புவனராஜன் கவிதைகள்
கறுப்பு தேவதையின்
சதுப்பு நில வீட்டிற்கு வந்திருந்தேன்
நிரந்தரவிருளில் இப்பிரபஞ்சம் ஆழ்கையில்
விழிப்பின் கேவல் ஒலி நிசப்தம் படிய
ஓவிய தீற்றல்களின் விழி
அங்கங்கிருந்து ஒளிர்ந்தது
மலைச்சரிவின் தொழு
சகதி குளம்புகளில்
விழும் கழுத்து மணிகள்
காடு பற்றின நெருப்பில் சிதறின
இருள் பூத்த
மரமலர்களின் செவ்வக கதவுகளை மீறி
லாயத்து புரவிகள்
நிசப்த மதில்களில் விரைந்தோடுகிறது
குறையவியலாத
தன்னொத்த சிற்ப வெள்ளி நாணயங்களை
அள்ளி வீசுகிறான் பராரி சிறுவன்
ஒளி சுழலும் திசையெல்லாம் முகம் திரும்பும்
விசித்திர ஓவியமாய்
உச்ச மகிழ்ச்சியோடு தேவதையின் முகம்
பரவசத்தில் சுழன்றாட
ஆயிரமாயிரம் இருளின் கண்கள் சோகம் விழுங்கி
அவளுடைய வெம்மையில்
நூலாம்படை படிந்திருந்தது
அவன் பச்சிலை ஓவியமாவதை அவதானிக்கிறாள்
உதிர்கையில்
நிற்கவியலாமல் விழும் கறுப்பு தேவதை
நானும் அவள் விரல்களையே பற்றியிருக்கிறேன்
யாளி மட்டும் பறந்து விடுகிறது
கண்களிருள.
*
அசைவற்றிருக்கும் மலைகள்
காலத்தை உண்கின்ற இவ்விரவில்
சரிவினில் துவங்கும் நிலத்தை
கடந்திடுவதாய் முடிவாயிற்று
காட்டின் வெம்மையில்
நீர் தேடியலையும் விலங்கரவங்களில்
நானறியாத காட்சிவெளி திரண்டு
மிரட்சியுற கார்முகில் விரைந்தோடுமவ்வேளை
சிலர்
நட்சத்திரங்களையும் மலையுதிர்த்த கனிகளையும்
சுரக்குடுவைகளோடு சுமந்து உச்சி விளிம்பில் திக்கற்று
வான்நிமிர்ந்தபடி கைகளை பிணைத்து நிற்கையில்
நீள்புகைவண்டியென கடந்தோடுகிறது
ஊற்றுக்கண்ணடைந்த தகிப்பில்
எட்டிப்பார்க்கும் பெயரில்லாத பூச்சியின்
மிகச்சிறிய கண்ணில் தெறித்திருந்தது
மிக ரகசியமாய் ஒற்றை துளி
விருப்பம் நசிந்தோய்கிற பாடலில்
துவங்குகிறது மழை உறங்கும் கடல்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|