அவரின் வருகை
சம்பு
பதிவு-1
அவர் குறித்து உங்களிடம் வாய் திறக்குமுன்பே
நீங்கள் உரையாடத் தொடங்கினீர்கள்
நாளின் பெரும்பொழுதை துவக்கி அஸ்தமிக்கச் செய்யுமொரு
சூட்சும வஸ்துவெனவும்
இண்டு இடுக்குகளில் ஓடியொளிந்தும் மென்னியைத்
திருகும் வாழ்வை
கடக்கவொரு பற்றுக்கோடாகவு மென விவரிக்கத்
துவங்கினீர்கள் அவரை
முன்னிறுத்தி
மேலும் தொடர்ந்தீர்கள் சலியாமல்
விழுங்கப் பிளந்த வாயினுள் லாவகமாய்
பிஸ்டலை நுழைத்து மீட்ட கதையையும்
குற்றத்தில் மனங்குமைந்து கற்களை நழுவவிட்டு
ஒருவர் பின் னொருவராக தலை குனிந்து திரும்பியதை
யடுத்து பிணி முற்றிக்
கிடந்த அவளை சொஸ்தப்படுத்தி
போக்குவரத்துச் செலவுக்குக் காசு கொடுத்தனுப்பியதையும்
விழிகளை உருட்டியபடி விதந்தீர்கள் சந்நதங் கொண்டு
முன்வாசல் ஈசானி விருட்சக் கிளை நுனியில்
நடம்புரியும் சுந்தர ஸ்வரூபத்தை வியந்
தரற்றியபோது நன்றாக கவனித்தேன் அவரை
பின்பு மெய்யாகவே உங்களுக்குச் சொன்னேன்
போஜன அசதியின்
ஆசன நித்திரை குலைத்து
கனத்துப் பெருத்த புட்டத்தின் கொழுஞ்சதையை
கவ்வியோடிய கருநாயைத் தேடியே அவர் வந்திருக்கிறாரென
கொடுவெறுப்பின் விதையொன்றைப் பதியமிட்டபடி
கொல்லத் துணிந்து பாய்ந்தீர்கள் என்மீது.
பதிவு-2:
பனிக்குல்லாய் கம்பளி சகிதம்
16-சி பேருந்தில் வந்திறங்கியவரை முதலில் சட்டை செய்யாமலிருந்தேன்
உருக்குலைந்து சிதைந்திருந்தது
நகர வாசம் படிந்த அவர் மேனியின் தேஜஸ்
லகானை இழுப்பதற்குள் வேகமெடுத்த புரவிகள்
ரதத்திலிருந்து கீழே தள்ளியதாய் கபடம் பேசியவரை
கையமர்த்தி ஆசிர்வதித்தேன் ஒரு கோப்பைத் தேநீருக்கு
அவர் விருப்பத்தின் பேரில் அறையைப் பங்கிட்ட பின்
அறிவுறுத்தினேன்
இருப்பிடத்தைப் புழங்குவது குறித்தும்
பயோடேட்டா இன்றி பணிபுரிய முடியாத சிரமம் குறித்தும்
(உதிரிப் பாட்டாளியாய் உருட்ட முடியாத இவ்வாழ்வை என அவர்
உளறி முனகியதை கண்டுகொள்ளவில்லை நான்)
எலிகளுடன் உரையாடும் நள்ளிரவில் அவர் விழிகள்
பூனையைப் போன்றே மினுங்கியதென்றேன் ஒருமுறை
பகற் தனிமையில் வெக்கை தாளாது பினாத்தியவரை
டாஸ்மாக்கில் ஓரங்கட்டியபோது Old monk -ன்
ஐந்தாவது ரவுண்டில்தான் பூனை
அல்ல புலி என்றபடி குவளையைச் சரிக்கும்போது
எனக்குள் அரும்பியது குரோதத்தின் முளைகள்
வெட்டிமயிராய் உட்கார்ந்து வீணே தின்றழிப்பதாய்
நாட்பட்ட எரிச்சலில் கத்தியபோது
சர்வமும் ஒடுங்கி விதிர்விதிர்த்தார் இயலாமையில்
பேச்சு விவாதமாகி காறித்துப்புவது வரை சென்று
கைகலப்பில் முடிய
அறைக்குள் வரத் தயங்கி வெளியில் படுத்துக்கொண்டார் அன்று
சமனற்றுக் கடந்திருந்த இருதினங்களின் பின்
கடைத்தெருவில் நின்றிருந்தார் கவனித்தேன்
யூகத்தின்படியே உபகரணங்களை சேகரித்தார்
சட்டைப் பையிலிருந்து களவாடிய காசில்
ஒரு நைலான் கயிறு அல்லது குறுங்கத்தி
எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்
ஆக ஒன்று நிச்சயம்
இன்றைய எனது இரவு
உறக்கத்திற்கானது அல்ல.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|