Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஏப்ரல் - ஜூன் 2008

ஒரு மனநோயாளியின் நாட்குறிப்பேடு
சீனமொழி(மண்டாரியன்) : லு சூன்
ஆங்கில வழித் தமிழில்: முனைவர் கு.சிதம்பரம், சீனா
.

அவர்கள் இருவரும் உடன் பிறந்த சகோதரர்கள். அவர்களின் பெயர்களை இங்கு குறிப்பிட வேண்டாம் என எண்ணுகிறேன். அவர்கள் இருவருமே எனக்கு நெருங்கிய மேல்நிலைப்பள்ளி நண்பர்கள். அதற்குப் பிறகு பல வருடங்கள் அவர்களுடன் எனக்கு தொடர்பற்றுப் போய்விட்டது. ஒருசில நாட்களுக்கு முன் எதேச்சையாகக் கேள்விப்பட்டேன் அவர்களில் ஒருவன் மிகவும் நோய்வாய்பட்டிருப்பதாக. எங்கள் கிராமத்து பூர்வீக வீட்டிற்குப் போகும் வழியில் அவர்களையும் பார்த்துவிட்டு வரலாமென்று அவர்கள் வீட்டிற்குச் சென்றேன். அவர்களில் ஒருவனை மட்டுமே பார்க்க நேர்ந்தது.

நெடுந்தொலைவு சிரமத்தையும் பொருட்படுத்தாமல் எங்களைப் பார்க்க வந்திருக்கிறாய். எப்படி நன்றி தெரிவிப்பதென்றே எனக்குத் தெரியவில்லை என்றான். மேலும் என் தம்பி நோய்வாய்ப்பட்ட செய்தி உன் காதுக்கு எட்டியது ஆச்சர்யமான விசயம்! அவன் இப்போது மிகவும் தேறிவிட்டான். அலுவல்பணி நிமித்தமாக எங்கேயோ போயிருக்கின்றான் என்று கூறினான். பிறகு சிரித்துக்கொண்டே பள்ளி சிநேகிதன் என்ற முறையில் இதை உனக்குக் காட்டுவதால் தவறொன்றுமில்லை என்று அவன் தம்பியின் இரண்டு நாட்குறிப்பேடுகளை என்னிடம் கொடுத்து இதைப் பார்த்தால் அவன் நோய்வாய்ப்பட்டிருந்தபோது என்ன நிலையில் இருந்தான் என்பதை உன்னால் அறிந்துகொள்ள முடியும் என்றான்.

அவ்விரு நாட்குறிப்பேடுகளையும் எடுத்துக்கொண்டு விடைபெற்று திரும்பி வந்துவிட்டேன். அடுத்தநாள் மிகவும் கவனமாக அவ்விரு நாட்குறிப்பேடுகளையும் வாசித்தேன். அவற்றிலிருந்து அவன் மனநோயால் பாதிக்கப்பட்டவன் என்பதை உணர்ந்தேன். கையெழுத்து மிகவும் கிறுக்கலாகவும் வாக்கியங்கள் கோர்வையற்றும் ஒன்றுக்கொன்று முரணாகவும் இருந்தன. மேலும் பத்திகள் ஒன்றோடொன்று தொடர்பற்றுக் கிடந்தன. குறிப்பேட்டில் தியதி எதுவும் குறிப்பிடாமல் இருந்தான். சமூகத்தின் காட்டுமிராண்டிதனத்தை நிறைய இடங்களில் குறிப்பிட்டிருந்தான். எழுத்து மையின் நிறங்களை வைத்து அவை ஒரேநாளில் எழுதியவையல்ல என்பதை அறியமுடிந்தது. அதிலிருந்து ஒருபகுதியை மட்டும் மருத்துவ ஆராய்ச்சிக்காக எந்தவித மாற்றமும் திருத்தமும் செய்யாமல் எழுதி எடுத்துக்கொண்டேன். அதில் இடம்பெற்றிருந்த உலகமறியப்படாத மானிடர்களின் பெயர்களை மட்டுமே மாற்றியுள்ளேன். மேலும் அவன் மனநிலை தேறிய பிறகு அந்நாட்குறிப்பேட்டிற்கு அவன் வைத்திருந்த தலைப்பையும் நான் எவ்வித மாற்றமும் செய்யவில்லை.

1

இன்றிரவு நிலவு ரொம்ப பிரகாசமாக ஒளிர்கிறது.

நான் கடந்த முப்பது வருசமாக நிலவைப் பார்க்கவில்லை. இன்று அதைப் பார்த்தபோது வழக்கத்துக்கு மாறாக நான் பரவசமடைவதை என்னால் உணரமுடிந்தது. மேலும் கடந்த முப்பது வருசமாக இருளில் மூழ்கியிருந்திருக்கிறேன் என்பதை மெதுவாக உணர ஆரம்பித்தேன். ஆனால் இனிமேல்தான் நான் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் திருவாளர் ஜோவின் நாய் என்னை இரண்டுமுறை முறைத்து முறைத்துப் பார்க்க வேண்டிய அவசியமென்ன?

என் பயத்திற்கு காரணம் இருக்கின்றது.

2

இன்றிரவு நிலவு இல்லவே இல்லை. இது கெட்ட சகுனமென்று எனக்குத் தெரியும். இன்று காலை நான் ரொம்பவும் எச்சரிக்கையாக தெருவில் நடந்துப் போய்க்கொண்டிருந்தபோது திருவாளர் ஜோவின் பார்வையில் ஒரு மாற்றம் இருந்ததைக் கண்டேன், என்னைப் பார்த்து அஞ்சுவதைப் போல; என்னைக் கொலை செய்யவேண்டும் என்பதைப் போல. ஏழெட்டுபேர் என்னைப் பற்றி முணுமுணுத்துக் கொண்டிருந்தாகள். நான் அவர்களைப் பார்ப்பதைக் கண்டு அஞ்சினார்கள். அவர்கள் மட்டுமல்ல நான் கடந்து சென்ற அனைவருமே. அவர்களிடம் ஒரு வெறித்தனம் இருந்தது. என்னைப் பாத்து நரநரவென பல்லைக் கடித்தார்கள்.

அவர்கள் தயாராகிவிட்டார்கள் என்பதை அறிந்தவுடன் உச்சி முதல் உள்ளங்கால்வரை எனக்கு நடுங்க ஆரம்பித்துவிட்டது. இருந்தாலும் நான் பயப்படவில்லை. நான் தொடர்ந்து போய்க்கொண்டிருந்தேன். அவர்களுக்கு முன்னிருந்த சிறுவர்களும் என்னைப் பற்றிதான் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் பார்வையும் திருவாளர் ஜோவின் பார்வையைப் போலவே இருந்தது. மேலும் அவர்களின் முகங்கள் குட்டிச் சாத்தான் முகம்போல இருந்தன. என்மேல் அவர்களுக்கு என்ன வெறுப்பு. ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள். எனக்கு எதுவும் விளங்கவில்லை! நீங்களே சொல்லுங்கள். ஆனால் அவர்கள் ஓடிவிட்டார்கள். என்மேல் திருவாளர் ஜோவுக்கு என்ன வெறுப்பு. தெருவிலுள்ள அனைவருக்கும் என்மேல் என்ன வெறுப்பு. எனக்கு எல்லாமே ஆச்சர்யமாக இருக்கின்றது.

இருபது வருடங்களுக்குமுன் நடந்தவைகள் மட்டுமே எனக்கு ஞாபகத்தில் உள்ளது. திரு கூ ஜூயுயின் பழைய ஏட்டுச்சுவடை மிதித்துவிட்டேன். அதற்காக அவர் மிகவும் கோபப்பட்டார். திருவாளர் ஜோவுக்கு அவரைத் தெரியாவிட்டாலும் அவருடைய ஏட்டுச்சுவடைப் பற்றி கேள்விப்பட்டிருப்பார். அவரைப்பற்றி ஒரு மதிப்பீடு செய்திருப்பார். இதற்காக எனக்கு எதிராக தெருவில் இருப்பவர்களுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால் அந்த சிறுவர்கள் ஏன்? அவர்கள் அப்போது பிறக்கக்கூட இல்லை. ஏன் இன்று அவர்கள் என்னை இப்படி வெறித்து வெறித்துப் பார்க்க வேண்டும்: என்னைப் பார்த்து அஞ்சுவதைப் போல; என்னைக் கொலை செய்யவேண்டும் என்பதைப்போல? இது உண்மையிலே என்னை பயமூட்டுகிறது. இது எனக்கு குழப்பத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்துகிறது.
எனக்குத் தெரியும் இதை அவர்களின் பெற்றோர்களிடமிருந்துதான் கற்றிருக்கவேண்டும்.

3

இவற்றையெல்லாம் புரிந்துகொள்ள தீவிரமாக யோசிக்கிறேன் ஆகையால் என்னால் இரவுநேரங்களில் உறங்க முடிவதில்லை.

அவர்கள் ஒரு சிலரை கட்டப் பஞ்சாயத்தில் வைத்து அவமானப்படுத்தினார்கள். கட்டிவைத்து அடியடியென அடித்தார்கள். கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் மனைவிமார்களை எடுத்துக் கொண்டார்கள். ஒரு சிலர் அவமானம் தாங்கமுடியாமல் தற்கொலைச் செய்து கொண்டார்கள்.

நேற்று தெருவில் ஒரு சிறுவனைப் போட்டு ஒருத்தி அடியடியென அடித்துக்கொண்டிருந்தாள். குட்டிப் பிசாசே என் கோபத்தைக் கிளப்பாதே உன்னைக் கடித்துக் குதறிவிடுவேன் என்று கத்தினாள் வினோதமாக. இருப்பினும் என்னையே முறைத்து பார்த்துக் கொண்டிருந்தாள். என்னுடைய எதிர்ப்பைக் காட்டினேன். என்னுடைய எதிர்ப்பு குணத்தை என்னால் காட்டாமல் இருக்க முடிவதில்லை. அதன்பிறகு என்னை வெறித்தனமாக அவர்கள் முறைத்துப் பாத்தார்கள். அவர்களின் நீண்ட பற்களைக்காட்டி உறுமத் தொடங்கினார்கள். அதைப் பார்த்த பெரியவர் சென் என்னை வீட்டிற்குள் இழுத்துக் கொண்டு வந்துவிட்டார்.

வீட்டிலுள்ளவர்களும் என்னைப் புரிந்துகொள்ளாத மாதிரி நடித்தனர். இவர்களும் அவர்களைப் போலவே என்னை வெறித்தனமாக பார்க்கின்றார்கள். என்னை கோழிக்குஞ்சியை அடைப்பதைப்போல அடைத்து வைத்துவிட்டார்கள். இவர்களின் செயல் மேலும் என்னை பித்தனாக்கி விட்டது.

ஒருசில நாட்களுக்குமுன் குள்ளநரி கிராமத்திலிருந்து எங்கள் குத்தகைதாரர் ஒருவர் வீட்டிற்கு வந்திருந்தார். இந்த வருடம் விவசாயம் பொய்த்துவிட்டதை கூறுவதற்காக. இதற்கெல்லாம் காரணமான ஒரு கெட்ட சக்தியை அக்கிராமத்தார்கள் அடித்து கொன்றுவிட்டதாகக் கூறினார். பிறகு சிலர் அவர்களின் தைரியத்தை அதிகப்படுத்துவதற்காக அதனுடைய இதயத்தையும் ஈரலையும் எண்ணெய்யில் பொரித்துத் தின்று விட்டதாகக் கூறினார். நான் அப்போது குறுக்கிட்டேன். அவர்கள் இருவரும் என்னை முறைத்து பார்த்தார்கள். இவர்களின் பார்வையும் அவர்களின் பார்வையைப் போலவே இருப்பதை இன்றுதான் என்னால் சரியாக உணர முடிந்தது. இவர்களும் நரமாமிசத்தை உண்ணுகிறார்கள்.

என்னைச் சுற்றியுள்ள அனைவருமே நரமாமிசத்தை உண்ணுபவர்கள். என்னையும் ஒருநாள் தின்றுவிடுவார்கள். இதை நினைக்கும்போது உச்சி முதல் உள்ளங்கால் வரை எனக்கு நடுங்குகிறது. தெருவில் அந்தப்பெண் ‘கடித்துக் குதறிவிடுவேன்’ என்று கூறியது, அவர்களின் நீண்ட பற்கள், சிவந்த முகங்கள். குத்தகைதாரர் கூறிய செய்தி; அவர்கள் பேச்சிலுள்ள விஷமம்; சிரிப்பிலுள்ள ஆபத்து எல்லாமே ரகசியக் குறியீடுகள்தான் என்பதை என்னால் உணரமுடிகிறது. அவர்களின் நீண்ட வெள்ளைப் பற்கள் பலரை பதம் பார்த்திருக்கிறது.

நான் கெட்டவன் இல்லை. இருப்பினும் திரு கூ ஜூயுயின் பழைய ஏட்டுச்சுவடை மிதித்தது அவ்வப்போது என் மனதிற்கு வந்து செல்கிறது. அவர்கள் எனக்கெதிராக சதித் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால் என்னால் சரியாக ஊகிக்க முடியவில்லை. அவர்கள் யார் மீதாவது கடும் கோபம்கொண்டால் ‘கெட்ட சக்தி’ என்று அழைப்பார்கள். என்னுடைய சகோதரர் எனக்கு கட்டுரை எழுத கற்றுக் கொடுக்கும்போது கூறியது இன்னும் ஞாபகத்தில் இருக்கின்றது. ஒருவன் எவ்வளவு நல்ல மனிதனாக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக வாக்குவாதம் செய்தால் ‘கெட்டசக்தி’ என்று தீர்மானித்து விடுவார்கள். சதிகாரர்கள் மன்னித்து விட்டால் பிழைத்துப் போ- உனக்கு நல்ல காலம்- என்று அர்த்தம். இதுதான் அவர்களின் இயற்கை குணம். இருந்தாலும் அவர்களின் சங்கேதக் குறியீட்டை எப்படி புரிந்துகொள்வது - குறிப்பாக அவர்கள் மனித மாமிசத்தைக் கூறு போடத் தயாராக இருக்கும்போது.

இவற்றையெல்லாம் புரிந்துகொள்ள மிகத் தீவிரமாக யோசிக்க வேண்டியுள்ளது. புராணக்காலங்களில் நரமாமிசம் புசிக்கக்கூடிய கூட்டங்கள் உண்டு என்பதை அறிந்திருக்கிறேன். இது எனக்கு தெரிந்த ஒன்றுதான்.

என் வரலாறு தியதியின்றி இருக்கின்றது. அனைத்துப் பக்கங்களும் வார்த்தைகளால் நிரப்பப்பட்டுள்ளன: ‘கன்பூசியஸின் நற்குணம் நற்பண்பு.’ ஆனால் அந்த ஏட்டுச்சுவடி முழுவதும் இரண்டே இரண்டு வார்த்தைகளால் நிரப்பப்பட்டுள்ளது: ‘மனிதனை உண்ணு’. இவ்வார்த்தைகளில் புதைந்திருக்கும் ஆபத்தை அறிந்ததால் என்னால் இரவு முழுவதுமே உறங்க முடிவதில்லை.

அந்த ஏட்டில் எழுதப்பட்டிருக்கும் வார்த்தைகளும் எங்கள் குத்தகைதாரர் கூறிய வார்த்தைகளும் சிலேடையாக என்னைப் பார்த்து புன்முறுவலிடுகின்றன. நானும் மனிதன் தான். ஆகையால் என்னையும் அவர்கள் தின்னப் பார்க்கிறார்கள்!

4

காலைப்பொழுது சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்தேன்.

பெரியவர் சென் மதிய உணவு கொண்டுவந்தார். ஒரு பாத்திரத்தில் அவித்த காய்கறியும் மற்றொரு பாத்திரத்தில் அவித்த மீனும். மீன்களின் கண்கள் வெள்ளையாகவும் மிருதுவாகவும் இருந்தன; வாய்கள் மனிதமாமிசம் உண்ணும் மனிதர்களின் வாய்போல திறந்து கிடந்தன. சில கவளங்களை விழுங்கியப் பிறகு வழுக்கி விழுவது மீன்களின் கதுப்பா மனித மாமிசத்தின் கதுப்பா என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை.

பெருசு..! எனக்கு முச்சு திணறுவது போல இருக்கிறது. வீட்டிற்கு வெளியே காற்றுவாங்க விரும்புகிறேன் என்றேன். பெரியவர் சென் வெளியே சென்று பார்த்துவிட்டு வந்து கதவை திறந்துவிட்டார். நான் வெளியே போகவில்லை.ஆனால் இவர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை உற்று கவனித்தேன். ஒன்று மட்டும் உறுதி இவர்கள் என்னை வெளியே விட விரும்பவில்லை. பிறகு என் சகோதரர் முதியவர் ஒருவரை அழைத்து வந்தார். அந்த முதியவரின் பார்வையில் ஒரு குரூரத்தனம் இருந்தது. நான் பார்த்துவிடுவேன் என்ற பயத்தில் தலையை தொங்கப்போட்டு கடைக்கண்ணின் திருட்டுப் பார்வையை மூக்குக் கண்ணாடியின் வழியாக என் மீது செலுத்தினார்.

இன்று நீ மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறாய் என்றான் என் சகோதரன். ஆம் என்றேன். உன் உடம்பை பரிசோதனை செய்வதற்காக திரு. ஹோவை அழைத்து வந்துள்ளேன் என்றான். ரொம்ப நல்லது என்றேன் பதிலுக்கு.

அந்த முதியவர் பசுத்தோல் போர்த்திய புலி என்பது எனக்கு நன்றாகத் தெரியும். என்னுடைய இரத்த ஓட்டத்தை அறிவதன் முலம் என் உடம்பில் எவ்வளவு கொழுப்பு தேறும் என்பதை எளிதில் அறிந்து என் சதையை கூறு போட்டுவிடலாம் இல்லையா. இருந்தாலும் நான் பயப்படவில்லை. என் தைரியத்தை அதிகரிப்பதற்காக மனித மாமிசத்தை உண்ணமாட்டேன். என்னுடைய தைரியம் அவர்களின் தைரியத்தை விட பலமடங்கு அதிகம். என்னுடைய இருகரங்களையும் நீட்டிக் காட்டினேன். பார்க்கலாம் என்ன செய்கிறார் என்பதை அறிய. அந்த முதியவர் என் அருகில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு என் நாடியை பிடித்தபடி சிறிதுநேரம் அமைதியாக இருந்தார். பிறகு அவருடைய பூனைக்கண்ணைத் திறந்து என்னைப் பார்த்து சொன்னார்: உன்னுடைய கற்பனையை பறக்க விடாதே. கொஞ்சநாள் ஓய்வெடுத்தால் எல்லாம் சரியாகிவிடும்.

உன்னுடைய கற்பனையை பறக்க விடாதே! கொஞ்சநாள் ஓய்வெடுத்தால் எல்லாம் சரியாகிவிடும்! அப்பொழுதுதானே அவர்களுக்கு அதிக கொழுப்பு கிடைக்கும். கொழுப்பு அதிகரிப்பதால் எனக்கு எந்த விதத்தில் நன்மைப் பயக்கும்? அப்பொழுதுதானே அவர்கள் என்னைப் பார்த்து ஏளனமாக சிரித்து சிரித்தே என்னைக் கொல்ல முடியும். என் கொழுப்பை அதிகரித்து அவர்களுக்கு உதவமுடியாது. என்னுடைய தைரியமும் வலிமையும் எனக்குத் தெரியும். ஆகையால் நான் மிகவும் குதூகலித்தேன். இதைப் பார்த்த அந்த முதியவரின் முகமும் என் சகோதரனின் முகமும் பயத்தில் வெளிறிப் போய்விட்டன.

ஆனால் என்னுடைய தைரியம் அவர்களின் ஆர்வத்தைத் தூண்டுகிறது. என் இதயத்தைத் தின்று அவர்களின் தைரியத்தை அதிகரிப்பதற்காக; என்னுடைய தைரியத்தை அவர்கள் பெறுவதற்காக. அந்த பெரியவர் ஒரு முறை சாப்பிட்டால் போதும் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். அதற்கு என் சகோதரனும் தலையை ஆட்டினான். நீயும் அவர்களுடன் கூட்டணியா! என்னைக் கூறுபோடுவதற்கு. என் சகோதரனும் அவர்கள் கூட்டணியில் உள்ளான் என்பது நான் எதிர்பார்த்ததைக் காட்டிலும் ஆச்சர்யத்திற்குரியது அல்ல. இருந்தாலும் என் குலையை நடுங்க வைக்கிறது.

என் சகோதரனும் மனிதமாமிசத்தை உண்பவன்! நான் மனித மாமிசத்தை உண்பவனின் தம்பி! நான் அடுத்தவர்களுக்கு இரையாகப் போகின்ற மனித மாமிசத்தை உண்பவனின் தம்பி!

5

நான்கைந்து நாட்களாக நான் அந்த முதியவரைப் பற்றிதான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். உண்மையிலே அவர் பசுத்தோல் போர்த்திய புலி இல்லை மருத்துவர் என்றாலும் அவர் மனிதமாமிசத்தை உண்பவர் தான். அவரின் மூதாதையர் லீசீசென் எழுதிய நாட்டுப்புற மருத்துவம் புத்தகத்தில் வெளிப்படையாக சொல்லப்பட்டிருக்கு ‘மனித மாமிசத்தை நன்றாக வேகவைத்து சாப்பிடவும்’ என்று. பிறகு அவர் எப்படி மறுக்க முடியும் மனித மாமிசத்தை உண்பதில்லை என்று?

என் சகோதரனை நான் சந்தேகப்படுவதற்குக் காரணமில்லாமல் இல்லை. எனக்கு கற்பித்துக் கொண்டிருக்கும்போது சொல்லியிருக்கின்றான். பெற்ற பச்சிளங்குழந்தைகளை உண்பதற்காக ஒருவருக்கொருவர் கை மாற்றிக்கொள்கிறார்கள் என்று. மேலும் ஒரு அயோக்கியனைப் பற்றி பேசும்போது அவன் அடுத்தவர்களுக்கு இரையாவதற்கென்றே பிறந்தவன்; நான் அவன் மாமிசத்தை ருசித்திருக்க வேண்டும் என்றான் வாய் தவறி. நான் அப்போது சிறுவனாக இருந்தேன். சிறிதுநேரம் எனது இதயம் படபடத்துவிட்டது. குள்ளநரி கிராமத்திலிருந்து வந்திருந்த குத்தகைதாரர் மனித இதயத்தையும் ஈரலையும் சாப்பிட்டதைப் பற்றி கூறியபோது சாதாரணமாகத் தலையை ஆட்டிக்கொண்டிருந்தான் அலட்டிக்கொள்ளாமல். என் சகோதரன் கொடூரக்காரன்தான் இப்போதும் சரி அப்போதும் சரி.

பெற்ற பச்சிளங்குழந்தைகளை உண்பதற்காக ஒருவருக்கொருவர் கை மாற்றிக் கொள்கிறார்கள். எதை வேண்டுமென்றாலும் கைமாற்றிக் கொள்ளலாம் யாரை வேண்டுமென்றாலும் கூறுபோடலாம் என்று என் சகோதரன் என்னிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போது நான் வெறுமனே கேட்டுக் கொண்டுதான் இருந்தேன். இப்போது தான் உணருகிறேன் அவன் உதட்டில் அப்போதே மனித கொழுப்பு ஒட்டிக் கொண்டிருந்ததை. அவன் இதயம் முழுவதுமே அடுத்தவர்களின் இதயத்தை உண்டதால் உருவானது.

6

லேசான இருட்டு. இரவா பகலா என்று எனக்குத் தெரியவில்லை. திருவாளர் ஜோவின் நாய் குரைத்துக் கொண்டிருந்தது மீண்டும். சிங்கத்தின் கர்ஜனை. முயலின் பயம். நாயின் தந்திரம்

7

அவர்களின் தந்திரம் எனக்குத் தெரியும். என்னை நேரடியாக கொல்ல மாட்டார்கள் பின்விளைவிற்குப் பயந்து. அவர்களுக்கு அந்த அளவுக்குத் தைரியமும் கிடையாது. மறைமுகமாக குழிபறிப்பார்கள். என்னை தற்கொலைக்குத் தூண்டுவார்கள். கடந்த சில தினங்களுக்கு முன் தெருவிலிருந்தவர்களின் நடவடிக்கையும் சில தினங்களாக என் சகோதரனின் நடவடிக்கையும் எனக்குத் தெளிவாக தெரிகிறது. அவர்களின் எண்ணம் என்னவென்றால் ஒருவன் அவனாகவே கழுத்தில் கயிற்றை மாற்றி தொங்கிக் கொள்ளவேண்டும். அப்பொழுது தான் அவனின் இதயத்தை நன்றாக சுவைக்க முடியும். அவர்களும் கொலைப் பழியிலிருந்து தப்பித்துக் கொள்ளமுடியும். இதில் அவர்களுக்கு இரட்டை சந்தோசம். மேலும் ஒருவன் அவமானத்திற்கும் சாவுக்கும் அஞ்சி அஞ்சி உடல் இளைத்து நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும்போது இதுதான் சரியான தருணமென்று சப்புக் கொட்டுவது அவர்களின் இயற்கை குணம்.

அவர்கள் பிணந்திண்ணிகள்! கழுதைப்புலி செத்த பிணத்தைத் தின்னுமென்றும் பெரிய பெரிய மனித எலும்புகளைக்கூட கடித்து நொறுக்கி விழுங்கிவிடுமென்றும் எங்கோ படித்திருக்கிறேன். இதை நினைக்கும்போது மயிர்க்கால்கள் குத்தலிடுகின்றன. கழுதைப்புலி ஓநாய் இனத்தைச் சேர்ந்தது. ஓநாய் ஊனுண்ணி குடும்பத்தைச் சாந்தது. அடுத்தநாள் திருவாளர் ஜோவின் நாய் பலமுறை என்னைப் பார்த்தது. அவர்களின் சதித் திட்டத்திற்கு இதுவும் உடந்தை. ஒரு கிழடு என்னைப் பார்த்துக் கொண்டிருந்தது. இருந்தாலும் அவர் பார்வை என்னை மயக்கவில்லை.

மிகவும் மன்னிக்க முடியாத நபர் என் சகோதரன். அவனும் ஒரு மனிதன் தான். அவர்களுடன் சேர்ந்து கொண்டு துளியளவும் பயமில்லாமல் ஏன் என்னைக் கூறுபோட சதித் திட்டம் தீட்டுகிறான்? இத்தகைய பழக்கம் மனிதனை நல்லது கெட்டது எதுவென்றுகூட உணராத அடிமைக் குருடர்களாக்குகிறதா? அல்லது தெரிந்தே குற்றமிழைக்கும் இதயமற்றவனா? மனித உண்ணிகளை சபிக்க நேரிட்டால் என் சகோதரனைத் தான் முதலில் சபிப்பேன். திருத்த நேரிட்டாலும் முதலில் அவனைத்தான் திருத்துவேன்.

8

அத்தகைய வாக்குவாதம் அவர்களை சமாதனப்படுத்தியிருக்க வேண்டும் ரொம்ப நேரத்திற்கு முன்பே.
திடீரென்று ஒருத்தன் உள்ளே வந்தான். அவனுக்கு இருபது வயதிருக்கும். அவனுடைய உருவத்தை சரிவர நான் கவனிக்கவில்லை. அவனுடைய முகத்தில் புன்னகை பூத்திருந்தது. ஆனால் அவன் புன்னகையில் திருட்டுத்தனம் இருந்தது. அவனைப் பார்த்துக் கேட்டேன்: மனித மாமிசத்தை உண்ணுவது சரிதானா?

கடும் உணவுப் பஞ்சம் வந்தாலொழிய மனித மாமிசத்தை உண்ணமாட்டார்கள். பல்லை இளித்தபடியே பதில் வந்தது அவனிடமிருந்து.

எனக்கு ஏற்கனவே தெரியும் இவனும் அவர்களில் ஒருவன். இருந்தாலும் தைரியத்தை வரவைத்து மீண்டும் அதே கேள்வியைக் கேட்டேன். இது சரியா?

எதனால இப்படி கேக்க தோணுது? என்ன கேலிகீலி பண்றியா? நல்ல நாளும் அதுவுமா.

நல்ல நாளுதான். நிலவுகூட பாரு பிரகாசமாக ஒளிர்கிறது. இருந்தாலும் எனக்கு உன்னிடம் இதை கேட்க வேண்டும். இது சரியா?

அவன் குழம்பிப்போய் மண்டையை பிய்த்துக்கொண்டான். அய்யோ சாமி?

அப்புறம் ஏன் அவர்கள் இத்தகைய இழிவை செய்கிறார்கள்?

எதைப் பற்றி உளறுகிறாய்?

உளறுகிறேனா?அவர்கள் மனித மாமிசத்தை உண்கிறார்கள். சமீபத்தில்கூட பாரு குள்ளநரி கிராமத்தில். இதைப் பற்றி எல்லா புத்தகத்திலும் குறிப்புகள் காணக்கிடக்கு. மைகூட இன்னும் ஈரமாகவே உள்ளது.

அவனுடைய முகம் வாடிவட்டது. வெலவெலத்துப் போய்விட்டான். ஒருவேளை அப்படி இருக்கலாம் என்றான் என்னை முறைத்தவாறே. ஒருவேளை மட்டுமில்லை எல்லா வேளையும் அவர்கள் அப்படிதான்.

இது சரின்னு படுதா?

நான் இதைப்பற்றி பேச விரும்பவில்லை. அப்படியே இருந்தாலும் நீ இதைப்பற்றி பேசக்கூடாது. இதைப் பற்றி வாய்திறப்பதே தவறு.

கோபத்தில் என் கண்கள் சிவந்துவிட் டன. அதற்குள் அவன் ஓடிவிட்டான். எனக்கு வேர்த்துக் கொட்டி விட்டது. அவன் என் சகோதரனைக் காட்டிலும் இளையவன். இருந்தாலும் அவன் அவர்களில் ஒருவன். அவன் அவனுடைய பெற்றோர்களிடமிருந்து கற்றிருக்கவேண்டும். மேலும் அவன் அவனுடைய குழந்தைகளுக்கும் ஏற்கனவே கற்றுக் கொடுத்துவிட்டிருப்பான். அந்த சிறுவர்கள்கூட ஏன் அப்படி என்னைப் பார்த்தார்கள் என்று இப்ப காரணம் தெளிவா தெரியுது.

9

எப்போதும் திறந்த வாயை மூடாமலே இருக்கிறார்கள் மாமிசத்திற்காக. அதேசமயம் அவர்கள் தம்மை யாராவது பதம் பார்த்துவிடுவார்களா என்ற பயத்திலும் உள்ளார்கள். அவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் சந்தேகக் கண்ணோட்டத்தோடே பார்க்கின்றனர்.

இத்தகைய பழக்கவழக்கங்களை விட்டொழித்தால் வாழ்க்கை எவ்வளவு இனிமையானதாக இருக்கும். எந்த பயமுமில்லாமல் நன்றாக உறங்கலாம்; மென்நடை போகலாம்; நல்ல உணவை உண்ணலாம். இதைத் தவிர அவர்களுக்கு மீள்வதற்கு வேறு வழியில்லை. இருப்பினும் அப்பா-மகன், கணவன்-மனைவி அண்ணன்-தம்பி, ஆசிரியர்-மாணவன், நண்பர்கள்-எதிரிகள், அறிமுகமற்றவர்கள் என எல்லாரும் அச்சதித்திட்டக் குழுமத்தில் தம்மை இணைத்துக் கொண்டவர்கள். மீளவிடாமல் ஒருவரை ஒருவர் தடுப்பவர்கள்.

10

விடியற்காலை என் சகோதரன் எங்கிருக்கிறான் என்று சுற்றுமுற்றும் பார்த்தேன். வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தான் வானத்தைப் பார்த்தவாறே. வாசற்படித் தாண்டி அவனுக்குப் பின்புறம் நின்று கொண்டு அண்ணே என்று மிகுந்த மரியாதையுடன் அழைத்தேன்.

அண்ணே உன்னிடம் ஒரு சில விசயங்கள் சொல்ல வேண்டும்.

வெடுக்கென்று பின்புறம் திரும்பி என்ன சொல்லு என்றான் தலையை ஆட்டிக்கொண்டே.

இது பெரிய விசயம் ஒன்னுமில்லண்ணே, ஆனா சொல்ல கொஞ்சம் தயக்கமாக உள்ளது. அண்ணே எல்லா காட்டுவாசிகளும் முதலில் ஒரு சிறு மனித மாமிசத்துண்டை தின்றுதான் ஆரம்பித்திருப்பார்கள். பிறகு படிப்படியாக அவர்கள் சிந்தனை மாறமாற ஒருசிலர் மனித மாமிசம் உண்பதை நிறுத்திவிட்டார்கள். அதற்கப்புறம் பண்பட்ட மனிதர்களாக மாறிவிட்டார்கள். ஆனால் ஒருசிலர் இன்னும் மனிதர்களை உண்கிறார்கள்- முதலையைப் போன்று. சிலர் பறப்பன ஊர்வன தாவுவனவற்றைக் கடித்து-ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் மனிதனை கடிக்கத் தொடங்கி விட்டார்கள்.

முன்னொரு காலத்தில் ஈயா என்பவர் ஜீ என்பவருக்காக அவருடைய மகனை சமைத்துப் போட்டிருக்கார். அது பழைய கதை. உண்மையிலே சொர்க்கம் மற்றும் நரகத்தை பாண்கூ என்பவர் உருவாக்கிய காலந் தொட்டே ஒருவரையருவர் தின்றுகொண்டிருக்கின்றார்கள். ஈயாவின் மகன் காலந்தொட்டு திரு.சூசிலின் காலம்வரை மற்றும் திரு சூசிலின் காலம் தொடங்கி குள்ளநரி கிராமத்தில் சமீபத்தில் ஒருவனை கொன்று தின்றதுவரை. சென்ற வருடம்கூட அவர்கள் ஒரு குற்றவாளியை நகர்ப்புறத்தின் மையத்தில் வைத்துக் கொன்று அவன் இரத்தத்தில் ரொட்டித்துண்டை நனைத்து நனைத்துச் சுவைத்திருக்கிறார்கள்.

அவர்கள் என்னையும் தின்னப் பார்க்கின்றார்கள். இதில் உன்னால் கண்டிப்பாக எதுவும் செய்ய முடியாது. ஆனால் ஏன் அவர்களுடன் இணைந்துகொண்டாய்? அவர்கள் பிணந்தின்னிகள் அவர்களால் எதையும் செய்யமுடியும். என்னைத் தின்பவர்களால் உன்னைத் தின்ன முடியாமல் போய்விடுமா? ஒருவரை ஒருவர் தின்னும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். உன்னால் முடிந்தால் உன் வழியை மாற்றிக்கொள்; இப்போதே மாற்றிக் கொள். அப்பொழுதுதான் எல்லோரும் அமைதியாக வாழமுடியும். இது காலங்காலமாக நடந்து கொண்டிருப்பினும் நாம் இதை மாற்ற முயற்சியெடுக்க வேண்டும். இதை செய்ய முடியாதென்று சொல்கிறாயா? எனக்குத் தெரியும் அண்ணே நீ அப்படிதான் சொல்வாய். அன்றொருநாள் நம் குத்தகைதாரர் குத்தகையை குறைத்துக் கொள்ளும்படி கேட்டபோது முடியாதென்றுதான் சொன்னாய்.

வழக்கம்போல அவன் முதலில் தந்திரமாக சிரித்தான். பிறகு கொலைகாரப் பார்வை அவன் கண்களில் தெரிந்தது. அவர்களின சதிதிட்டத்தை நான் வெளிப்படுத்தியபோது அவன் முகம் வெளுத்துப் போய்விட்டது. வீட்டின் மதில் சுவற்றிக்கு வெளியே ஒரு கூட்டம் கூடியிருந்தது. அக்கூட்டத்தில் திருவாளர் ஜோவும் அவரது நாயும் இருந்தது. எல்லோருமே எட்டி எட்டி உள்ளே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரின் முகங்களையும் என்னால் பார்க்க முடியவில்லை. ஒருசிலர் முகத்தை மறைத்துக் கொண்டிருந்தனர். மற்றும் சிலர் வயதானவர்கள். நீண்ட பற்களையும் சிவந்த முகத்தையும் கொண்டிருந்தனர். எனக்குத் தெரியும் அவர்கள் எல்லோரும் மனித மாமிசத்தை தின்னக்கூடிய கூட்டணியில் உள்ளவர்கள். மேலும் அவர்கள் அனைவரும் ஒரேமாதிரி எண்ணம் கொண்டவர்களில்லை எந்தவகையிலும்.

சிலர் எண்ணுகிறார்கள் இது காலங்காலமாக பழக்கத்திலுள்ள ஒன்றுதான் என்றும். மனித மாமிசம் உடலுக்கு நல்லதென்றும். வேறு சிலரோ மனித மாமிசத்தை தின்னக்கூடாதென நினைக்கிறார்கள் ஆனால் அவர்களால் விட முடியவில்லை. மேலும் அவர்களின் ரகசியம் வெளியே தெரிந்துவிடுமென்றும் அஞ்சுகின்றனர். நான் சொல்லியது அவர்களின் கோபத்தை அதிகப்படுத்தியதென்றாலும் தந்திரமாக நமட்டு சிரிப்பு சிரித்தார்கள். உடனே என் சகோதரனின் முகம் வாடி விட்டது.

இங்கு என்ன கூட்டம் கூடிட்டு என்று சத்தம் போட்டான். இந்த பைத்தியக்காரனை வேடிக்கை பார்ப்பதனால் ஏதாவது பிரயோசனமுண்டா?

அதன்பிறகு அவர்களின் தந்திரத்தின் ஒரு பகுதியை என்னால் உணரமுடிந்தது. அவர்கள் ஒருபோதும் அவர்களின் நிலையிருந்து மாறப்போவதில்லை. அவர்களின் திட்டம் ஏற்கனவே தீட்டப்பட்டு விட்டது. எனக்கு பைத்தியக்காரன் என்ற முத்திரை குத்திவிட்டார்கள். எதிர்காலத்தில் என்னை சாப்பிட்ட பிறகு அவர்களுக்கு எந்த தொல்லையும் இருக்கப் போவதில்லை. மேலும் மக்கள் அவர்களுக்கு நன்றியுள்ளவர்களாகவும் இருப்பாகள். எங்கள் குத்தகைதாரர் கிராமத்து மக்கள் ‘கெட்ட சக்தி’யைக் கொன்று தின்றதைப் பற்றி கூறியதும் ஓருவகையான தந்திரம் தான் - அவர்களின் பழைய தந்திரம்.
முதியவர் சென் மிகுந்த கோபத்தோடு உள்ளே வந்தார். ஆனால் அவர்களால் என் வாயை மூடமுடியவில்லை. நான் அவர்களை கடுமையாக எச்சரிக்க வேண்டும்: நீங்கள் உங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். உங்களுடைய அடிமனதிலிருந்து மாற்றம் வரவேண்டும். எதிர் காலத்தில் மனிதமாமிசத்தை உண்பவர்களுக்கு இப்பூமியில் இடமில்லை என்பதை நீங்கள் உணரவேண்டும்.

நீங்கள் மாறாவிட்டால் ஒருவரை ஒருவர் தின்றுவிடுவீர்கள். எஞ்சியிருப்பவர்களையும் உண்மையான மனிதர்கள் துவைத்தெடுக்கப் போகிறார்கள். குள்ளநரிகளை வேடவன் வேட்டையாடுவதுபோல- எலிகளை வேட்டையாடுவதைபோல!

முதியவர் சென் எல்லோரையும் போகும்படி துரத்திவிட்டார். என் சகோதரனும் மாயமாக மறைந்துவிட்டான். முதியவர் சென் என் அறைக்கு போகும்படி என்னை வலியுறுத்தினார். சூரியன் மறையும் நேரம். அவர்கள் வீசும் தூக்குக்கயிறு என் தலைக்கு மேலே ஆடிக்கொண்டிருந்தது. பிறகு கொஞ்சங் கொஞ்சமாக நீண்டு என்னை இறுக்கிக்கொண்டது.

அதன் இறுக்கம் மிகவும் பலமாக இருந்தது. என்னால் நகரக்கூட முடியவில்லை. அவர்கள் நான் சாகவேண்டுமென்று நினைக்கிறார்கள். கயிறு என்னை இறுக்கியது கற்பனை என்பதை அறிந்தும் உதும்பு உதும்பு என்று உதும்பினேன். வியர்வையில் நனைந்துவிட்டேன். இருந்தாலும் நான் அவர்களை எச்சரிக்கவேண்டும்: நீங்கள் என்றாவது ஒருநாள் உங்களை மாற்றிக்கொள்ளவேண்டும். உங்களுடைய அடிமனதிலிருந்து மாற்றம் வரவேண்டும். எதிர்காலத்தில் மனித மாமிசத்தை உண்பவர்களுக்கு இப்பூமியில் இடமில்லை என்பதை நீங்கள் உணரவேண்டும்.

11

சூரியன் ஒளிர்வதை முற்றிலும் நிறுத்திக் கொண்டது. என் அறையின் கதவு அதற்குப்பிறகு திறக்கப்படவேயில்லை. தினமும் இரண்டு வேளை சாப்பாடு தவறாமல் எனக்குக் கிடைத்தது.

சாப்பாட்டுக்குச்சியை கையில் பிடித்துக் கொண்டு என் சகோதரனைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். என்னுடைய குட்டித்தங்கை எப்படி இறந்துபோனாள் என்பது எனக்குத் தெரியும்: அவன்தான் அதற்குக் காரணம். என் தங்கைக்கு அப்போது ஐந்து வயதுதானிருக்கும். அவள் எவ்வளவு அழகாக இருந்தாள் பாவம் என் தங்கை. இன்னும் அவள் உருவம் என் கண்ணில் அப்படியே இருக்கு. என் அம்மா அன்று தொடங்கி அழுதுகொண்டேதான் இருந்தாள். அம்மாவின் அழுகை அவனுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கும். ஆகையால் அவன் அழாதே என்று அம்மாவை சமாதானப்படுத்தினான். அநேகமாக அவன்தான் தங்கையையும் தின்னிருக்க வேண்டும்.

என் சகோதரன்தான் என் தங்கையையும் தின்னிருக்கான். ஆனால் என் அம்மாவிற்கு தெரியுமா தெரியாதா என்பது எனக்குத் தெரியவில்லை.

அம்மாவிற்கு தெரிந்திருக்குமென்று தான் நினைக்கின்றேன். அம்மா அழுதுதான் கொண்டிருந்தாள். ஆனால் வாய்திறந்து எதுவும் பேசவில்லை. அனேகமாக அவள் இதில் தவறொன்றுமில்லை என்று நினைத்திருக்கவேண்டும். எனக்கு இன்னும் ஞாபகத்தலிருக்கு எனக்கு அப்போது வயது நான்கு அல்லது ஐந்துதான் இருக்கும். என் அம்மாவிடம் என் சகோதரன் சொன்னான்: பெற்றோர்கள் தீராத நோய்க்கு ஆட்பட்டிருக்கும்போது யார் ஒருவன் தன் சதையை அறுத்து வேகவைத்து தான் பெற்றோர்களுக்கு கொடுக்கின்றானோ அவன்தான் உண்மையான புதல்வன். அம்மா அதற்கு எதிராக ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. மனித சதையின் ஒரு சிறிய கதுப்பை தின்ன முடிந்தால் பிறகு முழுவதும் தின்பதற்கு கடினமொன்றுமிருக்காது இல்லையா?

சும்மா ஒப்புக்கு அழுவதை நினைத்தால் என் இதயமே வெடித்துவிடும் போல இருக்கு; மிகவும் வினோதமாகவும் இருக்கு!

12

இதை நினைக்கும்போது என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இது எப்போதும் என் மனதில் ஓடிக் கொண்டேயிருக்கு. நான்காயிரம் ஆண்டுகளாக மனித மாமிசத்தை உண்ணும் சமூகத்தில் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என் தங்கை இறந்தபோதுதான் குடும்ப பொறுப்பை என் சகோதரன் ஏற்றுக் கொண்டான். என் தங்கையின் சதையை நாங்கள் உண்ட உணவில் என் சகோதரன் எங்களுக்கு தெரியாமலே கலந்து எங்களை உண்ணச் செய்திருப்பான்.

என் தங்கையின் சதையை நானும் அறியாமல் உண்டிருக்கலாம். என் மனசாட்சியைக் கேட்கிறேன்.

என்னைப்போன்ற ஒரு மனிதன் - நான்காயிரம் ஆண்டுகள் மனித மாமிசத்தை உண்ணும் வரலாற்றைக் கொண்ட - அதுவும் அதைப் பற்றி தெரிந்தபிறகு - எப்படி உண்மையான மனிதர்களின் முகத்தில் விழிப்பேன்.

13

மனித மாமிசத்தின் ருசி அறியாத குழந்தைகள் இன்னும் இருக்கின்றார்கள்.

அக்குழந்தைகளைக் காப்பாற்றுங்கள்.

*****

லு சூன் (1881-1936) தற்கால சீன இலக்கியத்தின் தந்தை என அறியப்படுபவர். சீனாவின் சென்ஜியாங் மாகாணத்தில் பிறந்தவர். மூட நம்பிக்கையில் ஊறிய பாட்டியால் வளர்க்கப்பட்ட சிந்தனைவாதி. ஜப்பானில் மருத்துவம் பயின்று படிப்பை பாதியிலே நிறுத்திவிட்டு சீனா திரும்பி புரட்சிகர எழுத்தாளராகவும் சிந்தனையாளராகவும் திகழ்ந்தவர். பத்திரிக்கை ஆசியராகவும் பல்கலைக்கழகத்தில் சீன இலக்கியப் பேராசியராகவும் சில காலம் பணியாற்றியவர். கன்பூசியஸின் வாழ்வியல் கோட்பாட்டை கடுமையாக விமர்சித்தவர். கவிதை சிறுகதை கட்டுரை மொழிபெயர்ப்பு என அனைத்துத் தளங்களிலும் இயங்கியவர். இவருடைய எழுத்து பன்னிரண்டு தொகுதிகளாக தொகுக்கப்பட்டுள்ளன. மேலும் இவரின் படைப்புகள் பல்வேறு மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com