விடாது பொழியும் மழை
ந.பெரியசாமி
அடைகாத்திட்டது சாக்குபை
ஆதிநாள் தொட்டே நனையாது
ஊர் சென்றிருந்த அப்பாவின்
உடன் வந்த குடையுள்
சுழலில் சிக்கிய மானை
சுருக்கி விரித்து அழகு கண்டோம்
அற்பனுக்குவாழ்வு வந்தால்
அர்த்தராத்திரியில் பிடிப்பான் குடையென
வாய்த்துடிப்பிலும் வாழ்முறையிலும் கலந்துறவாட
குடைக்கம்பி பழுது நீக்கிப் பசியாறும்
தாத்தாக்களும் வந்து போயினர்
அழுத்த விரிந்து அதிசயிக்கச் செய்ததை
பயன்முடிந்ததும் வீசும்
பவிசுக்கு வயப்பட
அற்றுப்போனது தாத்தாக்களின் வரவு
மழையற்றும் மிகு வெப்பம் உமிழாதபோதும்
கைக்கொண்டலைகிறேன்
பைத்தியமென தலையிலடித்து
முகத்துக்கு நேரும்
முதுகுக்குப்பின்
வசவையும் வீசுபவர்களுக்கு எங்ஙனம்
புரிதலடையச் செய்ய
மழை விடாது பொழிகிறது
என் கனவு தேசத்திலென்று.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|