சி ன் ன த் த ம் பி
கம்பீரன்
ஒரு ஊர்ல அண்ணந்தம்பி அஞ்சுபேரு. அதுல நாலு பேருக்கு ஒரு கொறையும் இல்ல, கை காலெல்லாம் நல்லாருந்திச்சி. கடைக் குட்டிக்கு மட்டும் ஒரு கால் ஊனம்.
அண்ணந்தம்பி அஞ்சுபேருக்கும் கல்யாண மாயிருச்சி. கைகால் நல்லாருக்கிறதால பெரியவங்க நாலுபேரும் ஓடியாடி ஒழைச்சி சம்பாதிச்சி பொழைச்சாங்க. சின்னவன் பாடுதான் திண்டாட்ட மாயிருச்சி.
அவன் வூட்ட சுத்தி பூசணத்தோட்டம் போட்டான். பூவும்பிஞ்சுமா தோட்டம் நல்லா வௌஞ்சிச்சி. ஒருநாள் அதுல ஒரு பழத்த பறிச்சினு வந்து அறுத்தான். அறுத்தவனுக்கு ஒரே ஆச்சரியம். பழம் நெறைய தங்கக்காசா இருந்திச்சி. இது தெரிஞ்சி பெரியவங்க நாலுபேரும் ஆளுக்கொரு பூசணப் பழம் வாங்கி அறுத்துப் பார்த்தாங்க. உள்ள வெறும் வெதைங்க தான் இருந்திச்சி. தங்கக்காசு இல்ல.
தம்பி நம்மள ஏமாத்திட்டான்னு அண்ணனுங்க கோபப்பட்டானுங்க. அவனையும் அவன் பொண் டாட்டியையும் ராத்திரிக்கு வூட்டோ ட நெருப்பு வச்சி கொளுத்திட்டு வூட்ல இருக்கற தங்கக் காசுங்கள எடுத்துக்கலாம்னு திட்டம் போட்டாங்க.
இது எப்படியோ சின்னவனுக்கு தெரிஞ்சிச்சி. அவனும் அவன் பொண்டாட்டியும் அன்னக்கி ராத்திரி வேற ஒருத்தரு வூட்ல போய் படுத்து கினாங்க. பெரியவனுங்களுக்கு இது தெரியல. அவனுங்க திட்டம் போட்டபடி தம்பி வூட்ட கொளுத்திட்டானுங்க. வெடிஞ்சப் பறந்தான் அவனுங்களுக்கு தெரிஞ்சது, தம்பியும் தம்பி பொண்டாட்டியும் தப்பிச்சிட்டாங்கனு.
சின்னவன் அந்த வூட்டுச் சாம்பல எடுத்து ஒரு மூட்டையாக் கட்டினான். மூட்டைய தலமேல வச்சிகினு யெதாவது வழி பொறக்கும்னு பட்டணத்தப் பார்த்து நடந்தான். ஊர்ல, இதக் கொண்டுபோய் என்ன பண்ணப்போறன்னு கேட்ட வங்கக்கிட்ட, “சந்தையில விக்கப்போறேன்” னான். “சாம்பலபோய் யாரு வாங்குவாங்க” ன்னு எல்லோரும் கேலியா சிரிச்சாங்க.
இவன் அதுக்கெல்லாம் கவலப்படாம போனான். ஒரு நாளெல்லாம் நடந்தான். மக்கியா நாள் போறப்ப கொஞ்சநேரம் எளப்பாறலாம்னு மூட்டைய எறக்கி வச்சிட்டு ஒரு மரத்தடியில ஒக்காந்தான்.
அப்ப ஒரு நகை வேபாரியும் அங்க வந்தான். சின்னவங்கிட்ட பேச்சுக் குடுத்துனே, அந்த சாம்பல் மூட்டமேல போய் ஒக்காந்தான். பேச்சு வாக்குல புர்ர்ர்...னு குசுவுட்டுட்டான்.
ஒடனே சின்னவன், “ஐயய்யோ எம் மூட்ட மேல ஒக்காந்து குசு வுட்டுட்ட, மூட்டையில இருந்த நகையெல்லாம் என்னாச்சோ தெரியலையே” ன்னு பதறினான்.
நகை வேபாரி எழுந்தவுடனே மூட்டைய பிரிச்சிப் பார்த்தான். உள்ள வெறும் சாம்பலா இருக்கு.
சின்னவன் நகை வேபாரிகிட்ட சண்டைக்கு நின்னான். நானும் உன்னாட்டம் நகை வேபாரிதான், இந்த மூட்ட நெறைய நகைங்க கொண்டாந்தேன். நீ அதுமேல ஒக்காந்து குசு விட்டதால நகையெல்லாம் கருகி சாம்பலாயிருச்சி. என்ன செய்வீயோ, ஏது செய்வீயோ எனக்கு தெரியாது. எனக்கு என் நகை வேணும். இல்லைனா உன்ன சும்மா வுடமாட்டே” ன்னான்.
நகை வேபாரிக்கு மானக்கேடா போச்சி. வேற வழியில்லாம அவங்கொண்டுவந்த நகை மூட்டைய சின்னவங்கிட்ட குடுத்துட்டு, தலமேல துண்ட போட்டுனு, வந்த வழியே திரும்பிப்போனான்.
சின்னவன் நகை மூட்டைய எடுத்துனு வுட்டுக்கு வந்தான். பொண்டாட்டிய கூட வச்சிகினு அவுத்துப் பார்த்தான். பொன்னும் வெள்ளியும் முத்தும் மாணிக்கமும் இருந்திச்சி.
அவம் பொண்டாட்டிக்கு சந்தோஷம் தாங்க முடியல. அப்படியே போய் ஓரகத்தியாளுங்கிட்ட சொல்லிட்டாள். அது அவுங்க வூட்டுக்காருங்க காதுக்கு எட்டுச்சி. அவங்க அப்படியா சமாச் சாரம்னு தம்பிகிட்ட ஓடியாந்தாங்க. “ஏதுடா தம்பி இவ்ளோ நகை? எப்படிடா சம்பாதிச்ச?” ன்னு கேட்டாங்க. நீங்க யென்வூட்ட எரிச்சீங்க. நான் அந்த சாம்பல கொண்டு போய் ஒரு நகை வேபாரிய ஏமாத்தி சம்பாதிச்சேன்” னான்.
வுடனே அண்ணனுங்க நாலு பேரும் போய் அவங்கவங்க வூட்ட கொழுத்தி சாம்பல மூட்டக் கட்டி எடுத்தினு தம்பி சொன்ன வழியப் பார்த்து போனாங்க.
இதுக்கெடையில சின்னவனிடம் ஏமாந்த நகை வேபாரிக்கு உண்மை தெரிஞ்சிருச்சி. “சாம்பல நகைன்னு சொல்லி என்ன ஏமாத்திட்டான். என்னைக்காவது அவன் எங்கிட்ட மாட்டுவான். அப்பப் பார்த்துக் கிறேன்” னு வஞ்சம் வச்சினிருந் தான். இவங்க, “அவன் எங்கத் தம்பி தான். நாங்கெல்லாம் அவங் கூடப்பொறந்த அண்ணனுங்க” ன்னாங்க.
உங்க மூட்டையில என்ன இருக்குது” ன்னு கேட்டான். “நகை இருக்குது” ன்னாங்க. வுடனே வேபாரி அடியா ளுங்கள வுட்டு மூட்டைய அவுத்துப் பார்க்கச் சொன்னான்.
அவுத்துப் பார்த்தா வெறும் சாம்பல். வேபாரிக்கு கோபம் வந்திச்சி. “ஏன்டா சாம்பல கொண்டாந்து நகைன்னு சொல்லி அண்ணந்தம்பி அத்தனைப் பேரும் என்ன திட்டம் போட்டு ஏமாத்தறிங் களான்னு அடிச்சான். அடியாளுங்களும் சேர்ந்த நாலு பேரையும் பொறட்டி எடுத்தாங்க. ஒடம்பெல்லாம் காயமா நாலுபேரும் வூடுவந்து சேர்ந்தாங்க. எழுந்து நடக்க நாலு நாளாச்சி.
வூட்ட எரிச்சதுக்காக தம்பி நம்மள இப்படி மாட்டவுட்டு பழிவாங்கிட்டான். அவன் ரொம்ப தந்திரக்காரனா இருக்கான். இனிமே அவங்கிட்ட வம்பு வச்சிக்கக் கூடாதுன்னு நெனச்சாங்க.
சின்னவன் அவங்கிட்டயிருந்த தங்கக் காசுங்களையும், நகைகளையும் வித்து மாட மாளிகைக் கட்டி வசதியா வாழ்ந்தான். அண்ணனுங்க நாலுபேரும் அவன அண்டிப் பொழைச்சாங்க.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|