பா.திருச்செந்தாழை கவிதைகள்
.
1
பிரபஞ்சத்தின் மற்றொரு ஞாயிறு
மழையின் குளிர்சொற்கள் உடைந்த
தக்காளிப் பழத்தோட்டத்தின்
குட்டி தக்காளியென முளைக்கிறது
சிறு குன்றின் மீதான தேவாலயத்திற்கு
மெழுகுவர்த்தி கைகளுடன்
172 வது எபனேசர் வந்தபடியிருக்கிறாள்
முதல் ஸ்கலிதமான சிறுவனின்
மூன்றாவது கண் உலகை நுகர்கிறது
மதிய விருந்திற்கான வாத்துகளை
கிழக்கு நிலங்கள் அனுப்பிய விதமிருக்கின்றன
ஜன்னலோர படுக்கையிலிருக்கும் கிழவன்
கிழிக்கப்படாத நாட்காட்டியின்
சித்திரப்பூக்களின் கருமையை வெறிக்கிறாள்
கையளிக்கப்படும் மரணச் செய்திகளை
பதட்டமின்றி மரணிக்க செய்யும்
முதியவளின் இறுதி கருமுடி
உதிர்ந்து விட்ட மாலையில்
குட்டி தக்காளியை ஏழு துண்டுகளாக்கி
தற்கொலைக்கான நஞ்சில் அமிழ்த்துகிறாள்
கடக்காத ஒரு ஞாயிறு
அவ் வீட்டில் படிகிறத பிறகு.
(ஹவிக்கு)
2
கோடையின் பகல்மழையை பருகிய
பள்ளிச்சிறுமியின் அடர் மஞ்சள் சிறுநீரில்
5.40 மாலை நகரம்
ஏனைய வர்ணங்களை குருடாக்கி
கண்ணாடிமஞ்சள் பக்கத்தை விரிக்கிறது
மீனின் வாயைப்போல
உள்ளங்கைகளை மூடித் திறந்து
கிளர்ச்சியடைகின்றனர் சிறுவர்கள்
முதல் தினத்தில் வேசியாகிறவள்
தனிமையில் மஞ்சள் பூசிய
தன் ஸ்தனங்களை கடைசி தடவையாக
நினைவில் வரைகிறாள்
அவ்வளவு சரியாக அக்கணத்தில்
சாலையின் சிதில மூலையிலிருந்து
ஆர்மோனியக் குருடன் மிதக்கச் செய்கிறான்
நிறமற்ற இசைப் பறவையை
நீண்ட சாலையின் புள்ளியிலிருந்து வரும்
மயிர்களர்ந்த கிறுக்கனொருவன்
5.40 மஞ்சள் மாலையில்
தேவதூதனைப்போல நுழைந்து கொண்டிருக்கிறான்
பகலின் துக்க கனவுகளை கூறத் துவங்கிய
தெரு விளக்கொன்றின் முதல் சொல்லில்
உடைகிறது மஞ்சள்நிற உலகம்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|