Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
அக்டோபர் - டிசம்பர் 2006
பாகிஸ்தான் செல்லும் ரயில்

குஷ்வந்த் சிங்
தமிழில் - இக்பால்

(டிரெய்ன் டு பாகிஸ்தான் என்னும் ஆங்கிலப் புதினத்தின் ஆசிரியர் குஷ்வந்த் சிங். 1956 ல் வெளியிடப்பட்டது. 1947 ல் தேசப்பிரிவினையின் போது, வடக்கிலும் வடமேற்கு எல்லையிலும் சிந்திய குருதியும் பறிக்கப்பட்ட உயிர்களும் பல லட்சம் அவற்றில் இந்து, முஸ்லிம், சீக்கியர் என்ற பாகுபாடு ஏதுமில்லை. எல்லைப்புறத்தின் ஒரு கிராமத்தில் தேசப்பிரிவினையின் பின்புலத்தில் நிகழும் கண்ணீர் கசியும் சம்பவங்களே இப்புதினத்தின் மையமாக நிற்பவை. இனி, புதினத்தின் சில பக்கங்களிலிருந்து..)

அந்த 1947-ன் கோடைகாலம், இந்தியாவின் வழக்கமானதொரு கோடைகாலமாக இல்லை. பருவநிலை கூட அப்போது வழக்கத்தைவிட உஷ்ணமாகவும், காய்ந்து போயும், புழுதி கிளப்பியபடியுமாக இருந்தது. கோடைகாலம் நீண்டதாகயிருந்தது. மேகங்கள் தென்பட்டன. ஆனால் மழையில்லை. தங்களது பாவங்களுக்காக ஆண்டவன் தண்டித்துக் கொண்டிருப்பதாக ஜனங்கள் பேசத் தொடங்கினார்கள்.

தாங்கள் பாவம் செய்துவிட்டதாகப் புலம்புவதற்கு அவர்களிடம் போதிய காரணங்கள் இருந்தன. இந்தக் கோடைக்கு முன்புதான், தேசம் இரண்டு கூறுகளாக இந்து இந்தியா, முஸ்லிம் பாகிஸ்தான் என பிரிக்கப்பட இருப்பதாகச் செய்திகள் கசிந்தன. விளைவு, கல்கத்தாவில் மதக்கலவரம் வெடித்தது. ஒருசில மாதங்களிலேயே சாவு எண்ணிக்கை பல ஆயிரங்களைத் தொட்டது. இந்துக்கள் திட்டமிட்டுத் தங்களைக் கொன்றதாக முஸ்லிம்கள் கூறினார்கள். முஸ்லிம்கள் திட்டமிட்டுத் தங்களைக் கொன்றதாக இந்துக்கள் கூறினார்கள். இரண்டு தரப்புமே ஒருவரை ஒருவர் சுட்டுக் கொன்றார்கள், கத்தியால் குத்தினார்கள், வெட்டினார்கள், மோதினார்கள். இரண்டு தரப்புமே சித்திரவதையில் இறங்கினார்கள். இரண்டு தரப்புமே பெண்களைச் சூறையாடினார்கள். கல்கத்தாவிலிருந்து, கலவரம் வடக்கு, கிழக்கு, மேற்காகப் பரவியது. கிழக்கு வங்காளத்தின் நவகாளியில் இந்துக்களை முஸ்லிம்கள் படுகொலை செய்தார்கள். பிஹாரில் முஸ்லிம்களை இந்துக்கள் படுகொலை செய்தார்கள்.

பஞ்சாபிலும் எல்லை மாகாணத்திலும், பெட்டிகளில் மண்டையோடுகளை வைத்துக்கொண்டு அவை இந்துக்களால் கொல்லப்பட்ட பிஹார் முஸ்லிம்கள் என்று கூறித் திரிந்தார்கள். பல நூறு வருடங்களாக வடமேற்கு எல்லையில் வசித்து வந்த இந்துக்களும் சீக்கியர்களும் தங்கள் சொத்துக்களைத் துறந்து, கிழக்கே தங்களது சமூக மக்களைத் தேடி அலைஅலையாய்ப் புறப்பட்டார்கள். கால்நடையாக, மாட்டு வண்டிகளில், லாரிகளில், ரயில்களின் கூரைகளில், ஓரங்களில், அங்கே இங்கே என்று பயணித்தார்கள். தங்களது பயணவழிகளில், தண்ணீர்த் துறைகளில், ரயில் நிலையங்களில், சாலைச் சந்திப்புகளில், அவர்களைப் போலவே கிழக்கு நோக்கிப் பாதுகாப்புத் தேடி சாரைசாரையாகப் பயணிக்கின்ற முஸ்லிம்களை எதிர்கொண்டார்கள். கலவரம் காற்றைப் போல இரைந்து கர்ஜித்தது.

பாகிஸ்தான் என்ற புதியதேசம் முறைப்படி அறிவிக்கப்பட்ட அந்த 1947-ன் கோடையில், முஸ்லிம்களும் இந்துக்களும் சீக்கியர்களுமாக ஒருகோடி பேர் எதிரெதிர்த் திசைகளில் பயணித்துக் கொண்டிருந்தார்கள். பருவமழை தொடங்கியபோது, அநேகமாக அவர்களில் பத்துலட்சம் பேர் உயிரிழந்திருந்தார்கள். வட இந்தியா கலவரத்திலும் வன்முறையிலும் அச்சத்திலும் மூழ்கியிருந்தது. பாலைவனச்சோலை போல, எல்லையின் மிக நீண்டதூரத்தில் சிதறிக் கிடக்கின்ற ஓரிரண்டு கிராமங்களில் மட்டுமே அமைதி நிலவியது. மனோமஜ்ராவும் அத்தகைய கிராமங்களில் ஒன்று.

மனோமஜ்ரா சிறிய கிராமம். செங்கல் வீடுகள் மொத்தமே மூன்றுதான். அதில் ஒன்று வட்டிக்குப் பணம்தரும் லாலாராம் லாலின் வீடு. மற்ற இரண்டு, சீக்கிய குருத்வாராவும் முஸ்லிம்களின் மசூதியும்தான். அந்த மூன்று கட்டிடங்களுமே ஒரு முக்கோணத்தை உருவாக்கியிருந்தன. நடுவில் ஒரு அரசமரம். மொத்தம் எழுபது குடும்பங்கள். லாலாராம்லாலின் குடும்பம் மட்டுமே இந்துக்கள். மற்றவர்கள் சீக்கியர்களும் இஸ்லாமியர்களும் சம அளவில். கிராமத்தின் நிலம் அனைத்தும் சீக்கியர்களிடம் இருந்தன. இஸ்லாமியர்கள் குத்தகைதாரர்களாக இருந்தார்கள். நகர சுத்தித் தொழிலாளர்களாக இருந்த சிலரின் மதமோ என்னவென்றே தெரியவில்லை.

***

மனோமஜ்ராவின் ரயில் நிலையத்தில் எல்லா ரயில்களும் நிற்பதில்லை. வேகம் குறைந்த பாசஞ்சர் ரயில்கள் இரண்டு மட்டுமே அங்கே நிற்பவை. காலையில் டெல்லியிலிருந்து லாகூருக்குச் செல்லும் ரயிலும், மாலையில் லாகூரிலிருந்து டெல்லிக்குச் செல்லும் ரயிலும், மனோமஜ்ராவில் ஓரிரண்டு நிமிடங்கள் நின்று செல்பவை. எப்போதுமே அங்கே வரும் ‘வாடிக்கையாளர்’ என்றால் அவை சரக்கு ரயில்கள் மட்டுமே. மனோமஜ்ராவிற்கு சரக்குகள் வருவதுமில்லை, அங்கிருந்து செல்வதுமில்லை. என்றாலும், ரயில் நிலையத்தில் எப்போதும் சரக்கு வண்டிகளின் அணிவகுப்பு இருந்துகொண்டே இருக்கும். வருகின்ற சரக்கு ரயில்கள் சரக்கு வண்டிகளைக் கழற்றி விடுவதும், இருக்கின்ற வண்டிகளை இணைத்துக் கொண்டு செல்வதுமாக மணிக்கணக்கில் அந்த வேலை நடக்கும். கிராமம் ஆழ்தூக்கத்தில் உறைந்திருக்கும்போது, அந்த மையிருட்டில், எஞ்சின்களின் விசில் சத்தமும், மூச்சிரைக்கும் வேகமும், சரக்குகளின் சத்தமும், வண்டிகளை இணைக்கும் ‘கப்ளிங்’குகளின் சத்தமும் காலை வரை தொடரும்.

* * *

அந்த செப்டம்பர் தொடக்கம் முதலே, மனோமஜ்ராவிற்கு ரயில்கள் வரும்நேரம் தாறுமாறாக இருந்தது. ரயில்கள் சரியான நேரத்துக்கு வருவதில்லை, வழக்கத்துக்கு மாறாக இரவு நேரங்களிலும் ரயில்கள் ஓடுவதைக் கேட்க முடிந்தது. சரக்கு ரயில்கள் ஓடுவது சுத்தமாக நின்றுவிட்டது. ஆனால் அடையாளமற்ற ரயில்கள் அர்த்த ராத்திரி முதல் விடிகாலை வரை ஓடத் துவங்கின. மனோமஜ்ராவின் கனவுகள் கலையத் தொடங்கின.

இது மட்டுமில்லை, ஒருநாள் சீக்கிய ராணுவ வீரர்களின் அணி வந்து இறங்கியது. ரயில் நிலையத்துக்கு அருகில் கூடாரம் போட்டார்கள். ரயில் பாலத்தின் முனையிலுள்ள ‘சிக்னல்’கம்பம் அருகே ஆறடி உயரத்துக்கு மணல் மூட்டைகளை சதுரமாக அடுக்கி, ஒவ்வொரு திசைக்கும் ஒரு இயந்திரத் துப்பாக்கியையும் பொருத்தினார்கள். ஆயுதமேந்திய வீரர்கள் பிளாட்பாரத்தைக் காவல் காத்தார்கள். கிராமமக்கள் ரயில் நிலையத்தை நெருங்க அனுமதிக்கப்படவில்லை. டில்லியிலிருந்து வரும் ரயில்களின் டிரைவர்களும் கார்டுகளும் பாகிஸ்தானுக்குள் நுழையும் முன்பாக அங்கே மாற்றப்பட்டார்கள். பாகிஸ்தானிலிருந்து வரும் ரயில்களின் எஞ்சின்கள் ஏதோ விடுதலைப் பெருமூச்சுடன் ஓடி வருவதைப் போல் இந்தப் பக்கம் வந்தன.

ஒருநாள் காலையில் பாகிஸ்தானிலிருந்து வந்த ரயில் ஒன்று அங்கே நின்றது. அமைதியாக இருந்த அந்த நாட்களில் ஓடிய ரயிலைப் போலத்தான் இதுவும் இருந்தது பார்த்தவுடன். கூரைகளில் யாரும் பயணிக்கவில்லை. பெட்டிகளுக்கிடையே யாரும் தொத்திக் கொண்டும் தொங்கிக் கொண்டும் இல்லை. படிக்கட்டுக்களில் ஊசலாடிக் கொண்டு யாரும் இல்லை. ஆனாலும் இந்த ரயிலில் ஏதோ ஒரு வித்தியாசம் இருப்பதாகப்பட்டது. இது ஒரு குறுகுறுப்பை மனதில் ஏற்படுத்தியது. ஒரு பேயைப் பார்ப்பதுபோல் உணர்வு வந்தது. பிளாட்பாரத்துக்குள் வந்தவுடன், கார்டு இறங்கி, ஸ்டேசன் மாஸ்டரின் அறைக்குள் நுழைந்தார். பின் இருவருமாக கூடாரம் அடித்துள்ள இடத்துக்குச் சென்று அங்கேயிருந்த ராணுவ அதிகாரியிடம் பேசினார்கள். பிறகு படைவீரர்கள் அழைக்கப்பட்டார்கள். அங்கேயிங்கே என அலைந்து திரிந்து கொண்டிருந்த கிராமமக்கள் அனைவரும் கிராமத்துக்குள் உடனே சென்றுவிடவேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஒரு வீரன் மோட்டார் சைக்கிளில் ஏறி சந்தன்நகர் நோக்கிப் புறப்பட்டபின் ஒருமணி நேரத்திற்குப்பின் சுமார் ஐம்பது போலீஸ்காரர்களுடன் சப்-இன்ஸ்பெக்டர் வந்து சேர்ந்தார். அதன்பின் மாவட்ட மாஜிஸ்டிரேட்டும் உதவி கமிஷனருமான ஹக்கும்சந்த் தனது அமெரிக்கக் காரில் வந்து இறங்கினார்.

பட்டப்பகலில் வந்த அந்த பேய்ரயில் மனோமஜ்ராவின் உணர்வுகளைத் தூண்டிவிட்டது. தங்களது வீட்டுக்கூரைகளின் மீது ஏறி, ரயில் நிலையத்தில் நடப்பதை வேடிக்கை பார்த்தார்கள். பிளாட்பாரத்தின் ஒருமுனையிலிருந்து மறுமுனை வரை நீண்டிருந்த ரயிலின் கறுப்பு வண்ணக் கூரையை மட்டும்தான் பார்க்க முடிந்தது. ரயில்நிலையக் கட்டிடமும் இரும்புக் கம்பிகளும் படிகளும் ரயிலை முழுமையாகப் பார்க்க முடியாமல் மறைத்தன. திடீர் திடீரென யாராவது ஒரு ராணுவ வீரனோ போலீஸ்காரனோ நிலையத்திலிருந்து வெளியே வருவதும் உள்ளே போவதுமாக இருந்தார்கள்.

பிற்பகலில் ஆண்கள் கும்பல் கும்பலாகக் கூடி ரயிலைப் பற்றிப் பேசத்தொடங்கினார்கள். அரசமரத்தடியில் கும்பல்கள் மொத்தமாகக் கூடியபின், அனைவரும் குருத்வாராவுக்குள் சென்றார்கள். வீடுவீடாகச் சென்று ‘குசுகுசு’ பேசியும் சேகரித்துக் கொண்டும் இருந்த பெண்கள், இறுதியாக, கிராமத் தலைவர் பண்டாசிங் வீட்டில் கூடி அந்த ரயிலைப்பற்றிய தகவல்களோடு வரும் தங்களது ஆண்களுக்காகக் காத்திருந்தார்கள்.

* * *

திடீரென ஒரு போலீஸ்காரன் குருத்வாரா வாசலில் தென்பட்டான். கிராமத் தலைவரும் மற்ற சிலரும் எழுந்து நின்றார்கள். அரைகுறைத் தூக்கத்தில் இருந்தவர்கள் அவசரமாக விழித்தார்கள். “என்ன என்ன ஆச்சு?” என்றபடி தங்களது தலைப்பாகையை அணிந்தவாறே அனைவரும் சுறுசுறுப்பானார்கள்.

“கிராமத் தலைவர் யார்?”

பண்டாசிங் வாசலுக்கு வந்தார். அவரைத் தனியாகத் தள்ளிக்கொண்டு போன போலீஸ்காரன் அவர் காதில் ஏதோ கிசுகிசுப்பதைப் பார்க்க முடிந்தது. பண்டாசிங் திரும்பினார். “ம்...ம்..நடக்கட்டும்... இன்னும் அரைமணி நேரம்தான். ஸ்டேசன் பக்கத்திலே இரண்டு மிலிட்டரி லாரி நிக்குது. நான் அங்கே போகணும்”

போலீஸ்காரன் மிடுக்காகத் திரும்பிப் போனான். அனைவரும் பண்டாசிங்கைச் சுற்றி நின்றார்கள். ஒரு ரகசியத்தைத் தெரிந்து கொண்டிருப்பதால் அவர் ஒரு முக்கியமானவராகிப் போனார். அவரது குரலில் அதிகாரத் தொனி தெரிந்தது.

“அவங்கவங்க வீட்டில இருக்கிற விறகு, மண்ணெண்ணெய் எல்லாம் எடுத்துக்கிட்டு அந்த மிலிட்டரி லாரிக்கு வந்துடுங்க. பணம் கொடுப்பாங்க”

எதற்காக என்று அவர் சொல்லவேண்டும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவரது குரல் கட்டளை இட்டது.”என்ன உங்களுக்கெல்லாம் காது செவிடா? இல்லை, நான் சொன்னது காதுல விழலியா? போலீஸ்காரன் வந்து கம்பால குண்டியில அடிச்சாத்தான் நகருவீங்களா? வேலை நடக்கட்டும்”

* * *

விறகுகள் லாரிகளில் ஏற்றப்பட்டன. காலியான பெட்ரோல் கேன்களில் மண்ணெண்ணெய் நிரப்பப்பட்டது. எல்லாம் முடிந்தபின், அதிகாரிக்கு மரியாதை தரும் விதமாக சற்றே தூரத்தில் அனைவரும் கூடி நின்றனர்... லாரிகள் ஸ்டேசனை நோக்கிச் சென்றன.

* * *

வீட்டுக் கூரைகளின்மீது நின்று பார்த்தால், ஸ்டேசன் பக்கத்தில் நிற்கும் லாரிகளைப்பார்க்க முடிந்தது... அவை மீண்டும் இடதுபுறம் திரும்பி ஸ்டேசனை நோக்கி வளைந்து ரயிலுக்குப் பின்னால் மறைந்தன. ரயில் பாலத்தின் அடியில் சூரியன் மறைந்தபோது, தங்களது அன்றாட வேலைகளை மறந்துபோய் விட்டோமே என்று ஆண்களும் பெண்களும் ஞாபகப்படுத்திக் கொண்டார்கள். விரைவில் இருட்டிவிடும், குழந்தைகள் உணவுக்காக அழத் தொடங்குவார்கள். ஆனாலும், பெண்கள் ரயில்வே ஸ்டேசன்மீது பதிந்த தங்களது கண்களை அப்படியிப்படி நகர்த்தவேயில்லை. பசுக்களும் எருமைகளும் தானியக்களஞ்சியத்துக்குத் திரும்பின. ஆனாலும் ஆண்கள் வீட்டுக்கூரைகளின் மீது நின்றுகொண்டு இப்போதும் ஸ்டேசனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஏதோ நடக்கப் போகின்றது...

சூரியன் பாலத்துக்கு பின்னால் மூழ்கிக்கொண்டிருந்தான். வெண்மேகங்களை, வெண்சிகப்பும் பழுப்பும் ஆரஞ்சுமான கலவையால் ஒளியேற்றி வண்ணமயமாக்கினான். சற்றுநேரத்தில் சாம்பல் வண்ணக் கீற்றுக்கள் இந்த வண்ணக்கலவையுடன் சேர்ந்துகொள்ள மாலைப்பொழுது மெல்ல மங்கி அந்தி சாயத்தொடங்கியது. அதுவும் மெதுவாகத் தன்னை இருட்டில் சங்கமித்துக் கொண்டது. ரயில்வே ஸ்டேசன் ஒரு இருட்டுச் சுவராக மாறிக்கொண்டது. சலித்துப்போன ஆண்களும் பெண்களும் மெதுவாகக் கீழேயிறங்கத் தொடங்கினார்கள்.

நீலமும் சாம்பல் வண்ணமும் கலந்த வடக்குத் தொடுவானம், மீண்டும் ஆரஞ்சுவண்ணத்தை வீசியது. அது பழுப்பு வண்ணமாகி ஒளிமயமான வெண்சிகப்பை வீசியது. செக்கச் சிவந்த தீயின் நாக்குகள் மேலெழுந்து ‘கருங்கும்’மென்றிருந்த இருட்டு வானத்தைத்தொட்டன. இளங்காற்று மனோமஜ்ராவை நோக்கி வீசியது. மண்ணெண்ணெயும் விறகும் எரியும் வாடை உடன் வந்தது. அதன்பின் மனிதச் சதை எரிந்து தீய்ந்து போன தெளிவற்ற குமட்டுகின்ற நாற்றம் வந்தது.

மரண அமைதியில் மனோஜ்மஜ்ரா உறைந்தது. அது என்ன நாற்றம் என்று யாரும் யாரையும் கேட்கவில்லை. அவர்களுக்குத் தெரியும் அது என்னவென்று. அவர்களின் கடந்த காலம் அதை அவர்களுக்குச் சொல்லியிருந்தது. அந்த ரயில் பாகிஸ்தானிலிருந்து வந்தது என்பதே அவர்களின் கேள்விகளுக்குத் தகுந்த பதிலாக இருந்தது.

மனோஜ்மஜ்ரா நினைவு தெரிந்த நாளிலிருந்து முதன்முதலாக அன்றுதான் இமாம் பக்ஷின் குரல் (மசூதியிலிருந்து) வானத்தைத் தொட்டு அல்லாவின் புகழை உரக்கக் கூவுவதற்காக மேலெழும்பவில்லை.

* * *

ஹெட்கான்ஸ்டபிளின் வருகை, வெண்ணெயில் கத்தி இறங்குவதைப் போல் மனோமஜ்ராவை இரண்டாகப் பிளந்துவிட்டது. முஸ்லிம்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே இருந்து துக்கத்தில் ஆழ்ந்தார்கள். பாடியாலாவிலும் அம்பாலாவிலும் கபுர்தலாவிலும் சீக்கியர்கள் முஸ்லிம்களைத் தாக்கிக் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்பட்ட வதந்திகள் முன்பு பரவியதும், ஆனால் தாங்கள் அதைப் பொருட்படுத்தாததும் மீண்டும் நினைவில் ஓடின. முக்காடு விலக்கப்பட்ட தங்கள் பெண்கள், நிர்வாணப்படுத்தப்பட்டு ஆள் நடமாட்டமிக்க வீதிகளில் ஊர்வலமாகத் துரத்தப்பட்டு மார்க்கெட் பகுதியில் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாக கேள்விப்பட்டிருந்தார்கள். தாங்கள் சூறையாடப்படுவதற்கு முன்பாகவே பலர் தங்களை மாய்த்துக் கொண்டார்களாம். பன்றிகளைக் கொண்டுவந்து வெட்டியெறிந்து மசூதிகளை அசுத்தம் செய்ததாகவும், புனித குர்-ஆனை எதிரிகள் கிழித்து எரிந்ததாகவும் கேள்விப்பட்டிருந்தார்கள். மனோமஜ்ராவின் ஒவ்வொரு சீக்கியரும் திடீரென கெட்டநோக்கத்துடன்கூடிய விரோதியாகத் தோன்றினார்கள். அவர்களது நீண்ட தலைமுடியும் தாடியும் காட்டுமிராண்டித்தனமாகத் தோன்றியது. கிர்பான்(குறுவாள்) முஸ்லிம்களுக்கெதிரான ஆயுதமாகத் தோன்றியது. பாகிஸ்தான் என்ற பெயரில் ஏதோ அர்த்தம் உள்ளதாக - சீக்கியர்களே இல்லாத ஒரு புகலிடமாக - முதன்முதலாக நினைக்கத் தொடங்கினார்கள்.

சீக்கியர்களுக்குள் கோபமும் வன்மமும் தலைதூக்கியது. “ஒரு முஸ்லிமை எப்போதும் நம்பாதே” என்றார்கள். அவர்களது கடைசி குரு கூறியிருக்கிறார், “முஸ்லிம்கள் நன்றியுணர்ச்சியற்றவர்கள்” சரிதான். முஸ்லிம்களின் ஆட்சியில், தங்களது தகப்பனார்களை சகோதரர்களைக் கொன்றும், அவர்களது கண்களைக் குருடாக்கியும் இருக்கிறார்கள், அரியணையைக் கைப்பற்ற. குருத்துவாராக்களில் பசுக்களைப் பலியிட்டு அசுத்தப்படுத்தினார்கள். புனித கிரந்த்சாகிப்பை கிழித்து எறிந்தார்கள். முஸ்லிம்கள் பெண்களை மதிப்பதே கிடையாது. முஸ்லிம்கள் கையில் சீரழிவதை விட, கிணற்றில் விழுந்து செத்த பெண்களையும், தீயிட்டுக்கொண்டு செத்த பெண்களையும் பற்றி சீக்கியஅகதிகள் சொல்லியிருக்கின்றார்கள். தற்கொலை செய்துகொள்ளாதவர்கள் நிர்வாணமாக்கப்பட்டு, தெருவில் துரத்தப்பட்டு, வன்புணர்ச்சிக்குப் பிறகு கொலை செய்யப்பட்டார்கள். இப்போது ஒருரயில் நிறைய சீக்கியர்கள் கொல்லப்பட்டு மனோமஜ்ராவில் அவர்கள் எரிக்கப்பட்டுள்ளார்கள்.

* * *

சற்று நேரம் சென்றபின், கிராமத்தலைவர் பண்டாசிங் பேசத் தொடங்கினார்.

“பக்கத்து கிராமங்களில் உள்ள முஸ்லிம்களெல்லாம் வெளியேற்றப்பட்டுவிட்டார்கள். சந்தன்நகர் அருகிலுள்ள அகதி முகாமில் இருக்கின்றார்கள். பலர் ஏற்கனவே பாகிஸ்தானுக்குச் சென்று விட்டார்கள். மற்றவர்கள் ஜலந்தரில் உள்ள பெரிய முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள்.”

மற்றொருவர் தொடர்ந்தார். “ஆமாம். கப்பூராவும், குஜ்ஜூமாட்டாவும் கடந்தவாரம் காலி செய்யப்பட்டன. மனோமஜ்ராவில் மட்டும்தான் இப்போது முஸ்லிம்கள் உள்ளார்கள். தங்களது சகாக்களை வெளியேறுமாறு எப்படி அவர்கள் கூறமுடிந்தது என்பது எனக்குத் தெரியவில்லை. நமது குத்தகைக்காரர்களிடம் நாம் எப்போதுமே அவ்வாறு சொல்லப்போவதில்லை. நமது பிள்ளைகளை வீட்டைவிட்டு வெளியே போகுமாறு எப்படிக் கூறமுடியுமோ அதைவிட அதிகமாக நாம் ஒன்றும் பேசிவிட முடியாது. இங்கே யாராவது இருக்கின்றீர்களா - கிராமத்து முஸ்லிம்களை, “சகோதரர்களே, மனோமஜ்ராவை விட்டு வெளியேற வேண்டாம்” என்று சொல்வதற்கு?

இதற்கு யாரும் பதில் சொல்லும்முன் யாரோ வாசலில் நுழைந்தார்கள். விளக்கின் குறைந்த வெளிச்சத்தில் அடையாளம் தெரியவில்லை. “யாரது?” கேட்டது கிராமத்தலைவர். “உள்ளேவாங்க” இமாம் பக்ஷ் உள்ளே வந்தார். இரண்டு பேர் கூடவே வந்தார்கள். முஸ்லிம்கள்.

“சலாம், இமாம் பக்ஷ் மாமா. சலாம் கேர் தினா சலாம், சலாம்”

“சத் ஸ்ரீ அகால், தலைவரே, சத் ஸ்ரீ அகால்” முஸ்லிம்கள் வணக்கம் சொன்னார்கள்.

அவர்களுக்கு உள்ளே இடம் கொடுத்தார்கள். இமாம் பக்ஷ் பேசக் காத்திருந்தார்கள்.

விரலால் தாடியைக் கோதியபடியே இமாம் பேசத் தொடங்கினார். “சகோதரர்களே என்ன முடிவு செய்திருக்கிறீர்கள்?”

மோசமான அமைதி நிலவியது. கிராமத்தலைவரை எல்லோரும் பார்த்தார்கள்.

“என்ன கேள்வி இது? எங்களுக்கானதைப் போல உங்களுக்கும் இந்தக் கிராமம் சொந்தமில்லையா?”

“ வெளியே என்ன மாதிரியாகப் பேசுகிறார்கள் என்பதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். பக்கத்து கிராமத்திலிருந்தெல்லாம் வெளியேற்றப்பட்டு விட்டார்கள். நாம் மட்டுமே மீதி. நாங்கள் வெளியேற வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் நாங்கள் போய்விடுவோம்.”

ஒரு இளைஞன் பேசினான்,”இமாம் பக்ஷ் மாமா, இங்கே பாருங்க நாங்க இங்கே இருக்கிறவரைக்கும் உங்களைத் தொடறதுக்கு யாருக்கும் துணிச்சல் வராது. நாங்க முதல்லே உயிரை விடுவோம் அதுக்குப்பிறகு நீங்க உங்களைப் பார்த்துக்குங்க.”

“ஆமாம், நாங்க முதல்ல. அப்புறம்தான் நீங்க. உங்களுக்கு எதிரா யாராவது புருவத்தை உயர்த்துனாங்கன்னாக்கூட அவனோட அம்மாவைக் கற்பழிப்போம்” என்றது ஒரு குரல்.

“ஆமாமா, அம்மா, சகோதரி, மகன்” பல குரல்கள். கண்ணில் வழிந்தோடிய நீரைத் துடைத்துக்கொண்டு, சட்டையின் நுனியால் மூக்கைச் சிந்தினார் இமாம்.

“பாகிஸ்தானுக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்குது? நாங்க இங்கதான் பிறந்தோம். எங்க முன்னோர்களும் இங்கதான் பிறந்தாங்க. அண்ணன் தம்பிகளா உங்களோடதான் வாழ்க்கை நடத்திக்கிட்டு இருக்கோம்.” உடைந்து அழுதார். மீட்சிங் இமாமை அணைத்துக்கொண்டு அழத் தொடங்கினார். கூட்டத்தில் பெரும்பாலோர் கண்ணீர்விடத் தொடங்கினார்கள். மூக்கைச் சிந்தினார்கள்.

கிராமத்தலைவர் பேசினார். “ஆமாமா, நீங்க எங்களோட சகோதரர்கள்தான். எங்களைப் பொறுத்த மட்டில், நீங்க, உங்களோட குழந்தைகள், பேரப்பிள்ளைங்க எல்லோரும் இந்தக் கிராமத்துலேயே எத்தனைகாலத்துக்கு வேண்டுமானாலும் இருங்க. உங்களையோ உங்க மனைவிமாரையோ பிள்ளைகளையோ யாராவது திட்டினாங்கன்னா, உங்க தலையிலிருந்து ஒருமுடி உதிர்றதுக்கு முன்னாலே நாங்களும் எங்க மனைவிமாரும் பிள்ளைகளும் உயிரை விடுவோம். ஆனால், மாமா... நாங்க எண்ணிக்கையிலே ரொம்பக் குறைவு. பாகிஸ்தானிலிருந்து அகதிகள் ஆயிரக்கணக்குலே வந்துக்கிட்டே இருக்கறாங்களே, அவங்களாலே ஏதாச்சும் ஆச்சுன்னா யார் பொறுப்பு?”

“ஆமாமா, எங்களுக்கு ஒண்ணுமில்லே. ஆனா அகதிகளால ஏதாச்சும் ஆச்சுதுன்னா?” மற்றவர்கள்.

“துப்பாக்கி ஈட்டிகளோட ஆயிரக்கணக்கான பேர் பல கிராமங்களை முற்றுகையிட்டுட்டதாக நாங்க கேள்விப்பட்டோம். எதிர்ப்புங்கற பேச்சுக்கே இடமில்லே.”

“கும்பலைப் பார்த்துப் பயப்படறோம் இல்லே? வரட்டும் பார்க்கலாம். நாம் குடுக்கற அடி, மறுபடி அவங்க மனோமஜ்ராவைத் திரும்பிக்கூடப் பார்க்கக்கூடாது” என்றது ஒரு குரல். இந்த சவாலுக்கு எந்த பிரதிபலிப்பும் இல்லை, ஒரு வெற்றுச்சவாலாக இருந்தது. இமாம் மீண்டும் மூக்கைச் சிந்தினார். “சகோதரர்களே, நாங்க என்ன செய்யணும்னு சொல்லுங்க” பொங்கி வரும் உணர்ச்சியோடு கேட்டார்.

கிராமத்தலைவர் கனத்த குரலில் கூறினார். “மாமா, சொல்றதுக்கு கஷ்டமாகத்தான் இருக்கு. ஆனா இப்ப இருக்கற சூழ்நிலையிலே நீங்க எல்லாரும் அகதி முகாமுக்குப் போறதுதான் நல்லதுன்னு நான் சொல்வேன். உங்க சொத்துபத்தெல்லாம் வீட்டுலே வச்சுப் பூட்டிட்டுப் போங்க. உங்க ஆடுமாடுகளையெல்லாம் நீங்க திரும்பி வர்றவரைக்கும் நாங்க பார்த்துக்கிறோம்.... இதுக்குப் பிறகும் நீங்க இங்கேயே இருக்கணும்னு விரும்பினீங்கன்னா, நாங்க அதை வரவேற்கிறோம். எங்க உயிரைக்கொடுத்தாவது உங்களைக் காப்பாத்துவோம்.”

இமாம் எழுந்தார். “ஆகட்டும், நாங்க போய்த்தான் ஆகணும்னா, எங்க சொத்து, பாய்படுக்கையெல்லாம் கட்டி எடுத்துக்கிட்டுப் போறோம். எங்க அப்பாக்களும் தாத்தாக்களும் பல நூறு வருசங்களா உருவாக்கிய இந்த மண்ணை விட்டுட்டு நாங்க போறதுக்கு எங்களுக்கு ஒருநாள் ராத்திரியாவது வேணுமல்லவா?”

கிராமத்தலைவர் அதிகபட்சக் குற்றவுணர்வுக்கு ஆளாகி உணர்ச்சிக் கொந்தளிப்பில் தத்தளித்தார். தனது இடத்திலிருந்து எழுந்து இமாம் பக்ஷைக் கட்டித் தழுவி வாய்விட்டு அழத்தொடங்கினார். அந்தக் கிராமத்தின் சீக்கியர்களும் முஸ்லிம்களும் ஒருவர் தோளில் ஒருவர் சாய்ந்து குழந்தைகளைப் போல் அழுதார்கள். கிராமத் தலைவரின் தோளிலிருந்து தன்னை மெதுவாக விடுவித்துக் கொண்ட இமாம் பக்ஷ், “அழுவதற்கு அவசியமில்லை” என்று விம்மியவாறே கூறினார்.

“உலகம் இவ்வளவுதான்
மணம் கமழும் பந்தல் கொடியில்
புல்புல் பறவையின் பாடல் நிரந்தரமல்ல
இளவேனிற் காலமும் நின்று நிலைப்பதில்லை
பூக்களும் நிரந்தரமாய் பூத்திருப்பதில்லை
மகிழ்ச்சியும் நிலைத்து நீடிப்பதில்லை
இன்பம் பொங்கும் நாட்களிலும்
சூரியன் மறையத்தான் செய்வான்
நட்பும் நிரந்தரமாய் நிலைப்பதில்லை
யார் இதனை அறியாதவரோ
அவர் வாழ்க்கையை அறியாதவராவார்.”


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com