கனவுகளை மேய்ப்பவர்கள்
மருதபாண்டியன்
மேய்ச்சல் நிலம் தேடி
என் கருப்புநிற எருமைகளை
மேய்த்துக் கொண்டு நானும்
வெள்ளைநிற பசுக்களோடு
நீங்களும் வந்து சேர்ந்தோம்
என் மாடுகளும் உங்கள் மாடுகளும்
ஒன்றொடொன்று கலந்து
காடெங்கும் மேய்ந்து
நிழல்களில் தங்கி அசைபோட்டன
பச்சைநிறப் புல் வெளிகளில்
படுத்து உருண்டன
பசலை பாய்ந்த குளங்களில்
முங்கி எழுந்தன
மஞ்சள்நிற வெயிலில்
புழுதியிலும் வறள் மண்ணிலும்
கொழி மண்ணிலும்
மண்ணின் நிறங்களையெல்லாம்
பூசிக்கொண்டன
அந்திவெயிலின் ஆரஞ்சு நிறத்தையும்
செம்புலப்பெயல்நீரின் செவலை நிறத்தையும்
கொம்புகளில் தேய்த்து
உடம்பெங்கும் அப்பிக்கொண்டன
ஒளியின் நிறத்தை பூமி பூசி
சாயம் கலைத்த அந்த அந்திக் கருக்கலில்
வானத்தைப் பொத்துக்கொண்டு
தாரை தாரையாய் விழுந்த
தண்ணீர் நிறத்தில்
எல்லா நிறங்களும் அழிந்து
சுயத்தன்மையோடு நின்றன
பின் கருப்பு இரவு தொடங்கிய நேரத்தில்
கலைந்து சென்று பட்டியில் அடைத்தோம்
அவரவர் மாடுகளை அவரவர் பட்டிகளில்
அதனதன் சுய நிறத்தோடு
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|