செந்தமிழ் மாரி கவிதைகள்
.
வீடு வேண்டும்
பிழைக்க வந்தவனுக்கு
வீடொன்று வேண்டும்
புரண்டு படுக்குமளவும்
அதன் சகலமும்
நான்கு வீட்டைக் கடக்கையில்
முட்டவேண்டும்
கூவி விற்கும்
நல்அங்காடிகள்
அடுத்த தெருவீதி
தொடுகையில்
எதிர்ப்படணும்
பேருந்து நிறுத்தம்
நச்சு நான்கு சொல்லாத
வீட்டுச் சொந்தக்காரி
ஆம்
வீடொன்று வேண்டும்.
இத்தனையும் கூடிவர
எப்படியாவது அமையவேணும்
சேரி ஆளு வாசம் புழங்காத
ஒரு வீடு.
மரணங்களால் வேய்ந்த வீடு
என் மூதாதையர்களின்
உயிர் அவிழ்த்த மௌனம்
இழை பின்னிக் கிடக்கிறது
முகடுகள்தோறும்
ஆங்கு அமர்த்தப்பட்டிருக்கும்
ஈசானித் தூணிற்குள்
இறந்துகிடக்கும் மரம்
தனக்கு நேர்ந்த
உயிர்ப்பறிப்பு எண்ணி
கலங்கிக் கொண்டிருக்கலாம்
மௌனமாய் அடைபட்டிருந்த
மரணத்தின் ஒலி வெடித்து
புத்துயிர் பிறப்புதோறும்
அழுகையாகிறதோ
பூவில் தேனெடுத்து
துய்த்தவரின்
வாசஅணுக்கம் அண்டி
செவ்வகச் சட்டகங்களில்
படபடத்துக்கொண்டிக்கக் கூடும்
பிரியங்களின்
மரணச் சயனிப்புகள்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|