செல்மா பிரியதர்ஸன் கவிதைகள்
.
உடலில் இல்லாத இசை
ஆமாம்
உனது இசையை எங்கிருந்து எடுக்கிறாய்
இறுகிய தசைக்குள் முறுக்கிய
நரம்பு தளர்த்திச் சொன்னான்
எருமை மேலேறி ஒருவன் வந்ததாகவும்
அவனைக் கொன்று
அதன் இளங்கன்றின் தோலுரித்து
அதனை
வேம்பின் வேரில் ஒளிந்திருந்த ஒருத்தியின்
கணுக்கால் எலும்பு வளைத்துப்
போர்த்தி புளியம் பிசுக்கோடு
பதுங்கிய மரத்துப்பேயின் இரத்தங்குழைத்து
இப்பறையைச் செய்ததாக
அடித்துச் சப்தமெழுப்ப
மூதாதையின் விலா எலும்பிரண்டு காட்டியவன்
மேலும் சொன்னான்
நீ சந்தேகிப்பதைப் போல
தனது உடலிலோ பறையிலோ
இசை இல்லையென்றும்
அண்ணாந்த வானத்தில்
கைகளை உயர்த்தி
திசைகளைச் சுழற்றி
காற்றுக்குக் கட்டளையிட்டு
எழும்பிய நெருப்பில் உலவும்
அலறல்களை அள்ளி
பறைவழியே வீசுவதாகவும்
பெருகிவரும் பறை நாக்கின்
சப்தக்கொப்புளங்களுடைந்து
இசை எழும்புவதாகவும்
இப்படித்தான் அவன் பறையை முழக்குகையில்
எங்கும் மரணம் பரவுகிறது.
கூழாங்கல்
உலர்ந்த மலப்பொருக்குகள் தாண்டி
தரித்திரத்தின் வேறொரு பாதைவழி உள்நுழைந்து
குத்துக்காலிட்டிருந்தாய்
கற்றாழைகளடர்ந்த முட்புதருக்குள்
பிறிதொரு ஓடைவழி
உபாதை தாங்கி வந்தேன்
பதறி எழுந்த நீ
ஆடை கீழிறக்குகையில்
மலக்குகை துவாரங்களற்றதாய்
இறுகத் துவங்கியது
கரும்பச்சை தாள்களுக்குள்
கற்றாழைக் குழம்பு கொதிக்க
மல உருண்டைகளை உருள விட்டுவிட்டு
நெருஞ்சிக்குள் தாவின
மலமுருட்டி வண்டுகள்
துடைத்துக் கொள்வதற்காய்
பொறுக்கி வந்த கூழாங்கற்கள்
கைகளுக்குள் கனத்துக் கனிந்து
விதைகளாய் சிதறியது
வெவ்வேறு பாதைவழி உள்நுழைந்து
ஒரே பாதைவழி வெளிமீளத் தெரியாத நாம்
அவமானத்தின் ஒரு கண்ணைப் பொத்தி
பாவத்தின் மறுகண்ணில் வெளிப்போந்தோம்
சிதறிவிழுந்த இரகசியத்தின் விதை
பெரும் வேரெடுத்து விருட்சமாகி
நாசிவழியே
செவிவழியே
விழிவழியே
கிளை நிரப்பி அசைகிறது
அதன் கொழ கொழத்த கனியில்
மல வாசமும்
வண்டுகள் குடையும் ஒப்பாரியும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|