|
பா.திருச்செந்தாழை கவிதைகள்
பொழுதுகளின் சங்கீதங்கள்
ரசமிழந்து விட்ட இன்றுகளில்
முனைகளற்ற சொற்களின் மேல்
நகர்ந்து கொண்டிருக்கிறது நகரம்
இலக்கங்களின் வேறுபாடு தவிர
ஒரு மரணமும், ஒரு காதலும்
சதா நிகழும் வீதிகளில்
உணர்ச்சிகளுறைந்த முகவுறைகள்
நசுங்கி கிடக்கின்றன
பொய்மையும் எல்லைமீறிய சகிப்புடனும்
நம்மை விரித்து செல்கிற
நகரப் பகல்களனைத்தும்
சாலையோர பைத்தியக்காரனிடம்
தோற்றுப் போனபடியிருக்கின்றது.
இக்கோடையின் கடைசிப் பகலை
நாம் கடந்து கொண்டிருக்கிறோம்
மரக்கதவுகள் தளர்வுறும் நேரமிது
மதியங்களின் உப்புச்சுவை முத்தங்களும்
ஒற்றைத் தலைவலி மாத்திரைகளும்
விடை பெற்றுக் கொள்கின்றன
அவசியமிழக்கிற மர நிழல்களின்
மெல்லிய விசும்பல் துவங்குகிறது
கசகசப்பற்ற கலவிகளில்
நுணுக்கமாய் தவறுகிறது
உன்னத வீச்சம்
குடையை செப்பனிடச் செல்லும்
சிறுவனின் தோளிலிருந்து
உதிரத் துவங்குகின்றன வெயிலின் விரல்கள்.
புதிய நிழல்களின் வாசனையின் போது
கூச்சம் நிறைந்த பிராணியாய்
ஒடுங்குகிறது அறையின் சுவர்கள்
மிதந்து வருகின்ற வார்த்தைகளை
நளினமான பணிவுடன் உறிந்து
தின்கையில் அலுப்பூட்டும்
பழமையின் ருசியில்
சலித்தபடி அமைதியாகிறது
செருப்பினோசை தேய்கின்றவேளை
நிறம் மாறி இயல்பாகும்
நம் மீது வெறுக்கத்தக்கவொரு
புன்னகையை எறிகிறது அவ்வறை.
விடுபட்ட இலையின்
சூத்திரங்களற்ற நடனத்தைப் போல
சொற்களை பரிமாறியபடி
நமக்கிடையே பதிக்கத் துவங்குகிற
சில்லிட்ட தண்டவாளங்களில்
சமயங்களில் ஆந்தைகள் அமருகின்றன
சமயங்களில் மழை சிதறுகிறது
கவனக்குறைவான தருணமொன்றில்
பச்சிளங் குழந்தையொன்று
நெடுந்தொலைவில் தன்னை நோக்கி வரும்
ரயில் எஞ்சினைப் பார்த்து சிரிக்கிறது.
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|