Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru Logo "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஏப்ரல் - ஜூன் 2007
ராணி திலக்கின் நாகதிசை: ஒரு பார்வை

யவனிகா ஸ்ரீராம்

மழைச்சரங்களை கயிறுபோலப்பற்றி வானில் ஏறிச் செல்லும் ஒரு குரங்கைப்பற்றிய ராணித்திலக்கின் கவிதையை படித்தபோது அதன் மாயத்தன்மை எனக்குள் ஒரு வசீகரத்தை ஏற்படுத்தியது.

சில கவிதா நண்பர்களும்கூட அக்கவிதை விசித் திரமாய்த் தங்கள் கவனத்தை ஈர்த்ததாக சொன்னார்கள். அதுவரை யில் சிறுசிறு துண்டுகளாக ஒரு பூ சித்திரம்போல, புள்ளி களைத் தவறவிடாத கோலத்தின் வடிவ நேர்த்தியாய், மொழியைப் பிணைத்து அடித்த அச்சு என்றுகூடச் சொல் லலாம். அவரது பல கவிதைகளை சிற்றிதழ்களில் கண்டிருக்கிறேன்.கண்ணிகளைப்போல் கோர்த்துக்கொண்டு ஒருவரியை உருவினா லும் கோலம் கலைந்து தட்டையாகி விடும், அல்லது உதிர்ந்துவிடும்படி யாக ஒரு வடிவக் கச்சிதம். ஆனால் அர்த்தம் தான் சட்டென விளங்காது.

மிகச்சமீபமாக உரைநடைக் கவி தைகளை பரிசோதனையாக முயன்று பார்த்தவரையில் அவரது கவிதைகள் மீதான வாசிப்பு எனக்கு நீண்டு வந்தி ருக்கிறது. இப்போது நாகதிசை என்ற அவரது முதல் தொகுப்பு உயிர்மை வெளியீடாக கைக்கு கிடைத்திருக்கும்போது ராணிதிலக் கிற்கு மேலும் பல பரிமாணங்கள் கூடியிருப்பதாக உணர்ந்தேன்.

97ல் தொடங்கி 2005 வரை ஒரு எட்டுவருட கவிதைகளை முதல் தொகுப்பிற்கென தணிக்கைக்கு உட் படுத்திக் கச்சிதமாய் வெளியிடும் அவரது தேர்ந்தெடுப் பும், பொறுமையும், கவிதை மீதான அக்கறையும், நிதானமும் பாராட்டப்படவேண்டிய அம்சம். கவிதை குறித்து தொடர்ந்து விமர்சனரீதியாகவும், நுட்பமாகவும் இயங்கும் ராணிதிலக்கிற்கு இத்தொகுப்பு வெளிவரும் வரையிலான ஒரு மனத்தடை நீடித்திருக்கவேண்டும் என்பது என் அனுமானம்.

கள்ளப்புலனுக்கும் கவிதைமொழிக்கும் உண்டான இணக்கம் முற்றிலும் வாகான வடிவம் குறித்தே இயங்கி இருக்கிறது. தொகுப்பு மூன்று நிலைகளாகப் பிளவுண்டு வகை மாதிரிகளை உருவாக்கியிருக்கிறது. மொழிக்குள் மட்டுமே இயங்கும் கவிதைகள், புனைவுகள் வழியே எளிய உரைநடைக்குள் மாறிச்செல்லும் கவிதைகள், படைப்பாளி தன் எதார்த்த உறவுகளை நேரிடையாக முன் வைக்கும் கவிதைகள் என்ற வகையில் மனித விசாரத்தின் மாயத்தன்மைகளை இயற்கைக்குள் இனம்கான முயல் கின்றன இக்கவிதைகள். இம்மூன்று நிலைகளிலும் ராணி திலக்கின் பருவ வயதிற்குண்டான வெகுளித்தனங்கள் மறைக்கப்பட்டு விசாரணையும் நுட்பமும் காட்சிப்படுத் தலும் அறிதலுமாகிய முதிர் நிலைப்பண்புகள் வலிமை யாக வெளிப்பட்டிருக்கிறது. எனக்கென்னவோ அசோக மித்திரனிடம் காணப்படும் உரைநடை வீச்சுக்களை ராணி திலக் கவிதைகளில் குறைந்த வார்த்தைகளின் வழியே பிடித்துக்கொண்டு விடுகிறார் என்று தோன்றுகிறது. (இருவருக்குமான மெலிந்த தோற்றம், சுறுசுறுப்பும் கூட ஒத்துப்போகிறது)

சமூகம் உள்ளுறையாகவும், புறநிலையாகவும் என்ன விளைவுகளைச் சந்தித்துக் கொண்டிருந்தாலும், அதற் கானதைச் சொல்லிச் சொல்லி நல்லெண் ணப்பிரதிகளை உருவாக்குவது அறிவுஜீவிகளின் கடமை என்பது போல தாமோதரன் கவிதை கள் திருவாசகதன்மையை (பக்தி இலக்கியமல்ல) கோருகின்றன. சம காலம் என்றெல்லாம் பார்க்காமல் மொழிக் கென்று வலிமையாக இருக்கும் சில பிரத் யேக தன்மைகளை மாற்றிப்போட்டுக் காண்பிக்கும் சூத்திரம் தமிழ் நவீன கவிதை யின் மரபுத் தொடர்ச்சி யாக இன்னும் வெளிப் படத்தான் செய்கிறது.

அடிக்கடி உடல் எரிந்து படுவதாக வும், சாம்பல் அதன் நரம்புகளில் ஊடுருவதாகவும் ஒரு வெப்பம் (எரி நெருப்பு) கவிதையின் பல இடங்களில் தொடர்ந்து வந்து அணைந்து போகாமல் நிலைக்கிறது. அது வள்ளலாரின் நெருப்பா தெரியவில்லை. பார்வையாளனுக்கும்,-- பார்க்கப்படுபவைகளுக்கும் ஆன அஃறிணை, உயர்திணை உறவுகள் ஆன்மீகத்திற்கான தியானமாய் ராணிதிலக் கவிதைகளில் மிகை எதார்த்தத்துடன் முன்வைக்கப்படுகிறது. எதனாலும் குளிர்விக்க முடியாத ஒரு ஞான நெருப்பினைச் சுமந்து கொள்ள முயற்சிக்கும் இக்கவிதைகள் சமகாலத்தின் சாரங்களை தத்துவங்களுக்குள் கடத்த முயல்வது ஒரு குறிப்பான விசயம். லோகதாயத்தில் இருந்து உருவிச் செல்லும் அறிவார்ந்த இருப்பானது தான் துண்டித்துக்கொண்ட சம்பிரதாய இருப்பை அந்நியமாக பார்த்துக் கொண்டிருப்பதாக பாவனை செய்கிறது என வும் சொல்லலாம். எலும்புக்கூடும் வளையமும், பிரிவும் அவனும், வியாதி, ஆடி, ஈஸ்வரவேளை, வயோதிகளின் மாலைவேளை, பால்வீதியின் கரும்பூச்சி, அதிர்வு, வீழ்ச்சி, கடற்கன்னி, ரேகைகளில் திரியும் வனம், இளைப்பாறல், இடைவெளி ஆகிய கவிதைகளில் தான் எனும் Subject தானல்லாத objectகளை காட்சியாக தரிசனமாகக் கண்டு, இருப்பதில் இல்லாததையும், இல்லாததில் இருப்பதையும் அபத்தமாய் பிரித்துப் போடுகிறது. ஆனாலும் மொழி ஒரு ஒற்றனைப்போல் குறிப்பெடுத்துச் செல்லும் விவரணைகள் கவிஞருக்கு அப்பாலும் அவரது படைப்புகளுக்குள் மறைமுகமாக இயங்குவதை வாசகன் செரித்துக் கொள்வது தொடர்ந்து இயலாத காரியம் என்பதால், ஒரு ரிஷியின் வழிநடைக் காட்சிகள்போல பயணிக்கும் இக்கவிதைகளை வெறு மனே அவன் வேடிக்கை பார்த்து நிற்க வேண்டியிருக் கிறது. என்றாலும் இல்லாததை சொல்ல முடியாது என்பதாகவே நீள்கிறது திலக்கின் மாயயதார்த்தம்.

தனக்குள் ஒடுங்கும் ஒரு இறுக்கமான உடலைக் கொண்டிருக்கும் ராணிதிலக்கிற்கு மனித உடலுக்கு ஞானவிடுதலை தவிர வேறு ஏதுக்கள் ஏதும் இல்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. உடலை மெய்மையின் சாகசங்களை உற்பவிக்கும் ஒரு வினோத அறிதிறனாக்கு வதன் மூலம் அவர் இன்றைய சமகாலத்து நெருக்கடி களுக்குரிய வெளியின் சலனத்தைக் கடந்துவிட முடியும் என நம்புகிறார். உடலின் இயல்பூக்கங்களுக்கு அப்பால் அதற்குண்டான ஞானத்தின் விடுதலையையும் அதையே இயற்கைக்கு அப்பாற்பட்ட யாவற்றுக்குமான மற்றமை யாகவும் தனிமைப்படுத்துகிறார். இறந்து கொண்டிருக் கும் கடவுள்களின் ஒளியை மஞ்சள் வெயில் சுமந்து வெளியெங்கும் திரிகிறது. ஆனால் அது நிலத்திற்கு சற்று மேலேயே நின்று கண்காணிக்கத் துவங்கிவிடுகிறது என்பதுதான் மாயம்.

புலனுணர்வுகளுக்கு அப்பால் உடலின் இருப்பு பூடக மாக்கப்படுவதன் மூலம் மாயமாகும் ஞானத்தின் அறிதல் தனி ஸ்தூலமாக நிலவ முடியுமா? இந்த அறிதலின் தனிமை இயற்கைக்கு எதிரான/இசைவான மனித போராட்டத்தை அல்லது இரண்டையும் அபத்திற்கு உள்ளாக்கமுடியுமா? எந்த நிகழ்தகவை மொழி பின் தொடர்கிறது? மான் இயற்கை எனில் தாள் (paper) மனி தன். மான் இடைப்பட்ட வரிகளுக்குள் தாளின் வழியே ஓடுகிறது. தேவையான இடத்தில் சிறுவன் நோட்புக்கை மூடிவிடுகிறான். குறும்புக்காரச் சிறுவன் எல்லாவற்றை யும் தானே நிகழ்த்துகிறான். ஒரு வினையை உருவாக்கி அடுத்தவரியில் அதை உச்சம்பெறச் செய்து இறுதியில் ஆரம்பித்து வைத்தவரே முடித்து வைக்கும் நேர்த்தி (வடிவம்) ஆனந்த், தேவதச்சன், சி.மணி,நகுலன், சுகு மாரன், மோகனரங்கன், யுவனிலிருந்து ஒரு தொடர்ச்சி யாய் இளம் கவிஞர் ராணிதிலக்கையும் பற்றிக் கொண்டி ருக்கிறது. ஐந்தும் ஒன்றும் ஆறு எனச்சொல்லி, இரண்டும் நாலும் ஆறு என வியக்க வைத்து, இறுதியில் மூன்றும் மூன்றும் ஆறு என அழகாய் முடிப்பது இக்கவிதைகளின் இலக்கணம். “சட்டமிட்ட வானில் பறவை பறந்தது/ சரி இப்போதைக்கு அது என்ன செய்கிறது/ சற்றைக்குமுன் பறந்து கொண்டிருக்கிறது.

“ராமச்சந்திரனா எனக் கேட் டேன்/ ராமச்சந்திரன்தான் என்றார்/ எந்த ராமச்சந்திரன் என்று நான் கேட்கவுமில்லை/ அவர் சொல்லவு மில்லை.” “யாரும் அற்ற இடத்தில் என்ன நடக்கிறது / எல்லாம் நடக்கிறது/” “பறவையை கவிதையாக்க நினைத்தேன்/ எழுத வந்ததற்கும்/ எழுத்தில் வந்ததற் கும் இடையே பறவை பறந்து போயிருந்தது” “நதியில் கைகுவித்து நீரள்ளி முகம் பார்த்தேன்/ கைப்பள்ளத்தில் தேங்கிய நீதை மீண்டும் ஆற்றில் விட்டேன்/ ஓடும் நதி யில் எது என்நீர்” “ஒரு ஊரில் ஒரு நரி/ அதோட சரி என்பது மாதிரி இக்கவிதைகள் உணர்த்தும் அர்த்தங்களோ, இருப்போ, அபத்தமோ, நான் சொல்ல வருவது அது வல்ல. சட்டமிட்ட வானம் யாருமற்ற இடம், ராமச்சந்திரனா எனக் கேட்பது, கை நீரை அள்ளுவது, பறவையை கவிதையாக்க ஆரம்பிப்பதின் நோக்கம் ஒரு சூசகமான சூத்திரத்தை, அல்லது தந்திரத்தை பின்புலத் தில் முன்கூட்டியே வைத்திருப்பதற்கான அவசியம் கருதித்தான். இதை ‘டேபிள் ஒர்க்’ என்றே வகைப்படுத்த லாம். இம்மாதிரி விளையாட்டுக்கள் மொழியில் சாத்தி யம்தான் என்றாலும், வாழ்க்கையை ஒருகணம் பிடித்து நிறுத்தும் அல்லது காட்சிப்படுத்தும் கவிதைகள் என ஞாபகப்படுத்தலுக்கு தோதான சிறு வடிவம் கொண்டி ருக்கும் இவற்றை தமிழ்நவீன கவிதைகளின் உச்சம் என அடிக்கடி எடுத்தாள்வது மேலும் அதற்கான இடம் என்பது வாழ்வை துரிதகதியில் வெளிப்படுத்தும் அபிப்பி ராய மேதைகளின் தனிச்சிறப்பு என்பதுபோல் தூக்கிப் பிடிப்பது வரையிலான போக்குகளின் போதுதான் தத்துவ நரி மீண்டும் வாயைத் திறந்து பல நூற்றாண்டுகளை விழுங்கி விடத்தயாராகி விடுகிறது என்கிறோம் நாம்.

நல்லவேளையாக தன் ஆரம்பகால அச்சுமொழிக் கவிதைகளில் (மோல்டட்) இருந்து வெளியேறி உரை நடைக் கவிதைகளுக்குள் எளிமையாக தடம் மாறியிருக் கும் தாமோதரனை நாம் புதியதாய் அணுக இத்தொகுப்பு ஆனவகை செய்திருக்கிறது. அதிர்வு, இளைப்பாறல், இடைவெளி, தாழிடல் போன்றவை மோற்சொன்ன வடி வத்தில் இருந்தாலும், அவற்றில் செய்நேர்த்தியை மீறிய யதார்த்தம் மொழியை மீறி அமைப்புக்கொள்கிறது. ராணிதிலக் தமிழில் மொழி அமைப்பிற்கு திறனான வலி மையான கவிதைகளை இத்தொகுப்பில் தந்திருக்கிறார். அவர் இழந்திருக்கும் பன்முகத் தன்மைகளை நாம் ஞாபகமூட்ட வேண்டுமென்றால், சமகாலத்திற்கான ஒரு வரலாற்று பின்புலத்தையும் நகர்ந்து கொண்டிருக்கும் யதார்த்தத்தின் மொழிதலையும், நவீன நெருக்கடிகளை யும் இச்சந்தர்பத்தைப் பயன்படுத்தி விரித்துக் கொண்டு போக வேண்டியிருக்கும்.

அதற்கு முன் கைக்கிளை கவிதைகளையும் நாகதிசை மற்றும் அக்னி நட்சத்திரக் கவிதைகள்வரை மொழிக்கு அற்புதமாக வசப்படும் புதிய அமைப்புகளை உருவாக்கியிருக்கும் முறையில் ராணி திலக்கிற்கு நவீன கவிதைகளில் குறிப்பிட்ட இடம் கிடைத்துவிடுகிறது. ஊர்ந்து செல்லும் மனப்பிரமையை உண்டாக்கிக் கொண்டே இருக்கும் ஸ்ரீநேசனின் ‘ஏழு பெட்டி ரயில்’ கவிதைபோல ராணிதிலக்கின் ‘கடிகை என்றாகி நிற்கையில்’ கவிதையில் காலம்+பருவம்+ உடல் ஆகியவற்றின் இயக்கத்தில் காமத்தின் தியானமா னது ஒரு அழகியலை உருவாக்கி ஒற்றை முலை கோரும் ஆணின் மீட்சியாய்ப் பரிதவிக்கிறது (தென்னாடுடைய சிவனே போற்றி) மனக்கடிகையில் கீழ்நோக்கி ஒழுகும் மணற்குவியலை காலப்பிரிகையில் உருப்பெரும் சக்தியின் மார்பகமாய் உருவகப்படுத்துவது வினோத ரசனையைத் தருகிறது. கத்திரிப்பருவம், ரோககானம் போன்ற கவிதைகளில் கோணங்கியின் சாயலையும் வீச்சினையும் நாம் உணரலாம்.

கவிஞர் புனைவுகளை பிரயோகப்படுத்திப் பார்த்திருக் கும் கவிதைகள் யாவும் கடற்கரையில், முயல்கள் கரை கின்றன, பிரபஞ்சத்தில் காதலி, விலகல், மஞ்சள் நிறப் பரிசல், மான்புள்ளிகள் போன்றவை புலனுக்குச் சிக்காத உறைந்த படிமங்களைத் தொட்டு யதார்த்தத்தில் நகர முடியாமல், புதிய அனுபவத்திற்கும் ஏலாமல் வார்த்தையாகவே நின்றுகொள்கின்றன. அதைவிட ஆடி என்ற கவிதையிலும் சதுரங்கம், இருபடிமங்கள், நான்காம் முலை, கண்ணாடியில் மறைபவன் போன்ற உரைநடைக் கவிதைகளிலும் புனைவு அற்புதமாக மிளிர்கிறது. புனைவுகளில் innocense இயங்கிக் கொண்டிருக்கும் போதே அறிவு அதில் வன்முறையாக நுழைவது தவிர்க்கப் பட்டிருந்தால் பிரதி இன்பம் கூடுவதற்கு இன்னும் வாய்ப்பு இருந்திருக்கும்.

உடலை அதன் இயல்பூக்கத்தின் வழியே மீட்டெடுத்து அறிவின் பிரயாசையைத் தூரத்தள்ளி வெள்ளந்தியான பரவசங்களை பிரபஞ்சத்தின் நீட்சியாய், புலனுக்குக் கடத்தி மற்றமைகளோடு ஆன தொடு உணர்வில் புதிய அறங்களை கிளர்த்தும் எளிய நடத்தைகளை மீறி மாய யதார்த்தங்கள், தத்துவத்திற்குள் யாவற்றையும் அகப் படுத்தி ஞானமூளையை உடலின் தனிச்சிறப்பாக மீண்டும் மீண்டும் அடையாளப்படுத்தும்போது நமக்கு ஞானகூத்தனின் “தாமரையை தின்று சுவைக்கும் குளத் தின் எருமை”யாக மாறவேண்டும் போல் இருக்கிறது. உடலை ஒளியாய் உயர்வு செய்து அதன் புலன் தேவை களை அவமானப்படுத்துவது இந்திய ஞானமரபின் நீட்சி தானே அன்றி சமகால அரசியல் பார்வையாகாது என்பதை தாமோதரனுக்குச் சொல்லத்தான் வேண்டும்.

அறிவு உண்டாக்கும் மாயயதார்த்தங்களை விட புலன்கள் உணரும் யதார்த்தமே வாழ்வின் விளைபொருளாக மாற முடியும். ஒருகண நேரப்பரவசம்தான் காமத்தை உடலின் கிளர்ச்சியாக ஆற்றலாக புத்துயிர்ப்பாக மாற்றுகிறது என்பதை உணர்ந்த ஞானிகள் கணநேரப் பரவசமாகவே தத்துவங்களையும் தரிசனங்களையும் பிரபஞ்சத்தின் ஆற்றலையும் ஒப்புநோக்கினர் என்ற வகையில் துறக்கத் தோதான உடல் உறுப்பு போன்றவற்றின் இன்பத்தை கீழ றுப்புச் செய்து, பேரின்பத் தேடலாய் அனுபூதி நிலையை தனிச்சிறப்பானதொரு தத்துவ மையமாக்கினர் என்பதை நாம் அதிகம் விளக்க வேண்டியதில்லை.

நமக்கு தவம் முக்கியம் அல்ல, வாழும்போதே கற்றுக் கொள்வதுதான் சுதந்திரம். விடுதலை, விருப்புறுதி, விழைவுறுதி என்ற வகையில் கலையின் பணியை உட லின் பரவசமாகுதல் உடலின் அரசியலாக்குதல் என்பதில் ஈடுபடுத்தப்பட வேண்டியிருப்பதை உணருகிறோம். காண்நிலை பரவசங்களுக்காக கண்களை எதிர்கால சூன் யத்தில் வெறித்து, நிகழ்காலத்தில் கிடைக்கும் உடலின் வாய்ப்புகளை உதறி பூடகத்தில் ஜீவசமாதி அடைய உடல் ஒடுங்குவது மூடஞானம் என்பதன்றி “யாருக்கும் தெரியாத மிதிவண்டியை யாரும் பார்க்காத ஒருவன் ஓட்டிக்கொண்டே இருப்பது” யாருக்கு அவசியம்.

பலசமயம் தனக்குள் ஒடுங்கும் மொழியுடலைக் கொண்டிருக்கும் ராணிதிலக் அதன் பரவசங்களுக்கு அப்பால் காட்சியின், பிரபஞ்சத்தின், இயற்கையின், ஞானத்தின், அல்லது பூடகத்தின் இடத்தில் தன் அறிவை வைத்து அடையாளம் தேடுகிறார். காண்நிலை பரவச மாகக் கற்பிக்க முயல்கிறார். சார்புநிலைத் தத்துவங் களுக்குள் இயங்கும் ஐன்ஸ்டைன் கவிதைகளை நிலை மாற்றமில்லா கணிதச் சூத்திரங்களுக்குள் வைத்து இயக் கும் இப்படியான பௌதீக மொழியை காணுலகாகவும் வியனுலகாகவும் மாற்றி காட்ட முயலும்போது தனிச் சிறப்பான ஒளியின் ஆற்றல் வேகம் முதலியவை எளிய மனிதனின் சொற்ப அறிதிறனுக்கு அப்பால் நெருங்க முடியாத பிரம்மாண்டத்தை ஏற்படுத்துகிறது என்கிற விஞ்ஞான உண்மை இத்தனை மெனக்கெட்டு கவிதை களாவது தொகுப்பு ஒரு பாடத்திட்டத்திற்கான தீஸிஸ் அல்ல என்பதையே உணர்த்துகிறது.

பிரபஞ்சத்தில் ஒரு பொருளின் காண்நிலையை பல கோணங்களில் சொல்ல முடியும் என்பதற்கான நாகதிசைக்கவிதை ஒரு எந்திரவி யல் தன்மையுடன் அமைக்கப்பட்டிருப்பது புதிய மொழி யமைப்ஆப் தமிழுக்கு வழங்குகிறது என்பதை வேண்டு மானால் நாம் ஒத்துக்கொள்ளலாம். மற்றபடி சமகாலத் தொடர்புச் சாதனங்களின் வழி மனிதக் கூருணர்வு இயந்தி ரங்களுக்கு கடத்தப்பட்டிருப்பதன் மூலம் உடலின் நிலையாமை மிக அவசரமாக முடிவிற்கு கொண்டுவரப் படுகிறது என்பதை உணர்ந்தே நவின கவிதை உடலைக் கொண்டாடி அதன் இயல்பூக்கங்களை மீட்டெடுக்க முயல்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். உறைந்துபோன எந்திரத்தன்மையுடன் கடவுளின் தத்துவ பிரமாண்டமும் இணைந்துவிட்டால் எளிய உயிர்களின் அறிதலற்ற பிரக்ஞை மற்றும் உடல்மீது என்ன வன்முறை நிகழும் என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை.

வலிக்கும்/ இன்பத்திற்குமான புலன் உணர்தலே மற்றமை மீதான அறத்தை உணரச்செய்ய முடியும். அறிவிற்கும் அதிகாரத்திற்கும் அப்பால் இசையும் உடலின் தொடுபுலனானது புறத்தே தனிச்சிறப்பாய் இருப்பதாக சொல்லும் ஏதோன்றின்மீதும் கற்பிதம் கொள்ளாமல் தப்பிக்கும் சுதந்திரமாய், யதார்த்தமாய் தன்னளவில் இருக்கறிது. உடல்கள் கருத்தை வைத்துக் கொள்ளவும், தூக்கி எறியவும் லாயக்கான சுதந்திரமான ஒன்று. ஆனால் கருத்து உடலை அடிமைப்படுத்தும் போது அதை தனக்குள் ஒடுக்குகிறது. அறிவும் கருத்தும் வலிமையடையும் போது உலகம் வதை முகாம்களையே பரிந்துரைக்கிறது என்பதை நாம் ஞாபகத்தில் கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த உலக கருத்துருவங்களின் வரலாறனைத்திலும் உடல் ஒடுக்கப்படுவதாகவும் கொன் றழிக்கப்படுவதாகவும் நிகழ்ந்துவருவது பூடகமான அந்த ஞானத்தின் கொடிய பின்புலமாய் இருக்கிறது. அவ்வகை யில் கைக்கிளை கவிதைகளை மட்டுமே ராணி திலக்கின் ஆகச்சிறந்த படைப்பாய் நாம் சொல்லி விலக முடியும். கவிஞர் தேவேந்திர பூபதி கூறியதைபோல, “ராணி திலக்கிற்கு நாகதிசை ஒரு முக்கியமான படைப்பு. இதை விட்டு வெளியேறும்போது இதன் நீர்த்த அனுபவங் களைத்தான் அவர் தரமுடியும்” இதன் அர்த்தம் மிகப் பெரிய தத்துவங்களின் பாரிய விடைகளில் இருந்து வலிந்த உழைப்பைப்பெற்று வெளிப்பட்டிருக்கும் இத் தொகுப்பு கவிஞரை தனக்குள் செரித்துக்கொண்டு விட்டது என்பதாகத்தான் இருக்கமுடியும். கடலின் கரையில் தொடர்ந்து அலைகளை பார்த்துக் கொண்டிருப் பவன் ஒரு வெறுமையை உணரநேர்ந்தாலும் கடலுக்குள் தான் எத்தனை உயிர்ச் சலனங்கள். கடலை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறார் ராணிதிலக்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...



படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anaruna.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

www.kannottam.keetru.com

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP