தேவேந்திர பூபதி கவிதைகள்
வெள்ளி வீதி
மறுபடியும்
சில இரவுகளை எனக்குத் தருவது
உனது பெருந்தன்மை தான்
வாழைக்குருத்துக்கள்
சில அங்குலம் வளர்ந்துவிடுகிற இரவை
நீயின்றி வைத்து நான் என்ன செய்வது
பழஞ் செய்யுள்கள் எழுதித் திரிந்த
சங்ககாலத் தோழிகள்
இந்த நகரத்தில் எந்தத்தெருவில் வசிக்கிறார்களோ
நள்ளிரவு தாண்டியும்
உனது அழைப்பு ஒலிக்கிறது
தீராத கோபத்தையும்
அது இன்னிசையாக்கிவிடுகிறது
நான் உறங்கத் தவிக்கிறேன்
சீதோஷ்ணம் இதமாக இருக்கிறது
இந்த இரவை
கடந்த முத்தத்தின் பரவசத்திற்காக
விட்டுக் கொடுத்தமைக்கு நன்றி
விழித்திருந்து நீ எழுதும்
கவிதைக்கு என் வாழ்த்துக்கள்
அடையாத கபாடம்
எனது சன்னல்கள் தட்டப்படுகின்றன
கதவுகள் திறந்திருக்கும் போதும்
வாசலில் வரவேற்க நான் நின்றிருந்தாலும்
எனது சன்னல்கள் ஏனோ
பெருஞ்சத்தத்துடன் தட்டப்படுகின்றன
சன்னலைத் தட்டுபவர்கள் பற்றி
என்ன சொல்வது
பலநேரம் ரகசியமான மெல்லிய ஓசைகள்
திடீரென அதிகாரத்துடன் பலமான தட்டல்கள்
நாசூக்காய் அழைக்கும் பரிச்சயமான தட்டல்கள்
ஏக்கம் நிறைந்த சுண்டிவிடும் ஒலிகள்
துப்பறியும் பொருட்டான பெருமூச்சுகள்
சத்தம் மட்டும் தாளவில்லை
எல்லாச் சன்னல்களையும் திறந்துவைத்தால்
யாருமில்லாத வீடெனத் தெரிந்துவிடும்
என்றாலும்
தற்சமயம்
ஒரு சன்னலை திறந்து
மற்றொன்றை மூடுகிறேன்
வாத்துகளை நடத்திச் செல்பவன்
நண்பகல் சாலையில் விரைந்து விடுபடுகின்றன
பெயர்ப்பலகைகள்
தொலைதூரம் கடந்த கொக்குகள்
தென்னையில் பூத்திருக்கக் கண்டேன்
எனது வாகனம் சாலை வழிகளை
இழுத்துச் சுருட்டுகின்றன சக்கரத்தில்
இன்னுமொரு உலகத்தில் சந்திக்க
என்ன இருக்கிறது
வாத்துகளை நீண்ட கழியில்
நடத்திச் செல்கிறவன்
கண்திறக்காத பூங்குஞ்சுகளை
கைப்பையிலிருந்து எடுத்துக் காண்பிக்கிறான்
திரும்புவதெனில்
போய்ச் சேருமிடமோ
வந்து சேருமிடமோ
பூமி சுற்றும்போது
சாலைகள் எந்தத் திசையில் நகருகின்றன
அந்த கொக்குகள் எப்போது பறக்கும்
வாகன ஓட்டுநரிடம் பதிலில்லை
இவ்வுலகில்தான்
தினந்தினம் நிகழ்கின்றன இவையனைத்தும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|