவிடக் கூடாது என்பதாலேயே ஜுன்ஜுன்வாலா பகுதியில் அடக்கம் செய்யவிருப்பதாய் மக்களின் கவனத்தை திசைதிருப்பிவிட்டு பியாஸ் சட்லெஜ் சங்குமுகத்தில் ரகசியமாய் எரியூட்டிவிட்டதாம் அரசு. பஞ்சாப் கவர்னரின் நேர்முக உதவியாளராய் இருந்த சாண்டர்சின் மாமனார்தான் இதையெல்லாம் பின்னிருந்து இயக்கியவன் என்றான் பல்தேவ் அண்ணா. அவ்வாறு சுடப்பட்டிருந்தால் அதையும் தீரத்தோடு எதிர்கொண்டபடியேதான் ரஞ்சித்தின் உயிர் பிரிந்திருக்கும் என்றாள் இவள்.

யாரும் யாருக்கும் தேறுதல் சொல்லிக்கொள்ள வழியற்று அவரவர் துயரத்தை அவரவரே கடந்து வர வேண்டியதாயிற்று. அதற்கான காலம் ஒரு மலைப்பாதையைப் போன்று முடிவற்றதாய் நீண்டு நெளிந்து ஓடிக் கொண்டிருந்தது. யாதொன்றின்மீதும் பிடிப்பற்று வெறுமைக்குள் துழாவிக் கழிந்த இக்காலகட்டத்தில் வெளி நடமாட்டத்தை சுருக்கிக் கொண்டு வீட்டிலேயே அடைந்து கிடந்தனர். அவன் கடைசியாய் வந்திருந்தபோது விட்டுச் சென்ற குர்தாவை எடுத்து ‘இந்த துணியில் தங்கியிருக்கும் அவனது வாசனை காலத்துக்கும் உடன்வருமா? என்று லஜ்ஜாவதி கேட்டபோது அது பிரிவின் நிமித்தமானதொரு கவிதையின் முடிப்பு வரியைப் போல் தோன்றியது இவளுக்கு. அதற்கப்புறம் அவர்கள் இருவருக்கும் இடையிலான உரையாடலும்கூட சுருங்கிப்போனது. எப்போதாவது அரிதாக சில வார்த்தைகளை பேசிக்கொண்டனர். அதுவும் ரஞ்சித் அவர்களுடன் இருந்தது பற்றியதாகவே இருந்தது. இதுவன்றி பொது விவகாரங்கள் ஒன்றிலும் நாட்டம் கொண்டாரில்லை.

அவ்வாண்டின் கோடையில் ரஞ்சித்தின் சொந்தகிராமமான பங்காவுக்கு சென்று அவனது குடும்பத்தாரை சந்தித்து திரும்புவதென்ற திட்டத்தை ஒருவரோடொருவர் பேசிக் கொள்ளாமலே கைவிட்டனர். கட்கர்கலானிலிருக்கும் அவன் குடும்பத்தாரின் பூர்வீக வீட்டைக் கண்டுவரும் யோசனையும் கூட இருந்தது. ஊருக்குப்போகையில் தருவதற்காக அவனது தங்கை பர்காஷ்சுக்கு மிகப்பிரியமாய் வாங்கி வைத்திருந்த ஜடைபில்லைகளும் வண்ணக்குஞ்சமும் அலமாரியில் நிறம் மங்கி வெளிறிக் கொண்டிருந்தன. லஜ்ஜாவதி ரஞ்சித்தின் பெயரை பூத்தையல்களால் நிரப்பிக் கொண்டிருக்க, இவளோ அச்சு கோர்க்க ஏதுவாக அப்புத்தகங்களை தட்டச்சு செய்யும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள். காலம் ஒரு உடைந்த சக்கரத்தைப்போல மெதுவே உருண்டது.

எப்போதாவது வரும் பல்தேவ் அண்ணாவிடம் அச்சகம் பற்றி தொணதொணப்பது இவர்களது வாடிக்கையாயிருந்தது. ரஞ்சித் இல்லாவிட்டாலும் இயக்கம் தொய்வின்றி செயல்படும் என்பதை ருசுவாக்க நடந்து கொண்டிருந்த பல்வேறு ஆக்சன்கள் பற்றி உற்சாகம் பொங்க அவன் விவரிக்கும்போது இவர்கள் இருவரும் சுரத்தின்றி கேட்டுக் கொண்டிருப்பார்கள். உங்களது இந்த மனப் போக்கை ரஞ்சித் ஒருபோதும் மன்னிக்கமாட்டான்... நீங்கள் மீண்டும் வெளியே வரவேண்டும் என்று வேண்டுதல் வைப்பான். இவர்கள் பதிலாக எதையும் சொல்லிக் கொள்வதில்லை.

ரஞ்சித் விட்டுப்போன பணிகளை நிறைவேற்றுவதா அல்லது உறைந்துகிடப்பதா என்ற குழப்பத்தை காந்திதான் முடிவுக்கு கொண்டுவந்தார். தீண்டத்தகாதவர்களுக்கு தனித் தொகுதி வழங்குவதை எதிர்த்து 20.9.32ல் அவர் சாகும்வரை உண்ணா நோன்பைத் தொடங்கிய செய்தியை ரேடியோவில் கேட்டு எரிச்சலுற்ற இவர்கள் இருவரும் நீண்ட நாட்களுக்குப் பிறகு தெருவிறங்கி தபாலாபீசுக்குப் போய், ‘இந்த நாட்டுக்கு இன்னொரு காந்தி கிடைக்கக்கூடும். அல்லது தேவைப்படாமலும் போவதற்கு வாய்ப்புகளுண்டு. எனவே அவரது தந்திரத்தையும் நிர்ப்பந்தத்தையும் தாங்கள் ஆற்றலோடு எதிர்கொள்வீர்கள் என நம்புகிறோம். பின்வாங்கிவிட வேண்டாம். நாடு உங்களோடு’ என்று அம்பேத்கருக்கு தந்தி கொடுத்தனர்.

யார் இந்தப் பெண்களென அம்பேத்கர் குழம்பிவிடக்கூடாது என்பதற்காக எழுதப்பட்ட கடிதத்தில் அவர்மீது ரஞ்சித் கொண்டிருந்த அபிமானம் பற்றி குறிப்பிட்டதோடு, விரைவில் அச்சுக்குப் போகவிருக்கும் அவனது நூலின் தெரிவு செய்யப்பட்ட சிறுபகுதியையும் இணைத்து அனுப்பியிருந்தார்கள். ஆனால் காந்தியின் பிடிவாதத்திற்கு எல்லாமே இரையாகிப் போயின. கஸ்தூரிபாயின் மாங்கல்யம் நீடிக்க தீண்டத்தகாதாரும் தேசத்தின் ஒப்பற்றத் தலைவருமாகிய அம்பேத்கரும்தான் காந்திக்கு உயிர்ப்பிச்சை வழங்க வேண்டியதாயிற்று.

அடுத்துவந்த நாட்களின் பல்வேறு நிகழ்வுகளில் மனம் அலைக்கழிந்தாலும் இவர்களிருவரும் இயக்கத்தோடு பொருந்திக் கொள்வதற்கான சாத்தியங்கள் குறைந்தே காணப்பட்டன. நூல்களை அச்சுக்கு கொண்டு போய் ஆகப்போவதென்ன என்று அடிக்கடி விரக்தியில் புலம்பும் லஜ்ஜாவதி, புத்தகங்கள் வெளியாகிவிட்டால் மறுகணமே ரஞ்சித் இருக்குமிடத்துக்குப் போய்விடுவேன் என்பாள். இதெல்லாம் சுத்த அபத்தம் என்று இவள் நினைத்துக் கொண்டாலும் மறுப்பேதும் சொல்லாது மௌனமாய் இருந்துவிடுவாள் அம்மாதிரியான பொழுதுகளில். உறைந்துவிட்ட இந்த மௌனத்தை உருகவைக்கும் வெப்பம் யாரிடமிருக்கிறதோ?

போலிசின் கெடுபிடிகளுக்கு அஞ்சி ஏழாண்டுகளாக வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் பூஞ்சைகளான தங்களை ரஞ்சித் இந்த வேலைக்காக தேர்ந்தெடுத்திருக்கக்கூடாது என்று கூறிய லஜ்ஜாவதி நம்பிக்கையான ஒருவரிடம் புத்தக வேலையை ஒப்படைத்துவிடலாமா என்று நச்சரிக்கத் தொடங்கியிருந்தாள். ரஞ்சித்தின் கட்டுரையொன்று பஞ்சாபியிலோ வேறெந்த இந்திய மொழியிலுமோ வெளியாகியிருக்காத நிலையில் தன் சகாவான ஜீவாவைக் கொண்டு அதை ‘நான் ஏன் நாத்திகனானேன்’ எனத் தமிழில் மொழிபெயர்க்க வைத்து 1934லியே வெளியிட்டிருந்த ஈவெராவிடம் வேண்டுமானால் நம்பிக் கொடுக்கலாம் என்பதே இவளது அபிப்ராயமாயிருந்தது. ஆனால் போலிசின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு மதராசுக்குப் போவதெப்படி?

மிகுந்த கவனத்தோடு திட்டமிட்டாலும் ஒவ்வொரு முறையும் மதராஸ் பிரயாணம் தடைபட்டுக் கொண்டேயிருந்த நேரத்தில்தான் ஒருநள்ளிரவில் விஜயகுமார் சின்ஹா வந்து சேர்ந்தார். நேரடியாக பங்கெடுக்காவிட்டாலும் பல்வேறு ஆக்ஷன்களில் தொடர்புடைய சின்கா இதுவரையிலும் போலிசின் சந்தேகத்திற்கு ஆளாகாதவராய் இருந்தார். எனவே அச்சிடும் வேலையை அவர் மிகவும் பெருமிதத்தேடு ஏற்றுக்கொண்டார். அவரிடம் புத்தகங்களின் கையெழுத்துப் படிகளை ஒப்படைத்த அன்றிரவு, அச்சிடப்பட்ட புத்தகங்களின் உலராத மையின் வாசனை கிறக்கமூட்டியது இவர்களின் கனவில்.

டில்லியில் அல்லது கான்பூரில் இருக்கும் ஏதேனுமொரு பதுங்குமிடத்தில் தங்கிக்கொண்டு அச்சாக்க வேலையை முடித்துவிட்டு வருவதாக சொல்லிச் சென்றவர் குறித்து அதற்கப்புறம் ஒரு தகவலுமில்லை. போகும் வழியிலேயே போலிசிடம் சிக்கிக் கொண்டாரோ அல்லது வேறெங்கும் தலைமறைவாக பதுங்கியிருக்கிறாரா என்பதும் தெரியவில்லை. ஆனால் தம்மை அழுத்திக் கொண்டிருந்த பெரும் பாரத்திலிருந்து விடுபட்ட உணர்ச்சி மேலிட்டவளைப்போல அன்று லஜ்ஜாவதி இயல்புநிலைக்குத் திரும்பத் தொடங்கி யிருந்தாள். இவளும்கூட நீண்டநாட்களுக்குப் பிறகு ஒரு கவிதையை எழுதியிருந்தாள்.

ரஞ்சித்தை சூரியனாய் உருவகித்து தான் எழுதிய அக்கவிதை எழுபதாண்டுகளுக்குப் பின் வெயிலைத் தடவிக் கொடுக்கும் இந்தப்பொழுதில் நினைவுக்கு வந்தது குறித்த சந்தோஷத்தில் மெஹருன்னிசாவை அழைத்தாள். தீனமான தன் குரலில் இப்போது புதுத் தெம்பேறிவிட்டதை உணர்ந்தவளாய் ‘இந்த கவிதையை குறித்துக்கொள். மீதியையும் இன்றைக்கே எழுதி விடலாம்’ என்றாள்.

ரஞ்சித்தும் தோழர்களும் தூக்கிலிடப்பட்டதற்குப் பின்னான நாட்டின் நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டிருக்கும் மெஹருன்னிசா, பைசலாபாத் ( முன்பு- லயல்பூர் ) மகளிர் கல்லூரியின் பட்ட மேற்படிப்பு மாணவி. சுதந்திர தினத்துக்கு முந்திய நாளிரவு கலவரத்தின்போது ஒரு கும்பலால் தூக்கிச் செல்லப்பட்டு ஆறுமாதங்களுக்குப்பின் எல்லையோர நிவாரண முகாம் ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டவள் இவளது தாய். பலாத்காரங்களால் சுவாதீனம் கலங்கியவளாகவும் கர்ப்பமுற்றுமிருந்த அவள் மெஹருன்னிசாவை ஈன்றெடுத்த சிலநாட்களில் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டாள். இவளது வாழ்வை மையமாக வைத்து சதத்ஹசன் மாண்டோ ஒரு சிறுகதையை எழுதியுள்ளார். பின்னாளில் அது படமாகவும் வெளியானது.

ரஞ்சித்தின் சமகாலத்தவர்களை இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் தேடிப்பிடித்து அவர்களது ஞாபகங்களை தொகுப்பதில் ஈடுபாடு கொண்டிருக்கிறாள் மெஹருன்னிசா. லாகூர் ஜெயில் ரோட்டில் டிஏவி கல்லூரி விடுதிக்குப் பின்புறமிருந்த ஒருவீடும்கூட ரஞ்சித்தின் பதுங்கிடங்களில் ஒன்றெனக் கிடைத்த தகவலின்பேரில் மெஹருன்னிசா இவளைத் தேடிக் கண்டுபிடித்திருந்தாள். அந்திமத்திலுள்ள நந்தினியம்மாவின் நினைவிலிருப்பவற்றை மீட்டெடுத்து எழுத வந்தவள் அவளுடனேயே தங்கி பணிவிடை செய்தவாறே ஆய்வையும் தொடர்கிறாள் .

அதன்பின் நடந்தவை மின்னலெனப் பாய்ச்சல் வேகம் கொண்டவை. இரண்டாம் உலக மகாயுத்தம் தொடங்கி விட்ட நிலையில் இங்கிலாந்துக்கு ஆதரவாக இந்தியாவை இறக்கிவிடும் முயற்சிக்கு எதிராக புரட்சியாளர்கள் கலகம் செய்யக்கூடும் என்ற அச்சத்தில் நிம்மதியற்றுப் போன அரசு தன் நரவேட்டையை முடுக்கிவிட்டது. சிறைச்சாலைகள் நிரம்பி வழிந்தன. சித்ரவதைகளுக்கு காரணமெதுவும் தேவையற்றிருந்தது.

பின்வந்த நாட்களில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை காங்கிரஸ் அறிவித்துவிட்டது. அரசியலானது தொடர்ந்து கொதிநிலையிலேயே இருந்ததால் தன்வீடும் சோதனையிடப்படலாம் என்ற அச்சத்தில் சின்ஹா, ரஞ்சித்தின் கையெழுத்துப்படிகளை நண்பர் ஒருவரிடம் கொடுத்து பத்திரமாக வைக்குமாறும் நிலைமை சரியானதும் வந்து பெற்றுக்கொள்வதாகவும் கூறியிருக்கிறார். வாங்கிக் கொண்டு போன அந்த தொடைநடுங்கி, தான் மாட்டிக் கொண்டால் என்னாவது என்ற அச்சத்தில் நான்கு புத்தகங்களையும் எரித்துவிட்டதாய் எனக்கு ஞாபகம்....

ஆமாம் அம்மா, சிவவர்மாகூட தன் புத்தகத்தோட முன்னுரையில் இந்த செய்தியை குறிப்பிட்டிருக்கிறார்... என்றாள் மெஹருன்னிசா.

நான்தான் அவனுக்கு புத்தகங்களோட பெயர்களைச் சொன்னேன். பிரிவினைக்கப்புறம் ஓரிரு தடவைகள்தான் சிவவர்மாவை சந்தித்தேன். ரஞ்சித்துக்கும் எங்களுக்கும் ரொம்பவும் நெருக்கமான தோழன். லாகூர் சதிவழக்கில் தண்டனைக்கைதி. நிறைய ஆக்ஷன்களில் பங்கெடுத்தவன். ரஞ்சித் வாழ்க்கை வரலாற்றை எழுதுவதற்கு முழு தகுதியானவன்தான். கான்பூரிலோ லக்னோவிலோ இருந்து எப்போதாவது கடிதங்கள் எழுதுவான். கொஞ்சகாலமாய் அதுவும் நின்றுவிட்டது என்றாள்.

சிவவர்மா 97 ல் இறந்துவிட்ட செய்தியை இவள் இன்னும் அறியவில்லைபோலும். சொல்லி துயரத்தில் ஆழ்த்திவிடக் கூடாது என்று தன்னைத்தானே எச்சரிக்கை செய்து கொண்டாள் மெஹருன்னிசா.

மெஹர், அந்த புத்தகத்தில் வேறென்ன குறிப்பிட்டிருந்தான் சிவவர்மா?.

லஜ்ஜாவதி பற்றி ஒரே ஒரு வரி வருகிறது அம்மா. ஆனால் உங்களைப் பற்றி எதுவும் காணலியே?

நானும் லஜ்ஜாவதியும் இதே வீட்டில்தான் இருந்தோம். இது அவளுடைய வீடுதான். பிரிவினைக்குப்பின் எங்களது குடும்பம் இந்தியாவுக்கு பெயர்ந்துவிட்ட போதும் பிடிவாதமாக இங்கேயே தான் இருந்தோம். திட்டமிட்டிருந்ததில் முடிக்கப்படாமலே இருந்த சில வேலைகளுக்காக நாங்கள் இங்கேயே தங்க வேண்டியதாயிற்று. அவள் சமாதிகூட இந்த வீட்டின் புழக்கடையில்தான் இருக்கிறது. எழுபதோ எழுபத்தொன்னோ சரியா ஞாபகம் வரல. நானும் அவளோடு செத்திருக்க வேண்டியவள்தான். கொஞ்சத்தில் தப்பிவிட்டேன்.

எதுவும் ஆக்சன்ல ஈடுபட்டீங்களோ?

ஆமாம். நிலுவையிலிருந்த ஆக்ஷன். லாகூர் சதிவழக்கில் அரசுத்தரப்பு சாட்சியாயிருந்து ரஞ்சித்துக்கும் மற்றவங்களுக்கும் தண்டனை கிடைக்க காரணமாயிருந்த நவாப் முகம்மது அகமது கானைப் பற்றி நீ படித்திருக்கிறாயா? பிரிவினைக்குப் பிறகு அவன் இங்கே கௌரவ மாஜிஸ்திரேட்டாகி விட்டிருந்தான். எப்பவும் ஜம்பமாய் மெய்க்காப்பாளர்களோடே வந்து போய்க் கொண்டிருந்தான். நாங்களும் பின்தொடர்ந்து கொண்டுதானிருந்தோம். ஒருநாள் ராத்திரி கஜல் கச்சேரி ஒன்றுக்குப் போய்விட்டுத் திரும்பும்போது வகையாக சிக்கினான். அவர்களைத் தூக்கிலிட்ட அதே இடத்தில் அவனைக் கொன்றோம் நாங்களிருவரும்.

இவங்களை லாகூர் ஜெயில்லதானே தூக்கிலிட்டாங்க?.

ஆமா. ஆனா அந்த ஜெயில் இப்ப இல்ல. 65 வாக்கிலேயே அதை இடிச்சு தரைமட்டமாக்கிடுச்சு அரசாங்கம். சத்மான் சௌக்னு இப்ப சொல்ற இடம்தான் அது. அங்க வச்சுத்தான் கணக்கை நேர் செஞ்சோம். அவனது மெய்க்காப்பாளன் சுட்டதில் ஒரு ரவை அவளது அடிவயிற்றில் பாய்ந்து விட்டது. காயத்தோடேயே மதிலேறி குதித்து வீட்டுக்குள் வந்துவிட்டோம். பழகியத் தடம்கிறதாலயும் பலநாளா ஒத்திகைப் பார்த்திருந்ததாலயும் தப்பிச்சு வர்றது எளிதாகத்தான் இருந்துச்சு. ஆனா நிறைய ரத்தம் வெளியேறிட்டதால அவளை பிழைக்க வைக்க முடியல. ஒத்தையாளா குழி வெட்டி அவளைப் புதைச்சேன். நைந்து போயிருந்த ரஞ்சித்தின் குர்தாவைத்தான் அவள் அன்று அணிந்திருந்தாள்.

உங்களுக்கொன்னும் ஆகலியே?

இதோ இந்த தழும்பைத் தொட்டுப்பார். அதுக்குள் ஒரு ரவை தங்கியிருக்கு. எப்பவாச்சும் எறும்பு கடிச்சாப்ல சுருக்குனு வலிக்கும். மத்தபடி எந்த தொந்தரவும் இல்லாததால இருக்கட்டும் சனியன்னு அப்படியே விட்டுட்டேன்.

அந்த ஜெயிலை பார்க்கமுடியாமப் போச்சே அம்மா...

இங்க எ•ப்.இ.சௌத்ரின்னு ஒரு போட்டோகிராபர் இருக்கார். என்னை மாதிரி நூறை நெருங்குற வயசுதான். ஜெயிலை இடிக்கிறப்ப தத்ரூபமா எல்லாத்தையும் படம் பிடிச்சு வச்சிருக்கார். ரஞ்சித்தையும் தோழர்களையும் எரியூட்டின பன்சிகாட் பகுதியைக் கூட படமெடுத்திருக்கிறார். நான் அனுப்பினேன்னு சொல்லு. பிரியமா தருவார்....

சரியம்மா, ரஞ்சித் தந்தனுப்பின புத்தகம் நாலும் என்னதான் ஆச்சு...?.

அதான் சொன்னேனே, எரிச்சிட்டானுங்க.

அதுகள்ல எழுதியிருந்த எதுவும் இந்த உலகத்துக்கு கிடைக்காமலே அழிஞ்சது பெரிய துயரம்தான் என்றாள் மெஹருன்னிசா.

இவளுக்கு கோபத்தில் வார்த்தைகள் குழறத் தொடங்கியது. உடம்பெல்லாம் நடுங்கியது. என்ன பெரிய துயரத்தை இந்த ரெண்டு நாடுகளும் கண்டுவிட்டது? நேத்து வரைக்கும் இந்த புரட்சியாளர்களை கலகவாதிகள்னு தானே பாடப்புஸ்தகத்துலகூட எழுதி வச்சிருந்தாங்க. அவனோட புஸ்தகங்க அச்சாகி வந்திருந்தா அதையெல்லாம் படிச்சிட்டு அப்படியே நடந்திருப்பாங்களாக்கும்? பிரிவினைக்காலத்துல எத்தனை வன்முறை.... ரஞ்சித் இருந்திருந்தா இதையெல்லாம் சகிச்சிருக்கவே மாட்டான். ஒரேநாடா இருக்கவும் தெரியல. ஒத்துவரலன்னு அமைதியா பிரிச்சிக்கவும் தெரியல. பாகம் பிரிச்சுக்காத வீடு எது? பங்கு வைக்காத நாடு எது? ....த்தூ என்று துப்பினாள்.

அவள் நாக்கு வறண்டு விட்டிருந்தது. குவளையிலிருந்த பழரசத்தை கொஞ்சம்போல் புகட்டினாள் மெஹருன்னிசா. இவளுக்கு சற்றே ஆசுவாசம் கிட்டியது. கண்களை மூடிக் கொண்டு திடீரென அமைதிக்குள் தன்னைப் புதைத்துக் கொண்டாள். காத்திருந்தாள் மெஹர். ஆனால் இப்படியெல்லாம் நடக்கும்னு ரஞ்சித் யூகிச்சிருந்தான் தெரியுமா மெஹர்... நாடுகள் பிரிவதைப்பற்றி அவன் கவலைப்படவில்லை. ஆனால் இரு சமூகங்களுக்குள்ளும் இணக்கம் காணமுடியாத பகைமை விதைக்கப்படுவது பற்றி அவன் கொண்டிருந்த அச்சம் உண்மையாகிவிட்டது பார்த்தாயா மகளே...

நீங்களும் லஜ்ஜாவதியும் எப்படியும் நாலு புத்தகங்களையும் வாசித்திருப்பீங்கதானே அம்மா? அவள் வெறுமனே தலையை மட்டும் ஆட்டினாள். சிறிதுநேரம் கழித்து ஏழு வருஷமா அதை மட்டுந்தானே செஞ்சுக்கிட்டிருந்தோம்...? என்றாள் கண்களைத் திறக்காமலே. புத்தகங்கள் நாலும் பொதுவா எதைப்பத்தியெல்லாம் பேசினதுன்னு உங்களுக்கு ஞாபகத்துல இருக்குதா அம்மா...? எப்படி மறக்க முடியும்? சிவவர்மா குறிப்பிட்டிருந்த தலைப்புகளை வைத்து ஆளாளுக்கு யூகத்தில் ஏதேதோ உளறிக் கொட்டுறாங்க. ரஞ்சித் இவங்களுக்கு வெளியில நின்னு யோசிச்சி எழுதியிருக்கான்....

சோசலிசத் தத்துவத்தை ஆங்கிலத்திலும், இந்திய புரட்சி இயக்கத்தின் வரலாறை இந்தியிலும், மரணத்தின் நுழை வாயிலில்- உருதிலும், சுயசரிதையை பஞ்சாபிமொழியின் குறுமுகி வரிவடிவத்திலும் ரஞ்சித் எழுதியிருந்தான். நான்கும் அச்சில் சுமார் ஆயிரம் பக்கங்கள் அளவிற்கு வரக் கூடும். அடித்தல் திருத்தலின்றி நேர்த்தியான எழுத்தமைவு. எழுதும் பொருள் குறித்த கருத்தமைவில் நம்பிக்கையும் தெளிவும் ஒருங்குகூடிவிடுமானால் மட்டுமே வாய்க்கும் நேர்த்தி அது. வார்த்தைகளின் தெரிவும் வீச்சும் படிக்கிறவ னின் மூளையை சிதறடிக்கும் ஆற்றல் கொண்டவை.

ரஞ்சித்தின் மொழிநடை அவனே எதிர்நின்று உரையாடுதலுக்கு நிகரானது. அவன் சிறைக்குள் இல்லை, இதோ நம்முன் இருக்கிறான் என்பதாக நினைத்துக் கொண்டபோது இவளுக்கு கண்கள் பனித்து எழுத்துக்கள் கலங்கியோடியதும் பதறியடித்து துப்பட்டாவால் துடைத்தபோதும் ஈரத்தால் அழிவதிலிருந்து சில எழுத்துக்களை காப்பாற்ற முடியாமல் போனதும் கிழவியின் ஞாபகத்தைப் புரட்டியெடுத்தது.

கிர்த்தி, மகாராத்தி, பான்சி எண் ஆகிய இதழ்களில் எழுதியிருந்த கட்டுரைகளுக்கு முற்றிலும் தொடர்பற்ற வகையில் புதியத் தளங்களையும் களங்களையும் உள்ளடக்கியிருந்தன புத்தகங்கள். இதில் சுயசரிதையைத்தான் லஜ்ஜாவதிக்கும் இவளுக்கும் சமர்ப்பணம் செய்திருந்தான் ரஞ்சித். ‘மனிதர்களுக்கிடையிலான பிரியங்களே உலகத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது என்பதன் சாட்சிகளாய் வாழும் தோழிகள் லஜ்ஜாவதிக்கும் நந்தினிக்கும்...’ என்று குறிப்பிட்டிருந்தான்.

சாமான்யர்களின் சுதந்திரவுணர்ச்சியும் எழுச்சியலையும் நேஷனல் கல்லூரி மாணவனாயிருந்த தன்னை எவ்வாறு சுருட்டி இழுத்துக்கொண்டது என்பதில் தொடங்கி தன் வாழ்வைத் தகவமைத்துக் கொள்ள நேர்ந்த சிறுநிகழ்வுகளையும் நேர்மையாக பதிவு செய்திருந்தான். மத்திய சட்டசபையில் குண்டு வீசியதற்காக கைது செய்யப்பட்ட ஒரு பஞ்சாபி இளைஞன் என்று பத்திரிகைச் செய்திகளில் அடிபடத் தொடங்கிய ரஞ்சித், விசாரணை முடியும் தருவாயில் உலகப் புரட்சி இயக்கங்களின் ஆதர்ஷ நாயகனாய் வீறு கொண்டெழுந்தது எவ்வாறு என்பதை வாசிப்பினூடே கண்டனர் இப்பெண்கள். இயக்கத்தின் போக்கில் வளர்ந்தெழுந்த அவனது ஆளுமை, காலங்களைத் தாண்டி கொண்டாடப்படுவதற்கான முன்குறிப்புகளை உள்ளடக்கியிருந்தது சுயசரிதை.

ஆனால் ரகசியம்போல் பொதித்துவைத்திருக்கும் அதையெல்லாம் தன் நினைவுக்குள்ளிருந்து உருவியெடுத்து எதிரிலிருக்கும் இந்த சின்னப்பெண்ணிடம் தந்துவிடுகிற வலு தன் மனதுக்கில்லை என்பதை கிழவி உணர்ந்திருந்தாள். அதே நேரத்தில் ரஞ்சித்தின் நூற்றாண்டு தொடங்கும் இத்தருணத்தில் அவனை மிகுந்த அர்த்தத்தோடு முன் வைக்கத் துடிக்கும் மெஹர்மீது அவளுக்கு அனுதாபமும் பெருகியது. இளம்பிராயத்து நந்தினி தனக்குள்ளிருந்து எழுந்துவந்து எதிரில் நின்று வேண்டுவதைப் போலிருந்தது அவளுக்கு மெஹரைப் பார்க்க. உன்னை ஏமாற்ற மனமில்லையடிப் பெண்ணே, உனக்கு ஏதாவது செய்தாக வேண்டும்... என்னை எழுப்பி உட்கார வை.. என்றாள்.

நடுங்கும் கரங்களால் புத்தகங்களை தடவிப் பார்த்த நந்தினியம்மாள் அவற்றை நெஞ்சின்மீது கிடத்தி கண்களை மூடிக்கொண்டாள். அவளுக்கு அழவேண்டும் போலிருந்தது. அவள் மனவோட்டத்தை மாற்றும் பதற்றத்தோடு ஒரு புத்தகத்தின் முன்னுரையை இவளுக்கு வாசித்துக் காட்டத் தொடங்கினாள்- ‘ரஞ்சித்தின் தோழியும் கவிதாயினியுமான நந்தினியம்மாள், அவனது கையெழுத்துப்படிவத்தை தட்டச்சு செய்ததின் ஒரு பிரதியை இத்தனைநாளும் தன் தலையணை உறைக்குள் பாதுகாத்து என்னிடம் தந்திருக்காவிட்டால் இந்நான்குப் புத்தகங்களும் உலகத்திற்கு கிடைத்திருக்காமல் போயிருக்கும்.... ’

இடைமறித்த நந்தினி, இதுவொன்றும் தன் இறுதி லட்சியமல்ல என்றும் அவன் ஆசைப்பட்டதுபோல ஒவ்வொரு தெருமுனையிலும் அடுப்படியிலும் கோதுமை வயல்களின் வரப்புகளிலும் மலையிலும் பள்ளத்தாக்குகளிலும் ஆலைச்சங்கைவிட உரத்த ஒலியோடு இந்நூல்களின் ஒவ்வொரு வரியும் வாசிக்கப்பட வேண்டும். அவை ஒவ்வொருவர் உணர்விலும் கலக்கிறபோது ஆயிரங்கால் தேரேறி வரும் சூரியனைப்போல ரஞ்சித் மீண்டும் வந்துவிடுவான்தானே என்றாள். ஆம் என உறுதியளிக்கும் திடத்தை தனக்குள் தேடிக்கொண்டிருக்கிறாள் மெஹருன்னிசா.

ஆக்சன் : சிறையிலிருக்கும் போராளிகளை விடுவிப்பது, கொடூர அதிகாரிகளைக் கொல்வது போன்ற இயக்க நடவடிக்கைகள் ஆக்சன் என்றழைக்கப்படும்.

பெட்டிச்செய்திகள்

1. கோபப்படும்போது அழகாய்த் தெரியவேண்டும் என்று அலங்காரம் பண்ணக் கிளம்புகிறவனால் ஒருபோதும் கோபப்படவே முடியாது.

2. மாலைநேரத்தில் நெருப்பு மூட்டி குளிர்காயும் விவசாயியுடன் வட்டமாய் அமர்ந்து அவ்விவசாயி என்ன நினைக்கிறார் என்பதை அறிந்துகொள்ள முயற்சித்திருக்கிறீர்களா?

3. கடவுளுக்கு முன்பே உலகமிருந்தது என்பதைப்போலவே எனக்குப் பின்னும் இருக்கும். ஆனால் என் காலடியும் மூச்சுக்காற்றும் பட்ட பிறகு அது பழைய மாதிரியே சுழன்றுகொண்டிருக்க முடியாது...

4. ‘ஏகாதிபத்தியத்திற்கு சற்றும் குறையாமல் ஒவ்வொரு இந்துவும் தனக்குக் கீழிருக்கும் சாதிகளை ஒடுக்குகிறான். இழப்பதற்கு எதுவுமில்லை என்னும் மார்க்சின் பிரகடனத்தை மறுப்பவர்களாக இந்திய உழைப்பாளிகளை இந்துமதம் பிறப்பிலேயே வடிவமைத்துவிடுகிறது. சாதியல்லாத சமூக உறவுமுறை எதுவும் பரிந்துரைக்கப்படாத சமூகமாக இது கெட்டித்தட்டிக் கிடக்கிறது. பாட்டாளி வர்க்கத்திற்கு சாதி மதம் இனம் மொழி இவை எல்லாம் இருக்கிறது என்ற உண்மையை ஒப்புக்கொள்வதன் மூலமே அவர்களை அணிதிரட்டுவதற்கான இந்திய வயப்பட்ட மார்க்சீயத்தைக் கண்டடைய முடியும்.

5. இரவாகிவிடுவதாலேயே
சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை
உங்களுக்கானதொரு சூரியன்
பால்வெளியில் தகதகத்து வந்துகொண்டிருக்கிறது
அதிகாலையில் அதன் முதல் கிரணங்கள்
உங்களைத் தீண்டக்கூடும்
தூங்குகிறவர்களே விழித்துக் கொள்ளுங்கள்
விகசிக்கும் அந்த ஒளியெடுத்து
கண்களுக்குள் பாய்ச்சிக்கொள்வோம்
நூறாண்டுகள் தடித்த இருட்சுவரை
கடக்க வேண்டியவரன்றோ நாம்.

6. சுதேசிகளால் ஆளப்படும் ஒரு நாடு என்பதற்கும் அப்பால், விடுதலையடையும் நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதும் அவன் கனவாக இருந்தது. எனவேதான் அவனைக் கொல்வதில் மானசீக கூட்டாளிகளாய்
சுதேசிகளும் இருந்தனர்.

7. வெளியிலிருந்து வந்த இஸ்லாமியர் இங்கிருந்தோரை மதம் மாற்றிவிட்டதாக குற்றம் சாட்டுகிறவர்களே, ஆரியர்களும் வெளியிலிருந்து வந்தவர்கள்தானே...
அவர்கள் ஏன் இங்கிருந்தோரை ஆரியராக மாற்றி தம்மோடு சேர்த்துக் கொள்ளாமல் வர்ணமாக,சாதியாக பிரித்து வைத்தார்கள்

பெட்டிச்செய்திகள் பற்றிய குறிப்புகள்:

1. காங்கிரசாரை பகடி செய்து ரஞ்சித் எழுதிய, உடல் பொருள் ஆவி மற்றும் அந்த ஆவியில் அவித்த புட்டு என்கிற அங்கத கட்டுரையிலிருந்து...
2. வெடிகுண்டின் வழிபாடு என்ற காந்தியின் கட்டுரைக்கு வோரா எழுதிய பதிலில் எடுத்தாளப்பட்ட ரஞ்சித்தின் வரிகள், லக்னோவின் அமினாபாத்தில் இருந்த பதுங்கிடமான சாலமன் கட்டிடத்திலிருந்து எழுதி பின் இயக்கத்தின் சார்பில் அச்சானது.

3. முழுநேரப் புரட்சியாளர்களின் (Professional Revolutionaries) குறுகீடுகள் என்ற
ரஞ்சித்தின் கட்டுரை இந்த வரிகளோடுதான் முடிகிறது.

4. ‘இந்தியாவில் புரட்சி இயக்கத்தின் வரலாறு’ - ரஞ்சித் பக்க இலக்கம் 16 முதல் 22 வரையானதிலிருந்து (கையெழுத்தில் உள்ளவாறு)

5. காலின் கீழ் தொடங்கும் உலகம், கவிதைத்தொகுதி, நந்தினி, நூதனா பதிப்பகம், லாகூர்

6. ஊனில் கலந்தவரை உருக்கிக் கொல்வாயோ, லாகூர் பல்கலைக்கழக மாணவர் வெளியீடு

7. சாதி மற்றும் வகுப்புவெறியர்களை அடையாளம் காண்பதில் உள்ள இடர்ப்பாடுகள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட பிரசுரத்திலிருந்து


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com